Sunday, July 15, 2018

எப்போதும் நின்றுவிடும் கார்:அழகிய ஆசைகளை வைத்துக்கொள்ளுங்கள்

மெய் வாழ்க்கையில், பணம்,முதலீடு என்ற பேச்சுகள் நண்பர்களுக்குள் வ‌ரும் போது, நான் மலங்க மலங்க விழிப்பேன்.பெரிய சேமிப்புகள் இல்லை என்னிடம். அமெரிக்க வாழ்க்கையில் முதுமைக்கு என்ன செய்வது? முதுமையில் பிச்சையெடுப்பதைத் தவிர்க்க என்ன செய்வது?, என்ற பயத்தின் விளைவாக‌ , சில சேமிப்புகளை காலம் கடந்து ஆரம்பித்தேன்.

முதலீடுகள் பற்றிய அறிவுரைகள் எல்லாம், முதல் வைத்துள்ளவர்களுக்குத்தானே? இருந்தாலும், என் பிணத்தைப் புதைக்கக்கூட பணம் அவசியம் என்பதால், சேமிப்பு முக்கியம். எனது குழந்தைகளுக்கும், என்னை அறிந்தவர்களுக்கும் சேமிப்பின் முக்கியத்துவத்தைச் சொல்லுவேன். முதலீடுகளின் முக்கியத்துவம் அதில் இருக்காது. குறைந்தபட்ச சோறுக்கும், கூரைக்கும் உத்திரவாதமாக‌, வயதான காலத்தில் உதவ சேமிப்புகள் தேவை.
**

"பணத்தை வச்சி என்ன செய்ய?" என்பதே என் நிலைப்பாடாக இருந்தது. இன்றும் பிள்ளைகள் படிப்பு , வீட்டுக்கடன், என்று க‌ழுத்துவரை கடன் வாழ்க்கைதான். வீடு வாங்கி விற்பது, நிலம் வாங்கி விற்பது, பங்குச் சந்தையில் நேரடியாக பணம் போடுவது எல்லாம் எனக்கு தெரியாத செயல்கள். அமெரிக்காவில் 401K எனும் ஓய்வுத்திட்டத்தில், முடிந்ததை போட்டுவிட்டு, மறந்துவிடுவேன். அதற்குமேல் என்ன செய்வது என்பது தெரியாது. உதாரணத்திற்கு "2050 ல் ஓய்வு பெறுபவர்களுக்கான திட்டம்" என்று இருக்கும். அதில் மாதம் சிறு தொகையைப் போட்டுவிடுவேன் அவ்வளவே என் டொக்கு. அதற்குமேல் முதல் இல்லை.

நாளையே நான் மூச்சை நிறுத்திவிட்டால், பிள்ளைகளும் மனைவியும் பிழைத்துக்கிடக்க காசு வேண்டும் என்பதால், குறிப்பிட்ட காலத்திற்கான உயிர்க்காப்பீடு எடுத்துள்ளேன்.  (Term life insurance or term assurance is life insurance that provides coverage at a fixed rate of payments for a limited period of time). அதில் போடும் பணம் கிணற்றில் போடும் பணம். அந்தக் காலத்திற்குள் நான் செத்தால் வாரிசுகளுக்கு வாழ்க்கையை நடத்த  பணம். நான் அந்தக் காலத்திற்குள் சாகாவிட்டால் , போட்ட பணம் கிணற்றில் உள்ள சதுக்க பூதத்திற்கு.

**
2008ல் வாங்கிய ஒரு கேம்ரி கார் அதன் இன்றைய மதிப்பு, $2000 டாலர். அதுதான் நான் அலுவலம் செல்லும் வாகனம். வாரத்தில் 400 மைல்கள் ஓடும். வழியில் நின்றுவிட்டால் சமாளிக்க‌ அதில் அத்தியாவசியமான ரிப்பேர் பொருட்கள் இருக்கும்  அவசர திட்டச் சாமான்கள் கிடக்கும். மாற்றுவதற்கு ஒரு உடை உட்பட.

பஞ்சரானால் டயரை மாத்திவிட்டு வேலைக்குப் போயாகவேண்டுமே? சத்தியத்திற்கு கட்டுப்பட்டு ஓடும் வாகனம். பலமுறை ரோட்டில் மூச்சை நிறுத்தியுள்ளது. அள்ளிப்போட்டு ஆசுபத்திரி சேர்த்து அரைகுறை உயிரில் ஓடிக்கொண்டுள்ளது.
**

2008 ல் இருந்து 2012 வரை ஒரு வாகனம் மட்டுமே வைத்து இருந்தோம். நான் அலுவலகத்திற்கு சைக்கிளில் சென்று வருவேன். மழை,வெயில், பனி, புயல் எதுவானாலும், சைக்கிள்தான். ஒரு மஞ்சத் தோல் பையில், பருவநிலை ஆபத்தை சமாளிக்க அதற்கான சாமான்சட்டுகள் இருக்கும். 3 மைல் சைக்கிள் ஓட்டி , பின் பேருந்தில் ஏறி, இறங்கிய இடத்தில் இருந்து அடுத்து 5 மைல் சைக்கிள் ஓட்டி, அலுவலகம் செல்ல வேண்டும். அலுவலத்தில் குளிக்கும் வசதி இருந்ததால், சைக்கிளில் சென்ற பிறகு குளித்து வேறு உடைக்கு மாறிவிடுவேன்.


குழந்தைகளை பள்ளியில்விட, நீச்சல் போன்ற‌ பயிற்சிகளுக்கு கூட்டிச் செல்ல,  மனைவியின் பயன்பாட்டில் கார்  இருக்கும். பல நேரம் குழந்தைகளும் நகரப் பேருந்தில் பயணம் செய்தே காலம் ஓட்டினோம்.
**

இரண்டாவது காரின் தேவை இருந்தாலும், வசதி இல்லையாதலால் சமாளித்துகொண்டு இருந்தோம்.ஒருவரின் சம்பளத்தில் வண்டி ஓட்டுவது என்பது சிக்கலானது. ஒருவர் மட்டுமே சம்பாரிக்க வேண்டும். மற்ற ஒருவர் குழந்தைகள் ஆரம்பப்பள்ளி முடிக்கும்வரை உடன் இருக்க வேண்டும் என்று, நானும் என் மனைவியும் போட்ட திட்டத்தினால், என்னைவிட கணினி மென்பொருள் தொழில்நுட்பத்தில் அதிகம் படித்து,அதிக வேலை வாய்ப்பிருந்த என் மனைவி வீட்டில் தங்கிவிட்டார்.

ஒரு கட்டத்தில் சமாளிக்கவே முடியாமல்தான் இரண்டாவது கார் வாங்கினோம் 5 வருட கடனில். 2012ல் வாங்கிய ஃகோன்டா வேன். அதன் இன்றைய மதிப்பு $12,000 டாலர்கள் இருக்கும். முந்தையதைவிட இது இளமையான‌(பாதுகாப்பான‌) வாகனம் என்பதால், மனைவி மற்றும் பிள்ளைகள் போய்வர பயன்படுத்துவோம். தொலைதூரப் பயணங்களுக்கு இதுதான்.

**
அம்பேரிக்கா வந்து 12 வருடம் கழித்தே வீடு வாங்கினோம்.அதற்கு இன்னும் 13 வருட கடன் உள்ளது. ஒரு மாதம் உழைக்காவிடில் ரோட்டுக்கு கூட்டிவந்துவிடுவார்கள் கடன் கொடுத்த வங்கியாளர்கள்.
**

எனது கதை எல்லாம் ஒரு பொருட்டே அல்ல. தினமும் மூன்று வேலைகள் பார்த்து, உடைந்த காரின் கண்ணாடியை, duct tape கொண்டு ஒட்டி, டயர் மாற்ற காசில்லாமல் ஏற்கனவே பயன்படுத்திய டயர்களை கயலான் கடையில் வாங்கி ஓட்டிக்கொண்டு இருக்கும் அமெரிக்க குடும்பங்கள் உண்டு.

ஒரு காலத்தில் இந்த ஊரில் அதிக நிலம் வைத்து இருந்த அமெரிக்க நண்பர் ஒருவர், ஒருநாள் வேலைக்குப் போகாவிட்டால் அந்த நாள் சோறு சாப்பிட முடியாது என்ற நிலையில் வாழ்ந்து கொண்டுள்ளார். வாழ்ந்து கெட்ட குடும்பங்களும் உண்டு. வாழவே ஆரம்பிக்காத , ஆரம்பிக்கவே முடியாத, சமூகப் பொருளாதாரச் சூழலில் இருப்பவர்களும் உண்டு.

அமெரிக்க கிராமப் பகுதிகளில் நான் பார்க்கும் வாகனங்கள் கண்ணீர் கதைகளைக் கொண்டது.
**

உடன் வேலை செய்யும் தெலுகு நண்பர் ஒருவர், இந்தியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது , அவரின் இந்திய லாக்கரில் இருந்த ஒரு கோடிக்கு அதிகமான ரொக்கப்பணத்தை எப்படி வெள்ளையாக்கினார் என்று சொன்னபோது மலைத்துவிட்டேன். அமெரிக்காவில் என்னிடம் இருந்த‌ பத்து ஆயிரம், ரூபாயை எப்படி சட்டபூர்வமாக மாற்றுவது என்று, முறையான வழிகளில் தூதரகம், அதிகார பூர்வ பணமாற்றும் நிறுவனங்கள் அன்று அல்லாடி , விடை ஏதும் கிடைக்காமல், நொந்து போயிருந்த எனக்கு, இந்தியாவில் லாக்கரில் பணமாகக் கோடி என்பது மலைப்பே.ஆம் ,அதிசியமாகப் பார்க்கும் சாதரண வர்க்கமே நான்.

அவரும் அவர் மனைவியும் சம்பாதிக்கிறார்கள். கோவில்களுக்கு நன்கொடை என்றால் ஆயிரம் டாலர் கொடுத்தால்கூட அவரின் அன்றாட வாழ்க்கை அசராது. நூறு டாலர் டொக்கு விழுந்தாலே என் வாழ்க்கை நின்று நிதானிக்கும்.
**

அனைவருக்கும் கிடைக்கும் 24 மணி நேரம் போல, பணம் செய்யும் வாய்ப்புகள் சமமாகக் கிடைப்பது இல்லை. அப்படியே கிடைத்தாலும், நாம் எடுக்கும் முடிவுகள், நாம் எப்படியான வாழ்க்கையை வாழ விரும்புகிறோம், குழந்தைகளுக்கு எப்படியான முதலீடு செய்கிறோம்( பணம், நேரம், கல்வி, கலைகள்...) என்பதைப் பொறுத்து, பணம் பறக்கலாம் அல்லது பத்திரமாக இருக்கலாம். இவை எல்லாம் தனிமனித விருப்பங்கள்.
**

பணக்காரரர் ஆக வேண்டும் என்பது குறித்த சிந்தனைகளோ அல்லது ஆசையோ இல்லாவிட்டாலும்,பணம் என்பது பிழைத்திருக்க முக்கியமானது என்பதை ஆரம்பத்தில் இருந்து உணர்ந்தே உள்ளேன். கற்ற கல்வியே சோற்றுக்காகத்தான். கல்வியைக் கைக்கொள்ளாவிட்டால் சோறுக்கான உத்திரவாதம் இல்லை என்ற உந்துதலே என்னை தள்ளிக்கொண்டு கற்க வைத்தது. கற்றபின் கற்றதில் காதல் வந்தது வேறு.

முதலீடுகள் இல்லாத முதல் தலைமுறைப் பட்டதாரிகளின் வாழ்க்கை என்பதும், முதலாளி பிள்ளைகளின் வாழ்க்கை என்பதும் ஒன்றல்ல.
**

Financial Freedom என்று சொல்வார்கள். அது தரும் சுதந்திரம் எல்லையில்லாதது. ஆனால், இவ்வளவு பணம் இருந்தால்தான்  Financial Freedom  என்ற எந்த அள்வீடுகளும் இல்லை. இருக்கவும் முடியாது.

ஆசைகள் அளவில்லாதவை. வசதியும் வாய்ப்பும் வந்துவிட்டால், எல்லா ஆசைகளும் ஒரு கட்டத்தில் தங்களுக்கான நியாயங்களுடன், தேவையாக மாறி நிற்கும்.
**

செலவழிக்கப்படாத பணம் சேமிப்பு என்றாலும், சம்பாதிக்க வழி இருந்தால்தானே வருமானம்? பிறகு சேமிப்பு? இருக்கும் வருமானத்தில் என்ன செய்கிறோம் என்பதுதான் வாழ்க்கை. கோடிகள் இருந்தால் Boat வாங்கலாம்தான். ஆனால், ஒரு மணிநேர வாடகையாக $8 கொடுத்து மாதம் ஒரு முறை, அரசு ஏரியில் பாய்மரப்படகு ஓட்டுவதைச் செய்ய முடியுமே? அதைத்தான் நான்  செய்கிறேன். இதுவே எனக்கான‌  Financial Freedom. அதிகம் சம்பாதிப்பவர்கள் BMW கார் வாங்க ஆசைப்படும்போது நான் $8 ல் மீன் தூண்டி வாங்க விரும்பினேன். இதுவே எனக்கு  Financial Freedom. இதுவே இல்லாமல் அன்றாட உணவிற்கே சிரமப்படும் அமெரிக்கர்கள் உண்டு.
**

உணர்வுகளில் சிறைப்படாமையும், பணத்தில் சிறைப்படாமையும் மனிதனை முழுமையாக‌ விடுவிக்கும் காரணிகள் என்பது என் சித்தாந்தம். அதிகப் பணம்தான் financial freedom என்று சொல்லவில்லை ஆனால், financial freedom  மிக அவசியமானது. அன்றாடம் பிச்சை எடுக்கும் ஒருவருக்கு financial freedom  இருக்கலாம், அதே சமயம் கோடிகளில் புரள்பவருக்கு financial freedom  இல்லாமல் இருக்கலாம்.

பணத்தை வைத்து என்ன செய்கிறோம் அல்லது எதற்காக பணம் சேமிக்கிறோம் என்பது முக்கியம். உதாரணத்திற்கு வாழ்க்கை என்பது நண்பர்களுடன் குடித்து பொழுது போக்குவது, அதிக விலை கார் வாங்குவது அல்லது அதிகவிலை போன் வாங்குவது என்ற நிலைப்பாடு உள்ளவர்கள், பணக்காரர் ஆகும்போது அந்த திசையில் செலவழிக்கலாம். இதில் தவறு ஏதும் இல்லை. மகிழ்ச்சி என்பது உனக்கான தனித்துவம். அதில் ஒப்பீடுகள் தேவை இல்லை.
**

நான் சொன்ன தெலுகு நண்பர், சில மாதங்களுக்கு முன் நூறாயிரம் டாலர் செலவில், டெஃச்லா  (Tesla) கார் வாங்கினார். நானும் அவரும் ஒரே அலுவலகம். 200 மைல் தொலைவு பயணம் என்பதால், அவர் காரில் ஒருநாளும், என் காரில் ஒருநாளும் சென்று திரும்புவோம். கை வலிக்கிறது என்பதற்காக, தானாக ஓடும் டெஃச்லா வாங்கிவிட்டடார் ஒருநாள். கார் அதுவாக ஓட, இவர் செல்போனில் பங்குச் சந்தையில் என்ன நடக்கிறது என்று பார்த்துக் கொண்டு வருவார். "அதுவாக ஓடும் கார்" எனக்கு பயம் என்பதால், நான்தான் கொட்டக்கொட்ட முழித்து, சாலையைப் பார்த்து வருவேன். தானாக ஓடும் காரில் இருக்கும் software bug எங்களைத் கொன்று இருக்கும் தருணங்களும் கடந்து போனது.
**

நான் பயணங்களுக்காக சேமிக்கிறேன். ஆயிரங்களில் அல்ல வெறும் பத்து இருபதுகளில். நான் வாழும் மாநிலத்தில் 100 கவுண்ட்டிகள் உள்ளது. கவுண்ட்டி என்பதை , நம்மூர் மாவட்டம் என்று ஒப்பீடு செய்துகொள்ளலாம். எல்லாக் கவுண்ட்டிகளின் முக்கிய ஊர்களில் ஒரிரு நாட்களாவது தங்கி வரவேண்டும் என்பதற்கு சேமிப்பதற்கே , குட்டிக்கரணம் அடிக்க வேண்டியுள்ளது. வாழ்தலுக்கான நோக்கங்கள் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். சேமிப்பிற்கான நோக்கங்களும் செலவழித்தலுக்கான நோக்கங்களும் ஒவ்வொரு மனிதருக்கும் வேறுபடும். எதுவும் தவறு அல்ல.
**

சின்ன வயதில் 50 காசுகள் கொடுத்து வாடகைச் சைக்கிள் எடுத்து மாதம் ஒருமுறை ஓட்டுவதே உச்சகட்ட ஆசையாக இருந்தது. கல்லூரி சென்றபோது ,second hand  ல் அந்தக்கால இத்துபோன Atlas மாடல் சைக்கிள் ஒன்றை, தன் பட்செட்டிற்கு மேல் செல்வதால் நண்பரிடம் கடன் வாங்கித்தான் அப்பா வாங்கிக் கொடுத்தார்.

வயர் பிரேக்குகள் கொண்ட அல்ட்ரா மாடர்ன் சைக்கிள்களும், Yamaha  மற்றும் பல வண்ண மோட்டார் பைக்குகளும் உலா வந்த அந்தக் கல்லூரியில், பெயிண்ட்போன சைக்கிளோடுதான் வலம் வந்தேன் 4 வருடங்களும். நான்கு வருடங்களும் ஒரே shoe தான்.

அமெரிக்கா வந்த பிறகு, தேவையின் பொருட்டு $15,000 கார் வாங்கிய பிறகும்கூட, ஆசைக்காக‌ $100 சைக்கிள் வாங்க நிறைய யோசிக்க வேண்டி இருந்தது. தேவைக்காக ஆயிரம் செலவழித்தாலும்,  ஆசைக்காக பத்து ரூபாய் செலவழிக்காமல் அதை அவசரத்தேவைக்கு சேமித்து வைப்போம்.

ஆசைக்காக 2 ரூபாய் டீ குடிக்காமல், மிடறு விழுங்கியே வளர்த்த தந்தைகளின் வளர்ப்பு. என் போன்ற முதல் தலைமுறை பட்டதாரிகள், ஓரளவு சம்பாதிப்பவர்கள் இன்னும் இப்படி இருக்கலாம்.

தேவை என்ற நிலை வந்தபின்னர்தான், 10 வயதில் ஆசைப்பட்ட சைக்கிள் கனவு 37 வயதில் நிறைவேறியது எனக்கு.
**

வாழ்க்கை என்பது நாடகம் போல் ஒத்திகை அல்ல, சரிசெய்துகொள்ள. அது மெய். ஒவ்வொருகணமும் ஒருமுறை மட்டுமே வாய்ப்பு. ஆசை என்பது அற்ப செலவில் இருந்தாலும், தேவை கேட்கும் அதிகப் பணத்திற்காக பல ஆசைகள் நிராசையாக ஆகிவிடும். சின்னச் சின்னச் ஆசைகளுக்காக செலவழிக்கத் தயங்க வேண்டாம். சீமாட்டியிடம் சிகரட் வாங்கி புகைக்க வெட்கப்படவேண்டாம். அவளே பற்றவைத்தால் அது கூடுதல் அழகு.
**

பொருளின் மதிப்புகள்தாண்டி, ஆசையும் தேவைக்குமான இடைவெளி என்பது, நாம் வகுத்துக்கொள்வது. வாங்கும் சக்தி உள்ள‌வனின் ஆசைகள், சட்டனெ தேவையாக மாறிவிடும். வாங்க வசதிகள் இல்லாதவனின் தேவைகள்கூட, ஆசையாக தேங்கிவிடும். எனது ஆசை மற்றவரின் தேவையாகவும், எனது தேவை மற்றவரின் ஆசையாகவும் இருக்கலாம். எதையும் தட்டையாகப் பார்த்துவிடமுடியாது.

**
இன்றுவரை நிறைவேறாத ஆசைகள் இரண்டு.

Yezdi மோட்டார் சைக்கிள்மீது காதல் இருந்தது இந்தியாவில். வாடகை சைக்கிளே கனவாக இருந்த எனக்கும், TVS 50 யை கனவாக கொண்டிருந்த என் வசதியான நண்பர்களுக்கும் மத்தியில், தன் தாத்தாவின் Yezdi பைக் ஓட்டியிருந்த ஒருவன் பெரிய அம்பானியாகத் தெரிந்த காலம் அது.

கார் மற்றும் பைக் ஓட்டுநர் உரிமத்திற்காக, நண்பன் ஒருவனின் M80  ல் தான் மோட்டார் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டேன். இன்றுவரை கியர் வைத்த பைக்குகள் சரியாத ஓட்டத் தெரியாது. ஓசியில் ஓட்டிப்பழக வாய்ப்புகள் கிடைக்கவே இல்லை என்பதே உண்மை.

இத்தனைக்கும், கல்லூரியில் என் அறைத்தோழன் McDowell's Whisky  உற்பத்திச் சொழிற்சாலை வைத்திருந்த அப்பாவின் பிள்ளை. பணக்கார நண்பர்கள் இருந்தாலும், தன்மானம் என்பதும், ஆசைப்பட்டு அடிமையாகிவிடக்கூடாது என்பதும், கனலாக இருக்கும் எப்போதும்.  அறைத்தோழனிடம் பைக் கேட்டு ஓட்டியிருக்கலாம். ஆனால்  "டே, வண்டிக்கு பெட்ரோல் போட்டுட்டு வர்றியா?" என்று ஏவ வாய்ப்புள்ளது. அதனால் சைக்கிளே சக்கரவர்த்தி என்று வலம் வந்தேன்.

இப்போதுகூட அதிக பணம் புழங்கும் நண்பர்கள் எனக்கு இல்லை. அதிகம் பேர் முதல் தலைமுறைப் பட்டதாரிகளே என் வட்டத்தில்.

திருமணமான பிறகு, மனைவி கொண்டுவந்த அவரின் Bajaj Sunny யை அவர் ஓட்ட, நான் பின்னால் உட்கார்ந்து செல்லும் அளவிற்கே என் திறமை இருந்தது.

கடைசிவரை Yezdi  பைக்கை தொட்டுப்பார்க்கக்கூட முடியாமல் கனவு கலைந்துவிட்டது.
**

இரண்டாவது ஆசை நம்மூர்  Mahindra build Jeep


எனது 2009 கேம்ரி கார் ஓடவே முடியாத நிலையில் உயிரைவிட்டால், கடனை உடனை வாங்கியாவது இந்த ஊர்  Jeep Wrangler வாங்கிவிட வேண்டும் என்று மனது படுத்துகிறது. பார்க்கிங் இடத்தில் Jeep Wrangler ப் பார்த்தால் சுற்றிச் சுற்றி வருவேன் குழந்தையைப் போல்.


இதுவும் Yezdi மோட்டார் சைக்கிள் போல நிறைவேறாத ஆசையாக , கனவாக கலைந்துவிடலாம். ஆனால், ஏதோ ஒரு அழகிய கனவைக் காண்கிறேன். இருந்துவிட்டுப்போகட்டுமே? என்று சமாதானமும் சொல்லிக்கொள்கிறேன். இத்தைய சமாதானக் காரணங்கள் தனித்துவமானவை. ஆனால், என்ன ஆசைப் படுகிறோம் என்பது அனைவருக்கும் தனித்துவமானது. அது உங்களை யார் என்றும் காட்டும் உலகிற்கு.
**

ஏதாவது ஒரு ஆசையை வைத்துக்கொள்ளுங்கள். காலையில் எழுந்திருக்க அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். Just one more reason to wake up and move forward. பெரும் முதலாளிகள் கோடியில் பணம் வந்தால் ஃபெராரி கார் வாங்க வேண்டும் என நினைத்துவிட்டுப் போகட்டும். ஆயிரத்தில் பணம் வந்தால் 10 ரூபாய் ஃகாபியை, இதுவரை பார்த்திராத ஒரு தெருமுனைக் கடையில் குடிக்க நினைப்பது நம் ஆசையாக இருந்துவிட்டுப் போகட்டும்.
**

ஆசையை தேவையாக மாற்ற நாம் சொல்லிக்கொள்ளும் காரணங்களைக் கலைந்து, ஆசையை ஆசையாகவே அணுகலாம் தவறில்லை. எதற்காக ஆசைப்படுகிறோம் என்பதும், எப்படி வாழ நினைக்கிறோம் என்பதும் மட்டுமே தனித்துவமானவை.

அழகிய ஆசைகளை வைத்துக்கொள்ளுங்கள் இரகசியமாகவேணும்.

**

6 comments:

  1. வாழ்த்துக்கள, கனவு நனவாக. நன்றி எழுதியதிற்காக

    ReplyDelete
  2. felt as if you talk to me directly. Nalla ennangal

    ReplyDelete
  3. வாங்கும் சக்தி உள்ள‌வனின் ஆசைகள், சட்டனெ தேவையாக மாறிவிடும். வாங்க வசதிகள் இல்லாதவனின் தேவைகள்கூட, ஆசையாக தேங்கிவிடும். எனது ஆசை மற்றவரின் தேவையாகவும், எனது தேவை மற்றவரின் ஆசையாகவும் இருக்கலாம். எதையும் தட்டையாகப் பார்த்துவிடமுடியாது. மிகவும் ஆழமான வரிகள்!!

    ReplyDelete
  4. உங்களது அனுபவங்கள் எனது அனுபவங்களுடன் நிறையவே ஒத்துப்போகிறது.நண்பனது M80 யை ஓசி வாங்கி வண்டி ஓட்டக் கற்றுக் கொண்டது உட்பட.

    ReplyDelete