Friday, November 25, 2005

பொங்கல் கொண்டாட்டம் சிலரின் தயக்கங்கள்.

பதிவு22:பொங்கல் கொண்டாட்டம் சிலரின் தயக்கங்கள்.

நான் இதற்கு முன் எழுதிய "பொங்கல் கொண்டாட்டம்-தமிழக இஸ்லாம்,கிறித்துவ நண்பர்களுக்கு ஒரு கேள்வி " என்ற பதிவில் இருந்து நான் தெரிந்து கொண்டவைகள்.


1.ஈழத்தில் இது தமிழர் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அங்கே இது தீபாவளியைவிட முக்கியத்துவம் பெறுகிறது.

2.தமிழ் நாட்டில் உள்ள இந்துக்களில் பெரும்பாலானவர்கள் தீபாவளிக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை பொங்கலுக்கு அளிப்பதில்லை.

3.ஒரு சிலர் இந்துவாக இருந்தாலும் தமிழன் என்ற வட்டத்திற்குள் வர விருப்பம் இல்லாமல் இருக்கிறார்கள். திராவிடம் ஆரியம் போன்ற பிரச்சனைகளால் இருக்கலாம். என்பது எனது எண்ணம்.

4.கிறித்துவர்களில் RC பிரிவினர் இதனைக் கொண்டாடுகிறார்கள்.மற்றவர்கள் அப்படியே கொண்டாடவிட்டாலும் இது தமிழர் பண்டிகைதான் என்பதை எதிர்க்கவில்லை.(மற்ற பிரிவினர்களின் கருத்தும் அறியப்பட வேண்டும்).

5.இஸ்லாமியர்கள் மட்டுமே இதனைக் கீழ்கண்ட காரணங்களால் கொண்டாடத் தயக்கம் காட்டுகின்றனர்.

இஸ்லாமியரின் நிலையையும், எண்ணங்களையும் பகிர்ந்து கொண்ட "
நல்லடியாருக்கும்" "நண்பனுக்கும்" நன்றி.

நல்லடியார் தனது புதிய தளத்தில் "பண்டிகைகளும் நல்லிணக்கமும்" என்று மூன்று பகுதிகள் எழுதியுள்ளார்.

http://nalladiyar.blogspot.com/2005/10/1.html
http://nalladiyar.blogspot.com/2005/10/2.html
http://nalladiyar.blogspot.com/2005/11/3.html

நல்லடியார் மற்றும் நண்பனின் பதில்களில் இருந்து ,பொங்கலைத் தமிழர் பண்டிகையாக ஏற்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களாக இவர்கள் நினைப்பது.

1.கடவுளை (அல்லாஹ்வை)த் தவிர வணங்குவதற்குத் தகுதியுள்ளவர் வேறு யாரும் இல்லை என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை. இஸ்லாத்தில் இணை வைத்தல் என்று கூறப்படும் மிக கொடிய குற்றம்.அதாவது இறைவனுக்கு இணையாக பிறிதொரு பொருளைக் கொண்டு பொருளைக் கொண்டு வழிபாடுதல்.

நான் சொல்ல வருவதே இதுதான்.பொங்கல் கொண்டாட்டத்துக்கும் எந்தக் கடவுளுக்கும் சம்பந்தம் இல்லை.இது முழுக்க முழுக்க நன்றித்திருவிழா.எதையும் வழிபாடு செய்யவேண்டாம். இஸ்லாம் மார்க்கத்துக்கு எதிராகவும் எதுவும் செய்யவேண்டாம்.


2.பொங்கல் தமிழர் பண்டிகை என்று சொல்லப்பட்டாலும் அதை கொண்டாடும் முறை இந்துக்களின் வழிபாடாகவே இருக்கிறது.

இது முழுக்க முழுக்க நன்றித்திருவிழா.இதனைக் கொண்டாடும் இந்துக்கள் அவர்களின் தெய்வத்துக்கும் சேர்த்து நன்றியைக் கூறுகிறார்கள் அவ்வளவுதான். இதே பொங்கலை, இஸ்லாம் நண்பர்கள் வைத்து அல்லாவுக்கும், அவர்கள் விரும்பும் (இஸ்லாம் நெறிப்படி) வேறு மனிதர்களுக்கோ பெரியவர்களுக்கோ நன்றி சொல்லிக் கொண்டாடலாம்.

3.பொங்கல் கொண்டாட்டத்தில் சூரிய வழிபாடு உள்ளது.

மீண்டும் நான் சொல்வது. சூரியனுக்கு (கடவுள் இல்லை...சூரியன் என்ற கோளுக்கு அது நமக்கு ஒளி தருவதற்காக.), விவசாயிக்கு, மாட்டுக்கு...என்று நன்றி சொல்வதுதான் இந்தக் கொண்டாட்டத்தின் நோக்கமே தவிர வழிபாடு கிடையாது. வழிபாடுகள் அவரவர் விருப்பத்தைப் பொருத்தது.

4.பொங்கலுக்கு முன்வரும் போகி இந்திரவிழா. அது எங்களுக்குப் பொருந்தாது. நல்லடியார் காட்டும் ஆதாரம் http://uyirppu.yarl.net/archives/000190.html

இந்த இந்திரக் கதை எப்படியோ தமிழ்நாட்டிற்கு வந்து விட்டது. சிலப்பதிகார இந்திரவிழாவிற்கும் இதற்கும் சம்பந்தம் உள்ளதாகப் பேசப்படுகிறது. இது பற்றிய எனது எண்ணங்கள்.
போகிப் பண்டிகை கொண்டாடும் முறை சரியா?http://kalvetu.blogspot.com/2005/11/blog-post_15.html


அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்:


இந்துக்கள் இப்படிக் கொண்டாடுகிறார்கள், அதனால் நாங்கள் இஸ்லாமியர்கள் கொண்டாடத் தடை உள்ளதாக நினைப்பது தவறு.

பொங்கலை சாதி, மத அடையாளங்களில் இருந்து மீட்டெடுக்க வேண்டும்.

ஒரே வகையான சமையற் குறிப்பில் அவரவர் அவருக்கு ஏற்ப உப்பு,மிளகாய் சேர்த்துக் கொள்வது போல அவர்களுக்குத் தேவையான வழிபாட்டு முறைகளை சேர்த்துக் கொள்ளட்டும்.ஆனால் அதையே காரணம் காட்டி ஒரு நல்ல கொண்டாட்டத்தை தவிர்க்க வேண்டாம்.

சாதி, மத,ஆரிய, திராவிட பிரச்சனையை ஓரமாக வைத்துவிட்டு அனைத்து தமிழர்களும் இதனைக் கொண்டாட வேண்டும்.

தமிழர் சார்பாக கருத்து தெரிவிக்க எனக்கு உரிமையை அந்த இரு தரப்பினரும் (குஷ்பூ ஆதரவு & எதிர்ப்பு) கொடுக்கவில்லை என்பதால், நான் என் சார்பாக மட்டும் இதனை எப்படிச் சிறப்பாக சாதி, மத அடையாளம் இல்லாமல் சமூக விழாவாகக் கொண்டாடலாம் என்பதை இன்னொரு நாள் பதிகிறேன்.


****************



****************