Tuesday, November 29, 2005

தமிழ்நாடு மழை,வெள்ளம் எனது எண்ணங்கள்

பதிவு23:தமிழ்நாடு மழை,வெள்ளம் எனது எண்ணங்கள்

எனது அம்மா திருச்சியில் இருக்கிறார். இவர் எனது மனைவி வழி வந்த அம்மா அதாவது புரியும்படி தமிழில் சொல்லவேண்டுமானால் மதர் இன் லா. என்னைய முறைக்காதீங்க. யாராவது தனது சொந்தங்களை பிறருக்கு அறிமுகப்படுத்தும் போது தமிழில் சொல்கிறார்களா என்ன? இவுங்க தான் என்னோட யொவ்பூ. இவருதான் கஸ்பெண்டு, இவரு கசின் அப்படித்தான் நடைமுறை பேச்சு வழக்கம் உள்ளது. நீங்கள் அப்படி இல்லையென்றால் சந்தோசமே. தொலைக்காட்சி தொடர்களின் புண்ணியத்தில் இப்போதெல்லாம் மாமியார் என்றாலே எதோ வில்லி போல் இருக்கிறது.அத்தை என்பது மாமியாராகவும் இருக்கலாம் அல்லது அத்தையாக மட்டும் இருக்கலாம்.யாராவது மாமியாருக்கு மாற்றுத் தமிழ்ச் சொல் இருந்தால் சொல்லுங்கள். அதுவரை அம்மா என்று சொல்வதே எனக்குப் பிடித்திருக்கிறது.போனவாரம் வியாழன் இரவு அவரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.

வாரம் ஒருமுறை சனிக்கிழமை காலை வேளையில் நாங்கள் அவரிடம் பேசுவோம். மற்றபடி ஏதும் முக்கிய விசயம் என்றால் வார நாட்களிலும் பேசுவது உண்டு.இந்தியாவில் இருந்து திடீரென்று தொலைபேசி அழைப்பு வந்தால் முதலில் நமக்கு வருவது பயம் தான் . யாருக்கு என்னவோ? ஏதாவது பிரச்சனையா ? என்பது போல் எதிர்மறை எண்ணங்களே முதலில் வரும். அது என்னவோ தொலைதூரத்தில் வசிக்கும் போது வீட்டில் இருந்து வரும் "எதிர்பாராத" தொலைபேசி அழைப்புகள் சிறிது பயத்தையே கொடுக்கின்றன. அதுவும் திருச்சியே தனித்தீவு போல் கிடப்பதாக வரும் பத்திரிகைச் செய்திகள் நம்மை பயம் கொள்ளச்செய்கின்றன. நல்லவேளை "சன்" போன்ற சமாச்சாரங்கள் வீட்டில் இல்லை.இருந்தாலும் இங்கே உள்ள உள்ளூர் தொலைக்காட்சியிலேயே தமிழ்நாட்டில் பெய்யும் மழையையும், பேருந்து ஆற்றில் மூழ்கி கிடப்பதும் முக்கியச் செய்தியாக வந்து போனது. இவ்வாறான சூழ்நிலையில் அம்மாவின் அழைப்பு வந்தது கொஞ்சம் பயத்தையே கொடுத்தது.அவரிடம் பேசியபின்பு, அவர் பத்திராமாக இருக்கிறார் என்பதைத் தெரிந்து கொஞ்சம் நிம்மதியோனோம்.

தொடர்ந்து பெய்த மழையில் அவர் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பின் முதல்தளம் (தரைத்தளம் Ground Floor) தண்ணீரால் ஆக்ரமிக்கப்பட்டது. குளியலறை,கழிப்பறைகளின் கழிவுநீர்க்குழாய்களின் மூலமாகவும் தண்ணீர் வீடுகளுக்குள் வர ஆரம்பித்து விட்டது.பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சாமான் சட்டுகளை கட்டில்,பரண் மற்றும் உயரமான இடங்களில் பாதுகாப்பாக வைத்துவிட்டு தெரிந்த வேறு நண்பர்களின் வீடுகளில் சென்று தங்கியுள்ளனர்.தெருவில் ஓடும் மார்பளவு தண்ணீரில் இவரும் ஒருவழியாக தப்பித்து அருகில் உள்ள தனது அக்காவின் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.
















மழை,வெள்ளம் சேதங்களைப் பயன்படுத்தி ஆங்காங்கே திருட்டுகள் நடந்துள்ளது.இதன் பொருட்டு பலர் வீடுகளைக் காலி செய்யாமல் தண்ணீரிலேயே வாசம் செய்துள்ளனர். அல்லது வீட்டுக்கு ஒருவர் என்று வீடுகளைப் பாதுகாக்க இருந்துள்ளனர். எனது அம்மாவின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மேல் தளத்தில் உள்ளவர்கள், பெரிய உதவிகளைச் செய்து உள்ளனர். காலி செய்துவிட்டுப்போன வீடுகளைக் கண்காணித்து திருட்டு போன்ற செயல்களில் இருந்து காத்துள்ளனர். மேலும் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்து சமையல் செய்யமுடியாமல் இருந்த அக்கம் பக்கத்தவர்களுக்கு உணவு வழங்கியும், சில வீடுகளில் ஒன்றாக உண்டு, ஒன்றாக உறங்கிப் பொழுதைக் கழித்துள்ளனர்.இது போன்ற துயர் நேரங்களில் மக்கள் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வது நல்லது. எரியும் வீட்டில் பிடுங்கியவரை இலாபம் என்பது போல் , திருட்டுக் குற்றங்கள் நடத்துவோரை என்ன செய்வது?

இப்போது தமிழகத்தில் சமீபத்தில் நிலவும் சூழ்நிலை அசாதாரணமானது. சுனாமி வந்த பின்பும் இது போன்ற இயற்கைச் சீற்றங்களின் வீரியம் இன்னும் அரசியல் கட்சிகள் மற்றும் அதிகாரிகளால் புரிந்து கொள்ளப்படவில்லை என்றே நினைக்கிறேன்.வெள்ள நிவாரணப் பொருட்கள் தருவது,பணம் தருவது போன்ற தற்காலிகத் தீர்வுகள் அவசியமானவைகளே.ஆனால், இதுபோன்ற காலங்களில் மக்கள் என்ன செய்யவேண்டும் அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் என்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்பது இன்னும் தெளிவாக வரையறுக்கப்படவில்லை என்றே நான் நினைக்கிறேன்.சென்னையில் நிவாரண உதவி வழங்குவதில் வந்த குழப்பத்தினால் சில அப்பாவி உயிர்கள் பலியாயின.பேருந்து ஓட்டுனரின் அலட்சியத்தால் அல்லது அறியாமையால் அல்லது சரியான வழிகாட்டுதல் இல்லாமையால் பேருந்துகள் தண்ணீரில் மூழ்கி பல உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தி உள்ளன. நடந்துவிட்ட இயற்கைச்சீற்றங்களால் ஏற்பட்ட சேதங்களுக்கு, அரசின்மீதோ அதன் செயல்பாட்டிலோ, குற்றம் குறை காண்பது எனது நோக்கமல்ல.இனிவரும் காலங்களில் இதனை எவ்வாறு தவிர்க்கலாம் என்பதே நாம் அனைவரும் யோசிக்க வேண்டிய விசயமாகும்.

இயற்கையின் சீற்றமும் அதனால் ஏற்படப்போகும் மழையின் அளவு, புயலின் பாதை போன்றவை 99% கணிக்கப்படக்கூடியதே. சுனாமி வேண்டுமானால் நமது நாட்டுக்கு புதிய இதுவரை கண்டிராத இயற்கைச் சீற்றமாக இருக்கலாம். மழை,புயல் போன்றவை இப்போதுள்ள தொழில்நுட்பங்களால் துல்லியமாக கணிக்கப்படக்கூடியவையே. அமெரிக்காபோல் தினமும் ஒரு தட்பவெப்பம், பனி, சூறாவளி போன்ற தொடர் பாதிப்புகள் இல்லாவிட்டாலும், நாம் இது போன்ற விசயங்களில் கவனம் செலுத்துவது நல்லது.தற்போது உள்ள சாலைகளையோ, ஏரி மற்றும் குளத்தையோ உடனே சீர்திருத்திவிடமுடியாது.உடைந்து போன கரைகளையும், சாலைகளையும் செப்பனிடலாமே தவிர அதனை முழுதுமாக சீர்திருத்திவிடமுடியாது. பலியான அப்பாவி உயிர்கள் என்ன விலை கொடுத்தாலும் திரும்பப் பெற முடியாதவை.நல்ல திட்டங்களை 5 அல்லது 10 வருட தொலை நோக்குத்திட்டமாகப் பிரித்து பல காரியங்களைச் செய்ய வேண்டும்.இதற்கான நிதிநிலை (பட்ஜெட்) மக்களின் நலத்தை கவனத்தில் கொண்டு ஒரு நிரந்தர அமைப்பாக இருக்கும்படி ஏதாவது செய்யவேண்டும். அரசியல் கட்சிககளின் மாற்றத்தால் பாதிக்கப்படாத ஒரு தொலை நோக்குத்திட்டமாக இருக்க வேண்டும்.


இயற்கைச் சீற்றங்கள் வருவதற்குமுன் கீழ்க்கண்டவைகள் செய்யப்படவேண்டும்.
இது ஏதோ ஒருமுறை செய்துவிட்டு பின்பு கிடப்பில் போடும் திட்டமாக இல்லாமல் உண்மையான அவசரகாலத் திட்டமாக இருக்க வேண்டும்.

வானிலை அறிக்கையை உண்மையான ஒரு ஆக்கபூர்வமான அறிக்கையாக மாற்றவேண்டும்.

புயலின் திசை, அதன் வீரியம் பாதிக்கப்போகும் பகுதிகள் போன்றவை தெளிவாக மக்களுக்கு எடுத்துக் கூறப்படவேண்டும்.

மக்களை எச்சரிகை செய்ய சரியான ஊடகங்கள் பயன்படுத்தப்படவேண்டும்.அனைத்துப்பகுதி மக்களுக்கும் சரியான நேரத்தில், சரியான தகவல் போய்ச்சேரும்படி இது அமைக்கப்படவேண்டும்.

கிராம,வார்டு அளவில் இது போன்ற நேரங்களில் மக்கள் எங்கு தங்கவேண்டும், எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பவை முன்னரே திட்டமிடப்படல் வேண்டும். இது வருடம் ஒருமுறை சரிபார்க்கப்படல் வேண்டும்.மாற்றங்கள் இருப்பின் அதுபற்றி மக்கள் அறிவுறுத்தப்படவேண்டும்.

தங்குமிடங்கள் சரியான தகவல் தொடர்பு சாதனங்களால் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும்.தங்குமிடங்களில் உணவு,தண்ணீர்,மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்கள் சேமிக்கப்பட்டு இருக்க வேண்டும்.சரியான கால அளவிகளில் இவை சரிபார்க்கப்பட்டு, எப்போதும் நல்ல பொருட்கள் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும்.(பள்ளிகள்,கல்லூரிகள் போன்றவை நல்ல இடங்களாகும்)

ஒவ்வொருஅரசு மற்றும் தனியார் பேருந்துகள்,கனரக வாகனம் போன்றவைகளில் சரியான தகவல் தொடர்பு சாதனங்கள் பொருத்தப்படவேண்டும்.


இயற்கைச்சீற்றங்கள் வரும் போது ,நிகழ்ந்து கொண்டு இருக்கும் போது கீழ்க்கண்டவைகள் செய்யப்படவேண்டும்.

அரசு மக்களுடன் நேரடித் தொடர்பில் இருக்க வேண்டும்.இதற்கென்று ஒரு செய்தித்டொடர்பாளர் இருக்க வெண்டும்.

அரசின் செய்தி அரசின் செய்தியாக அப்படியே மக்களுக்குப் போய்ச் சேரவேண்டும்.

அனைத்து (தனியார்,அரசு) ஊடகங்களும் அரசின் செய்தித்தொடர்பாளர் தரும் செய்தியை அப்படியே மக்களுக்கு ஒளி/ஒலி பரப்பவேண்டும். இது கட்டாயமாக்கப்பட வேண்டும்.

அரசு உண்மையச் சொல்லுமா என்று கேட்கவேண்டாம். நிச்சயம் ஆளும் அரசுகள் பீதியைக் கிளப்பும் (சன் வகையறா அல்லது தாத்தா ஆட்சியில் ஜெயா வகையறா) வண்ணம் தகவல் தராது.

நீண்ட காலத்திட்டங்களாக செயல்படுத்த வேண்டியது.

கண்மாய்/குளம்/ஏரி மற்றும் ஆறுகள் தூர்வாருதல்/சுத்தப்படுத்துதல்.

கிராமம் மற்றும் நகரங்களில் உள்ள கழிவு நீர்/மழை நீர் வெளியேற்றும் வழிகளைச் சீர் செய்வது.

தொழில் சார்ந்த நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்பு அமைப்போர் தங்களின் நிலத்தில் 1/3 பங்கு அப்படியே நிலமாக வைத்து இருக்க வேண்டும். அதாவது அந்த பங்கு நிலம் தார்,சிமெண்ட் கொண்டு பூசப்படாமல் (மூடப்படாமல்) இருக்க வேண்டும்.அதில் மரங்கள் வளர்ப்பதோ தோட்டங்கள் போடுவதோ ஊக்குவிக்கப்படவேண்டும்.

தனிநபர் இடங்கள் (வீடுகள்) 1/4 பங்கு நிலத்தை நிலமாக வைத்து இருக்க வேண்டும்.

நிலத்தடி நீருக்கு வரி வேண்டும். அதாவது ஒருவர் அல்லது ஒரு தொழில் நிறுவனம் தனது நிலத்தில், தானாக கிணறோ, ஆழ்துளைக் கிணறோ வைத்திருப்பாரேயானால் அவர்கள் அரசுக்கு வரி செலுத்தவேண்டும்.

அரசும் இதன் மூலம் வரும் வருமானத்தை வேறு வகையில் திருப்பாமல் நிலத்தடி நீர் மற்றும் அது சார்ந்த மூன்னேற்றத்திட்டங்களுக்கும், நீர் வளம்/கழிவு நீர் சார்பான திட்டங்களுக்கு பயன் படுத்த வேண்டும்.

இதுபற்றி மற்றவர்களின் கருத்தையும் அறிய ஆவலாக இருக்கிறேன்.

















இதுபோன்ற நெருக்கடிக்காலத்தில் கடமையாற்றும் அரசு,இராணுவம்,காவல் மற்றும் தீயணைப்பு துறையினர் மற்றும் தன்னார்வ நண்பர்கள், தொண்டு நிறுவனங்களுக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவர்கள் வீரர்கள்.

படங்கள்: நன்றி தினகரன்

****************


****************

11 comments:

  1. I accept your suggestions. All the TV channels should include proper Weather forecast in future. (not like that Mazhai payalaam allathu payaamal irukkalaam).
    People also should realise psychologically the need of precautions. Govt. and voluntery org. may initiate this feelings like rain water harvesting.

    ReplyDelete
  2. கருத்துக்கு நன்றி ஜான்

    ReplyDelete
  3. மிகவும் அவசியமான பதிவு.

    பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல தொண்டு நிறுவனங்களும் நிதி திரட்ட வேண்டும்.

    தமிழ்மண நண்பர்களும் ஒரு குழுவை அமைத்து அதன் வழியாக நிதி திரட்டலாமே.

    கல்வெட்டு அவர்களே! என்ன சொல்லுறீங்க, செய்றீங்களா? செய்யலாமா?

    ReplyDelete
  4. மிக நல்ல பதிவு. நல்ல யோசனைகளைச் சொல்லியிருக்கிறீர்கள்.

    நிறைய விஷயங்கள் அடிப்படையிலிருந்தே சரிசெய்யப் பட வேண்டியுள்ளன. நீண்ட காலம் பிடித்தாலும் கட்டாயம் செய்ய வேண்டும். அவசர காலங்களில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது மக்களுக்கு மட்டுமல்ல; அரசுக்கும் தெரியவில்லை என்பதையே நடக்கும் நிகழ்ச்சிகள் காட்டுகின்றன. போக்குவரத்தைக் கட்டுபடுத்துபவர்கள், தட்பவெப்பநிலை குறித்து தகவல் சொல்பவர்கள் ஆகியோரெல்லாம் என்ன செய்கிறார்கள் என்பதே தெரியவில்லை. தமிழ்நாட்டிலுள்ள ஊர்களுக்கு எந்தெந்த மார்க்கங்கள் இருக்கின்றன; என்னென்ன மாற்று வழிகள் இருக்கின்றன; சாலைகள் குறித்த வரைபடம் போன்ற நிறைய அடிப்படைத் தகவல்களே இல்லை என்பது சோகம். அதீத மழை பெய்கையில் சாலையில் குறுக்காக வெள்ளம் ஓடும்போது அதில் போக்குவரத்தைத் தடைசெய்ய வேண்டிய கடமை, கார்ப்பொரேஷன், முனிசிபாலிட்டி, வட்டாரப் போக்குவரத்து, காவல்துறை என்று பலருக்கும் இருக்கிறது. ஆனால் ஒருவரையும் களத்தில் காணமுடியவில்லை.

    இச்சூழ்நிலையிலும் சளைக்காது களமிறங்கித் தொண்டு செய்யும் நல்ல உள்ளங்களுக்கு நன்றிகள். பாராட்டுகள்.

    உங்கள் பதிவுக்கும் நன்றி.

    ReplyDelete
  5. அவசியமான பதிவு. நல்ல கருத்துக்கள். முதலில் நம்ம மக்களுக்கு என்ன விதமான ஏற்பாடுகள்
    அரசுத்தரப்பு செஞ்சிருக்குன்னுக்கூட தெரியறதில்லை. ஒவ்வொரு கட்சியும், ஒவ்வொரு குழுவும்
    வெவ்வேற மாதிரி சொல்றதுலேயே மக்கள் அலைக்கழிக்கும்படி ஆயிடுது. டிவி செய்திகளும்
    அடுத்த அரசாங்கத்தைக் குறைசொல்ல இதை ஒரு வாய்ப்பா வச்சுக்கறாங்க. இப்படியில்லாம
    ஒரு கஷ்டமுன்னு வரும்போது அனைத்துக் கட்சிகளும், மற்ற தன்னார்வத்தொண்டு நிறுவனங்களும்
    ஒண்ணாச் சேர்ந்து அந்தந்தப் பகுதியிலே இருக்கற மக்களுக்குப் பீதியைக் கிளப்பாம விவரம் சொல்லி
    உதவி செய்யணும்.

    கஷ்டம் வர்றப்பப் பார்த்துக்கலாமுன்னு இல்லாம முதல்லேயே ஒரு ஆபத்து வந்தா எந்தெந்த பகுதி
    எங்கே போகணுமுன்னு ஒரு திட்டம் இருக்கணும்.

    இப்பத் தாற்காலிகமா 10 கிலோ அரிசி, 1000 ரூபாய்ன்னு கொடுத்தாலும் ஊழல் செய்யறவங்க அதையும்
    ஜனங்களுக்குக் கிடைக்க விடமாட்டாங்க. அதுலேயும் கொஞ்சக் காசைக் கமிஷன் அடிக்கறது, புழுத்து நாறுன
    அரிசியை இவுங்க தலையிலே கட்டுறதுன்னு எல்லா அக்கிரமங்களும் அரங்கேறும்.

    சுந்தர் நல்ல விவரமான பின்னூட்டம் கொடுத்திருக்கார். தொலைநோக்கோட காரியங்கள் நடக்கணும்.

    பரஞ்சோதி சொன்னாப்புலே உதவலாம்தான். ஆனா இப்படிச் செய்யற பல உதவிகள் சரியான ஆட்களுக்குப் போய்ச்
    சேருதான்னு இப்ப சந்தேகம் வந்திருக்கு.சுனாமிக்காசு ரெட்கிராஸ்லேயே இருக்குன்னும், இன்னும் ஆக்கப்பூர்வமா
    அவசியத்துக்குப் பயன்படுத்தலைன்னும் கொஞ்ச நாளைக்குமுன்னாலே படிச்சேன்.

    காசு சேர்த்து ரெண்டு நாளைக்குச் சோறு போட்டுட்டா ஆச்சா?

    உதவற ஜனங்க கொஞ்சம் தன்னலம் பார்க்காம உதவறமாதிரி, உதவியை ஏத்துக்கறவங்களும் கிடைக்குற உதவியை
    மகிழ்ச்சியோடு ஏத்துக்கிட்டு, மரியாதைகலந்த நட்பைக் கொடுக்கணும்.

    பின்னூட்டம் நீண்டு போச்சு. மன்னிக்கணும்.

    ReplyDelete
  6. நன்றாகப் பதிவு செய்துள்ளீர்கள். பல கருத்துக்களில் எனக்கும் உடன்பாடுண்டு.
    "வானிலை அறிக்கையை உண்மையான ஒரு ஆக்கபூர்வமான அறிக்கையாக மாற்றவேண்டும்."

    100 க்கு 100 சரி. நம்மூர் வானிலை அறிக்கைகள் ஏதோ கடனுக்கு அறிவிக்கப்படுகின்றன. தற்போது சென்னை வானிலை ம்ய்யத்தின் இயக்குனராக இருக்கும் திரு. ரமணன், விஜயகாந்த் திரைப்படத்தில் வசனம் பேசுவது போல் சாட்டிலைட் தொலைக்காட்சி நிறுவனங்களின் கேமராக்களைப் பார்த்தவுடன் வீர வசனம் போல் பேச ஆரம்பித்துவிடுகிறார். ஒரு பெரும் அறிவியல் நிறுவனத்தின் இயக்குநர், மக்களுக்கு உபயோகமான தகவல்களைச் சொல்லவேண்டும் என்ற பாவனையே இல்லை அவரிடம். நமது வானிலை மய்யங்கள் எந்த புள்ளியியல் அடிப்படையில் (statistical modelling) புயல் போன்றவற்றை கணிக்கின்றன என்பதும் புதிராகவே உள்ளது. ஏனெனில் அவர்கள் கணிப்பது பெரும்பாலும் தவறாகவே முடிகிறது. வானிலை அறிக்கை மழை பெய்யும் என்றால் மழை பெய்யாது என்பது தமிழ் மக்களின் அசைக்கமுடியாத நம்பிக்கைகளில் ஒன்று. உதாரணமாக வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புயலின் காரணமாக நேற்றிரவு முதல் சென்னையில் மழை பெய்யும் என்றார்கள், இபோது வரை (11.30 AM IST) ஒரு சொட்டு மழை இல்லை. வெயில் காய்கிறது. Indian meteorological department முதலில் தனது statistical modelling ஐ update செய்யவேண்டும்.

    வீட்டுக்கு வீடு மழை நீர் சேகரிப்பு நல்ல திட்டம் தான். ஆனால் அதைவிட முதன்மையாக கண்மாய்/குளம்/ஏரி மற்றும் ஆறுகள் தூர்வாரியிருந்தால், கழிவு நீர்/மழை நீர் வெளியேற்றும் வழிகளைச் சீர் செய்திருந்தால் பெரும் சேதங்களைத் தடுத்திருந்திருக்கலாம்.

    ReplyDelete
  7. பரஞ்சோதி,
    //தமிழ்மண நண்பர்களும் ஒரு குழுவை அமைத்து அதன் வழியாக நிதி திரட்டலாமே.
    கல்வெட்டு அவர்களே! என்ன சொல்லுறீங்க, செய்றீங்களா? செய்யலாமா?//

    துளசியின் பின்னூட்டத்தைப் பார்க்கவும். அவர் சொல்லியிருக்கும் கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு.

    அப்படியே நீங்கள் உதவ வேண்டும் என்று நினைத்தால் இந்த தகவலைப் பார்க்கவும்.

    தமிழக வெள்ள நிவாரணம்: AID India தகவல்கள்
    http://kurangu.blogspot.com/2005/11/aid-india.html

    தமிழ் நாட்டில் இருந்து இதனை ஏற்கனவே சுனாமியின் போது நல்லபடியாகச் செய்தவர் ரஜினி ராம்கி. அவரையும் தொடர்பு கொள்ளலாம்.

    ஒரு நீண்டகால திட்டமாக நாம்(இது போல் ஆர்வம் உள்ளோர்) என்ன செய்யலாம் என்பது பற்றி எனக்கு ஒரு பார்வை (கருத்து) இருக்கிறது. அது பற்றி இன்னொரு நாள் பதிகிறேன்


    சுந்தர்,
    //தமிழ்நாட்டிலுள்ள ஊர்களுக்கு எந்தெந்த மார்க்கங்கள் இருக்கின்றன; என்னென்ன மாற்று வழிகள் இருக்கின்றன; சாலைகள் குறித்த வரைபடம் போன்ற நிறைய அடிப்படைத் தகவல்களே இல்லை என்பது சோகம். //

    உண்மைதான். இதற்கென்று ஒரு துறை இருக்கிறது என்றே நினைக்கிறேன். குஷ்புவின் பின்னால் (ஆதரவு/எதிர்ப்பு இரண்டும்) அணி திரள்வதை விட்டுவிடு அனைத்து கட்சிகளும் தங்களால் இயன்ற அளவு தமிழகத்திற்கு நல்லது செய்ய வேண்டும்.

    துளசிக்கா
    உங்களின் அனைத்துக் கருத்துகளோடும் ஒத்துப்போகிறேன். அம்மா கட்சியினர் மட்டும் (அம்மாவுக்குப் பயந்து??) வேலை பார்ப்பதாக கேள்விப்பட்டேன்.

    ஒரு வேளை ஆளும் கட்சி என்பதால் இருக்குமோ?

    மற்ற கட்சிகள் அரசை விமர்சிப்பதோடு சரி. இது போன்ற காலங்களில் களம் இறங்கினால்தானே நல்லது.

    தங்கவேல்,

    சரியாகச் சொன்னீர்கள். தகவல் தொழில் நுட்பத்தில் நாம் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. ஆனால் நம் நாடு என்று வரும் போது ஏதும் உருப்படியாக செய்வதில்லை.

    சும்மா http://www.weather.com/ ன் குளோபல் பக்கத்தில் http://www.weather.com/common/welcomepage/world.html?from=globalnav
    மதுரை என்று போட்டாலே நல்ல தகவல்களைத் தருகிறது.

    உதாரணம்: http://www.weather.com/outlook/travel/businesstraveler/local/INXX0076?lswe=madurai&lswa=WeatherLocalUndeclared

    அரசு முயன்றால் முடியாதது இல்லை. அதுவும் தற்போதைய முதல்வர் மனது வைத்தால் நிச்சயம் நடக்கும்.

    கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி!

    ReplyDelete
  8. நல்ல பதிவு.
    அரசு இப்படியான விடயங்களில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும்.

    ReplyDelete
  9. நன்றி சந்திரவதனா

    ReplyDelete
  10. வணக்கம் கல்வெட்டு:

    தகவல்கள் சேகரித்து உடனுக்குடன் பகிர்வதற்க்கு இணையம் மற்றும் விக்கி நல்ல வழிமுறை. நீங்கள் சொல்வது போல அரசாங்கம் பல நிர்வாக தாயார்படுத்தல்களை, மேன்படுத்தல்களை மேற்கொள்வது அவசியம். அதேபோல, தனிப்பட்ட முறையிலும், அதேவேளை கூட்டாகவும் செய்திகளை சேகரிப்பதற்கும், பகிர்தலுக்கும் விக்கி நன்று. பின்வரும் சுட்டியை பார்க்கவும்.

    http://ta.wikipedia.org/wiki/தமிழ் நாட்டில் அடைமழை, வெள்ளப்பெருக்கு, மார்கழி 2006

    ReplyDelete
  11. தாமதமாக தங்கள் தளத்தைக்கண்டேன் வெள்ளம் வருமுன்னே மாநகராட்சி அலுவலர்கள் காவல் துறையின் ஏன் காவல் துரை ஏ சி யே நேராகச் சென்று இந்த பகுதியில் தண்ணீர் வரபோகிறது அனை வரும் பள்ளிக்கூடங்களுக்கு வந்துவிடுங்கள் என கூறிஅழைத்து வரமறுத்துஇருந்து வீட்டினுள் தண்ணீர் வரவர டேபில் பிறகு லாப்ட் இவைகளில் ஏறி நின்று கொண்டனர். ஆட் சேதம் இல்லையென்றாலும் பொருட்சேதம் உண்டு. திருச்சியில் தான்

    ReplyDelete