Thursday, April 20, 2017

தமிழ்ப்பெண் மாதவியை தேவடியாளாகக்காட்டும் கதை காவியம்.. மாது ஒரு பாகன் என்றால் உங்க சாதி அவதூறா?

பெருமாள்முருகன் ஒரு நல்ல கதைசொல்லி அவர். அவர் எழுதிய ஒரு புனைவுக்கதையை (fictional story) மையமாக்கி அவர் அமெரிக்கா வ‌ருவதை பலர் பஞ்சாயத்தாக்கிக் கொண்டுள்ளார்கள். இவரை எதிர்ப்பவர்களில் பலர் சாதிப்பித்தர்கள். பெரியார் புத்தகங்களை வீட்டில் அடுக்கி வைத்து இருந்தாலும், மனதில் சாதியைப் practice செய்பவர்கள்.

ஃபெட்னா என்ற ஒரு அமைப்பு அதன் விழாவிற்கு ஒருவரை அழைத்து , அவரும் ஒப்புக்கொண்ட நிலையில், சாதியை முன்னிறுத்தி அவரின் அழைப்பை திரும்பப்பெற்றார்கள் என்ற செய்தி அமெரிக்காவில் தமிழர்களிடையே பல பஞ்சாயத்துக்களை ஏற்படுத்தி உள்ளது.

இன்றைய நிலையில் , ஃபெட்னா அதிகார பூர்வமாக "நாங்கள் விடுத்த அழைப்பு அப்படியே உள்ளது"என்று சொல்லி சரி செய்துள்ளார்கள். பாராட்டுகள்.

பெருமாள்முருகனே இதைப் பற்றிப் பேசவேண்டாம் என்று சொன்னாலும், உள்ளூர் சாதிப் பிரச்சனைகளைப் பேச வேண்டிய தேவை உள்ளது. மேலும் சமீபத்திய சாகித்ய அகடாமி என்ற அரசாங்க அமைப்பு ,  இவரின் அதே கதையை (ஆங்கில மொழிபெயர்ப்புக்காக) பரிசுக்கு தேர்ந்தெடுத்து உள்ள செய்தி , அடுத்த ரவுண்டு பஞ்சாயத்தை ஏற்படுத்தி உள்ளது.

"மாது ஒரு பாகன்" :பெருமாள்முருகன் . அம்பேரிக்காவிலும் சாதித்திமிர் தமிழன்
http://kalvetu.balloonmama.net/2017/04/blog-post.html

"பெருமாள்முருகன் கவுண்டர் சாதியினரையும், பெண்களையும் அவமானப்படுத்திவிட்டார் அவரது கதையில்", என்பதுதான் அம்பேரிக்க, பெட்னாவில் உட்கார்ந்து இருக்கும் சில சாதிப்பிரியர்கள் வைக்கும் குற்றச்சாட்டு. இந்தப் பெரிசுகளில் பலருக்கு இந்த பெட்னா அரசியல்தான் முழுநேர வேலை.  தமிழும் தெரியாது புனைவும் தெரியாது. ஏதோ இவர்களின் காலம்போன காலத்தில் நாங்களும் உள்ளோம் என்று சொல்லிக்கொள்ள பெட்னா ஒரு அரசியல் மேடை.

தமிழில் உள்ள பல வரலாற்றுக் கதைகள் , காப்பியங்கள், கவிதைகளில் களவொழுக்கம், தொடுப்பு, திறப்பு என்று பலகூறுகள் உள்ளது. தலைவன் தலைவி என்பது கணவன் மனைவி அல்ல. கதையில் வரும் முக்கிய ஆண் பெண் கதாபாத்திரங்கள். அவர்களின் காதல் , கலவி, களவொழுக்கம் எல்லாம் படித்து வளர்ந்தவர்கள்தான் நாம். இலக்கியம் என்பது பேசாப்பொருளையும் பேச களம் அமைத்துக்கொடுக்கும் இடமாக இருக்க வேண்டும்.

பெட்னாவிலும் சரி பல லோக்கல் தமிழ் சங்கங்களிலும் சரி "கண்ணகியின் கதை" என்ற ஒன்றை  மேடையேற்றுவார்கள். அப்படிச் செய்வதால் ஏதோ இவர்கள் தமிழைக் காப்பதாய் நினைப்பு.

இந்த கண்ணகி கதை எத்தனை பேரை கேவலப்படுத்துகிறது தெரியுமா?

(1) வணிகம் செய்யும் சாதியினர் (செட்டியார்கள்?) வப்பாட்டி வைத்திருந்த கேவலமானவர்கள்.
(2) தமிழ்ப் பெண் மாதவி மற்றும் அவர் சாதியினர் பரத்தை தொழில் செய்த கேவலமானவர்கள்.
(3) தமிழ் ஆண்கள் (கோவலன்) பரத்தையிடம் தொடுப்பு வைத்த‌ கேவலமானவர்கள்.
(4) மதுரைக்கார பொற்கொல்லர் சாதியினர் போட்டுக்கொடுக்கும் கூட்டம். வந்த வாடிக்கையாளரை  அரசனிடம் மாட்டிவிட்ட கூட்டம்.

இப்படியாக பலரையும் கேவலப்படுத்துகிறது இந்த சிலப்பதிகாரக் கதை.

இதை எந்த வெட்கமும் இல்லாமல் பெருமையுடன் மேடையேற்றும் பெட்னா மற்றும் லோக்கல் 'டமுலு' சங்கங்கள், பெருமாள்முருகன் , அவர்களின் கவுண்டசாதியை அவமதித்துவிட்டார் என்று சொல்லி அழுகிறார்கள்.

என்னங்கடா உங்க நியாயம்?
உங்க சாதிப் பிரச்சனைன்னா அதை தமிழ்ப் பிரச்சனைன்னு ஆக்கி பெருமாள்முருகனை எதிர்க்கிறீர்கள்.
அடுத்தவன் சாதியை கேவலைப்படுத்தும் , தமிழ்ப்பெண் மாதவியை தேவடியாளாகக்காட்டும் , கதைன்னா அது தமிழ்ப்பெருமையா என்ன?

*
இந்தியாவில் பல கோவில் சுவர்களில் புடைப்புச் சிற்பமாக, கோபுரங்களில் பதுமைகளாக அலங்கரிப்பவை பாலியல் உறவு சார்ந்த கலவிநிலைகளே. காமசூத்திரம், கசுரகோ சிற்பங்கள் என்று பல சாட்சிகள் இந்தியாவின் கட்டற்ற பாலியல் உறவுகளுக்கு இன்றும் சாட்சியாக உள்ளது.

14 Temples In India Where You Get A Lot More Than Just The Traditional Prasad
http://www.indiatimes.com/culture/who-we-are/14-temples-in-india-where-you-get-a-lot-more-than-just-the-traditional-prasad-231878.html

இவை எல்லாம் வரலாற்று எச்சங்கள்.  இன்று வாழும் நம்மை அது பெருமைப்படுத்துகிறதா அல்லது அசிங்கப்படுத்துகிறதா என்பது, நம் மூளையில் ஏற்றப்பட்டு இருக்கும் புனித/மத/சாதிய/ கருத்துக்களைப் பொறுத்து மாறும்.

இந்தியாவை இந்தக் கோவில்கள் அசிங்கப்படுத்துகிறது என்று சொல்லி இவற்றை இடித்துவிட்டால் இழப்பு நமக்கே.

*
அமெரிக்க அதிபரையும் இன்னும் அனைவரையும் Talk Show க்களில் வெளுத்து வாங்கும் ஒரு நாட்டில் இருந்துகொண்டு, பேச்சு சுதந்திரத்தை ஆதரிக்கும் மண்ணில் இருந்துகொண்டு "என் சாதியை கேவலப்படுத்தினான்", "என் மதத்தை கேவலப்படுத்தினான்", என்று சாதி மதம் பார்த்து கலைஞர்களைத் தடை செய்வது தவறானது.

இப்படியே போனால் கலைகளை , சாதி மதங்களின் பெயரால் அடக்குமுறை செய்தவர்களின் பட்டியலில் (உதாரணம் சல்மான் ருஃச்டிக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனை) தமிழர்களும் வந்துவிடுவோம்.

ஏற்கனவே விசுவரூபம் மற்றும் டாவின்சு கோடுகளை நாசமாக்கிய மதப்பாதையில்,  தமிழனாகச் செல்ல வேண்டாம்.

-----------------

தகவலுக்கு:
ஜாதி - மத வெறியர்களின் பிடியில் வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை
http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/32827-2017-04-08-02-57-56

ஜாதிவெறியர்களிடமிருந்து ஃபெட்னாவைக் காக்க வேண்டும்
http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/32845-2017-04-11-00-01-37

FeTNA காசிருந்தால் முன்னாள் உட்காரலாம். ஜிகினா சிரியுடன் சேர்ந்து சாப்பிடலாம்
http://kalvetu.balloonmama.net/2012/06/fetna.html

1 comment:

  1. நமது வாயும் எதாவது அரைக்க வேண்டும் எனும் நோக்கில் பெட்னாவில் வாழுபவர்வர்கள் நினைத்திருப்பார்கள் போலும் சார்.

    ReplyDelete