Monday, October 29, 2018

'பீ' மேலாண்மை: திரு.சக்கியின் சபரிமலை-கக்கூசு ஒப்பீடு

"Mount Whitney" அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள உயரமான மலை. எந்தப் புனிதக் கதைகளும் இட்டுக்கட்டப்படாத இயற்கையான, அழகான‌ இடம். ஆண்களும் பெண்களுமாக, பல ஆயிரக்கணக்கில் மலையில் ஏறி, மலை உச்சியை அடைவார்கள். விரதம் இல்லை வெறும் பொழுது போக்காக மட்டும். பெண்கள் அவர்களின் சானிட்டரி நாப்கின்களுடன் ( or  tampons/menstrual cup) செல்லலாம். மலையின் சுத்தம் காட்டி அல்லது அந்தக்கால கதைகளைக் காட்டி பெண்களை பலிகடா ஆக்குவத்தில்லை. ஆனால் இந்தமலை, சபரிமலையைவிட அதிக சுத்தமான இடம்.

"பீ" மற்றும் "மூத்திரம்" கழிப்பது குறித்த கடுமையான விதிகள் உள்ளது இங்கே. 22 மைல்கள் பாதையில் கக்கூசு கிடையாது. ஒரு காலத்தில் வைத்து இருந்தார்கள். பராமரிப்பு பிரச்சனைகளால் இப்போது கக்கூசுகள் இல்லை.

பீ வந்தால் என்ன செய்வது? ஆண் என்றாலும் பெண் என்றாலும் நீங்கள் பேண்ட பீயை, நீங்களே பையில் பிடித்து எடுத்து வரவேண்டும். ஆம். இதனால் அழகிய ஓடைகள் அழகாகவே உள்ளது. ஓடைகள் ஆய் கழுவ பயன்படுவதில்லை.

Mt. Whitney: Human Waste
https://www.fs.usda.gov/detail/inyo/recreation/hiking/?cid=stelprd3820395

மலையில் ஏற கொடுக்கப்படும் அனுமதித்தாளுடன், 'பீ' போக என்று அதற்கான  பைகளையும் அரசாங்கமே கொடுத்துவிடுகிறது. கொடுக்கப்பட்ட பையில் குத்தவச்சு பேண்டுவிட்டு, அதை மடித்து பொட்டலமாக்கி, நீங்களே சுமந்து, அதற்காக இருக்கும் கழிவுக்கூடையில் போட வேண்டும்.

அரசன் ஆனாலும்,  ஆண்டியானாலும், சாமியார் ஆனாலும், சாமியே ஆனாலும்,  ஆண்ட பரம்பரையே என்றாலும் அனைவருக்கும் ஒரே நடைமுறைதான்.
Using A “WAG” (Waste Alleviation and Gelling) Bag
http://www.mount-whitney.com/hiking_backpacking_mt_whitney/mt_whitney_wag_bags

இதனால் இன்றும் அந்தப் பாதைகள் சுத்தமாகவும், மலை, எந்தப் புனிதக் கதைகளும் சாமியும் இல்லாமல், சுத்தமாக உள்ளது.
**

இந்தியாவில் ஆன்மீகம் என்பது பூசணிக்காயை தெருவில் உடைப்பது தொடங்கி, சட்டை இல்லாமல் வெற்றுடம்புடன் பெண்  சிலைகளை தொட்டு குளிப்பாட்டும் பூசாரிகள் தொட்டு, கங்கையில் பிணத்தை தூக்கி எறியும் சிவிக் பண்புகள் அற்ற வெற்றுச் சடங்குகளே.

சாலை விதிகளுக்கு முரணாக கட்டப்பட்ட தெருவோர கோவில்களும் (எல்லா மதங்களும் அவர்கள் பங்கிற்கு) , அந்த ரோட்டில் அடைத்துக்கொன்டு பைக்கை நிறுத்திவிட்டு பயபக்தியாய் வணக்கிச் செல்லும் நல்லவர்களைக் கொண்ட ஆன்மீகம் இந்திய ஆன்மீகம்.

எந்த வெட்கமும் இல்லாமல் வாழும் யோக மனநிலை கொண்டது. அதுதான்  அதன் சிறப்பே. பொது வாழ்வு சிந்தனைகள் அற்ற ஒன்று.  சமூகம் , இயற்கை, மற்றும் அன்றாட சிவில் செயல்பாடுகள் என்று எல்லா இடங்களிலும் அயோக்கியத்தனங்கள் செய்தாலும், ஏதாவது ஒரு மதத்தைப் பிராக்டீசு செய்தால் அவன் புனிதமானவனாகிவிடுவான் இந்தியாவில்.
Image from: https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/Pumpkins-broken-on-roads-despite-instructions/article15783243.ece
**

சபரிமலை, சக்கி அவர்களின் கக்கூசு உதாரணம்
-----------------------------------------------
சபரிமலை குறித்து ஏகப்பட்ட விவாதங்கள். தந்திரிக்குச் சொந்தமா? மலைவாழ் மக்களுக்குச் சொந்தமா?

அய்யப்பன் பிரம்மச்சாரி, பருவப் பெண்களை அவரிடம் இருந்து மறைத்து வைக்க வேண்டும் என்று ஒருபக்கம்.

"அனுமாரும் பிரமச்சாரிதானே? அவர் கட்டுப்பாடாக இருக்காரே? ஏன் அய்யப்பனும் அப்படி இருக்கக்கூடாது?" என்று ஒருபக்கம்.

இந்த விவாதங்களில், உடற்பயிற்சி சொல்லித்தரும் பிரபல தொழிலதிபர் திரு. சக்கி வாசுதேவன் அவர்களின் பேட்டியில், "பெண்கள் கக்கூசிற்கு ஆண் போகாதது போல, ஆண்களுக்கான கோவிலுக்கு பெண்கள் போகக்கூடாது" போன்றதொரு வாதத்தை வைக்கிறார். https://youtu.be/IqmAxB5qiH4?t=330

சரிதான் சக்கி அவர்களே. சபரிமலையில் 10 ல் இருந்து 50 வயது பெண்கள் மட்டும் வரக்கூடாது என்பது ஏன்?

50 வயதுக்கு மேல் உள்ள ஆணை பெண்கள் கக்கூசில் அனுமதிப்பார்களா என்ன? அல்லது, ஆண்கள் கக்கூசில் 50 வயதுக்கு மேல் உள்ள பெண்களை அனுமதிப்பார்களா என்ன?

நீங்கள் சொன்ன கக்கூசு உதாரணம்போல, எந்த வயதிலும் பெண்கள் வரக்கூடாது என்று சொன்னால்கூட ஒரு நியாயம் உள்ளது.


**
'பீ' மேலாண்மை
-----------------------------
சக்கியின் வழியாக, கக்கூசு மற்றும் 'பீ' மேலாண்மை குறித்தான சிலவற்றைப் பேசலாம்.

நான் 1984 ல் பழனிக்கு நடைபயணமாகச் சென்றுள்ளேன். குருசாமிகளின் அலப்பரையினால் , அவர்களைத் தவிர்த்து, எனக்கு நானே மாலைபோட்டு, பழனி சென்றுள்ளேன். மூன்று நாள் நடைப் பயணமாக.

அப்போதெல்லாம் பயணத்தில் எங்கே மலம் கழிப்பது என்ற கவலையோ, அது குறித்து சிந்திக்க வேண்டும் என்ற தேவைகளோ இல்லாதிருந்தது. அப்படி சிந்திக்க வேண்டும் என்று யாரும் சொல்லித்தரவில்லை. குருசாமி நடத்தும் பசனைக் கூட்டங்களில்கூட, எதைச் சாப்பிடுவது என்றும், என்ன பாட்டு பாடுவது என்றும், மாலையை எப்படி அணிய வேண்டும் என்ற‌ சடங்குகளையே சொல்லிகொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

குருசாமியிடம் மாலை போட்டுக்கொண்ட மேலச்சின்னம் பட்டி சரவணனுக்கும், எங்கே எப்படி மலம் கழிப்பது குறித்தான விசயங்களை அவனின் குருசாமி சொல்லிக் கொடுக்கவில்லை.

வாய்க்கால் கரை, கம்மாக் கரை என்று நீர்நிலைகளை ஒட்டி, எங்காவது குத்தவைத்து மலம் கழித்துவிட்டு அந்த நீர்நிலைகளிலேயே குண்டியைக் கழுவிட்டு முருகன் பேரைச் சொல்லி நடந்து கொண்டிருப்பார்கள் சாமிகள். சாமிகள் செல்லும் வழியெல்லாம் சந்தனக் குவியலாய் 'பீ'யை விட்டுச் செல்வார்கள்.

சந்தனம் மணக்கும் முருகனைக் காணச் செல்லும் வழியெல்லாம் பீக்காடாக ஆக்கிச் செல்வது குறித்த எந்த குற்றவுணர்வும் இல்லாமல், "முருகன் சிரசில்" ஒட்டிய சந்தனம் என்று புரோக்கர்கள் கொடுத்த சந்தனத்தை வாங்கிவருவதே முக்கியமாக இருந்தது.
**
ஒரு தலைமுறையே, ஒரு சமுதாயமே 'பீ' மேலாண்மை குறித்த எந்த சிந்தனையும் இல்லாமல், ஏன் அதை ஒரு பிரச்சனையாகவே எடுத்துக்கொள்ளாமல், கிடைத்த இடத்தில் பேண்டு கழித்த காலங்கள் அது.  அதே சமயம், பக்தி என்ற பெயரில் பசனைப் பாடல்களும், மாலையில் துணை மாலை முக்கியமா? என்ற கடுமையான விதிகள் இருந்தது.

கருவறையில் குசுவை நசுக்கிவிட்டால்கூட தவறே இல்லை. ஆனால், ஒரு அவசரத்திற்கு  குழந்தைகளை ஒன்னுக்கு இருக்கவிடக்கூட‌  கோவிலில் கழிப்பறையைக் காண முடியாது. மனிதர் கூடும் இடங்களில் கருவறைகளைவிட கக்கூசின் தேவை முக்கியம்.
**

சபரிமலை
---------------------
நான் சபரிமலை சென்றது இல்லை. சபரிமலைப் பாதையில் பீ, மூத்திரம் வந்தால் சாமிகள் அதை அந்த புனித ம‌லையிலேயே கழிந்து விட்டு வருகிறார்களா? அல்லது அய்யப்பன் மலை என்பதால், தங்களின் பீயை பையில் எடுத்து வந்து, புனித மலை தாண்டி, அடிவாரத்தில் போடுகிறார்களா என்று தெரியவில்லை.

"பெண்களின் இரத்தப் போக்கு இந்தக் கோவிலுக்கு தீட்டு" என்று சொல்லி 10 ல் இருந்து 50 வயது பெண்கள் வரக்கூடாது என்று கொந்தளிக்கும் ஆண் சாமிகள் நிச்சயம் அவர்கள் தினந்தோறும் பேளும் பீயை அய்யப்பன் வாழும் புனித மலையில் விட்டு வரமாட்டார்கள் என்றே நம்புகிறேன்.
**

மலை ஏறி இறங்கும் வரை, தினந்தோறும் புனித மலையில் மலம் கழிப்பவன் அய்யப்பனைப் பார்க்கலாம்.

மலை ஏறி இறங்கும் வரை தினந்தோறும் புனித மலையில் ஒன்னுக்கு போகிறவன் அய்யப்பனைப் பார்க்கலாம் என்பதால், மாதத்தில் மூன்றுநாள் வந்து போகும் "கருப்பை இரத்தம்" உள்ள பெண்கள் போவதில் பிரச்சனை இருக்காது அல்லவா?
**

ஒருவேளை, புனித மலைக்கு எந்த மனிதக் கழிவுமே ஆகாது என்றால், Mount Whitney சட்டதிட்டங்கள் போல‌ இப்படி ஒரு சட்டம் போடுவோம்.

"புனித மலையான சபரிமலையில், பேள்வதற்கு தடை. அது கக்கூசாக இருந்தாலும், கம்மாக்கரையாக இருந்தாலும். புனிதமான மலையில் பேள்வது பெரிய குற்றம். மலை ஏறுபவர்கள் அவர்களின் பீயை அவர்களே பையில் எடுத்து வரவேண்டும். அதை அதற்கென உள்ள பெட்டியில் போடவேண்டும்"

இப்படியான சட்டங்கள்தான் உண்மையான தூய்மை காக்கும்.

A tea stall inside a toilet block at Sabarimala
https://www.thehindu.com/news/national/kerala/a-tea-stall-inside-a-toilet-block-at-sabarimala/article6279967.ece

Sabarimala 2016 | Toilet waste are overflowing to Pampa
https://www.youtube.com/watch?v=GhveJAb6pwg

**
ஆண்களுக்கு  மட்டுமான கிளப்
---------------------------------------------------
ஆண்களுக்கு  மட்டும் என்று சில இடங்கள் இருக்கலாம் தவறே இல்லை. ஆண்களுக்கு மட்டுமான தனிப்பட்ட கடவுளாக அய்யப்பன் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால், "ஏன் பெண்கள் வரக்கூடாது?" என்ப‌தற்காக ஆன்மீக அடியாட்கள் கொடுக்கும் விளக்கங்கள்தான் முன்னுக்குப்பின் முரணாக உள்ளது.

அய்யப்பன் திருமணமாகாத ஆண்:
-----------------------------------------------------------
திருமணமாகாத ஆண் ஒருவரைப் பார்க்க ஏன் திருமணமான ஆண்களை அனுமதிக்கிறார்கள்? விரதம் இருந்தால் "திருமண தோசம்" போய்விடும் என்றால் அது பெண்ணுக்கும் பொருத்தம்தானே?

பெண்கள் மலையேற முடியாது:
-------------------------------------------------------
10 இருந்து 50 வயது பெண்கள் மட்டும் மலை ஏற முடியாதா? 60 வயது பாட்டியால் ஏற முடிந்த மலையை 30 வயது பெண்ணால் ஏற முடியாதா என்ன? அப்படியே ஏற முடியாது அல்லது கூடாது என்றால், ஏன் இந்த வயதுக்கட்டுப்பாடு?

மலையில் புலி உள்ளது:
-------------------------------------
புலிக்குத் தேவை மாமிசம்தான். அதற்கு ஆண் மனித மாமிசம், பெண் மனித மாமிசம் என்ற வேறுபாடு இல்லை. மாமிச உடலுடன் ஆண் போகும் போது ஏன் அதே மாமிச உடலுடன் பெண் ஏன் போகக்கூடாது?

கருப்பை இரத்த வாடைக்கு புலி வரலாம் வாதத்தை ஏற்றுக்கொண்டாலும்,  தனது பக்தைகளை புலியிடம் இருந்து காப்பாற்ற முடியாத அய்யப்பன் எப்படி புலியிடம் பால் கறந்திருக்க முடியும்? என்ன மாதிரியான கடவுள் இவர்?
**

பெண்களின் இரத்தப் போக்கு இந்தக் கோவிலுக்கு தீட்டு என்பதே "10 ல் இருந்து 50 வயது பெண்கள் வரக்கூடாது" என்பதற்கான காரணம். செயல்படும் நிலையில் உள்ள கருப்பையுடைய பெண்கள், கன்னிச்சாமியின் கருவறைக்கு வரக்கூடாது என்பது ஒட்டுமொத்த மனிதத்தை அவமதிக்கும் செயல்.

ஒவ்வொரு மாதமும் உருவாகும் முட்டைகள், குழந்தைகளை உற்பத்தி செய்யக்கூடிய தகுதியான முட்டைகள். அது நடக்காதபோது இயற்கையாக வெளியேறும் ஒரு நிகழ்வு. இந்தக் காலத்தில் பெண்கள் அய்யப்பனைப் பார்க்கக்கூடாது என்று சொல்லி, இவர்கள் பெண்ணையும், அய்யப்பனையும் ஒருசேர அவமானப்படுத்துகிறார்கள்.
.
பழைய தகவல்
மலக்குடலுடன் இறைவனைத் தரிசிக்கலாமா?
https://kalvetu.blogspot.com/2006/07/blog-post.html

Monday, October 15, 2018

96 விமர்சனம்:சானு நிம்மதியாய் இருக்கிறார். எப்படி? ஏன்?

நான் 1986 ல் பத்தாம் வகுப்பு படித்தவன். எனக்கு 10 வருடங்களுக்குப் பிறகு பத்தாம் வகுப்பு படித்த ஒரு கூட்டத்தை அருமையாக‌ கதைப்படுத்துகிறார்கள். இந்தப்படத்திற்காக 'விசய் சேதுபதி' அதிகம் மெனக்கெட்டு உடம்பை வளர்த்துள்ளார். டி ராசேந்தரை நினைவுபடுத்தும் தோற்றத்தைக்கொண்டுவர, அதிகம் உழைத்துள்ளதை பாராட்டவேண்டும்.

தொந்தியும் தொப்பையுமாக, சதக் பொதக் என்று, ஒரு சராசரி ஆண் வர்க்கத்தை அப்படியே பிரதிபலிக்கிறார் விசய் சேதுபதி.சினிமாவைக் காதலிக்கும் ஒரு நடிகனால் மட்டுமே படத்திற்காக இப்படி உடம்பில் மாற்றம் காட்ட முடியும்.

ராமச்சந்திரனாக வாழ்ந்து இருக்கிறார்

நட்சத்திர விடுதியில் திரிசாவுடன் தரையில் அமர்ந்திருக்கையில் தள்ளி அமர்வது, குழந்தை போல பாசாங்கு காட்டுவது, கார் கதவைத் திறக்கும்போது சசிகலாவிற்கு எடப்பாடி அய்யா காட்டும் வகையான‌ பவ்யம், எல்லாவற்றையும் தாண்டி, தூங்குபவளின் தாலியை வணங்கி கண்ணில் ஒற்றுவது போன்ற "அரைவேக்காட்டுத்தனம் + பத்தாம் வகுப்பிற்கு மேல் மனதளவில் வளராத‌" கேரக்டரை நம் கண்முன் கொண்டுவருகிறார் அவரின் தேர்ந்த நடிப்பால். வெல்டன் சேதுபதி!

குறியீடுகள்

ராமச்சந்திரன் கேரக்டர் எப்படிப்பட்டது என்பதை பல குறியீடுகளாலும் இயக்குநர் உணர்த்துகிறார். அறையில் இருக்கும் நம்மாழ்வார் படம், தொழிலதிபர் 'சக்கி' புரோமோட் செய்யும் காப்பர் சொம்பு & டம்ளர் என்று பல குறியீடுகளால், ராமச்சந்திரன் கேரக்டர் வாழும்,  "ஃகீலர் வாழ்க்கையை" நமக்கு குறிப்பால் குறிப்பால் உணர்த்தி, அந்த அரைவேக்காட்டுக் கேரக்டரிடம் என்ன எதிர்பார்க்கலாம் என்ற எதிர்பார்ப்பை உண்டாக்கிவிடுகிறார் இயக்குநர்.

அதையும் தாண்டி, பெண்கள் "சிலீவ் லெஃச்" போடக்கூடாது என்று ராமச்சந்திரன் கேரக்டர் சொல்வதாக அவரின் மாணவிகளை வைத்தும் சொல்லியிருக்கிறார். இப்படியான காட்சிப்படுத்தல்கள்மூலம், 96 க்குப்பிறகு வளராமல் தேங்கிவிட்ட "முன்னோர்கள் என்ன முட்டாள்களா?" என்று சொல்லும் இன்றைய வாட்சப்பு மனிதர்களின் பிரதிநிதியாக ராமச்சந்திரனை கச்சிதமாக திரையில் கொண்டுவருகிறார் விசய் சேதுபதி. வெல்டன்!

பாலுறவு நடக்குமா /நடக்காதா

"வீடு பக்கத்துல இருக்கு வாங்க பேசுவோம்" என்று 1986  பத்தாம் வகுப்பு கிழக்கூட்டமான நானே சகசமாக சொல்லியிருக்கிறேன் என் ஆரம்பப்பள்ளி பப்பி லவ் பெண்களிடம். 1996 ல் பத்து படித்த கூட்டம், "பாலுறவு" நடந்துவிடலாம் அல்லது நடந்துவிடுமோ? என்பது குறித்தே பயப்படுகிறார்கள் அல்லது அதையே முக்கிய கருவாக வைத்து பயம் காட்டுகிறார்கள் பார்வையாளர்களுக்கு.

மேலும் , "ஒன்னியும் நடக்காது தைரியமா படம் பாருங்க" என்பதை "ரம்பாவே ஆடினாலும் அசையாதவர்" என்று கீரோயின் வழியாக‌ பிலடப், "அய்யா நல்லவர் வல்லவர்" என்ற லோக்கல் தாதாக்களின் அல்லக்கை பில்டப்பிற்கு சிறிதும் சளைக்காத மாணவி கதாபாத்திரம்.

இப்படி பலவழிகளில் பாலுறவு நடக்குமா /நடக்காதா/நடக்கவே நடக்காது/ தங்கக்கம்பி தம்பி என்று, சானு‍-ராமச்சந்திரன் சந்திப்புகள் திகிலாகவே போகிறது. அவர்கள் அருகில் இருந்தாலே ஏதாவது நடந்துவிடலாம் என்ற பில்டப்புகளை இயக்குநர் குறியீடுகளாலும், சவலைப்பிள்ளை போன்றதொரு மன்னாரு பாத்திரத்தை தன் நடிப்பாலும், நம் கண்முன் கொண்டுவந்து விசய்சேதுபதியும் "சபாசு" என்று சொல்ல வைக்கிறார்கள்.
**
"அந்த விசயம்" நடந்துவிடுமோ?

இது எல்லாம் தாண்டி நட்சத்திர விடுதியில் , திரிசா படுக்கையில் இருந்துகொண்டு "மேல வாடா" என்று அழைத்தவுடன் விசய் சேதுபதி "அஞ்சரைக்குள்ள வண்டி" லெவலில் சீன் போட்டு, தட்டுத்தடுமாதிரி படுக்கையில் கைவைத்து ஏறி, மனம் எல்லாம் காமம் மட்டுமே உள்ள அந்நியனாக நடிப்பில் அசத்துகிறார். படம் முழுக்க "அந்த விசயம்" நடந்துவிடுமோ என்ற பரிதவிப்பில் பார்வையாளர்களை சீட்டின் நுனிக்கு கொண்டுவருவதில் இயக்குநர் வெற்றி பெற்றுவிட்டார். இயக்குநரின் சிறப்பு!

வெறுமனே நடிப்பால் மட்டும் இல்லாமல், உரையாடல்ககளிலும் நேரடியாகவே,  "ஏதாவது ஆயிருமா?", "என்னடா இந்த வேகத்தில் இருக்காங்க" என்று தோழியாக வரும் ஒரு கேரக்டர் பதற்றத்தை ஏற்படுத்திக்கொண்டே உள்ளது கதைக்கு வலுச்சேர்க்கிறது.

திரிசா தவிர எல்லா நண்பர்களும் "ஏதாவது ஆயிருமோ?" என்ற சிந்தனையிலேயே படத்தை நகர்த்துகிறார்கள். அருமையான திரைக்கதை ஒருவித படப்படப்புடன் ஏதாவது ஆகாதா? அல்லது ஆயிருமோ? என்ற பரிதவிப்பை படத்தின் பின்பாதி முழுக்க தெளித்து மிரட்டியிருக்கிறார் இயக்குநர். இயக்குநரின் எதிர்பார்ப்பை தன் சீரிய நடிப்பால் சிறக்கச் செய்கிறார் விசய்சேதுபதி.
**
நீ இன்னும் வெர்சினா?

எனது 1986 பத்தாம் வகுப்பு காலம் மற்றும் இந்தப்படம் நடக்கும் 1996 பத்தாம் வகுப்பு காலங்களில் வளர்ந்து "ஆளான "ஆணுக்கோ பெண்ணுக்கோ கன்னிகழிதல் என்பது திருமணம் முதலிரவு நேரமே. சுய இன்பங்கள் தவிர்த்து, வெர்சினிட்டியை இழப்பது என்பது நேரடி உடலுறவில் மட்டுமே சாத்தியம்.

ராமச்சந்திரனுக்கு திருமணம் ஆகவில்லை என்று தெரிந்தும், சானு அவரிடம் "நீ இன்னும் வெர்சினா?" என்று கேட்பது, ரம்பை வந்தாலும் கவுந்தடித்துப் படுக்கும் "குலக்குத்துவிளக்கு" கேரக்டராக காட்டப்படும் ஒரு கதாபாத்திரத்தை, அவமதிப்பதாகவே உள்ளது. இது திரைக்கதையில்/கேரக்டர் பில்டப்புகளில் சின்ன சறுக்கல்.

ராமச்சந்திரன் paid sex ல் வெர்சினிட்டியை இழந்திருக்கவேண்டும் அல்லது dating, சேர்ந்துவாழ்தல் போன்ற மியூச்சுவல் கன்சன்ட் sex ல் வெர்சினிட்டியை இழந்திருக்கவேண்டும்.

ஆனால், கொடுக்கப்பட்ட "கேரக்டர்பில்டப்புகள்"படி, ராமச்சந்திரன் அப்படி இல்லை. இது தெரிந்தும், "வெர்சினா?" என்று சானு கேட்பதும் , அதற்கு  ராமு உடம்பெல்லாம் தெறித்து, நடுங்கி, சீன் போடுவதும் ஏன் என்று தெரியவில்லை. கொடுக்கப்பட்ட பாத்திரத்தை விசய் சேதுபதி சரியாகச் செய்தாலும், ஏன் இயக்குநர் இப்படி தான் பில்டப் கொடுத்த ஒரு "குலக்குத்துவிளக்கு" கேரக்டரை அவரே கேரக்டர் அசாசினிசேசன் செய்கிறார் என்று தெரியவில்லை.

காதல் கல்யாணக் குழப்பம்

"யாரையாவது காதலிச்சியா" என்ற கேள்விக்கு "ஆமா கல்லூரில ஒரு பொண்ணு..." என்று கதை சொல்கிறார். ஆக, இவர் சானுவை பாலத்தில் கடக்காமல் நின்றாலும், பிற பெண்களை காதலித்துள்ளார். ஆனால், அந்தப் பெண் க‌ல்யாணம் என்று சொன்னவுடன் இவரின் 'சானு' நினைவு வந்துவிட்டதாகச் சொல்லி விலகிவிட்டதாகச் சொல்கிறார். காதலுக்கு "ரீட்டா" கல்யாணத்திற்கு "சானு" என்ற பழையகால கதைகளை கண்முன் கொண்டு வந்துள்ளார் தனது நடிப்பால்.

பத்தாவது படிக்கும்போது இனம் புரியாத உணர்வாக சானுவை விரும்பியவர், கல்லூரியில் அடுத்தவரைக் காதலித்தேன் என்று சொல்கிறார். ஆனால், திருமணம் என்றவுடன் சட்டென்று 'சானு' நினைவிற்கு வந்து காதலை கலாய்க்கிறார்.

கடைசிவரை காதல் என்றால் என்னவென்று புரியவே புரியாத மயிலாப்பூர் சந்துரு வகை மனிதர்களை, அச்சு அசலாக காட்சிப்படுத்துகிறார் விசய் சேதுபதி தன் நடிப்பால். வெல்டன் சேது!

சானுவின் நிம்மதி

சானு கேரக்டர் ராமச்சந்திரனைக் கட்டாமல் நிம்மதியாய் இருப்பதாகச் சொல்வதன் மூலம், பத்தாவது வகுப்பிற்குப்பிறகு வளராமல் பாலத்திலேயே நின்றுவிட்ட ராமச்சந்திரனைக் கட்டியிருந்தால், சானு நிலைமை என்னவாகி இருக்கும் என்பதை,விழாவிற்கு வருபவர்களை வைத்து குறிப்பால் உணர்த்துகிறார் இயக்குநர்.

அந்த 96 கூட்டத்தில் சானு மட்டுமே "Jean Legging" பாட்டமும், சுரிதார் டாப்பும் அணிந்தவர். மற்றவர்கள் எல்லாம் சேலையும் சுரிதாருமாக உள்ள பெண்கள். ராமச்சந்திரனைக் கட்டியிருந்தால், வீட்டிலேயே பிரசவம் என்ற பாரிசாலன், ஃகீலர் ரேஞ்சு வாழ்க்கையாகி இருந்திருக்கலாம் சானுவிற்கு யார் கண்டார்கள்? நம்மாழ்வார் படம் மற்றும்  காப்பர் டம்ளர் வகையில் வாழும் ராமச்சந்திரன் சானுவை மணந்திருந்தால், 96 பத்தாம் வகுப்பு சந்திப்பிற்கு "பின் கொசுவம் வைத்து" சேலை கட்டிவர வேண்டும் என்றுகூட சானுவிடம் சொல்லியிருக்கலாம்.

பலூனை உடைத்துகொண்டும், தலையைக் குனிந்து கொண்டு சவலைப்பிள்ளையாக இருக்கும் ராமச்சந்திரன் கேரக்டர், அதைத்தான் உணர்த்துகிற‌து. மனம் வளர்ச்சியில்லாமல் பத்தாம் வகுப்பிலேயே தேங்கிவிட்ட ஒரு கேரக்டரை, த‌ன் நடிப்பால் பின்னி எடுக்கிறார் விசய் சேதுபதி. இவர் ஒரு சாதனைபதி!!

திரிசா


அருமையான நடிப்பு. Ageing gracefully!

இந்தப்படத்தின் மொத்த சுமையையும் சுமக்கிறார். மனவளர்ச்சி தடைப்பட்ட பழைய காதலன்(?), ஏதாவது நடந்துவிடுமோ என்ற பாலியல் பரவச பில்டப் கொடுக்கும் நண்பர்கள் கூட்டம் என்று பல அரைகுறை மனவளர்ச்சி கதா பாத்திரங்களுடன் சமாளித்து, கதையை நகர்த்திச் செல்கிறார்.

இறுதிக்காட்சியில், "இப்படி இன்னும் வளராமயே இருக்கானே" என்ற உணர்வில், தலையில் கைவைத்து ஆசிர்வாதம் கொடுத்து பிரிகிறார், அழுகிறார்.

ஒருவேளை திருமணம் நடந்திருந்தால் 96 ன் இரண்டாம் பாகமாக "சிப்பிக்குள் முத்து" இருக்கும்.

விசய் சேதுபதி

"நடுப் பக்கத்தைக் காணோம்" படத்தில் அவ்வளவாக வசனம் இல்லை. அதற்கடுத்து (நான் பார்த்தது) ஏதோ ஒரு ரவுடிப் படம் (நயன்தாராவுடன்).சவசவ என்று பேசினார்.  நடிகர் திலகத்தின் கட்டபொம்மன் வசனமாடல் ஒருகாலத்திலும், மணிரத்தினத்தின் முனுமுனு வசனங்கள் ஒருகாலத்திலும், இயல்பான பேச்சு மொழி வசனங்கள் ஒரு காலத்திலும் சக்கை போடு போட்டது. அந்த ட்ரெண்டுகளை மாற்றி, ஒருவித "சவசவ" பேச்சுமொழியை  அறிமுகப்படுத்தி, அனைவர் உள்ளங்களையும் கவர்ந்து வருகிரார் விசய் சேதுபதி.

வாட்சப்பு குரூப்புகளில் இருந்துகொண்டு, காப்பர், நம்மாழ்வார் என்று எதையாவது பார்வேர்டு செய்து, கண்டதைப் பின்பற்றி , கண்டதைத் தின்று தொந்தி வளர்த்து அலையும் மனிதர்களை கண்கூடாகக் கொண்டுவர நிறைய மெனக்கெட்டு இருக்கார்.

இந்தப் படத்திற்காக உடம்பில் முன்னேற்றம். சிறப்பு!

இசை
அருமை. கண்களை மூடிக்கொண்டே ரசிக்கலாம் படத்தை.

விசய்சேதுபதியின் சவலைப்பிள்ளைத்தனமான, 'கிள்ளினா அழுதிடுவேன்', 'கிட்ட வந்தா கடிச்சு வச்சுடுவேன்', 'தள்ளியே நிப்பேன்', 'பலூன் உடைப்பேன்' வகை நடிப்பு சமயங்களில், நாம் சிறிது நேரம் கண்ணை மூடி, நம்மை இயல்புக்கு கொண்டுவர, இப்படி இசையை இரசிப்பது தேவை.

இயக்கம்
எடுத்துக்கொண்ட கதை அருமை. " மயிலை மன்னாரு" வகை கதாபாத்திரத்தையும், சின்னவயசு காதலையும்,கவட்டைச் சிந்தனையிலேயே அலையும் அரைவேக்காட்டு நண்பர்களையும் ஒரு சேர ஒரு திரைக்கதையில் எடுக்க நினைத்து, டைரக்டர் அதில் வெற்றியும் பெற்றுவிட்டார்.

96 ல் பத்தாம் வகுப்பு முடித்துபிறகு, சானுவை அவரின் திருமணம்வரை பின் தொடர்ந்திருக்கிறார் இராமச்சந்திரன். இது ஒரு creeping சைக்கோ மனநிலை. வேறு ஒரு பார்வையில் இதைப் பார்த்தால் இது ஒரு சீரியல் கில்லர் வகைப்படமாக எடுக்க நிறைய scope உள்ளது தெரியும். ஆனால், சிறிதும் வழுவாமல், வளராத மனநிலை கொண்ட ஃகீரோவை வைத்து "பெட்டியை மூடும் வரை" சிறப்பாக கதையை நகர்த்தி வெற்றி பெறுகிறார் இயக்குநர்.

டைரக்டர் டச்சு
பிடித்த பெண்ணிற்கு திருமணமானபின், அவரின் குழந்தை அவரைப்போல் இருப்பதால், "குழந்தையை சைட்டு அடிக்கிறான்" என்ற கூமுட்டை வசனங்களை சைக்கோத்தனமாக பேசினாலும், அதை அனைவரும் இரசிப்பதாகக் காட்டுகிறார். இதெல்லாம் ஈவ்டீசிங் அல்ல அழுக்கு மனங்களின் வெளிப்பாடு. இப்படியான கேப்மாரித்தனங்களை போகிற போக்கில் சொல்லிச் செல்கிறார் இயக்குநர். சிறப்பு!

பள்ளிக்காலம்
பள்ளிக்காலத்தில் வருபவர்கள் நன்றாக நடித்துள்ளனர். ராமச்சந்திரன் சைக்கிளில் உள்ள பச்சை கலர் handbrake sleeve , பள்ளியில் காட்டப்படும் duster , ராமச்சந்திரனின் புத்தககப்பை என்று அந்தக் கால நினைவுகளைக் கொண்டு வருகிறார் இயக்குநர். சிறப்பு.

தோழியாக வரும் பெண் அணிந்துள்ள  Dental braces தவறாகத் தெரிகிறது. அந்தக் காலத்தில் braces ஒரே ஒரு கம்பியில்தான் இருக்கும். இந்தப் பெண் ஒவ்வொரு பல்லுக்கும் தனித்தனி அழுத்தம் கொடுக்கும் இந்தக்கால braces அணிந்துள்ளார். 96 ல் தஞ்சாவூர்/கும்பகோணம் பக்கம் அது கிடைத்ததா என்பதை அந்த ஊர்க்காரர்கள் விளக்கலாம்.

நிறைவேறாக் காதல் + சைக்கோ மனநிலை

மருத்துவர் சாலினியின் மருத்துவமனையில் கீரோ நுழைவது போல முடித்திருந்தால் "நிறைவேறாக் காதல் + சைக்கோ மனநிலை" திரைக்கதைக்கு வலுக்கூடியிருக்கும்.

அது போல இப்படியான எதிர்மறை ஃகீரோ கேரக்டரை இரசிகர்கள் ஏன் மாய்ந்து மாய்ந்து இரசிக்கிறார்கள் என்று  மனநல மருத்துவர் சாலினி பேசிக் கேட்க வேண்டும். அப்படிச் செய்தால் படத்திற்கு இன்னும் விளம்பரம் கிடைக்கும்.

****

தன்னை மணக்காமல் சானு ஏன் நிம்மதியாக இருக்கிறார்? என்பதை, ராமச்சந்திரன் தன் நடிப்பால் justify செய்து இருக்கிறார்.

வெல்டன் இயக்குநர் & ஃகீரோ!

Sunday, October 14, 2018

நீர்'வீழ்ச்சி'களின் பார்வையாளன்: It is another milestone

"ருக்கிறார்" என்பதே எனது பதிலாய் உள்ளது. "அப்பா எப்படி இருக்கிறார்?" என்ற அன்பான கேள்விகளுக்கு. அதுதாண்டி சொல்ல ஒன்றும் இல்லை.கைப்பிடி மண் சொந்தமாக இல்லாவிட்டாலும், பிறந்து விடுவதாலேயே ஒரு ஊர் நமக்கான சொந்த ஊராகிவிடுகிறது.சொந்த வீடு இல்லாதவர்கள்கூட‌ இருக்கலாம். ஆனால், சொந்த ஊர் இல்லாதவர்கள் இல்லை. எனது சொந்த ஊர், என் பெற்றவர்கள் இல்லாத ஊராய் ஆகிவிடும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பது நெருக்கிவரும் உண்மை.

கசங்கிய துணிபோல ஆகிவிட்டார் அப்பா.ஆனால், அவரின் கோவமும் பிடிவாதமும் இன்னும் கஞ்சி போட்ட கதராய் உள்ளது. 83 வயதில் நிலைதடுமாறி விழுந்துவிடுதல் என்பது சிக்கலானது. படுத்த படுக்கையாகிவிட்டார்.
**

" Leave No Trace " என்ற‌ கருத்தாக்கம், மலைப்பயணங்கள் மற்றும் இயற்கையில் மனிதன் ஊடுருவும்போது கடைபிடிக்கவேண்டிய வழிகாட்டி விதிமுறைகளைக் குறிக்கும். https://lnt.org/learn/7-principles

காடுகளில் பயணம் செய்யும்போது, நீங்கள் அந்தக் காட்டின் பார்வையாளர் மட்டுமே. எதையும் மாற்றி அமைக்க உரிமை இல்லை. உங்கள் கண் முன்னால் புலியொன்று மானை அடித்து வீழ்த்தலாம். மான்கூட்டம் ஒன்று அழகிய புல்வெளியை மேய்ச்சல் நிலமாக்கலாம். நீங்கள் யாருக்காகவும் எதற்காகவும் வருந்தி, இடையூறு செய்திடமுடியாது. அங்கு நீங்கள் ஒரு பார்வையளர் மட்டுமே. மானை அடித்து தின்னும் புலிக்கு ஒரு குடும்பம் இருக்கலாம். அதன் குழந்தைகள் அதன் பாலுக்காக காத்து இருக்கலாம். தாய்ப்புலி பசியாறினால்தான் தன் குழந்தைகள் பசியாறும் நிலை இருக்கலாம். பார்வையாளனான நமக்கு, காட்டின் விதிகள் தெரியாது. அப்படியே பார்வையாளனாக பயணத்தை தொடர்வதே நல்லது.
**

ஒருநாள் முழுக்க அப்பாவின் அருகில் இருந்தேன் அதே அறையில். படுத்த படுக்கையாகிவிட்ட அவர் படுக்கையிலேயே சிறுநீர் போவதைக்கூட உணராமல் இருந்தார். அந்த அறையே துர்நாற்றம் அடித்தது. மறுநாள் காலையில் மதுரை சென்று, நண்பர் ஒருவரின் உதவியுடன் "Prevention of Bed/Pressure Sores Air mattress",  புதிய Full Foam மெத்தை, Adult Diaper இன்னும் சில மருந்துச் சாமான்கள் என்று வாங்கி வந்தேன். அறையை முழுக்கச் சுத்தம் செய்து, வெந்நீர் மற்றும் டெட்டால் கலவையில் கழுவிவிட்டேன். அப்பாவிற்கு "டவல் பாத்" கொடுத்து, பின்புறம் சுத்தம் செய்யும்போதுதான், அவருக்கு பின்பிறத்தில் பெரிய புண் வந்துள்ளதை கண்டேன். அண்ணனை அழைத்து அதைக் காட்டினேன். மருத்துவமனையில் இருந்து வந்ததில் இருந்து படுத்தே உள்ளார். தினமும் போர்வையை மட்டும் அலசி காயவைக்கிறார்கள். அவரின் உடம்பைக் கண்காணிக்கவில்லை.

பின்புறம் துடைத்து,மருந்து போட்டு, adult diaper ஐ மாட்டிவிட்டேன். மாலையிலும் ஒருமுறை செய்தேன். மதுரை "வடமலையான் மருத்துவமனை"க்குச் சென்று , அப்பாவை வீட்டில் வந்து பார்த்துக்கொள்ள செவிலியர் ஒருவரை ஏற்பாடு செய்தேன். இவை எல்லாம் இரண்டு நாட்களில் முடிந்துவிட்டது.

நான் செய்யும் எந்த செயல்களும் அப்பாவிற்கோ அண்ணனுக்கோ பிடிக்கவில்லை. அண்ணன் எதற்கு எடுத்தாலும், "எங்களுக்குத் தெரியாதா?", "நாங்க இத்தனை நாள் பார்க்கவில்லையா?" என்றே பேசிக்கொண்டு இருந்தான். அப்பாவோ, எதற்கும் ஒத்துழைக்க மறுத்தவண்ணமே இருந்தார். Adult Diaper போடுவது அவருக்கு பிடிக்கவில்லை. நான் அப்பாவிற்கு ஊட்டிவிடுவது அண்ணனுக்கு பிடிக்கவில்லை. நடுங்கும் கைகள் என்றாலும் "அவராகவே சாப்பிடவேண்டும் அதுதான் அவருக்கு எக்சர்சைசு" என்று என்னை சத்தம் போட்டான் அண்ணன்.

அப்பா அவரின் நடுங்கும் கைகளால் சாப்பிடும்போது உடல்முழுவதும் சாப்பாட்டை சிந்திவிடுகிறார். அதை யாரும் கவனிப்பது இல்லை. அதனுடனேயே தூங்கி எழுந்து உடல்முழுக்க அழுக்காகிவிடுகிறது.
**

"அவன் கிடக்கிறான் நீங்க எப்பயும் போலவே இருங்க"

"இவன் என்ன, இன்னிக்கு இருப்பான் நாளைக்கு பார்க்கப்போவது நாங்கதானே?" என்ற சத்தம் கேட்டு காலையில் கண்விழித்தேன். இரவு நேரங்கழித்து படுத்தமையால் அதிகநேரம் தூங்கிவிட்டேன்.

ஆம், எனது கவனிப்பு முறைகளால் கோவம் கொண்ட அப்பா, இனிமேல் சாப்பிடமாட்டேன் என்று உண்ணா நோன்பு இருக்க ஆரம்பித்துவிட்டார். "நான் இப்படியே இருந்து செத்துவிடுகிறேன்" என்று அவர் ஒருபக்கம் மிரட்ட, "டயப்பர் எல்லாம் வேண்டாம். நீங்க எப்பவும்போலவே இருங்க" என்று அண்ணன் ஒரு பக்கம் அவருக்கு ஆதரவாய் இருப்பதுபோல என்னை எதிர்க்க அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டிருந்தான். அவர்கள் அனைவரும் என்னை அந்த அறையில் வேண்டாத விருந்தாளியாக மட்டுமல்ல, ஒரு எதிரியாய் உணரச்செய்து கொண்டிருந்தார்கள்.

காந்தியின் வன்முறை போல அப்பாவின் உண்ணாவிரதம், "இவன் என்ன செய்வது எங்களுக்குத் தெரியாததா?" என்ற அண்ணனின் கோவம் என்று ஆரம்பித்த சண்டைகளில் மனம் வெறுத்துப் போயிற்று எனக்கு.

நான் செய்த‌ வேலைகளை தொடர்ந்து செய்ய நாளை முதல் மதுரை வடமலையான் மருத்துவமனையில் இருந்து செவிலியர் ஒருவர் வருகிறார். நிச்சயம் அவர் இவர்களை மீறி இந்தச் சூழ்நிலையில் வேலை செய்ய முடியாது. அதுவும் நான் ஏற்பாடு செய்த செயல் என்பதால் நிச்சயம் அண்ணனுக்குப் பிடிக்காது. மருத்துவமனையை அழைத்து அவர்களின் சேவையை இப்போதைக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டு, அண்ணனிடம் உனக்குச் சரியென்றுபடும்போது அழைத்துக்கொள் என்று சொல்லிவிட்டேன்.
**

எனது ஊரில் எனது வீட்டில் நான் பார்வையாள‌னாகிப் போனேன்.ஓவென்று கீழிற‌ங்கி, தலைகுப்புற வீழ்ந்து, முட்டிமோதி கதறியழும் நிலைகவிழ்ந்த ஆற்றை, நீர்வீழ்ச்சியென்று ஓரமாக இருந்து பார்க்கவேண்டிய நிலை. ஆறு கவிழ்கிறதே என்று பள்ளத்தை சரிசெய்துவிடமுடியாது. அதுதான் காட்டின் விதிகள்.

வீட்டில் பணத்திற்கு குறைவில்லை. என்னைவிட பணக்காரர் என் அப்பா. ஆம், வீடு சேமிப்பு அரசு ஓய்வூதிய‌ம் என்று அவர் நல்ல நிலையிலேயே உள்ளார். அதுதாண்டி அவருக்கு தேவையான எல்லாவற்றையும் செய்யும் விரும்பிய நிலையில் நான். அண்ணனும் வசதியாகவே உள்ளான். இருக்கும் வீடுகள் பத்தாது என்று பல‌ இலட்சங்களைக் கொட்டி பலமாடி வீடு ஒன்றைக் கட்டிக்கொண்டுள்ளான். பணம் என்பது குறை அல்ல இங்கே. ஆனால், அவர்கள் செய்வது அவர்களுக்கு சரியாய் உள்ளது. நான் சொல்வதோ அல்லது செய்வதோ அவர்களுக்கு பிடிக்கவில்லை.

போர்வை நனைந்தால் துவைத்துக் கொள்ளலாம். டயப்பர் தேவை இல்லை என்று, தினமும் நனைந்த போர்வையை துவைக்க ஆள் வைக்கிறார்களே தவிர, எப்போதும் நனைந்த படுக்கையும், அதனால் வரும் புண் மற்றும் இதர சிரமங்களையும் புரிய மறுக்கிறார்கள்.
**

கலைஞரைப் பார்த்துக்கொண்ட குடும்பத்தினரைவிட, ஒரு நல்ல நோயாளியாய் மருத்துவரின் ஆலோசனைகளின் பேரில், மழை பெய்தாலும் குடைபிடித்து நடந்த கலைஞர் என் கண் முன்னே வந்துபோனார்.

வழக்கம்போலவே தரையில் எறியப்பட்ட மீனாய் உணர்ந்தேன். ஒன்றும் செய்ய இயலவில்லை. மேற்கொண்டு பிரச்சனைகளைத் தவிர்க்க அந்த அறையைவிட்டு வெளியில்வந்து மாடிக்குச் சென்றுவிட்டேன். இரண்டு வாரங்களாக நான் இருந்தும் இல்லாமலேயே இருந்தேன். அப்பாவிற்கும் உதவமுடியவில்லை. அவரே அதை வெறுக்கிறார். அண்ணனைமீறி ஒன்றும் செய்ய முடியவில்லை.

ஒவ்வொருவருக்கும் சரியெனப்படுவதையே அவர்கள் செய்கிறார்கள். அப்பா, அவர் என்ன சொல்கிறாரோ அதைத்தாண்டி வேறு எதுவும் செய்ய விடுவது இல்லை. அண்ணனோ என்னை ஒரு பார்வையாளன் என்ற இடத்திலேயே நிறுத்த விரும்புகிறான்.
**

அன்றைய‌ உடன்கட்டை, தேவதாசி ஆதரவு முதல் இன்றைய அய்யப்பன் ஆதரவு வரை, தான் மதிப்பிழக்கிறோம் என்பது தெரியாமலே ஆதரிக்கிறார்கள் பெண்கள். ஆனால், வேறு சிலருக்கு அது தவறாய்த் தெரிகிறது. நீதிமன்றம் அரசாங்கம் போன்ற அதிகார மையங்களால் மட்டுமே இதனை உடைக்கமுடியும்.

அதிகாரமற்ற பார்வைகள் அதிகாரமில்லாத காரணத்தினாலேயே அவமானப்படுத்தப்படும் ,நிராகரிக்கப்படும். அதுவே எனக்கு நடந்தது. 17 வருடங்களாக தொலைவில் வாழ்வது உறவுகளிடம் தொலைந்த வாழ்க்கையே. Long distance relationship என்பது, காதலில் மட்டுமல்ல எந்த உறவுகளிலும் சரியாக வராது. உறவாடாமல் உறவு இல்லை.
**

அப்பாவின் நண்பர்களிடம் பேசினேன். அனைவரும் நான் சொல்வதை ஏற்றுக்கொண்டாலும், இறுதியில் "அப்பா அப்படித்தான். நீதான் செய்யணும்" என்றார்கள். எப்படிச் செய்வது என்றுதான் தெரியவில்லை. அது அவர்களுக்கும் தெரியவில்லை.

ஓவென்று கதறிவிழும் அருவியை, நீர்வீழ்ச்சியென நின்று பார்ப்பதே காட்டில் ஒரு பயணியாய் செய்ய முடிந்தது. பாதைகளை மாற்றிவிட முடியாது. நமக்குச் சரியெனப்படுவது மற்றவர்களுக்கும் சரி என்று இருக்காது என்று எனக்குத் தெரிந்த போதும், இது போன்ற மருத்துவச் சூழ்நிலைகளில், நோயாளியின் விருப்பத்திற்கு விட்டுவிடுவது சரியா? என்பது தெரியவில்லை. அதுவும், என் அப்பா போன்ற பிடிவாதக்காரர்கள், என் அண்ணன் போன்றவர்களிடம், அவர்களின் வழிக்கே விட்டுவிடுவது என்பது பலமுறை என்னை " Point of No Return" போய் நிறுத்துயுள்ளது. இந்த முறையும் அதுவே நடந்துவிட்டது.
**

மூன்று வாரங்கள் அப்பாவுடன் அவருக்கு உதவியாய் இருக்க நினைத்துச் சென்றது வேலைக்காகவில்லை. இரண்டு வாரங்களில் கிளம்பிவிட்டேன். மகனாய் ஏதும் செய்ய முடியாது. பார்வையாளனாய் பரிதவிக்கிறேன்.

நல்ல மாணவன், நல்ல கண‌வன், நல்ல குடிமகன்..இப்படியான "நல்ல" நல்லவைகளில் "நல்ல நோயாளி" என்பதும் முக்கியமானது. சின்ன வயதில் அப்பாவை அதிசியத்து அவரிடம் இருந்து பாடங்கள் கற்றுக்கொண்டேன். "டே நீ அவன் கால்தடத்த மிதிச்சாலும் அவன் புத்தி வராதுடா" என்று ஒரு கிழவி யாரோ ஒருவரைத்திட்டியதைக் கேட்ட நான், என் அப்பாவின் கால்தடங்களை மிதித்தே பின் தொடர்வேன் சின்னவயதில். நானும் அப்பா மாதிரி வரவேண்டும் என்ற ஆசையால்.

இன்றும் அப்பாவிடம் இருந்து பாடங்களைக் கற்கிறேன். எப்படி இருக்கக்கூடாது என்று.
**

ஏற்கனவே பலமுறை சொன்னதுதான். நாம் நமது முதுமைக்காலத்திற்கு திட்டமிட வேண்டும். அனைவரும் ஒருகாலத்தில் படுத்த படுக்கையாகவோ  அல்லது படுத்தவுடன் எழுந்திருக்காமல் சென்றுவிடும் சூழலோ வரலாம். அப்படியான நேரத்தில் என்ன செய்யலாம் என்பதை குழந்தைகளுக்கும் உறவினர்களுக்கும் இப்போதே சொல்லிவிடவேண்டும். முதுமைக் காலத்தில் குழந்தைகளுடன் இருப்பது சிறந்ததுதான். ஆனால், அதற்கான நடைமுறை வாய்ப்புகள் வருங்காலத்தில் இருக்குமா? இல்லாவிட்டால் எங்கே? எப்படி? முதுமையைக் கழிக்கப்போகிறோம் என்பதற்கான திட்டங்கள் அவசியம்.

உதாரணத்திற்கு Coma (state of unconsciousness) போன்ற நிலைக்குச் சென்றுவிட்டால், நம்மை நம் உறவினர்கள் குழந்தைகள் என்ன செய்யவேண்டும். எவ்வளவு காலம் பராமரிக்கலாம்? சட்டம் அனுமதிக்கும் பட்சத்தில் மருத்துவத்தை நிறுத்தலாமா? என்பது போன்றவைகளை இப்போதே பேசலாம். அமெரிக்கா போன்ற இடங்களில், பெற்றோர்கள் இருவரும் விபத்தில் இறந்தால் குழந்தைகளுக்கான பராமரிப்பை யார் செய்யவேண்டும் என்று சொல்லியிருக்காவிட்டால், அரசு அவர்கள் விதிப்படி பாதுகாவலரை நியமிக்கும். இதுபோன்ற சிக்கல்களை திட்டமிடல்கள்மூலம் தவிர்க்கலாம்.

உறவுகள் தாண்டி நம்மைக் கொண்டாட சிலரும், நாம் இருப்பதற்கான வலுவான காரணங்களையும் (மூத்திரச் சட்டி பெரியார்) ஏற்படுத்திக்கொண்டால் முதுமைகூட இனிக்கும்.
**

இறப்பும் ஒரு milestone. இறுதியான  milestone. அதற்காகவும் திட்டமிடுதல் வேண்டும்.