Friday, October 28, 2005

பதிவு16: தீபாவளி தெரியும் Halloween தெரியுமா?


மொத மொத இந்த அமெரிக்காவுக்கு கையில
இரண்டு சூட்கேசோட வந்து, டெக்சாஸ் மாகாணம் Dallas அருகில் இருக்கும் Irving என்ற ஊரில்தான் "பெஞ்ச" தேய்ச்சுக்கிட்டு இருந்தோம். இருந்தோமுன்னா அந்த அபார்ட்மெண்ட்டுல 8 பேர் இருந்தோம். எல்லாரும் அமெரிக்கா கனவுகளோட "ஜாவா" கப்பல்ல ஏறி வந்த மக்கள். ஜாவாவ அரைகுறையாப் படிச்சுட்டு டாட்காம் புண்ணியத்துல எப்படியோ எங்களுக்கும் விசா கிடைச்சு ( அதான் விசா விசா மட்டுமே வேலை இல்லை ) வந்து சேர்ந்து ஆறு வருசமாகப் போகிறது. என்ன இருந்தாலும் எனக்கும் என் நண்பனுக்கும் Irving -ல் ஏற்பட்ட Halloween அனுபவம் மறக்க முடியாதது.

நாங்க இருந்த அந்த அபார்ட்மெண்ட் தரைத்தளதில் இருந்தது. நாங்கள் வந்து இரண்டுவாரமே ஆகி இருந்தது. எங்களை அழைத்து வந்த கன்சல்டிங் கம்பெனிக்காரர்கள் எங்களை " அநாவசியமாக வெளியில் போகக்கூடாது. அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் பலர் இந்த அபார்ட்மெண்ட்டில் தங்கி இருப்பதால் ,அபார்ட்மெண்ட்காரர்கள் எதாவது நடவடிக்கை எடுக்கக்கூடும்" என்று எச்சரித்து இருந்தார்கள். அதனால் சமைப்பது,இரவில் மட்டும் போய் தாபால் செக் பண்ணுவது டெலிபோன் இன்டர்வியூ attend பன்ணுவது என்று எங்கள் இரண்டுவார வாழ்க்கை ஓடிக்கொண்டு இருந்தது.

ஒருநாள் இரவில் கதவில் தட் தட் தட் என்று பலர் தட்டும் சத்தம். போச்சுடா அபார்ட்மெண்ட்காரர்கள்தான் வந்துவிட்டார்கள் என்று நினைத்து இருந்த 8 பேரில் 4 பேர் போய் ஒளிந்து கொள்ள, நானும் மற்ற நண்பர் ஒருவரும் கதவில் உள்ள Eye Piece வழியாகப் பார்த்தோம். வீட்டுக்கதவுமுன் பல சிறுவர் சிறுமியர்கள் நின்று கொண்டு இருந்தனர்.கதவைத்திறந்து கொண்டு வெளியே வந்தோம். ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக பேய்,நாய்,சூப்பர் மேன், தேவதை போன்ற பலவிதமான் ஆடை அலங்காரத்தில் நின்று கொண்டுஇருந்தனர். ஒவ்வொருவர் கையிலும் பெரிய கூடை நிறைய பலவிதமான வண்ண சாக்லேட்டுகளும், இன்னும் பல பேர் புரியா வகை வஸ்துகளும் இருந்தது. எங்கள் இருவருக்கும் என்ன ஏது என்று புரியவில்லை.

அவர்களைப் பார்த்து Hello சொன்னோம். அவர்கள் கோரசாக என்னமோ சொன்னார்கள். அவர்கள் பேசிய ஆங்கிலம் எங்களுக்குப் புரியவில்லை,நாங்கள் பேசிய ஆங்கிலம் அவர்களுக்குப் புரியவில்லை. எனக்கு எங்கே இருந்து அது தோன்றியதோ தெரியவில்லை. நான் அது அவர்களின் பிறந்த நாள் என்று நினைத்து,ஒரு குழந்தையின் கூடையில் கையைவிட்டு சில சாக்லேட்டுகளை எடுத்துக்கொண்டு அவர்களுக்கு தேங்க்யூ சொன்னேன். அவர்கள் அனைவரும் அதிர்ச்சியுடன் என்னை ஒருமாதிரியாகப் பார்த்துவிட்டு, அவர்களுக்குள் என்னமோ பேசிக்கொண்டு அடுத்த வீட்டிற்கு செல்ல ஆயத்தமானர்கள். அவர்களை நிறுத்தி எனது நண்பனும் அவன் பங்குக்கு சாக்லேட் எடுத்துக்கொண்டு அவர்களிடம் தேங்க்யூ சொன்னான். அவர்கள் எங்களிடம் இருந்து தப்பித்தால் போதும் என்று ஓட ஆரம்பித்து விட்டார்கள்.பிறந்தநாள் சாக்லேட் கொடுத்துட்டு ஏன் இதுக இப்படி ஓடுதுக? அப்படீன்னு நொள்ள பேசிக்கிட்டு சாக்லேட்டை வாயில் போட்டோம்.

பின்பு நாங்கள் இருவரும் விசயம் தெரிந்த சிலரிடம் கேட்டபோதுதான் தெரிந்தது அது "Halloween" விழாவாம். நாம் தான் குழந்தைகளுக்கு மிட்டாய் போடவேண்டுமாம். அவர்கள் சட்டி பானையில் இருந்து மிட்டாய் எடுக்கக்கூடாதாம். அன்று குழந்தைகளிடம் மிட்டாய் எடுத்த பாவத்திற்காக இப்போது வருடா வருடம் நான் பல குழந்தைகளுக்கு மிட்டாய் வழங்கி Halloween ஐ சிறப்பாக கொண்டாடி வருகிறேன்.

Halloween வரலாறு:
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு (அப்பல்லாம் நம்ம தமிழ் மொழி இருந்துச்சுபோல அதனாலதன் செம்மொழி அந்தஸ்து ஆமா) இப்போது அயர்லாந்து,இங்கிலாந்து மற்றும் வடக்கு பிரான்ஸ் நாட்டுப் பகுதிகளில் "செல்ட்ஸ்" இன மக்களின் புத்தாண்டு நவம்பர் 1. கோடைகாலம் முடிவடைந்து, வயல் வரப்பு வேலைகள், அறுவடை எல்லாம் முடிஞ்சு கடுங்குளிர் காலத்தோட தொடக்கம் தான் இந்த நவம்பர் 1. அந்த "செல்ட்ஸ்" இன மக்களுக்கு ஒருவிதமான நம்பிக்கை இருந்தது. இந்த அக்டோபர் 31 இரவு முடிந்து நவம்பர் 1 ஆரம்பிக்கும், அந்த நடுநிசி வேளையில், இறந்து போன முன்னோர்கள் பூமிக்கு வருவதாக ஒரு நம்பிக்கை. அந்தக் காலங்களில் அவர்கள் விதவிதமான உடைகள் அணிந்து இரவில் அவர்களுக்குள் குறி சொல்லிக்கொண்டும், அந்தப் பேய்களுக்கு தானியங்கள்,விலங்குகளைப் பலியாகக் கொடுப்பதும் வாடிக்கை. இந்த விழா Samhain (pronounced sow-in) என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது.

இந்த இன மக்கள் AD 43 வாக்கில் ரோமர்களின் கட்டுப்பாட்டில் வந்ததாகத் தெரிகிறது. அதற்குப்பின் ரோமர்களின் "பெரலியா "(Feralia) பண்டிகை மற்றும் "பொம்னா" (Pomona) பண்டிகைகளுடன் கலந்தே இதுவும் கொண்டாடப்பட்டு வந்தது. கி.பி 800 ஆம் ஆண்டுவாக்கில் கிறிஸ்துவ மதத்தின் தாக்கம் இந்தப் பகுதியில் பரவலாகக் காணப்பட்டு இருக்கிறது. அப்போது போப் ஆண்டவர் "Pope Boniface IV" நவம்பர்1 ஐ இறந்தவர்களுக்கும்(martyrs), சாதுக்களுக்குமான நாளாக அறிவிக்கிறார். இறந்தவர்களுக்காக "செல்ட்ஸ்" மக்கள் கொண்டாடிய விழாவை கிறிஸ்துவம் சம்பந்தப்பட்ட விழாவாக போப் மாற்றி விட்டதாக நம்பப்படுவதும் உண்டு.

இந்த விழா "அல் ஹாலோஸ்" (All-hallows) அல்லது "அல் ஹலோமாஸ்" (All-hallowmas) என்றும் அழைக்கப்படும். (Alholowmesse meaning All Saints' Day). அதுவே இப்போது ஹலோவீனாக (Halloween) மாறி உள்ளது.

Halloween தகவலின் மூலம்:
http://www.historychannel.com/exhibits/halloween/?page=origins

மேலும் விவரங்களுக்கு:
http://www.halloween.com/
http://www.historychannel.com/exhibits/halloween/


தெரிந்தவர்கள் சொல்லுங்கள்:
நம்ம ஊர் கிறிஸ்துவர்கள் ஏன் இதைக் கொண்டாடுவது இல்லை?



தொடர்புடைய செய்திகள் பார்க்க:
தமிழர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி
கேரளா ஓணமும் தமிழனுக்கு ஒரு கேள்வியும்
குற்றவுணர்வும் Thanks Giving Day யும்
தீபாவளி பண்டிகையும் சில கேள்விகளும்


****************


****************

Wednesday, October 26, 2005

பதிவு15:தீபாவளி பண்டிகையும் சில கேள்விகளும்



தீபாவளிப் பண்டிகை என்றாலே சின்ன வயசில் பெரிய கொண்டாட்டமாக இருக்கும். ஆரம்பப் பள்ளியில் படிக்கும் போது எவன் எந்த மாதிரி சட்டை எடுத்திருக்கான், எந்தக்கடையில தைக்கக் கொடுத்திருக்கான் அப்படீன்னு பாக்குறதே வேலையா இருக்கும். கொஞ்சம் வசதியான குடும்பத்துப் பிள்ளைகள் ஒரு மாசம் அல்லது ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே துணி எடுத்து தைக்கக் கொடுத்துருவாங்க, எங்க அப்பா கொஞ்சம் லேட்டாத்தான் எடுப்பார். அரசாங்கம் கொடுக்கிற போனஸ் அப்புறம் "கோ-ஆப் டெக்ஸ்" ல வர்ற தள்ளுபடி விற்பனை, போன்ற பல விசயங்கள் எங்களது தீபாவளி புதுச்சட்டையின் விலையையும் அது எடுக்கப்படும் காலத்தையும் நிர்ணயிக்கும். எங்க அப்பா "கோ-ஆப் டெக்ஸ்" ல இருந்து எப்பவுமே துண்டு,போர்வை,ஜமுக்காளம் மற்றும் அவருக்கு வேட்டி மட்டும் எடுப்பார்.அம்மாவுக்கு பிடித்தது சின்னாளபட்டுதான். அதை எப்பவுமே உள்ளூர் செட்டியார் கடையிலேயே எடுத்துவிடுவோம். சில சமயம் தீபாவளி பட்ஜெட்டில் துண்டு விழுந்தால் அம்மாவிற்கு சின்னாளபட்டும் கிடையாது.

எங்களுக்கு எப்போதும் உள்ளூர் செட்டியார் கடையில்தான் துணி எடுப்பார் அப்பா. எங்க ஊர் போஸ்டாபீஸ் பக்கதிலேயே செட்டியார் கடை இருக்கும். நல்ல வசதியாக இருந்த அவர்கள் இப்போது என்ன ஆனார்கள் எங்கே இருகிறார்கள் என்று தெரியாது. இந்த முறை ஊருக்கு போகும் போது விசாரிக்க வேண்டும்.அப்பா கொஞ்சம் முன்பணம் கொடுத்து பாக்கியை பின்பு கட்டுவார். அந்தக் கடை பக்கத்திலேயே தாவாரத்தில் (தாழ்வாரம்) மணி டெய்லர் இருப்பார். அவர்தான் எங்களது ஆஸ்தான டெய்லர். அவர் எல்லாருக்குமே தீபாவளித்துணியை தீபாவளிக்கு முன்னமே கொடுத்தாக வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதால், எல்லாரிடமும் வாக்கு கொடுத்துவிடுவார்.

தீபாவளி அன்று காலை வரை புதுச்சட்டை கிடைக்காமல் எண்ணெய் தேய்த்த தலையோடு பல குழந்தைகள் அவர் கடை முன் காத்து இருப்பார்கள்.நாங்கள் அவரை இடைவிடாமல் படுத்தி எப்படியும் தீபாவளிக்கு முந்தின இரவே துணி வாங்கி விடுவோம்.இதற்காக தினமும் பள்ளிக்கூடம் விட்டு வீடு வரும்போது மணி டெய்லர் கடையில் கொஞ்சநேரம் நின்று, அவர் நம்ம சட்டையை எடுக்கிறார என்று பார்ப்போம். பட்டாசுக் கடையில் கொஞ்ச நேரம் , துணிக்கடையில் கொஞ்ச நேரம் என்று வேடிக்கை பார்த்துவிடு மெதுவாக வீடு வந்து சேருவோம்.

தீபாவளிப் பண்டிகை நாளின் இரவில் ஒரே சோகமாக இருக்கும். "அய்யோ தீபாவளி முடிஞ்சு போச்சே இனி அடுத்த வருசம் தானே வரும்" அப்படீன்னு பக்கத்து வீட்டு நண்பர்களோடு சோகத்தைப் பகிர்ந்து கொள்வோம். என்னதான் சொல்லுங்கள் குழந்தப் பருவ தீபாவளி நாட்கள் மறக்க முடியாத இனிய நினைவுகள். இப்படி கொண்டாடிக் கொண்டிருந்த தீபாவளி எனக்கு வயசு ஆக ஆக விருப்பம் குறையத் தொடங்கியது.அதுவும் கல்லூரிக் காலத்தில் நான் தற்செயலாக சந்தித்த ஒருவரின் கேள்விகள் என்னை மிகவும் சிந்திக்க வைத்தது.

இது கல்லூரிக் காலத்தில் நான் ஒரு முறை தீபாவளி விடுமுறைக்காக ஊர் செல்லும் போது நடந்தது. அவருக்கும் எனக்கும் நடந்த உரையாடல் என் நினைவில் இருந்து. கல்லூரி முதலாண்டு என்று நினைக்கிறேன்.

என்ன தம்பி என்ன படிக்கிறீங்க?

இஞினியரிங் காலேஜ்

இப்ப என்ன தீபாவளி லீவா?

ஆமா?

உங்க காலேஜுல தீபாவளிக்கெல்லாம் லீவு விடுவாங்களா என்ன? அது கிறிஸ்டியன் காலேஜு ஆச்சே.

இல்ல லீவு விடுவாங்க.

கேட்குறேன்னு தப்பா நினைக்காத தம்பி, உனக்கு இந்த தீபாவளியோட பின்னனி தெரியுமா?

என்னடா இப்படி தொந்தரவு பண்ணாறாரேன்னு நினைச்சுக்கிட்டு நான் "அதுதான் நரகாசுரன கடவுள் கொன்ன நாள்" என்றேன்.

தம்பி ராமரோ துர்க்கையோ அந்த சாமிகள் வதம் செய்யும் கொடுமைக்காரர்கள் எல்லாம் ஏன் கருப்பா இருக்காங்கன்னு தெரியுமா? என்னிக்காவது எங்கேயாவது கருப்பசாமியோ அல்லது முனியாண்டி
சாமியோ செவப்பா இருக்கிறவங்கள வதம் பண்றதா பாத்து இருக்கீங்களா? என்றார்.

எனக்கு அப்போது இருந்த அறிவில் இதல்லாம் தலையில் ஏறவில்லை. ஆனால் அவர் எதோ தி.க கட்சிக்காரர் என்று என் மனது சொன்னது.

"இல்லங்க எனக்கு தெரியாது" என்று சொல்லிவிட்டு கையில்
இருந்த குமுதத்தை விரித்துக் கொண்டு படிப்பது போல் நடித்து அவரது பேச்சைப் தவிர்க்கப் பார்த்தேன்.

"இல்ல தம்பி, இந்த கதைகள் எல்லாம் திராவிட நாட்டுக்காரங்கள கேவலப்படுத்த மற்றவங்க கட்டிய கதை. இதையும் நம்பி நாமளும் அவுகளோட சேர்ந்து இதக் கொண்டாதுவது சரியில்ல. நானோ எனது குடும்பமோ தீபாவளி கொண்டாட மாட்டோம்" என்றார்.

"நீங்க என்ன தி.க கட்சியா?" என்று கேட்டேன்.

அவர் சிரித்துக் கொண்டே " நான் எந்தக் கட்சியும் இல்ல தம்பி. புராணத்துல இருக்குற இந்த விசயம் எனக்கு ஒத்துவராத ஒன்னு. அதனால இந்தப் பண்டிகைய கொண்டாட மாட்டேன். " என்றார்.

பின்பு அவரும் அவர் கையில் இருந்த தினசரியைப் படிக்கத் தொடங்கி விட்டார். அப்பாடா ஆள விட்டாரே என்று நிம்மதியாக இருந்துவிட்டேன். தமிழ்நாட்டில் தீபாவளி கொண்டாடத ஆட்களும் இருக்கிறார்கள் என்ற செய்தியே எனக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது.கிறிஸ்துவர்கள், முஸ்லீம்கள் போன்ற பிற மதக்காரர்கள்தான் தீபாவளி கொண்டாட மாட்டர்கள் என்றும், எதோ தீபாவளியை இந்தியா முழுக்க அனைத்து இந்துக்களும் கொண்டாடுவார்கள் என்று நினைத்துக் கொண்டு இருந்த எனக்கு அப்போது இது பேரதிர்ச்சியாக இருந்தது.

கூகிள் ஆண்டவர் புண்ணியத்தில் இணையத்தில் தேடியதில் கிடைத்த தகவல்கள் மேலும் ஆச்சர்யத்தைத் தருகின்றன.

எனக்கு இன்றும் புரியாதவை

1.வட மாநிலங்களில் இது 5 நாள் பண்டிகை. தமிழ் நாட்டில் மட்டும் ஒரு நாள்.

2.இந்த விழா நவ ராத்திரியோடு சம்பந்தப்பட்டதாகத் தெரிகிறது. தீபாவளி கொண்டாடும் எல்லாரும் நவராத்திரியோ கொலுவோ கொண்டாடுவது இல்லை.

3.தீபத்திருநாள் என்று சொல்லப்பட்ட போதும் யாரும் கார்த்திகை அளவுக்கு தீபம் ஏற்றுவதாகத் தெரியவில்லை. நான் அறிந்த வரையில் இதை யாரும் தீபத்திருநாளாக கொண்டாடியது இல்லை. சும்மா நரகாசுரனுக்காக எண்ணெய் தேய்த்து குளிப்பதாகவே தெரிகிறது.

அதிக தகவல்களுக்கு
http://diwalimela.com/celebrations/index.html
http://www.kamat.com/kalranga/festive/diwali.htm
http://www.diwalifestival.org/diwali-in-history.html

குழந்தையாய் இருக்கும் போது கொண்டாடினேன். இப்போது குழந்தைகளுக்காக கொண்டாடுகிறேன்.ஏன் கருப்பு மனிதர்கள் மட்டும் அரக்கர்களாச் சித்தரிக்கப்படுகிறார்கள் என்பது இன்னும் விடை தெரியாத கேள்வி.



தொடர்புடைய செய்திகள் பார்க்க:
தமிழர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி
கேரளா ஓணமும் தமிழனுக்கு ஒரு கேள்வியும்
குற்றவுணர்வும் Thanks Giving Day யும்

****************


****************

Tuesday, October 25, 2005

பதிவு14: தினமலரில் சானிடரி நாப்கின் விசயம்!

அன்பு வலைப்பதிவர்களே,
இங்கு நாம் விவாதித்த நாப்கின் விசயம் தமிழக அரசு அதிகாரிகள்,காவல்துறையின் உளவுப் பிரிவு ஆகியோர் பார்வைக்கு செல்லும் வகையில் " முதல்வருக்கு ஒரு கடிதம்" என்ற தலைப்பில் தினமலர் செய்திமலர் (அக்டோபர் 2005) என்ற இலவச இணைப்பில் வந்துள்ளது.இது நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் மட்டும் வரும் இணைப்பாக இருந்தாலும் வி.ஐ.பி.க்கள் மத்தியில் பிரபலமான ஒன்று. தினமலர் போன்ற ஒரு வெகுசன ஊடகம் மூலம் இந்த செய்தி மக்களுக்கு சென்றடைவதே ஒரு சிறந்த விழிப்புணர்வு முயற்சியாகும்.

தினமலரின் இந்த முயற்சிக்கு தமிழ் வலைப்பதிவர்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.தேர்தல் நேரமாக வேறு இருப்பதால், எந்த மூலையில் இருந்தாவது ஆதரவுக் குரல் வரும் என்ற நம்பிக்கை உள்ளது. நான் முன்பே சொன்னபடி இந்த விசயம் விவாதிக்கப்படுவதே ஒரு நல்ல முன்னேற்றம்.

வலைப்பதிவில் முதன் முதலில் இதுபற்றி எழுதிய ரம்யா,நாம் விவாதித்த இந்த விசயத்தை தினமலர்வரை எடுத்துச்சென்ற நமது சக வலைப்பதிவாளர் மற்றும் ஆதராவாய் இருந்து கருத்துச் சொன்ன அனைவருக்கும் நன்றிகள்.

நல்ல விவாதக்களமாக,தமிழ் வலைப்பதிவின் திரட்டியாக இருந்துவரும் தமிழ்மணத்திற்கும் அதன் நிர்வாகிகளுக்கும் நன்றி.
சானிடரி நாப்கின் - தமிழக முதல்வருக்குக் கடிதம்
சானிடரி நாப்கின் தமிழக அரசு திட்டம்

செய்தியை தெளிவாகப் பார்க்க படத்தின்மேல் சொடுக்கவும்.

தினமலரின் முன்னுரை...

வலைப்பதிவுகளில் காணப்படும் பல செய்திகள் நம்மை வியக்க வைக்கக் கூடியவையாக உள்ளன.

தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஒரு கடிதமாக 'கல்வெட்டு' என்ற வலைப்பதிவில் வெளியிடப்பட்டிருக்கும் இந்தச் செய்தி,இதுவரை யார் கவனத்திலும் படாத,ஆனால் மிக அடிப்படையான பிரச்னையைப் பேசுவதாக இருக்கிறது. முதல்வரின் கவனத்துக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு குக்கிராமத்து, இளம் பெண்களுக்கும் போய்ச் சேர வேண்டிய செய்தியாகவும் இது இருப்பதால் இதை இங்கே வெளியிட்டிருக்கிறோம். படித்து முடித்த பிறகு 'இதுவா...?' என்று கூட உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் காலம் காலமாக வெளியில் சொல்ல முடியாத பல்வேறு ரணங்களையும்,வலிகளையும் தாங்கிக் கொண்டிருக்கும் அப்பாவி அடித்தட்டு பெண்களுக்கு இதன் முக்கியத்துவம் நிச்சயமாகப் புரியும்.






**************************
தமிழ்ப்பதிவுகள் , தமிழ்
***************************

Friday, October 21, 2005

பதிவு 13:காசியின் தமிழ்மண அறிவிப்பு பற்றி

பதிவு 13:காசியின் தமிழ்மணமும் எனது கல்வெட்டு மனமும்


நான் எழுதும் பதிவுகள் எனது ஆத்ம திருப்திக்காக மட்டும்தான் என்றால் நான் எதைப்பத்தியும் கவலைப்படத்தேவை இல்லை. நான் எழுதுவதை ஒருசிலராவது படிக்கவேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டு.மரத்தடி,திண்ணை,ராயர் காப்பிக்கடை போன்றவைகள் எனக்குத்தெரியாது. கலை , இலக்கியம் மற்றும் கவிதையும் தெரியாது. சனரஞ்சகமான தமிழ், ஆங்கிலப்படங்களையும் மட்டுமே பார்த்து வந்தவன். கணனித்துறையில் இருந்தாலும் இந்த வலைப்பதிவு,திரட்டி பற்றியெல்லாம் ஒன்னும் தெரியாது.ஆனந்த விகடனும் குமுதமும், தினமலர்,தினத் தந்தி தினகரன் போன்ற தினப்பத்திரிக்களை மட்டுமே வாசித்துக் கொண்டிருந்த ஒரு சாதாரணன். எனக்கு பலரை அறிமுகப்படுத்தியது இந்த இணையம்தான்.

முதலில் ஒருவரின் பதிவில் இருக்கும் இணைப்புகளை வைத்து பிறரின் பதிவுகளை சென்றடைந்தேன். பின்பு http://tamilblogs.blogspot.com/ வழியாக
பல புதிய தமிழ் இணையத்தளங்களை கண்டுகொண்டேன்.தமிழ்மணம் வந்தவுடன் சினிமா,இலக்கியம்,சாதி மதம்,நக்கல்,நையாண்டி அனைத்தையும் ஒருசேரப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.ஆரம்பத்தில் பா.ரா போன்றோர் என்ன எழுத வேண்டும் எப்படி எழுத வேண்டும் எது இலக்கியம் என்று முட்டி மோதி மல்லுக்கட்டி ஓடிவிட்டனர். பலபதிவுகள் பின்னூட்டத் தொல்லையால் நிறுத்தப்பட்டன. பல மனஸ்தாபங்கள். டோண்டு படதா கல்லடியா. அவரும் பின்னூட்டப் பிரச்சனைக்காக பலரிடம் புலம்பிப்பார்த்தார். இப்போது நாம் அனைவரும் போலி டோண்டுவுடன் வாழப் பழகி விட்டோம்.

காசி தமிழ்மணத்தை ஆரம்பிக்கவில்லை என்றால் வேறுயாரும் ஆரம்பித்து இவ்வளவு சிறப்பாக நடத்தி இருப்பார்களா தெரியாது. அவரது பலமும் பலவீணமுமே அவர் இலக்கிய வட்டத்தில் இருந்து வந்தவரல்ல.இலக்கிய வட்டம்,சதுரம் ,செவ்வகம் போன்ற பலர் இங்கே உள்ளார்கள்.அவரவர் அவர் தொழில் சார்ந்த இணையங்களையே ஆரம்பிக்கிறார்கள் யாரும் இது போன்ற பொதுவான ஒரு தளத்தை அமைக்கவில்லை.அப்படியே அமைத்தாலும் அது வியாபார நோக்கோடுதான் இருக்கிறது. அல்லது மிகவும் கனமான விசயங்களான பின் நவீனத்துவம்,முன் நவீனத்துவம்,இடது,வலது என்ற விசயங்களே பெரிதும் பேசப்படும்.அது போன்ற இடங்களில் என்னை மாதிரி வெகு சாதாரணன் எதையும் சொல்லவோ,கருத்தாடவோ முடியாது.அவர்களைக் குற்றமோ குறையோ சொல்லவில்லை, என்னிடம் சரக்கு இல்லை.

நான் எழுதும் மிகச்சாதாரணமான, இந்தக் "கல்வெட்டு" மற்றும் "பலூன் மாமா" பதிவை ஒருசிலராவது படிக்கக் காரணம் தமிழ்மணத் திரட்டி மட்டுமே. "யார்ரா இவன் புச்சா இருக்கானே , என்னனு பார்ப்போம்" அப்படீனு வந்தவர்கள்தான் அதிகம். இங்கே பலருக்கு பலரைத் முன்பே தெரிந்து இருக்கிறது. பலர் பலருக்கு தங்களின் பதிவுகள் வழியாக தொடுப்புக் கொடுத்துள்ளார்கள். எனக்கு தெரிந்த ஒரேவாசல் தமிழ்மணம் மட்டுமே. வேறு தொழில்நுட்பங்கள் தெரியாது. இந்த தள அமைப்பே பலரது வடிவமைப்பைப் பார்த்து பார்த்து செய்ததுதான்.

எனது பதிவுகளைத் தமிழமணம் திரட்டி மூலம் ஒருசிலராவது படிக்கிறார்களே என்பது எனக்கு மகிழ்ச்சியான ஒன்றே. அதே சமயம் தற்போது காசி அவர்கள் அறிவித்துள்ள மாற்றங்களினால் பட்டியலில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட முகமறியா நண்பர்களை நினைத்து வருத்தமாகவே உள்ளது. பலசுவையுடன் இருந்த கதம்ப மணம் இனிமேல் இருக்காது. தமிழமணத் திரட்டியால் திரட்டப்பட வேண்டுமானல் நமக்குப் பிடித்ததை எழுதுவதற்குமுன் அது தமிழ்மண சட்ட திட்டங்களுக்குள் இருகிறதா என்று பார்த்தே எழுத வேண்டும்.

தமிழ்மணம் மிகவும் வசதியாய் இருபதாலும், எனக்கு வேறு தொழில் நுட்பங்கள் தெரியாததாலும்,இதுபோல் வேறு எந்த திரட்டியும் இல்லாததாலும் நான் 100% தமிழ்மணத்தைச் சார்ந்தே இருக்க வேண்டியுள்ளது.இப்போதுதான் வாய்ஸ் ஆப்த விங்-ன் புண்ணியத்தில் http://technorati.com/tag/தமிழ்ப்பதிவுகள்" -ல் இணைத்துக்கொண்டு உள்ளேன். காசியின் இந்தக் கட்டுப்பாடு மேலும் பல புதிய திரட்டிகளைக் கொண்டுவரும் என்றே நம்புகிறேன். அவர்களும் எதேனும் கட்டுப்பாடு வைக்கலாம். யார் கண்டார்?

எனது பார்வையில் இந்த "திரட்டி" , சினிமாத் தொழிலில் இருக்கும் "டிஸ்ரிப்யூட்டர்" போன்றது. டைரக்டர் என்னதான் சினிமா எடுத்தாலும் டிஸ்ரிப்யூட்டர் இல்லாமல், அவரின் கருத்து மக்களை அடையாது.
அதுபோல்தான் இங்கேயும். அவரவர்கள் எதில் சிறந்தவர்களோ, அவர்களுக்க்கு எது பிடித்திருக்கிறதோ அதை எழுதலாம். பிறரின் விருப்பத்துக்கெல்லாம் யாரலும் எழுத முடியாது, அதில் ஒரு போலித்தன்மை வந்துவிடும். அவரவர் அவரவருக்குத் தெரிந்ததையே எழுத முடியும். அதேபோல் காசி எல்லாத்தையும் திரட்டனும் என்று யாரும் கட்டாயப்படுதவும் முடியாது.காசியே இதனைத் தற்காலிகமான ஒன்றுதான் என்று சொல்லி இருப்பதால்
//இந்த நிலையே ஒரு இடைக்கால ஏற்பாடுதான். ஒருவேளை பகவான் கிருபையில் வகைப்பிரித்தல், உடனடி செய்தியோடை அறிவிப்பு போன்ற ஏற்பாடுகள் செய்யப்படுமானால், இவற்றையும் திரட்டமுடியும்.//

யாரும் யாரையும் காயப்படுத்திக் கொள்ளாமல், மாற்று யோசனைகளை காசிக்கு வழங்கலாம். அல்லது திறமையுள்ளவர்கள் வேறு நல்ல திரட்டிகளை அமைக்க முயற்சிசெய்யலாம்.


சொல்லலாமா? வேண்டாமா?
சிங்கம் வலம் போனால் என்ன இடம் போனால் என்ன,நம்ம மேல பாயாமல் இருந்தா சரி அப்படீன்னு சும்மா இருக்க முடியல. எது சொன்னாலும் அது எல்லாரையும் திருப்திப்படுத்துமுன்னு சொல்லமுடியாது. எல்லாரையும் திருப்திப்படுத்த நினைச்சா நாம நம்ம சொந்த அடையாளங்களை சமரசம் செய்து கொள்ள வேண்டும். தன்மானம் உள்ள யாராலும் அப்படி இருக்க முடியாது என்பதால் காசியின் முதல் "தமிழ்மணம் தள நடவடிக்கைகள் பற்றி சில அறிவிப்பில்" நான் இதை "இது ஏதோ அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரின் செயல்பாடு போல் உள்ளது" என்றும் "நண்பராகிய நீங்கள் தவறு செய்யும் போது இடித்துரைக்காமல் இருக்க முடியவில்லை" கடுமையாக கூறியிருந்தேன்.

அதற்குப்பின் அவர் அந்த மாற்றங்களை தனது அடுத்த பதிவில் அறிவித்தேவிட்டார். அதற்குமேல் யாராலும் ஒன்னும் செய்யமுடியாது. அதில் "வருந்தமான முடிவு." என்பதோடு நிறுத்திக்கொண்டேன்.


இன்று நான் பலவிசயங்களை சொல்ல நினைத்தேன். ஆனால் ஜெயஸ்ரீ அதனையே மிகச்சிறப்பாக கூறிவிட்டார். நன்றி ஜெயஸ்ரீ

அவரின் கருத்துகளில் இருந்து கீழ்க்கண்டவற்றை நான் வழிமொழிகிறேன்.




காசி அவர்களுக்கு கல்வெட்டு எழுதிக்கொள்வது,
தமிழ்மணத்தை பயன்படுத்துபவன் வேறு தொழில்நுட்பங்கள் தெரியாததால் இந்தத் தளத்தை மட்டுமே வலைப்பதிவுகள் படிக்க தொடர்ந்து உபயோகித்து வருபவன் என்ற முறையில் என் கருத்தையும் சொல்லநினைக்கிறேன்.

நீங்கள் எடுத்த முடிவு சரியா தவறா என்று யாரும் இங்கு சொல்லமுடியாது. அது முழுக்க முழுக்க உங்கள் உரிமை என்று திடீரென நீங்கள் நினைத்திருக்கலாம். ஆனால் தமிழ்மணத்தை மேம்படுத்த உதவியவர்கள், தொழில்நுட்ப விஷயங்களை சகபதிவாளர்களுக்கு தேவைப்பட்டபோதெல்லாம் அவர்களுக்குள்ளாகவே முன்வந்து வழங்கியவர்கள், நட்சத்திரப் பதிவாளர்களாக இருந்தும், தங்கள் பின்னூட்டங்களாலும் பிற பதிவாளர்களையும் உற்சாகப்படுத்தியவர்கள் என்ற வகையில் பெரும்பாலான பதிவர்களின் பங்கும் இதில் இருக்கிறது என்பதை மறுக்கமாட்டீர்கள் என நம்புகிறேன்.


இந்த நிலையில், 4வது காரணமாக சொல்லப்பட்டிருக்கும்- திடீரென உங்களுக்கு விருப்பமில்லாத பதிவுகளை எந்த முன்னறிவிப்பும் யாருக்கும் கொடுக்காமல் நீக்கியதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

முழுக்க முழுக்க தமிழ்ப் பதிவாளர்கள் அனைவரும் தமிழ்மணத்தையே நம்பியிருக்கும் வேளையில் திடீரென ஒருநாள் காலையில் ஒவ்வொருவராக திரட்டியில் தன்பதிவு இல்லையென்று புலம்ப வைப்பது... நான் பாஸ், நீ ஃபெயில் என்று மாற்றி மாற்றி உங்கள் பச்சைவிளக்கைப் பார்க்க ஓடவைப்பது.. நாம் எந்த நாகரிக யுகத்தில் இருக்கிறோம் என்று யோசிக்கவைக்கிறது.

இத்தனைபேரை நீக்கலாம் என்று நீங்கள் எடுத்தமுடிவு ஒரே நிமிடத்தில் (நேற்றிரவு 12 மணிக்குத்) தோன்றியதாகவோ, அடுத்த நிமிடமே உடனடியாக அமல்படுத்த வேண்டியதான நெருப்புப் பற்றி எரிகிற அவசரமோ நிச்சயம் இருந்திருக்காது; என்ற நிலையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒரு முன்கூட்டிய அறிவிப்பை மட்டுமாவது கொடுத்து அவர்களுக்கு ஒரு மாற்று ஏற்பாடுக்கான(வேறு திரட்டிக்கு மாறிக்கொள்ள) நேரத்தை வழங்கியிருக்கலாம்.

அல்லது ஒரு குறைந்தபட்ச கெடுவைத்து தனிப்பட்ட முறையில் தெரிவித்து நீங்கள் நீக்காமல் அவர்களாகவே நாகரிகமாக தங்களை தமிழ்மணத்திலிருந்து விடுவித்துக்கொள்ள ஒரு சந்தர்ப்பத்தையாவது வழங்கியிருக்கலாம். நிச்சயம் இதைப் பலர் தாங்களாகவே செய்திருப்பார்கள். Golden Handshake என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அங்கு கொடுக்கவேண்டியது பெரிய தொகை என்பதுபோல இங்கும் அதைவிட மதிப்புமிக்க அவர்களது தன்மானம் பலருக்கு இதன்மூலம் வழங்கப்பட்டிருக்கும்.

இங்கு இருக்கும்(மன்னிக்கவும், இருந்த) உறுப்பினர்கள் யாரும் கருத்தளவில்/ நடையளவில் உங்களுக்கு(நமக்கு) ஒப்புதல் இல்லாதவர்கள் என்பதால் உங்கள் ஒப்புதல் பெற்ற யாரைவிடவும் ச்க வலைப்பதிவாளர்களாக அவர்கள் எந்தவிதத்திலும் குறைந்தவர்கள் இல்லை.

உங்கள் இந்தச் செயல் இனி தமிழ்மணத்தில் பதிவுகள் எழுதப்போகும் ஒவ்வொரு பதிவாளர்களையும் பதிவுகள் எழுதுவதற்கு முன்னும், புதிதாக சேர நினைப்பவர்களை, சேருவதற்கு முன்னும் கொஞ்சம் யோசிக்கவைப்பதாகவே இருக்கும்.

உங்கள் ரசனையோடு தங்கள் எழுத்தை ஒருமுறை உரசிப்பார்ப்பதாகவே அது இருக்கும்.

உங்கள் இந்த முடிவால், வலைப்பதிவு உலகத்துக்கு வேறு வேறு புதிய திரட்டிகள் கிடைக்கலாம்; இன்னும் வேகத்துடன் தொழில்நுட்பங்கள் கிடைக்கலாம். வலைப்பதிவு அதன் அடுத்தக் கட்டத்துக்கே முன்னேறலாம். ...லாம் ...லாம் ...லாம். மிக மிக நல்ல விஷயம்.

ஆனால் அந்த முடிவைநோக்கிய ஆரம்பம் இன்னும் கொஞ்சம் வலிக்காமல் இருந்திருக்கலாம் என்பது என் கருத்து! வருந்துகிறேன்!!!

உள்ளபடியே உங்கள் மற்றும் உங்கள் நிர்வாகக் குழுவினரின் சேவைக்கு மீண்டும் மீண்டும் என் நன்றிகள்.


*********************

*********************

Wednesday, October 19, 2005

பதிவு12:குற்றவுணர்வும் Thanks Giving Day யும்


அமெரிக்க Thanks Giving Day பற்றி பல கதைகள் இருந்தாலும் அதிகப்படியாக நம்பப்படுவது அல்லது ஊடகங்கள்,குழந்தைகளின் புத்தகங்கள் வழியாக நம்பவைக்கப்படுவது இதுதான்.


  • இது ஒரு அறுவடைத் திருவிழா ( Harvest Festival )
  • ஆரம்பகாலத்தில் வந்தேறிகளாக குடிபுகுந்த மக்கள், இந்த கண்டத்தில் இருந்த அமெரிக்க பூர்வகுடிகளுக்கு ( Native Americans ) நன்றி சொல்ல கொண்டாடும் திருவிழா.


http://www.rumela.com/events/events_november_thanksgiving.htm

  • The actual origin, however, is probably the harvest festivals that are traditional in many parts of the world Festivals and Feasts. After the first harvest was completed by the Plymouth colonists in 1621, Governor William Bradford proclaimed a day of thanksgiving and prayer, shared by all the colonists and neighboring Native Americans. The Pilgrims of Plymouth Rock held their Thanksgiving in 1621 as a three day "thank you" celebration to the leaders of the Wampanoag Indian tribe and their families for teaching them the survival skills they needed to make it in the New World.

  • As tradition has it in most families, a special prayer of thanks precedes the meal. In many homes, family members will each mention something they are very thankful for. Thanksgiving is a time for families to create traditions and memories that last a lifetime.

  • http://www.gkindia.com/holidays/thanksgivingday.htm
    http://www.thanksgiving.org/2us.html





உதவி செய்த அந்த செவ்விந்தியர்களை அப்புறம் இந்த வந்தேறிகள் ஓட ஓட விரட்டி அவர்கள் நிலபுலன்களை எல்லாம் கவர்ந்து கொண்டு "நன்றி" சொன்னது தனிச் சோகக்கதை.

  • Fact & Myth about Thanksgiving
  • The REAL story of the "first" Thanksgiving
  • Thanksgiving Today


http://www.angelfire.com/biz2/turquoisebutterfly/thanksgiving.html


  • For many Native American Indians of present day, the traditional "Thanksgiving" holiday is not recognized as the Pilgrim/Indian day popularized in children’s history books; rather it is a day of sorrow and shame. Sorrow for the fallen lives of those who were lost so long ago, and shame for living in a country who honors people who used religion and self-righteousness to condone murder, treachery and slavery.

அதிகம் தெரிந்து கொள்ள:

http://www.reformation.org/new-world-holocaust.html

http://www.nativeamericans.com/http://www.danielnpaul.com/TheRealThanksgiving.html


இப்போது அமெரிக்கர்கள் இதை "வான்கோழி" (Turky) சாப்பாடும் , நண்பர்கள்,உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் ஒருவருக்கொருவர் நன்றி சொல்லி இரவு சாப்பாடை சேர்ந்து உண்ணுவது என்ற சம்பிரதாய விழாவாக்கிவிட்டார்கள். யாரும் அமெரிக்க பூர்வகுடிகளுக்கு ( Native Americans ) நன்றி சொல்வதாத் தெரியவில்லை.அவரவர் அவர் நம்பும் கடவுளர்களுக்கு நன்றி சொல்லி விருந்தை ஆரம்பிக்கிறார்கள்.


செவ்விந்தியர்களை அழித்துவிட்டு தங்களது காலனி ஆதிக்கத்தையும் கிறித்துவத்தையும் பரப்பிய அமெரிக்கர்களுடன் சேர்ந்துகொண்டு "Thanks Giving Day" கொண்டாடுவதா? அல்லது செவ்விந்தியர்களுடன் சேர்ந்து இந்தியர்களாகிய நாம் இதனைப் புறக்கணிப்பதா? தெரியவில்லை.


ஒரு பூர்வ பழங்குடி மக்களின் நிலத்தையும் வளத்தையும் அழித்துவிட்டு நிர்மாணிக்கப்பட்ட ஒரு நாடாக அமெரிக்கா இருந்தாலும், அரிக்கேன் விளக்கில் இருந்து ஆகாய விமானம் வரை நவீன உலகிற்கு இவர்களின் பங்களிப்பு மறுக்கமுடியாதது.

Thanks Giving Day யும் அதன் வரலாறும் பல வகையான குழப்பத்தையும், குற்றவுணர்வையும் தந்தாலும்,நன்றி சொல்ல ஒரு நாள் என்றளவில் Thanks Giving Day எனக்கு மிகவும் பிடித்த ஒரு நாள்.

அந்த நாளில் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றுசேருவது, தனக்குச் செய்த நல்ல செயல்களை நினைவுகூர்ந்து ஒருவர் மற்றவருக்கு நன்றி சொல்வது நல்ல விசயம்.

தொடர்புடைய செய்திகள் பார்க்க:

தமிழர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி

கேரளா ஓணமும் தமிழனுக்கு ஒரு கேள்வியும்

*********************

*********************





தணிக்கைகளற்ற ஓர் திரட்டி அமைப்பு
http://valaipadhivan.blogspot.com/2005/10/blog-post_19.html

மேற்கண்டவாறு வகைப்படுத்தப்பட்ட பதிவுகளின் பட்டியலைக்காண http://www.technorati.com/tag/தமிழ்ப்பதிவுகள் என்றச் சுட்டியை உபயோகியுங்கள்.

Wednesday, October 12, 2005

பதிவு10: கேரளா ஓணமும் தமிழனுக்கு ஒரு கேள்வியும்





கே ளா ... சொல்லும் போதே ஒரு மகிழ்ச்சி, கண்ணுக்குள் வெளிச்சங்கள், மனதில் பல நினைவுகள் வந்து போகின்றன.

சிறுவயதில் நாயர் டீக்கடையையும், ஐயப்பன் கோவிலையும் மட்டுமே கேரளாவுடன் இணைத்துப் பார்த்திருக்கிறேன். விடலைப் பருவத்தில் கேரளா என்றாலே "மாமனாரின் இன்ப வெறி" போன்ற படங்களை மட்டுமே உற்பத்தி செய்யும் ஒரு காமக் கோட்டையாக நினைத்து இருந்திருக்கிறேன்.

கல்லூரிக்குச் சென்ற பிறகு எனக்கு இருந்த கேரளா பற்றிய அடையாளங்கள் முற்றிலும் மாறியது. நல்ல மலையாளப் படங்களும் கேரளப் பெண்களின் அழகும் என்னுள் கேரளா பற்றிய புதிய பரிணாமத்தை ஏற்படுத்தின.

நான் படித்த கல்லூரி கோயம்புத்தூருக்கு அருகே உள்ள சிறுவாணிப் பகுதியில் உள்ளது. எப்போதும் மிக இரம்மியமான சூழல் கொண்டது. மலைக்கு அந்தப்பக்கம் கேரளா. உடன் படிக்கும் கேரள நண்பர்கள். அதே கல்லூரியில் வேறு பாடப் பிரிவுகளில் படிக்கும் கேரளத்துப் பெண்கள் என்று ஒரே மலையாள வாசனையாக இருந்தது. அப்போது எனக்கு இருந்த கூச்ச சுபாவத்தால் அந்தப் பெண்களுடன் பேசிப் பழக வாய்ப்பில்லாமல் போய்விட்டது. அந்தக் கல்லூரியில் எனக்கு நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள்.

அதற்குப் பிறகு பலமுறை கேரளா சென்றுள்ளேன்.

எனக்கு மிகவும் பிடித்த விசயம் "ஓணம்" .
ஓணம் என்றாலே சந்தனக்கலர் புடவைப் பெண்களும், நீண்ட படகுப் போட்டியும் தான் வருகிறது.



இந்தப் பண்டிகையின் தோற்றம் இந்துக் கடவுள்கள் சம்பந்தப்பட்டதாக இருந்தாலும், நான் அறிந்த வரை இந்தப் பண்டிகை சாதி, மத, சமய வேறுபாடு இல்லாமல் அனைத்து கேரள மக்களாலும் கொண்டாடப்படுகிறது.

கேரள மக்களுக்கென்று ஒரு விழா!

சாதி சமய வேற்றுமை இல்லாமல் அனைவரும் சேர்ந்து கொண்டாட ஒரு வாய்ப்பு!!

http://www.southindia.com/onam.htm
Onam is one of the greatest festivals of Kerala. It is the festival, which the keralites celebrates unitedly without the differecnce of caste and religion.


http://www.malayalifestivals.dgreetings.com/malayalifestivals/onam/
This festival is not celebrated by Hindus only but by Christians and Muslims as well. It is one festival that unites all people regardless of race and religion

http://hinduism.about.com/od/festivalsholidays/a/onam.htm
Onam is For AllAlthough this festival has its origin in Hindu mythology, Onam is for all people of all class and creed. Hindus, Muslims and Christians, the wealthy and the downtrodden, all celebrate Onam with equal fervor. The secular character of Onam is peculiar to this land where unity had always coexisted with diversity, especially during festivals, when people come together to celebrate life's unlimited joys.

தமிழா உனக்கென்று ஒரு பொதுவான கொண்டாட்டம் என்ன இருக்கிறது?

Thursday, October 06, 2005

பதிவு09: தமிழர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி

செய்தி என்னவென்று சொல்வதற்கு முன்னால் யார் தமிழர் என்பதை முதலில் பார்ப்போம்.

தமிழர் என்பவர் யார்?

வீட்டிலும்,வெளியிலும் தமிழ் பேசி, தனது குழந்தைகளுக்கும் தமிழ் போதித்து சக தமிழரிடம் தமிழில் பேச வெட்கப்படாமல் தமிழைப் பேசி, கற்று வாழ்வன் தமிழனா?

தமிழ் நாட்டில் வாழும் அனைவரும் தமிழனா?

வீட்டினுள் பிற மொழி பேசி வெளியில் தமிழ் பேசுபவன் தமிழனா?

தமிழே பேசாமல் அதைப் பேசுபவனையும் கேவலமாகப் பார்த்துக் கொண்டு பீட்டரிங் விட்டுக்கொண்டு தமிழ் நாட்டில் வாழுபவன் தமிழனா?

வேறு நாட்டிற்குப் போனபின், தனக்குரிய அடையாளத்தை தக்க வைத்துக் கொள்ள தமிழ்/தமிழர் விழா/பண்டிகை கொண்டாட்டம் வைத்து, அந்த விழாவில் வேட்டி சேலை கட்டி, அந்த விழா மேடையில் ஆங்கிலத்தில் எல்லாரையும் வரவேற்றுப் பேசுபவன் தமிழனா?

அதே கூத்தை தமிழ் நாட்டில் செய்பவன் தமிழனா?

ஆரியன் தமிழனா?

திராவிடன் தமிழனா?

இந்து தமிழனா? முஸ்லிம் தமிழனா? கிறித்துவன் தமிழனா? சேட்டு தமிழனா?

என்னைப் போல எங்கேயோ வேறு நாட்டில் ஒக்காந்து இப்படி லொட்டு லொட்டுனு தமிழில் தட்டிக் கொண்டு இருப்பவன் தமிழனா?

அப்பாடா எல்லாத்தையும் சொல்லியாச்சு (எல்லாரையும் திட்டியாச்சு) .வேறு ஏதேனும் விடுபட்டுப் போயிருந்தால் நீங்களே கண்டுபிடித்து பின்னூட்டமாக எழுதி திட்டித் தீர்த்துக் கொள்ளவும். இப்போதே திட்டிக் கொள்ளவும்.

எந்த சாதியா இருந்தா என்ன?
எந்த மதமா இருந்தா என்ன?
எங்கே இருந்தால் என்ன?
எங்கே பிறந்தால் என்ன?
எந்தக் கட்சியில் இருந்தால் என்ன?
யார் ரசிகராய் இருந்தால் என்ன?
யாருக்கு ரசிகர் மன்றம் வைத்தால் என்ன?
பிழைப்ப்பிற்காக... ஜாவாவில் புரோகிராம் எழுதினால் என்ன?
சமஸ்கிருதத்தில் ஓதினால் என்ன?
ஆங்கிலத்தில் பண்டிதனாய் இருந்து அரபியில் சாமி கும்பிட்டால் என்ன? குஷ்பூவைத் திட்டினால் என்ன?
புஷ்பவனம் குப்புசாமியை நடிக்க வைத்தால் என்ன?
புஷ் செய்வதெல்லாம் நடிப்பு என்று சொன்னால் என்ன?

என்னைப் பொறுத்தவரை, யார் தன்னை தமிழன் என்று சொல்லிக் கொள்வதிலும், தமிழ் பேசுவதிலும் கர்வம் கொள்கிறார்களோ அவரே தமிழர் .... அம்புட்டுத்தான்.

"யார் தமிழன் , எது தமிழ்க் கலாச்சாரம் என்பதைத் தீர்மானிக்க பல பெரியவர்கள் இருக்கும் போது , நாம் ஏன் கவலைப்படனும்"...அப்படீன்னு சொன்னா அதுவும் சரிதான்.

எது எப்படியோ......
நீ தமிழனா இல்லையா என்பதை நீயே தீர்மானம் செய்து கொள்.

தமிழனாக தன்னை அடையாளம் காண்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி காத்து இருக்கிறது.

பதிவு08: சானிடரி நாப்கின் தமிழக அரசு திட்டம்

மாவட்டத்துக்கு ஒரு சானிடரி நாப்கின் தயாரிக்கும் தொழிற்சாலை -அரசு திட்டம்!

நான் எனது முந்தைய பதிவில் சானிடரி நாப்கின் சம்பந்தமாக சில யோசனைகளை முன்வைத்து இருந்தேன்.அது சம்பந்தமாக தமிழக அரசு இணையத்தளத்தில் தேடிய போது ஆச்சரியப்படத்தக்க தகவல்கள் இருந்தன.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு "சானிடரி நாப்கின் தயாரிக்கும் தொழிற்சாலை" திட்டத்தினை தமிழக அரசு RURAL DEVELOPMENT DEPARTMENT ANNOUNCEMENTS 2004-2005 -ல் அறிவித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு:
http://www.tn.gov.in/citizen/announcement/rural2004-05.htm

http://www.tn.gov.in/policynotes/performance_budget/pb-social-2004-05.pdf


அரசின் நல்ல முயற்சிகளுக்கு ஒரு Royal Salute !!!


மேலும் Total Sanitation Campaign (TSC) என்று 25 க்கும் மேற்பட்ட சிறந்த பல திட்டங்களை வடிவமைத்துள்ளனர். நான் கூறிய யோசனைகளுடன் மிகச் சிறந்த மற்ற திட்டங்களையும் தமிழக அரசும், அது சார்ந்த துறைகளும் ஏற்கனவே மிகவும் சிறப்பாக திட்டம் தீட்டி சில ஊர்களில் அதனை செயல் படுத்தவும் செய்துள்ளனர்.

அவற்றில் சில:

18. Sanitary napkins:
Awareness has been created among the rural women to alarge extent on use of sanitary napkins for improvement of menstrual hygienein women. SHGs in Tamil Nadu are being trained for production of low/affordable cost sanitary napkins for the purpose. These SHGs have startedselling their products to other SHGs, girl students in schools, local maternityhospitals etc.

19. Sanitary Napkin Incinerator:
A simple, easy-to-operate, low cost Incineratorhas been developed and installed in many WSCs and girls’ school toilets forsafe and hygienic disposal of sanitary napkins. This also helps solve theproblems of clogging of toilet traps and other components.


கடுவஞ்சேரி ஊராட்சியில் சானிட்டரி நாப்கின் தயாரிப்பை கிராமப் பெண்களே செய்கின்றனர்.
Panchayat : KaduvancheriBlock : SriperumbudurDistrict : Kancheepuram.



women’s SHGs. There is usually a woman caretaker appointed/ selected by theSHG, who takes care of the daily maintenance of the complex. The lady is paidaround Rs. 300/- to Rs. 500/- a month. Funds towards this and other materials likephenyl, bleaching powder etc. for day-to-day maintenance is raised from the userson a monthly basis ranging between Rs. 5/- to Rs. 10/- per household per month.Sanitary Napkin Incinerators are an innovative intervention in the State.Such Incinerators are now seen in many recently constructed sanitary complexes.In some villages, SHGs have started production of Sanitary Napkins to be madeavailable to users at a reasonably lower cost, such that it could be popularizedamong women.



அதிக விவரங்களுக்கு
http://ddws.nic.in/rev_tamil_04.pdf

அனைவருக்கும் அறிமுகமான ஜனாதிபதி பரிசு பெற்ற கீரப்பாளையம் என்ற ஊர் இந்த விசயத்தில் முதன்மை பெறுகிறது.

அது பற்றிய case studyhttp://ddws.nic.in/casestudy_keeraplayam.pdf


இத்தகைய நல்ல திட்டங்களும் அதற்கு செலவழிக்கப்பட்ட அரசின் நேரம்/பணம்/திட்ட அமைப்பாளர்களின் நேரம்/முயற்சி அனைத்தும் சரியாகப் பயன் படுத்தப்பட்டால் மிக நல்லது.

அரசின் திட்டப்படி எல்லா மாவட்டமும்/ஊராட்சிகள்/கிராமங்கள் இந்த சலுகைகளைப் பெற முடியும். என்னைப் போல் இன்னும் பலருக்கு இப்படி ஒரு திட்டங்கள் இருப்பது தெரியாது என்றே எண்ணுகிறேன்.

இதுபற்றி மேலும் சில தகவல்களைச் சேர்த்துக்கொண்டு உள்ளேன்.எனக்குத் தெரியும் விவரங்களைப் அவ்வப்போது பகிர்ந்து கொள்கிறேன்.

யாராவது அரசியல் தலைவர்கள்,மக்களுக்கு நன்கு அறிமுகமான பிரபலங்கள் இது பற்றிப் பேசினால் நல்லது.ஆனால் குஷ்பூ பிரச்சனைக்குப்பின் யாரும் இந்த பேசப்படாத விசயங்களை பொதுவில் பேசி குரல் கொடுப்பார்களா என்று தெரியவில்லை.

ஆணுறை,AIDS,குடும்பக் கட்டுப்பாடு போன்று அரசே செய்தால்தான் நல்லது.


ஸ்டேஷன் பெஞ்ச் ராம்கி....
"என்னால் இயன்றவரை எங்கெல்லாம் எப்படியெல்லாம் எடுத்துச் செல்ல முடியுமோ அவ்வாறெல்லாம் முயல்கிறேன் " என்று உறுதி அளித்துள்ளார். ரம்யா வலைப்பதிவில் ஆரம்பித்த இந்த நல்ல செயல் ராம்கியால் முடிந்தால் சந்தோசமே.

ஊர்கூடி தேர் இழுப்போம். தேர் அசையா விட்டாலும் முயற்சி செய்த திருப்தியாவது கிட்டும்.

வலைப்பதிவர்களுக்கு:
அரசின் நல்ல திட்டங்கள் மக்களிடம் போய்ச்சேர வேண்டுமானால் மக்களுக்கும் அதன் பிரதிநிதிகளுக்கும் அது பற்றி தெரிந்து இருக்க வேண்டும். யாராவது அரசியல் தலைவர்களின் தொடர்பிருந்தால் இந்தச் செய்தியை அவர்களின் காதுக்கு கொண்டு செல்லுங்கள்.

பி.கு:
நேற்று போட்ட பதிவு தலைப்பின் நீளம் காரணமாக பிளாக்கர் முழுங்கி விட்டது. அதன் மறு பதிப்பு.