Wednesday, August 28, 2013

எது மாற்றுக்கல்வி? ஏன் மாற்றுக் கல்வி? எப்படி மாற்றுக்கல்வி?

picture. Thanks to http://bigthink.com
மு தலில் கல்வி அல்லது கற்றல் என்றால் என்ன என்று பார்ப்போம்.

கற்றல் என்பது தெரிந்துகொள்வது அல்லது புரிந்துகொள்வது அவ்வளவுதான். அதாவது "மனிதர்கள் கூட்டமாக வாழ்வது ஊர் எனப்படும்" என்று ஒருவர் சொன்னால் "ஓ அப்படியா" என்று தெரிந்துகொள்வது. மற்றபடி அதை தெரிந்து என்ன புண்ணியம்? என்பது "கற்றலின் வழி செயற்படல் அல்லது தேடல் அல்லது பகுத்தறிதல் " என்ற அளவுகோலில் வரும்.

ஒவ்வொருவருக்கும் குடும்பச் சூழலில் தொடங்கி, பின்பற்றும் கொள்கைகள், நண்பர்கள், பிறக்கும் ஊர், நாடு, அவர் படிக்கும் நூல்கள் .....என்று பல தகவல்கள் தெரியவரலாம். இவை அனைத்தும் கற்றலின் கூறுகளே. ஏற்கனவே தெரிந்து (கற்றலின் மூலம்) வைத்துள்ள அனுபவங்களை தொகுத்து அடுத்த தலைமுறைக்கு கொடுப்பது கல்வி முறை.

இந்த மனிதக்கூட்டம் எதைக் கற்க வேண்டும்?

எந்தக் கட்டுக்குள்ளும் அடங்காதது காலம்.இதுவரை எவ்வளவு ஆண்டுகள் கடந்துள்ளது , இனிமேல் எவ்வளவு ஆண்டுகள் மீதம் உள்ளது என்பதை யூகம் செய்யலாம. வேதப் புத்தகங்களில் சொல்லும் கதைகள் போல அறுதியிட்டுக்கூறமுடியாது. மனித இனம் (பல விலங்கினங்கள்) அதன் தேவை பொருட்டும், தேடல் மூலமும் (தேடலே தேவை பொருட்டு வருவது) பலவற்றை அந்த அந்தக் காலத்தில் கண்டறியும். கற்கால கருவிகள் முதல் , இந்தக்கால வசதிகள் வரை எல்லாம் ஒரு தொடர்ச்சியான சங்கிலி முன்னேற்றம். இந்த முன்னேற்றத்தில் மாட்டுக்கு 'இலாடம்' கட்டுதலும் ஒன்று. இன்றைய வாழக்கை முறையில், எத்தனை பேர்களுக்கு மாடுகளை படுக்க வைத்து இலாடம் கட்டத்தெரியும்? ஒரு காலத்தில் அது முக்கியம் இன்று ...?

உலகம் முழுக்க காலை உணவாக 'குழிப்பனியாரம்தான்' சாப்பிட வேண்டும் அதுதான் அக்மாரக் சுத்த சன்மார்க்க காலை உணவு என்று யாரும் ஒற்றை அளவுகோலை வைக்க முடியாது. எனவே இன்றைய தலைமுறை எதைக் கற்கவேண்டும் என்பது

இடம்,
தேவை,
காலம்,
சூழல், etc

எல்லாம் சார்ந்த ஒன்று. அனைவருக்கும் பொதுவான கல்வி என்பதுகூட உலகத்தில் உள்ள அனைவருக்கும் அல்ல, ஒரு சின்ன குழுவிற்கு அந்தக் குழுவின் பிரதிநிதிகள் சிலவற்றைப் பாடமாக வைப்பது.

எதைக் கற்கவேண்டும்?

எதைக் கற்கவேண்டும் என்பதை ஒரு குழந்தையை முடிவு செய்யவிட்டால் அது "அழுதால் பால்கிடைக்கிறது. எனவே அழுகையே போதும்" என்றுகூட இருந்துவிடலாம். ஆனால் அனுபவம் வாய்ந்த பெற்றோர்கள் என்ன செய்கிறார்கள்? மொழியைக் கற்பிக்கிறார்கள். எதற்கும் இருக்கட்டும் என்று கடவுள்,பேய்,பிசாசு என்றும் சொல்லிக்கொடுக்கிறார்கள். குழந்தையை குழந்தையாய் வாழவிடுங்கள் என்று சொல்பவர்கள் ஏன் கடவுள்,பேய்,பிசாசு வகையறாக்களை கற்பிக்கிறார்கள் என்றும் தெரியவில்லை.

ஒருவன் 12 ஆம் வகுப்பு படித்துவிட்டு 'சைக்கிள்கடை வைக்கப்போறேன்' என்று சொன்னால் எந்தப் பெற்றோரும் ஏற்றுக்கொள்வது இல்லை. இதே பெற்றோர்கள்தான், குழந்தையை குழந்தையாய் இருக்கவிடுங்கள் என்றும் கொடி பிடிப்பார்கள். இன்றுள்ள சூழலில் ஆரம்பப்பளி வரை குழந்தைக்கு எதைக் கற்பிக்கலாம் என்பது பெற்றோர்களிடம் உள்ளது. அதற்குப்பிறகு அவர்களின் சுயதேடல் தொடங்கிவிடுகிறது.

எனவே எதைக் கற்கவேண்டும் என்பது ஒருவயது வரை பெற்றோரும் அதற்குப்பிறகு வளரும் குழந்தையும் முடிவு செய்யவேண்டிய ஒன்று.

தமிழ்நாட்டில் உள்ள பாடத்திட்டம் சரியா?

பள்ளிகளில் உள்ள பாடத்திட்டம் என்பது முழுக்க முழுக்க வேலை, பொருளீட்டல் போன்ற உத்திரவாதங்களைக் கொடுக்கும் நோக்கிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது.  கலைகள்,சரித்திரம்,கனவு ....எல்லாம் வயிறு நிறைந்தபின்னால்தான் என்ற 'பசிநெறியின்' அடிப்படையில், சோற்றுக்கு வழிசெய்யும் ஏதோ ஒரு வேலையை நோக்கிய படிக்கட்டுகளே தமிழ்நாட்டில் உள்ள பாடத்திட்டம்.

இது சரியா ? தவறா? என்பது ஒற்றை வரியில் சொல்லக்கூடிய விடை அல்ல. அம்பானியின் முழந்தை 'காக்கயின் சிறகில் சித்திரம் வரைவது எப்படி?' என்ற ஒரு பாடத்தை எடுத்து படிக்கலாம். ஏன் என்றால், அவர்களுக்கு பசியாற்றுவது என்பது முதல் தேவையாய் இல்லாமல் இருக்கலாம். சைக்கிள் ஓட்டும் ஒரு குமாஸ்தாவின் குழந்தையின் தேவை , படித்து கார் வாங்குவதாக இருக்கலாம். இப்படி தேவையின் அடிப்படையில் மட்டுமே பாடத்திட்டங்கள் அமைக்கபப்டுகிறது.

இவை மாறவேண்டும் என்றால், தேவைகளும் நோக்கமும் மாறினால்தவிர இது மாறாது. சைக்கிள் ரிக்சா ஒட்டி சிறப்பான வாழ்வு வாழமுடியும் என்ற நிலைவரும்போது சைக்கிள் ரிக்சாவிற்கான கற்றலின் தேவை வந்துவிடும்.

பாடத்திட்டம் சரி. சொல்லிக்கொடுக்கும் முறை சரியா?

ஒரே பாடத்திட்டத்தை பொதுவான (பெரும்பான்மை) வசதி,தேவை,நேரம் அனைத்தையும் கருத்தில் கொண்டு மாநில அரசு ஒரு முறையை பரிந்துரை செய்கிறது. அது அனைவருக்கும் சரியாக இருக்காது. என்ன செய்யலாம்? பணம் படைத்தவன் அல்லது மாற்றுக்கான வசதி/நேரம் உள்ளவன் அவனுக்கு மாற்று என்றுபடும் ஒன்றை தேடிக்கொள்ளலாம்..மற்றவர்கள்?

நாமக்கல் பாணி பள்ளிக்கூடங்கள்மீது வெறியும் , கோபமும், இயலாமையும் வருகிறது. ஆனால் எடுக்கப்படும் மார்க் மட்டுமே மேல்ப்படிப்பிற்கு உதவும் அதுவே ஒரு குறைந்தபட்ச வாழ்தலுக்கான உத்திரவாதத்தைக்கொடுக்கும் எனும்போது, கோழி வளர்த்து முட்டைகளை வாரி வழங்கிய நாமக்கல் தொழிலதிபர்கள், மாணவர்களிடம் இருந்து மார்க் என்ற முட்டையை எடுக்கும் சரியான (ரிசல்ட்டுக்கு உத்திரவாதம் தரும்) வழியை கண்டுபிடித்து செயல்படுத்தி வருகிறார்கள்.

'மார்க் மட்டுமே' எனும் தேவை இருக்கும் வரை அதை மட்டுமே அல்லது அதை நோக்கியே உற்பத்தி நிகழும். இதை மாற்ற அதன் தேவை மாறினால்தான் முடியும். வாழ்வாதர வாய்ப்புகளை மொட்டையான மார்க் மட்டும் அல்லாமல் அடுத்த கூறுகளையும் சேர்த்து ஏற்படுத்தும்போதுதான் மாற்றுக்கல்வி அல்லது மாற்று கற்பிக்கும்முறை சாத்தியமாகும்.

உதாரணமாக வரலாறு படித்த ஒருவனுக்கு மாதம் ரூபாய் 60 ஆயிரம் சம்பளத்தில் கங்கைகொண்டசோழபுரம் அருங்காட்சியகத்தில் வேலை கிடைக்கும் என்றால் வரலாறு படிக்கும் தேவை கற்றலுக்கு வந்துவிடும்.

பிறந்தவுடன் குழந்தைக்கு சாதியையும், மதத்தையும் அந்தக் குழந்தையைக் கேட்காமலேயே ஞானஸ்தான்ம செய்துவிட்டு, நியுமரலாஜி நேமாலஜி எல்லாம் சேர்த்து கலவையாக ஒரு பெயரையும் கொடுத்துவிட்டு , அதே பெற்றோர்கள் .....குழந்தையின்மீது எதையும் திணிக்கக்கூடாது என்று கொடிபிடிப்பது ஆச்சர்யம். திணிப்பை எதிர்ப்பவர்கள் சாதி, மதங்களை திணிக்காமல் சுத்த சுயம்பு சன்மார்க்க திணிப்பற்றவ்ர்களாக இருக்க எல்லாம் வல்ல பூனைச் சாமி அருள் வழங்கட்டும்.

Tuesday, August 27, 2013

உடலுறவின் தேவை என்ன?

னித இனம் மற்றும் இதர பல உயிரினங்களின் ஒரே நோக்கம் அதாவது "உயிர்த்து இருத்தலின் ஒரே நோக்கம் சந்ததி உருவாக்கம் என்பதே" என்று இன்றும் நம்புகிறேன். மற்ற எல்லா வாழ்வியல் அற‌ங்களும், தேவைகளும் சந்ததி உருவாக்கம் என்ற நாரின் மேல் கட்டப்பட்ட பூக்களே. இப்படியான மறு உருவாக்கம் என்பது, ஒவ்வொரு உயிரினத்திலும் ஒரு மாதிரி உள்ளது. தாவரங்களில் மகரந்தச் சேர்க்கை என்பது காற்று, பூச்சிகள் என்று அடுத்தகூறுகளை நம்பிய ஒரு வடிவம். இரண்டு மரங்கள் நேரடியாக மரவுறவு (உடலுறவு) கொண்டுதான் காய்களை,கனிகளை,விதைகளை உருவாக்க வேண்டும் என்ற தேவை இல்லை.

தேனீக்கள் போன்ற மூன்றாம் ஆட்கள் மூலமாக இனப்பெருக்கத்திற்கான கூறுகளை அவுட்சோர்ஸ் செய்துவிட்டு மரங்கள் மரம்போல் நிற்கிறது. ஆண் பெண் என்று தனி இனம் இல்லாமல் ஒரு உயிரியே ஆணாக பெண்ணாக இரண்டு கூறுகளும் உடையனவாகவும் உள்ளது ( hermaphrodites ).   மனித இனத்தில் இருக்கும் பெரும்பாலனா ஒழுக்க,சாதி,சமய கூறுகள் எல்லாம் சந்ததி ,இனம்பெருக்கம், உடலுறவு போன்ற கூறுகளை நேரடியாக அல்லது மறைமுகமாகக் கொண்டவை. சந்ததிப் பெருக்கத்திற்கு நேரடி உடலுறவு தேவை இல்லை எனும்போது இவைகள் என்னவாகும்?

பல பெண்களை டேட் (Date) செய்தும் எந்த ஒரு பெண்ணின்மீதும் ஈர்ப்பு வராமல் கடைசியில் ஒரு ஆணைத் திருமணம் செய்துகொண்ட சக ஊழியரை அறிவேன். இவர்களின் திருமணத்தில் உடலுறவு இருந்தாலும், அதன் தேவை சந்ததிப் பெருக்கத்திற்கானது  அல்ல. சந்ததிப் பெருக்கத்திற்கு ஏதோ ஒரு பெண்ணின் கருமுட்டையை வாங்கி, வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம அல்லது தத்து எடுத்துக் கொள்ளலாம் என்று இருக்கிறார்கள்.

அதிகரித்து வரும் ஒருபால் திருமணங்களும், அறிவியல் வளர்ச்சியில் நேரடித் தொடர்பு இல்லாமல் கரு உண்டாக்கும் முறைகளும் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்தில், ஆண் பெண்ணின் உடலுறவு என்பது எந்த நோக்கத்திற்கானது? வலிந்து திணிக்கப்படும் பெண்ணுடல்/ஆணுடல் கவர்ச்சி விளம்பரங்களால் மூளையில் பதிய வைக்கப்பட்டுள்ள காரணிகள்தான் சட்டன்று உணர்வுகொள்ள வைக்கிறாதா? ஒரு வேளை இவை குறைந்து, சந்ததி தேவைக்கும் உடலுறவு தேவையே இல்லை, செய்து வாங்கிக் கொள்ளலாம் என்று நிலை வந்துவிட்டால் உடலுறவின் தேவை முற்றிலும் இல்லாமல் போய்விடும் வாய்ப்பு உள்ளது.

நேரடி உடலுறவு கொண்டு பிற்காலத்தில் அது நின்று போய் மரங்கள்/தாவரங்கள் போல மகரந்தம் கடத்தலில் சந்ததி வளர்க்கும் உயிரினங்கள் ஏதும் உண்டா?

தொடுதல் , அணைப்பு, முத்தம் எல்லாம் சந்ததி உருவாக்க உதவாதவை , ஆனாலும் மனித இனம் இதனால் கிளர்ச்சி அடைகிறது என்பது உண்மையே. ஒருவேளை மனித இனம் ஒன்றின்மீது ஒன்று சார்ந்து இருக்கும் தேவையின் வெளிப்பாட்டிற்காக மட்டும் உடலுறவு என்றாகும் நிலை வருமோ?

Monday, August 05, 2013

திண்ணையும் காம்பவுண்டு சுவரும்



இதை பலமுறை பல இடங்களில் சொல்லியாகிவிட்டது. இன்று பார்த்த ஒரு கூகிள் ப்ளஸ் மறுபடியும் சொல்லத்தூண்டுகிறது. பெரிய பெரிய திண்ணைகள், தாழ்வாரங்கள் என்று ஒருகாலத்தில் வீடுகள் இருந்தது. எனக்கு நினைவு தெரிந்து கட்டப்பட்ட வீடுகளில்கூட திண்ணைகள் வைத்தே கட்டப்பட்டது. எங்கள் வீட்டில் திண்ணை இல்லாதது எனக்கு பெருங்குறையாகவே இருந்தது. ஆரம்பபள்ளிக் காலங்களில் பக்கத்துவீட்டில் திண்ணைகள் இருக்க எங்கள் வீட்டில் திண்ணை இல்லாமல் இருந்தது. அந்தவயதில் , கல் ,செம்மண் கொண்டு நானே ஒரு திண்ணையைக் கட்டி முடித்தேன். அதற்கு பிறகு  அங்கே யாரவது தங்கிச் செல்லும்போது மிக்க மகிழ்ச்சியாக இருக்கும். மோர் விற்கும் பாட்டி, இரண்டாவது ஆட்டம் படம் பார்த்துவிட்டு ஊருக்கு போகமுடியாமல் , படுத்து எந்திரித்து போகும் தெரிந்த உறவுகள், யாரென்று தெரியாமல்கூட யார் யாரோ வந்து உட்கார்ந்துவிட்டு, தண்ணி வாங்கி குடித்துவிட்டுப்போன கதைகள் உண்டு.

திண்ணை தவிர்த்து ஊரில் உள்ள ஒரு மடத்திலும், பலர் தங்கிச்செல்வார்கள், படுத்து இருப்பார்கள். திண்ணை என்பது யாரும் எப்போதும் வரலாம் என்று எப்போதும் எதிர்பார்த்து இருக்கும் கதவுகள், கட்டுப்பாடுகள் அற்ற இடம். ஆனால் காலம் செல்லச் செல்ல திண்ணைகள் கக்கூஸ்களாக உருமாறியது. இடப்பற்றாக்குறையில் , முதலில் கைவைக்கப்பட்டது கிராமங்களின் திண்ணை. பலர் அதையும் சேர்த்து ரூம் கட்டிவிட்டார்கள். பலர் சின்ன கக்கூஸ்களை கட்டிக்கொண்டார்கள். ரோடு உயர்ந்ததில் எங்கள் திண்ணை புதையுண்டுவிட்டது.

புதியவீடுகள் , திண்ணைகள் இல்லாதது மட்டுமில்லாமல், காம்பவுண்டு சுவருடன் கட்டப்பட்டன. இன்றைய பொழுதில் யார் வீட்டிற்கும் சொல்லாமல் போனால் அது கொடுந்துயராமாகவே பார்க்கப்படுகிறது. எப்போ வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் தங்கிச்செல்ல இன்னும் சில இரயில் நிலையங்களும் பஸ்டாண்டுகளும் மட்டுமே உள்ளது. உறவு, விருந்தினர், தெரிந்தவர் என்பது எல்லாம் பல கட்டுப்பாடுகளுடன், அவர்களுக்கான எல்லைக்கோட்டினுள் மட்டுமே இயங்கமுடிகிறது.

தெரிந்தவர்கள் வந்து தங்கிச்செல்ல இதயமும் இல்லை இடமும் இல்லை என்பது மட்டுமல்லாமல், இன்றைய வாழ்க்கைச்சூழல் இடம் கொடுப்பது இல்லை. கணவன் , மனைவி , வேலை, குழந்தைகள் பள்ளிக்கூடம் என்று சீராக ஒடும் பற்சக்கரத்தின் இடையில், சொல்லாமல் கொள்ளாமல் நுழைந்துவிடும் யாரும் அந்தக்குடும்பத்தின் ஓட்டத்தை தடைப்படுத்தவே செய்கிறார்கள்.

வீடுகளை விடுங்கள். கோவில்கள் எப்படி மாறிவிட்டது. மதிய நேரங்களில் மீனாட்சி கோவிலின் குளப்படிகட்டுகளில் உட்கார்ந்தது ஒருகாலம். பிற்காலத்தில் படிகளில் கேட் போடப்பட்டது. மீனாட்சி அம்மன் கோவிலில் காலையில் ஒரு நேரத்திற்குப்பிறகு நடை சாத்திவிடுவார்கள். கடவுளேயானாலும் அவரும் குறிப்பிட்ட மணிநேரங்கள்தான் தரிசனம் கொடுப்பார். அப்படியான நேரங்களில், குளத்தைச் சுற்றியுள்ள மண்டபத்தில் உட்காரலாம்.நடை திறந்தபின் கோவிலுக்குப் போகலாம். ஆனால் இப்போது, கோவிலைவிட்டு மொத்தமாக விரட்டி அடித்துவிடுகிறார்கள். அதற்கென்றே ஒரு படையும் உள்ளது.

இதைச் சொன்னால் சிலர் "அது கடவுள் செய்வது அல்ல. நிர்வாகம் செய்வது" என்று கடவுளுக்கே வாய்தா வாங்குவார்கள். சரியான நிர்வாகத்தினரைக்கூட தேர்வுசெய்யமுடியாத கடவுள் உனக்கு என்ன வழியைக் காட்டப்போகிறார்?

திண்ணை மட்டுமல்ல ஆலய மண்டபங்கள் மடங்கள் எல்லாம் அழிந்துவிட்டது. யாரும் எந்த எதிர்பாராத‌ விருந்தினரையும் ஏற்றுக்கொள்ளமுடியாத வாழ்க்கைமுறை.