Tuesday, October 21, 2014

வாரஇறுதியின் டைரிக் குறிப்பு

வாரஇறுதியின் டைரிக் குறிப்பு
-------------------------------------------------

உள்ளூர் வானொலியில் Congresswoman "Renee Ellmers" கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒலிபரப்பாகியது.  நீங்கள் உங்கள் கணவரை எங்கே சந்தித்தீர்கள்?  வேலை பார்த்த இடத்தில் உங்கள் கணவரும்  நீங்களும் மேக் அவுட் செய்தீர்களா? என்பது வரை கேள்விகள்.   (அவர்கள் இருவரும் ஒரே மருத்துவமனையில் வேலை பார்த்தவர்கள். அங்குதான் அவர்கள் சந்திப்பு நடந்தது)
)

எல்லாவற்றுக்கும் மேலாக "கருத்தடையை விமர்சிக்கும் கட்சியில் இருந்துகொண்டு நீங்கள் என்ன கருத்தடை முறையை உபயோகிக்கிறீர்கள?"  என்பது வரையான கேள்விகள்.

American Idol - season 2 ல் இரண்டாவது இடம் பெற்ற Clay Aiken இப்போது இவரை எதிர்த்து போட்டியிடுகிறார்.
http://en.wikipedia.org/wiki/Clay_Aiken

***

அதே வானொலி நிலையத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளர் பகிர்ந்து கொண்ட மற்ற ஒரு செய்தி புதியதாக இருந்தது. நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்ட விருந்தினர்கள் தாமதமாக வந்தால் அவர்கள் "Hot Nose" கொடுக்க வேண்டும் . இல்லை என்றால் அவர்களால் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாது. அப்படி  Hot Nose"  கொடுக்க முடியாது என்று வந்த விருந்தினர்கள் திருப்பிப்போனதும் உண்டாம்.

" Hot Nose" என்பது மூக்கு சூடாகும்வரை , இருவர் மூக்கோடு மூக்கு உரசிக்கொள்வது.

**

பிழைத்திருப்பது அல்லது பிழைத்தலுக்காக சில சமரசங்களைச் செய்வது என்பது எப்போதும் வலி நிறைந்ததாகவே இருந்தாலும் அது தவிர்க்க முடியாததாய் சில நேரங்களில் அமைந்துவிடுகிறது.

சென்ற வார இறுதியில் இந்த ஊருக்கு புதிதாய் வந்து, எங்களுக்கு அறிமுகமான ஒரு குடும்பத்தைச் சந்திக்கச் சென்றோம்.  இதுபோன்ற தனிப்பட்ட புதிய சந்திப்புகளில் (இரு குடும்பங்கள் மட்டும்)  நான் *பல்லு‍+பக்கோடா * என்றளவில் எதையாவது கொறித்துக்கொண்டு இருப்பேன். இது உரையாடல்களைக் குறைத்துக்கொள்ள.

யார் என்ன என்னமாதிரியான குண்டுகளைப் போட்டாலும், அதைப்பிடித்து பத்திரமாகப் பக்கத்தில் வைத்துவிட்டு, "சாம்பார் ரொம்ப‌ நல்லாருக்கு , பொரியல் நல்லாருக்கு" என்று எளிதான பேச்சுக்களுக்கு மடை மாற்றிவிடுவேன். பெரிய குழுச்சந்திப்பு என்றால் ஒருவர் சரிப்பட்டு வரவில்லை அல்லது ஒருவரின் அலைவரிசை ஒத்துவரவில்லை என்றால் ஏற்கனவே அறிமுகமான வேறு யாரவாது ஒருவர் இருப்பார்கள். அவர்களுடன் பேசிப் பொழுதை ஓட்டிவிடலாம். 

இரு குடும்பங்கள் மட்டும் சந்திக்கும் முதல் சந்திப்புகளில் முடிந்தவரைக்கும் அமைதியாய் இருந்துவிட்டு வந்துவிடவே எல்லா முயற்சிகளையும் செய்வேன்.

நாங்கள் பார்த்த குடும்பம் உள்ளூரில் நடந்த ஒரு தீபாவளி விழாவிற்கு சென்றுவந்த அனுபவத்தைச் சொல்லிக்கொண்டு இருந்தார்க‌ள்.  பேச்சுவாக்கில் அந்தவிழாவில் அதிகம் கிந்திக்காரர்ளே உள்ளார்கள் என்றும், தமிழர்களுக்கு (அவருக்கு) கிந்தி தெரியாமல் போனதற்கு கருணாநிதிதான் ஒரே காரணம் என்ற ஒரு கேட்டுச் சலித்த அணுகுண்டைப் போட்டார்.

இது போன்ற தருணங்களில் என் மனைவி என்னை ஓரக்கண்ணால் பார்ப்பது வழக்கம். நான் சட்டென்று எழுந்துபோய் ஒரு அப்பளத்தை எடுத்து , கவனமாக கடிக்க ஆரம்பித்துவிட்டேன்.

அடுத்து உள்ளூரில் கட்டப்படும் ஒரு சிவன் கோவில் பற்றி அவர்கள் பேசினார்கள்.  தட்டில் சோறு காலியாகிவிட்டதால் எழுந்துபோய் சாம்பார் எடுக்கும் சாக்கில் சாம்பாரைக் கிண்டிக்கொண்டே இருந்து அந்த உரையாடலில் இருந்தும் கவனமாக தப்பித்தேன்.

எந்தப் பிரச்சனையும் இல்லாமல் சந்திப்பு இனிமையாக முடிந்தது.

#அப்படியே இதை மெயின்டன் செய்ய எண்ணம். 

***

அடுத்த நாள் நடந்த சந்திப்பு வேறு ஒரு குடும்பத்துடன். இவர்களுக்கும் எங்களுக்கும் பல வருடப் பழக்கம். இந்த நண்பரின் அலைவரிசை எனக்குத் தெரியும். சிலவற்றில் எனது நிலைப்பாடுகளும் அவருக்குத் தெரியும். எனவே இவரிடம் சில விசயங்களில் கருத்து சொல்வது வழக்கம்.

தேர்தலின் போது மோடியை ஆதரித்துப் பேசிவர் இவர். இவரிடம் மோடி பற்றி பேசவேகூடாது என்று இருந்தேன். ஆனால் அவராகவே, மோடிதலைமையில் இருக்கும் அரசும் வெளிநாட்டு வங்கிகளில் பணத்தை வைத்து இருக்கும் நபர்களின் பட்டியலை வெளியிட முடியாது என்று சொல்லிவிட்டதைச் சொல்லி  "ஏன் மோடி இப்படிச் செய்தார்?" என்று ஆரம்பித்தார்.

http://www.financialexpress.com/news/black-money-ram-jethmalani-accuses-narendra-modi-govt-of-protecting-culprits/1299539

"மோடி ஒரு சராசரி அரசியல்வாதி + மதவாதி. அவரிடம் இருந்து நீங்கள் வேறு எதை எதிர்பார்க்க முடியும் என்று நான் வாய்திறந்தேன்.  அவரோ "இல்லை இல்லை மோடி கெட்டிக்காரர்" என்று மோடி புராண‌ம் பாடி , "கிரிமினல்களுக்காக வாதாடும் ராம்ஜெத்மலானியெல்லாம் எப்படி மோடியைக் கேள்வி கேக்கலாம்?" என்றார்.

"ராம்ஜெத்மலானி  ஒரு வக்கீல் . கொலைகாரன் அடிபட்டால்கூட சிகிச்சை செய்யவேண்டியது எப்படி மருத்துவரின் தொழில் தர்மமோ அப்படித்தான் ஒரு வக்கீலின் தொழில்தர்மம். அதனால் அவர் அப்படி இருக்கிறார்.  கொள்ளையர்களைப் காப்பது அரசியல்வாதியின் தொழில்தர்மம். அதைத்தான் மோடியும் செய்கிறார்" என்றேன்.

அவருக்கு நான் மோடி பற்றிச் சொன்னதில் மனவருத்தம் போல. இல்லை இல்லை மோடி குஜராத்திற்கு மோட்சம் அளித்தார் என்ற‌ அடுத்த கட்டத்திற்குப் போனார். குஜராத்தில் இரண்டு வருடங்கள் குப்பை கொட்டி இருந்தமையால் எனக்கு அறிமுகமான (மோடிக்கு முன்காலம்) குஜராத்தைப் பற்றி அவருக்குச் சொன்னேன். கொஞ்சம் அமைதியானார்.

மோடி ஒரு குறிக்கோள் அற்ற அரசியல்வாதி. ஒபாமாவிற்கு Affordable health Care  ஒரு கனவுத்திட்டம் சரியோ தவறோ அவர் அதற்காக உழைத்தார். அப்படி ஒரு கனவுத்திட்டம் என்று மோடிக்கு உள்ள ஒன்றைச் சொல்லுங்கள் என்றேன். விடையில்லை அவரிடம். ஆனால் மோடி சிறந்தவர் என்று இன்னும் நம்புகிறார். 

#பிம்பங்களே வாழ்க்கை

*

அடுத்த கட்ட உரையாடலில், அம்மாவின் தண்டனை என்று பேச்சு சென்றது. "அம்மாவைவிட ஊழல் செய்த கருணாநிதியெல்லம் இன்னும் வெளியில்தான் இருக்கிறார்" என்ற வழக்கமான "நீயும் தானே செய்த" என்ற ர.ர   Vs உ.பி  பாணி கருத்தைச் சொன்னார். நாங்கள் சென்ற‌ வாகனத்தை அவர் ஓட்டிக்கொண்டு இருந்ததால் எதற்கு வம்பு என்று அமைதியாய் அந்த அலையைக் கடந்துவிட்டேன்.

***

அம்மாவின் வழக்கு சிறை மற்ற கட்சிகள்
--------------------------------------------------------
இதுவே ஏதோ ஒரு காரணத்தில் அய்யா கலைஞர் சிறை சென்று இருந்தால், அடுத்த கட்சித் தலைவர்களில் சிலர் நிச்சயம்போய் சிறையில் பார்த்து இருப்பார்கள். வைகோவிற்கும் அப்படியே  அவர் சிறையில் இருந்த போது மருத்துவர் அய்யா இராமதாசு உட்பட பலர் சென்று பார்த்தார்கள்  என்று நினைவு. அம்மா அவர்களுக்கு அப்படி நடக்காததற்கு காரணம் , இது ஊழல் வழக்கு என்பதைத்தாண்டி அவர் மற்ற கட்சிக்காரகளை நடத்தியவிதமும் காரணமாக இருக்கலாம்.

யாரும் பார்க்க வரவேண்டாம் என்று சொன்னது காரணம் என்றுகூடச் சொல்லலாம். ஆனால் எனக்கு அதில் நம்பிக்கையில்லை. அம்மா அவரின் அரசியல் நட்புகள் என்று யாரையும் அடையாளம் காண முடியவில்லை என்னால்.

அய்யா கலைஞர் அவர்கள் எதிர்கருத்து கொண்டவர்களை எதிரியாக வரித்துக்கொண்டதில்லை. அதுதான் அவரின் பலமும்கூட.

*

வருங்கால பிரதமர் சூப்பர் அவர்கள் அம்மாவிற்கு கடிதம் எழுதாவிட்டால்தான் பிரச்சனை. "பாரதீய சனதாவின் வருங்கால விடிவெள்ளி" என்று  அடுத்தவர்கள் பேசியபோது ஏதும் சொல்லாமல் அதை அப்படியே மெயின்டன் செய்தார். அம்மா வெளியில் வந்தவுடனும் அமைதி காத்தால் லிங்கா மங்கா ஆகிவிடும் என்று தெரிந்து அறிக்கை கொடுத்துள்ளார்.

முதல் போட்டவர்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் தாண்டி சூப்பருக்கு என்று சில கணக்குகள் உண்டு. சாதகமாய்ப் போகும்வரை கருத்து சொல்லமாட்டார்.இன்னும் கொஞ்சம் போகட்டும் என்று இருப்பார்.  பாதகம் என்ற தெரியவரும் அடுத்த நொடி தைரிய லட்சுமணன் அவதாரம் எடுத்துவிடுவார்.

*

சைக்கிள் , நீச்சல் மற்றும் பல விளையாட்டுகளில் உடலில் உள்ளாடை ஏதும் இல்லாமல் உடலை ஒட்டிய ஆடை அணிவது என்பது அந்த அந்த விளையாட்டின் தன்மைகளுக்காக மட்டுமே. அது ஒரு Technical தேவை. 

அந்த விதிகளின்படி இருந்தாலும் கொலம்பிய நாட்டின் பெண்கள் சைக்கிள் அணி செய்த ஆடை தேர்வு இப்போது சர்ச்சையாகி உள்ளது.

http://guardianlv.com/2014/10/columbia-womens-cycling-team-uniforms-a-controversy/

.

Friday, August 08, 2014

If you want to subjugate some one introduce religion

முனைவர் வேலு அண்ணாமலை


Monday, January 13, 2014

அனைத்து தமிழர்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள்!

அனைவருக்கும் தமிழர் நிருநாள், உழவர் திருநாள், தமிழர் புத்தாண்டு என்ற சிறப்புகளைக் கொண்ட பொங்கல் வாழ்த்துகள். 

நீங்கள் எந்தக் கடவுளையும் இந்த விழாவில் சேர்த்துக்கொள்ளுங்கள், ஆனால் அடுத்தவர்கள் அவர்களின் மத/கடவுளைச் சேர்க்கிறார்கள் என்ற ஒரே கரணத்திற்காக இந்த நாளை ஒதுக்கிவிடவேண்டாம்.

சர்க்கரைப் பொங்கல் எந்தக் கடவுளுக்கும் பிடித்தமான ஒன்றே.

அனைத்து தமிழர்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள்!


படங்கள்:  புருனோ  மற்றும் ஜோதிஜி பதிவுகளில் இருந்து.


கொறிக்க‌
பொங்கல்தான் புத்தாண்டா?
http://penathal.blogspot.com/2008/01/blog-post_24.html


புத்தாண்டு வாழ்த்துக்கள் - கலைஞரின் ராஜதந்திரம்!
http://penathal.blogspot.com/2008/04/blog-post_13.html

பொங்கல்தான் புத்தாண்டா?
http://penathal.blogspot.com/2008/01/blog-post_24.html

புத்தாண்டு வாழ்த்துக்கள் - கலைஞரின் ராஜதந்திரம்!
http://penathal.blogspot.com/2008/04/blog-post_13.html

பொங்கல் வாழ்த்து
http://kalvetu.balloonmama.net/2006/01/blog-post.html

அன்று நீங்களும் இருந்தீர்கள்!

"இதுவரை நான் சொந்தவீட்டில் இருந்ததே இல்லை" என்றான் எனது மகன்.  "நம்முடன் இருந்த அனைவரும் சொந்தவீடு வாங்கி போய்விட்டார்கள், நாம் மட்டும் என்னும் ஏன்?" என்ற கேள்விகள் குழந்தைகளிடம் இருந்து பல வருடங்களுக்கு முன்னரே வரத்தொடங்கிவிட்டது.  குழந்தைகள் உலக அளவு ஆசைப்பட்டாலும் , பொருளாதாரம் சார்ந்தே இத்தகைய முடிவுகள் எடுக்க முடியும். மேலும் தேவைகளுக்கும் ஆசைகளுக்குமான வேறுபாட்டை சமயம் கிடைக்கும்போது எல்லாம் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுத்தே வந்துள்ளேன். இன்னும் 5 வருடங்கள் கழித்து மூத்த மகன் கல்லூரி போய்விடுவான். "அப்பா கடைசி 5 வருடமாவது சொந்த வீட்டில் இருக்க வேண்டும்" என்று சொன்னான். எப்படியாவது இசைவு தெரிவிக்க வைத்துவிட வேண்டும் என்று பல அம்புகளை குழந்தைகள் இருவரும் எய்தவண்ணம் இருந்தார்கள்.

வெளிநாட்டு மண்ணில் வேலை பார்த்தாலும் , வரவிற்கு இணையான‌ செலவுடனே வாழ்க்கை ஓடுகிறது. குழந்தைகளின் விளையாட்டு பயிற்சிகளுக்காக மட்டும் வீட்டு வாடகை அளவில் பணம் செலவாகிவிடுகிறது. எல்லாம் நமது திட்டமிடல் மற்றும் விருப்பம் சார்ந்தது என்றாலும், "நித்தியகண்டம் நிறைய ஆயுள்" என்ற அளவில் திரிசங்கு சொர்க்கமாகவே வாழ்க்கை கடந்த 12 வருடகாலமாக இருந்துள்ளது. இன்னும் அப்படியே. குடியுரிமைப் பிரச்சனைகள், வேலை சார்ந்த நிலையில்லாத்தன்மை , என்று அமெரிக்க மண்ணில் இருக்கும் பலருக்கு பலவிதமான சிக்கல்கள் இருக்கும்.  வாடகை குடியிருப்பின் மாதவாடகையும் ஒருபுறம் ஏறிக்கொண்டேயுள்ளது.

பிரச்சனைகள் எல்லாம் தலைக்குமேல் போய்க்கொண்டே உள்ளது. "சரி இதற்குமேல் சாண் போனால் என்ன? முழம்போனால் என்ன?" என்று,   குழந்தைகளுக்காக சவாலை ஏற்றுக்கொள்வது என்று நானும் எனது மனைவியும் முடிவு செய்தோம். இருக்கும் சேமிப்பு கடனுக்கான ஆதார பணத்தைக் காட்டமட்டுமே உதவும் , 80 சதவீதம் வங்கியில் கடன்வாங்கி வீடு ஒன்றைக் கட்டலாம் என்று முடிவு எடுத்தோம். கடன் தொகை மற்றும் அதற்கான நடைமுறைகள் எல்லாம் மலைபோல் பயம்கொள்ளச் செய்கிறது.

வீட்டுக்கடன் அமெரிக்காவில் ஒருவரை முழுநேர பொருளாதார அடிமையாக மாற்றிவிடும். சொந்தவீடு  (அப்ப‌டி நினைத்துக்கொள்ளலாம்), ஏதேனும் ஒருமாதத்தில்  சரியான நேரத்தில் தவணைத்தொகை கட்ட தவறினால் , சுருக்கு இறுக்கப்படும். உடலை ஓய்வில்லாமல் வருத்தினால்தான் கடன் தொகையைத் தொய்வில்லாமல் கட்டிக்கொண்டு இருக்கலாம்.

ஆனால் இப்படியான கடன்களும், பொறுப்புகளுமே தினமும் காலையில் எழுந்திருக்க வைக்கிறது என்பதும் உண்மை.

***

அமெரிக்காவில் பொறுமையும் ,அதற்கான நேரமும், மற்ற வசதிகளை விட்டுக்கொடுத்தலும் இருந்தால் தவிர , பிடித்தமான வீட்டைக் கட்டிக்கொள்ள முடியாது. எங்காவது ஒரு அனாமத்தான கிராமத்தில், மாடு, கோழிகளுடன் வசிக்க நான் நினைத்தாலும், மனைவி குழந்தைகளின் விருப்பம் வேறுமாதிரி இருந்தது. குழந்தைகளுக்கு எது சிறந்த பள்ளி? அவர்களின் நண்பர்கள் அருகில் உள்ளார்களா? என்பது போன்றவை அவர்களின் கணக்குகள். சுற்றமும் அன்பும் சூழ இருக்கவேண்டும் என்றால், அதற்கான விலையையும் கொடுக்க வேண்டியுள்ளது. வீடுகளைக் கட்டி விற்கும் நிறுவனங்கள் கொடுக்கும் குறைந்தபட்ச வடிமைப்புகளில் இருந்து ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். காசு நாம் கொடுத்தாலும்,  நகர சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, நமக்குப்பிடித்த வீட்டின் வெளிப்புற வடிவமைப்பைக்கூட தேர்ந்தெடுக்க முடியாது.  பக்கத்தில் உள்ளவர் அதே வெளிப்புற வடிவமைப்பை ஏற்கனெவே தேர்ந்தெடுத்துவிட்டால், நாம் வேறு ஏதேனும் ஒன்றைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.

****

இவை எல்லாம் ஒருபுறம் இருந்தாலும் விட , என்னவென்றே தெரியாமல்  கைகொடுத்த உங்களின் அன்பு , வீடு எழுப்பப்படும் மண்ணில் கலந்துவிட்ட செய்தியை உங்களுக்கு சொல்லிக்கொள்கிறேன்.

ஆம் நேற்று நீங்களும் எங்களோடு இருந்தீர்கள்.

அமெரிக்காவில் ஒரு காலத்தில் வீடுகட்டுதல் என்பது ஒரு சமூக நிகழ்வாக இருந்துள்ளது.  http://en.wikipedia.org/wiki/Barn_raising விவசாயம் சார்ந்த பொருளாதார காலங்களில், ஒருவருக்கான பண்ணையைக் கட்டிக்கொடுத்தல் என்பது ஒரு சமூக நிகழ்வு. அனைவரும் அவர்களின் நேரத்தைக் கொடுதிருக்கிறார்கள். இன்றைய வாழ்க்கையில் அது எட்டாக் கனியாகிவிட்டது. ஒப்பந்த அடிப்படையில் பல நிறுவனங்கள் சேர்ந்து களத்தில் இறங்கும் இந்த கட்டுமான வேலையில், எல்லாவேலைகளும் முடிந்த பின்னரே வீட்டின் உரிமை , மாற்றிக்கொடுக்கப்படும் .அதுவும் நேரடியாக வங்கிக்கு அடமானப் பத்திரமாகப் போய்விடும்.

குறைந்தபட்சம் நம் ஆசைக்கு அந்த மண்ணை நோண்டி திருப்தி அடைந்துகொள்ளலாம்.  மண்ணிற்கு  கொடுக்கப்பட்ட மரியாதை என்பது , சாமி, பூசை என்று வெறும் சடங்குகளாக ஆகிவிட்டது. இந்த நிகழ்வை அர்த்தமான கொண்டாட்டமாக்க , மண்ணில் மரம் வைத்து ஆரம்பித்தேன் நேற்று.

புதியதொரு மரக்கன்றை வாங்கி, குடும்பத்தினர் அதற்கு நீர் ஊற்றி, புதிய வீட்டுவேலையைத் தொடங்கினோம். இந்த மரம், வீட்டு வேலைகள் முடிந்தவுடன் வீட்டின் பின்புறம் நடப்படும்.

நான் இல்லாவிட்டாலும்  , வெட்டி சாய்க்கப்படாதவரை,  இப்படி ஒரு நிகழ்வு நடந்தமைக்குச் சாட்சியாக இம்மரமும் இந்த பூமியில் இருக்கும்,  மனதிலும் , மண்ணிலும் கரைந்த உங்களின் அன்போடு.

பந்தக்கால் நடனும் ஒரு கை குடுங்க!
http://kalvetu.balloonmama.net/2014/01/blog-post_9.html

Thursday, January 09, 2014

பந்தக்கால் நடனும் ஒரு கை குடுங்க!

ப்பா அவசர அவசரமாக பள்ளிக்கு கிளம்பிக்கொண்டு இருப்பார். அல்லது "பனாமா" பிளேடு கொண்டு, பாதி இரசம் போன கண்ணாடியை, ஸ்டூலில் வைத்து, அதற்கு ஒரு சொம்பு (போநி) முட்டுக்கொடுத்து முகச்சவரம் செய்து கொண்டு இருப்பார். சரசரவென சத்தம் கேட்கும். சின்னாளபட்டு சேலையை கட்டிக்கொண்டு "அண்ணே முகூர்த்தக்கால் ஊன்றோம், ஒரு கை பிடிக்க வந்துருங்க" என்று பக்கத்துவீட்டு அக்கா அல்லது அத்தைமார்கள் வந்து சொல்லிச்செல்வார்கள். மாதம் ஒருமுறையாவது இது நடக்கும். என்ன அவசரம் என்றாலும், தட்டவே முடியாத ஒன்று. அப்பா வேகமாக வேலையை முடித்துவிட்டு , மற்றவர்களுடன் சேர்ந்து அந்த வீட்டு வாசலில் போய் நின்றுவிடுவார். எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து, பக்கத்துவீட்டில் கூப்பிட்டு பந்தக்கால் நட அப்பா போகாமல் இருந்தது இல்லை.

அது என்னவோ தெரியவில்லை , ஆண்கள் மட்டுமே பந்தக்கால் நட அழைக்கப்படுவார்கள். ஆனால், பெண்களுக்கு தன் வீட்டு ஆண் அழைக்கப்பட்டதே ஒட்டு மொத்த குடும்ப அழைப்பு என்று பெருமிதமாக , அருகில் இருப்பார்கள். ஆண்கள் எல்லாம் பந்தக்கால் நட,  பெண்கள் மஞ்சள், குங்குமம் , என்று தட்டில் வைத்து அவர்களின் சடங்குகளைச் செய்து கொண்டு இருப்பார்கள். பந்தக்கால் தயார் பண்ணுவதில் பலருக்கும் பங்கு உண்டு. முக்கியமாக பந்தல்காரர். பந்தல்காரர்கள் இதற்கு என்றே சிவப்பு மற்றும் வெள்ளை வர்ணம் பூச‌ப்பட்ட உயரமான மூங்கில் மரங்களை வைத்து இருப்பார்கள். அப்படி இல்லை என்றால் வீட்டில் இருந்தே ஒன்றைத் தயார்செய்வார்கள். மூலையில் நடப்பட இருக்கும் மூங்கில் மரத்தின் உச்சியில் மாவிலை,தென்னம் பாளை, கூரைப்பூ, மஞ்சள்..இப்படி அவரவர் நம்பிக்கை மற்றும் அந்த நேரத்தில் கிடைக்கும் விவசாய பொருள்/தவரம்/பயிர் சார்ந்த ஏதாவது இருக்கும்.

பெண்கள் குழந்தைகள் அந்த மரத்திற்கு சந்தனம், குங்குமம் வைத்து தயாராக ஓரமாக சாத்தி வைத்து இருப்பார்கள். இதற்கு என்றே நல்ல நேரம் குறிக்கப்பட்டு இருக்கும். நேரம் குறிப்பதற்கு என்று சில தாத்தாக்கள் உண்டு. அவர்கள் மரம் நட கைகொடுக்க வரமுடியாவிட்டாலும், ஆயிரத்தெட்டு நொள்ளைகள் சொல்லிக்கொண்டு திண்ணை அல்லது கயிற்றுக்கட்டிலில் உட்கார்ந்துகொண்டு அவர்களின் மகள், மருமகள், மகன், மருமகன், மனைவி என்று யாரின் தலையையாவது உருட்டிக்கொண்டு இருப்பார்கள். அவர்களுக்கு அப்படித்தான் அன்பைக் காட்டத்தெரியும் என்று இப்போது எனக்குப் புரிகிறது.

அப்பா ஒவ்வொருமுறை போகும் போதும், "நம்மளும் பெரிய மனுசன் ஆகி இப்படி பந்தக்கால் நட அழைக்கப்படவேண்டும்" என்று எண்ணிக்கொள்வேன். பல அக்கா,அத்தைகள் "சின்னப் பசங்களையும் பிடிக்க விடுங்க " என்று சிபாரிசு செய்து, என் போன்ற சிறுவர்களையும் பெரிய ஆண்களோடு, அல்லக்கைகளாக பந்தக்கால் நட கைகொடுக்க தள்ளிவிடுவார்கள். அப்போதெல்லாம் அது ஒரு சாதனைபோல இருக்கும் .பெருமிதமாக எண்ணிக்கொள்வேன். பல நேரங்களில் அம்மா ஏதாவது மளிகைச் சாமான் வாங்க அருகில் உள்ள "போஸ்" கடைக்கு அனுப்பிவிடுவார்கள். "போஸ்" அண்ணனுக்கும் இப்படியான அழைப்புகள் வரும். கடையில் ஒற்றை ஆளாக இருந்தாலும்,  (அவரின் திருமணத்திற்கு முன்) "கொஞ்ச நேரம் கடையப் பாத்துக்கங்க‌" என்று கடைக்கு வந்த வாடிக்கையாளரை நிற்க வைத்துவிட்டுப் போய்விடுவார் பந்தக்கால் நட கைகொடுக்க.

பந்தக்கால் நடும் நிகழ்வில் யாரை அழைப்பது என்ற பெரிய விதிகள் ஏதும் கிடையாது. அக்கம் பக்கம் உள்ளவர்களை அழைப்பதுதான் நோக்கம். பல நேரங்களில் குழாயடி , கிணத்தடிச் சண்டைகள் காரணமாக சிலரை வேண்டுமென்றே தவிர்ப்பார்கள். பந்தக்கால் நட ஆரம்பிக்கும்போது , ரோட்டில் யாராவது பெரிய மனிதர்கள் வந்துவிட்டால், முன்திட்டம் ஏதும் இல்லாமல்கூட "அண்ணே நீங்களும் வாங்க" என்று அழைப்பார்கள். அழைத்தால் மறுக்க முடியாத ஒன்றாகவே இருக்கும். திருமணப்பத்திரிக்கை கொடுத்து , சம்பிரதாயத்திற்கு அதை வாங்கி வைத்துக்கொண்டு , முன்விரோதம் காரணமாக திருமணத்திற்கு போகாமல், வெறும் மொய் பணத்தை மட்டும் கொடுத்துவிடுவார்கள். ஆனால், பந்தக்கால் நட அழைக்கும்போது மறுக்க முடியாது. ஒருவேளை அழைக்கப்பட்டவர் போகமுடியாவிட்டாலும், வீட்டில் இருந்து யாராவது ஒரு பெரியவர் போக வேண்டும்.

அர்த்தம் பொதிந்த‌ பல பழக்கவழக்கங்கள் இப்போது சம்பிரதாயச் சடங்குகள் ஆகிவிட்டாலும் , பந்தக்கால் நடும் நிகழ்வு அதற்கான அர்த்தத்தை இன்றும் ஓரளவேனும் தன்னகத்தே கொண்டுள்ளது. பக்திமார்க்க சடங்குகள் சேர்ந்து கொண்டாலும், "என் வீட்டில் நடக்கும் ஒரு முக்கிய நிகழ்வில், என் அக்கம் பக்கமும் ஒரு பங்காளி" என்று சொல்வதே அந்த நிகழ்வின் நோக்கம். இரத்த உறவுகள் எல்லாம் பல ஊர்களில் இருப்பார்கள். அவர்கள் எல்லாம் திருமண‌த்தின் அன்றோ அல்லது அதற்கு சில நாட்களுக்கு முன்னரே தான் வருவார்கள். பந்தக்கால் நடுவது போன்ற நிகழ்வின் ஆரம்பகாலத்தில் , கை கொடுப்பவர்கள் அக்கம் பக்கம் இருக்கும் நண்பர்களே. மேலும் அவசரகால உதவிக்கு எப்போதும் கூப்பிடும் தூரத்தில் இருக்கும் , அக்கம் பக்கம் நண்பர்கள்தான் கைகொடுப்பார்கள். அப்படியான நண்பர்களை நம்வீட்டு நிகழ்வில் கைகொடுக்க வைப்பது, அவர்களுக்குச் செய்யும் மரியாதை மட்டும் அல்ல, "முக்கிய உரிமைகளை உனக்கும் கொடுக்கிறேன்" என்ற அர்த்தம் கொண்டது. பெண்களின் சடங்குகளில் , தாய்மாமன் வந்து குச்சு கட்டுவத்ற்கு முன்னரே, அக்கம் பக்கம் மாமாக்கள்,அண்ணன்கள்,தாத்தாக்கள் அனைவரும் சேர்ந்து பந்தக்கால் நட்டு இருப்பார்கள். மாமன் அதே ஊரில் வெட்டியா சுத்திக்கிட்டு இருந்தால்தான் வருவார்.

பந்தக்கால் நடும் நிகழ்வை நான் என்னளவில் சாதி,மத சம்பந்தம் இல்லாத , உறவுகள் தொடர்பு இல்லாத , அக்கம் பக்கம் நண்பர்களின் நிகழ்வாகவே  பார்க்கிறேன்.அய்யப்பசாமி, உள்ளூர் மாரியம்மா என்று எல்லாச் சடங்குகளையும் செய்யும் ஒருவர், அவரின் வீட்டு பந்தக்கால் நடும் நிகழ்வில் , பக்கத்துவீட்டு கறிக்கடை பாயையும் அழைத்து இருந்தார். பாய் அண்ணன் அவரின் லுங்கி, தொப்பி சகிதம் பக்திபழமாக வந்து, அல்லாவின் பெயரை உரக்கச் சொல்லிக்கொண்டே பந்தக்கால் நட கைகொடுத்தார்.

மனிதம் வாழ்க!

***

இந்தவார இறுதியில் முக்கியான ஒன்றை ஆரம்பிக்க உள்ளேன். பந்தக்கால் நடும் நிகழ்வு அல்ல , இருந்தாலும் உங்களின் அன்பும் சேர்ந்து கலக்க வேண்டிய நிகழ்வு

அக்கம் பக்கம் நண்பர்கள் இருந்தாலும். கூப்பிடும் தொலைவில் உள்ள பிளாக்,பிளஸ் போன்ற சமூகவலைத்தளங்களில் உள்ள என் நண்பர்களையும் பங்குகொள்ள அழைக்கிறேன். 

செய்யவேண்டியது இதுதான் உங்களின் கையை இங்கே கொடுங்கள், அதுவே நான் செய்ய இருக்கும் செயலில் அன்பாய் கலந்து, நீங்களும் பங்குகொண்ட ஒரு நிகழ்வாக எனக்கு இருக்கும்.

Wednesday, January 01, 2014

என்னுடன் சகபயணியாக வந்து கொண்டு இருக்கும் அனைவருக்கும்...

பூமி எந்த ஒரு காலத்திலும் அது ஏற்கனவே இருந்த இடத்திற்கு திரும்பி வருவதே இல்லை. அதாவது 2013 ஜனவரியில் அது விண்வெளியில் இருந்த இடமும்,  இன்று 2014 ஜனவரியில் அது விண்வெளியில் இருக்கும் இடமும் முற்றிலும் வேறு வேறு.  சூரியனின் பயணத்தையும் கணக்கில் கொண்டால் , பூமியின் பயணம் ஒரு முடிவற்ற பயணம்.
 Image courtesy http://humansarefree.com

நிலா பூமியை மையமாக‌க்கொண்டும் , பூமி சூரியனை மையமாக‌க்கொண்டும், சூரியன் மில்கிவேயின் மையத்தைக் கொண்டும் சுற்றுகிறது....இப்படி போகிறது சுற்றுக்கணக்கு.


Earth is not revolving around the Sun (the way you think)!
http://humansarefree.com/2011/03/earth-is-not-revolving-around-sun.html

Earth's motion around the Sun, not as simple as I thought
http://www.youtube.com/watch?v=82p-DYgGFjI

Earth Rotation & Revolution around a moving Sun
http://www.youtube.com/watch?v=lkWyM-M8o0c

Earth Is Not Orbiting The Sun
http://www.youtube.com/watch?v=-NH5yK3ZN54

அதுபோல வடக்கில் காணப்படும் துருவ நட்சத்திரமும் மாறிக்கொண்டே உள்ளது.

//Thousands of years ago, when the pyramids were rising from the sands of ancient Egypt, the North Star was an inconspicuous star called Thuban in the constellation Draco the Dragon. Twelve thousand years from now, the blue-white star Vega in the constellation Lyra will be a much brighter North Star than our current Polaris.
Polaris could be a name for any North Star. Our current Polaris used to be called Phoenice
.//

Does the North Star ever move?
http://earthsky.org/space/north-star-movement

****

உயிரிகளின் பயணம் என்பது எக்காலத்திலும் பழைய நிலைக்கு திரும்ப முடியாத பயணம். பூமிப் பந்தில் இருந்து உதிர்ந்து விழுந்தால் மட்டுமே உயிரின் பயணம் நிற்கும்.

என்னுடன் சக பயணியாக வந்த நெல்சன் மண்டேலா, இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் போன்றவர்கள் இன்று இல்லை. பல இழப்புகள் இருந்தாலும் , ஆண்டின் இறுதிக் காலகட்டத்தில் நடந்த இவர்களின் இழப்பு அதிகம் மனச்சோர்வைத்தருகிறது.

*****

பூமி சூரியனை தொடர்வதால், சூரியனில் இருந்து கணக்கிடும்போது வருடக் கணக்கு சாத்தியமாகிறது. சற்று தூரவிலகிப் பார்க்கும்போது அதுவும் ஒரு ஒப்பீட்டளவு கணக்கு என்பது புலப்படும்.

வட்ட வடிவ ஓடுகளத்தில் ஓட்டத்தை ஆரம்பிக்க, உள்வட்டத்தில் ஓடும் வீரருக்கு ஒரு இடமும், வெளிவட்ட வீரருக்கு ஒரு இடமும் ஆரம்பமாக குறிக்கப்பட்டு இருக்கும். ஆனால் அனைவரின் நோக்கமும் ஒரு முடிவை நோக்கித்தான்.

Image courtesy http://www.portlandroadinc.com


அதுபோல எந்த நாளை ஆரம்பமாகக்கொண்டாலும் ஆரம்பித்த நாளில் இருந்து 365 நாட்கள் ஓடி முடிக்க வேண்டும். என்னுடன் சகபயணியாக வந்து கொண்டு இருக்கும் அனைவருக்கும், என் ப்ரியங்கள் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

.

கூகிள் தேடு பொறி மற்றும் யூட்யூஃப்ல் பாதுகாப்பான தேடலை முடுக்கிவிட‌



There is nothing called absolute security or 100% secured. Such a thing like that doesn’t exists. Secured or security is a relative term.  Eventually all secured stuff are vulnerable to something , you are trying your best to keep away from the intruder/risk.

Secured: How far you are away from the risk, in other words, making it harder for the intruder to break through.

குழந்தைகள் பயன்படுத்தும் வலை உலாவிகளில் முடிந்த அளவு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வது நல்லது. எது தவறு எது சரி என்று சொல்வது இந்தப்பதிவின் நோக்கம் அல்ல.ஆனால் எந்த வயதில் எதை அறிமுகப்படுத்தலாம் என்று பெற்றோர்கள் முடிவு எடுக்கலாம். அதற்கான சில வழிகள்.

கூகிள் தேடு பொறியில் பாதுகாப்பான தேடலை நீங்கள் முடுக்கிவிடலாம். அதே சமயம் நீங்கள் முடுக்கிவிட்ட பாதுகாப்பான தேடலை மற்றவர்கள் மாற்றிவிடாமல் இருக்க நீங்கள் அதை பூட்டியும் வைக்கலாம். உதாரணத்திற்கு உங்களின் கூகிள் மின்னஞ்சல் abc@gmail.com  என்று கொள்வோம். நீங்கள் பாதுகாப்பான தேடலை நீங்கள் முடுக்கிவிட்டபின்னர், உங்களின் மின்னஞ்சல் abc@gmail.com  கணக்கின் வழியாக அதைப் பூட்டியும் விடலாம். மற்றவர்கள் அதை மாற்றமுடியாது.

SafeSearch: Turn on or off
https://support.google.com/websearch/answer/510?hl=en

****

யூட்யூஃபில் பாதுகாப்பான தேடலை முடுக்கிவிட மற்றும் அதைப் பூட்டி வைக்க.

Safety Mode
https://support.google.com/youtube/answer/174084?hl=en

Safe Searching with Google & YouTube
http://www.safekids.com/2013/07/11/safe-searching-with-google/