Tuesday, October 21, 2014

வாரஇறுதியின் டைரிக் குறிப்பு

வாரஇறுதியின் டைரிக் குறிப்பு
-------------------------------------------------

உள்ளூர் வானொலியில் Congresswoman "Renee Ellmers" கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒலிபரப்பாகியது.  நீங்கள் உங்கள் கணவரை எங்கே சந்தித்தீர்கள்?  வேலை பார்த்த இடத்தில் உங்கள் கணவரும்  நீங்களும் மேக் அவுட் செய்தீர்களா? என்பது வரை கேள்விகள்.   (அவர்கள் இருவரும் ஒரே மருத்துவமனையில் வேலை பார்த்தவர்கள். அங்குதான் அவர்கள் சந்திப்பு நடந்தது)
)

எல்லாவற்றுக்கும் மேலாக "கருத்தடையை விமர்சிக்கும் கட்சியில் இருந்துகொண்டு நீங்கள் என்ன கருத்தடை முறையை உபயோகிக்கிறீர்கள?"  என்பது வரையான கேள்விகள்.

American Idol - season 2 ல் இரண்டாவது இடம் பெற்ற Clay Aiken இப்போது இவரை எதிர்த்து போட்டியிடுகிறார்.
http://en.wikipedia.org/wiki/Clay_Aiken

***

அதே வானொலி நிலையத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளர் பகிர்ந்து கொண்ட மற்ற ஒரு செய்தி புதியதாக இருந்தது. நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்ட விருந்தினர்கள் தாமதமாக வந்தால் அவர்கள் "Hot Nose" கொடுக்க வேண்டும் . இல்லை என்றால் அவர்களால் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாது. அப்படி  Hot Nose"  கொடுக்க முடியாது என்று வந்த விருந்தினர்கள் திருப்பிப்போனதும் உண்டாம்.

" Hot Nose" என்பது மூக்கு சூடாகும்வரை , இருவர் மூக்கோடு மூக்கு உரசிக்கொள்வது.

**

பிழைத்திருப்பது அல்லது பிழைத்தலுக்காக சில சமரசங்களைச் செய்வது என்பது எப்போதும் வலி நிறைந்ததாகவே இருந்தாலும் அது தவிர்க்க முடியாததாய் சில நேரங்களில் அமைந்துவிடுகிறது.

சென்ற வார இறுதியில் இந்த ஊருக்கு புதிதாய் வந்து, எங்களுக்கு அறிமுகமான ஒரு குடும்பத்தைச் சந்திக்கச் சென்றோம்.  இதுபோன்ற தனிப்பட்ட புதிய சந்திப்புகளில் (இரு குடும்பங்கள் மட்டும்)  நான் *பல்லு‍+பக்கோடா * என்றளவில் எதையாவது கொறித்துக்கொண்டு இருப்பேன். இது உரையாடல்களைக் குறைத்துக்கொள்ள.

யார் என்ன என்னமாதிரியான குண்டுகளைப் போட்டாலும், அதைப்பிடித்து பத்திரமாகப் பக்கத்தில் வைத்துவிட்டு, "சாம்பார் ரொம்ப‌ நல்லாருக்கு , பொரியல் நல்லாருக்கு" என்று எளிதான பேச்சுக்களுக்கு மடை மாற்றிவிடுவேன். பெரிய குழுச்சந்திப்பு என்றால் ஒருவர் சரிப்பட்டு வரவில்லை அல்லது ஒருவரின் அலைவரிசை ஒத்துவரவில்லை என்றால் ஏற்கனவே அறிமுகமான வேறு யாரவாது ஒருவர் இருப்பார்கள். அவர்களுடன் பேசிப் பொழுதை ஓட்டிவிடலாம். 

இரு குடும்பங்கள் மட்டும் சந்திக்கும் முதல் சந்திப்புகளில் முடிந்தவரைக்கும் அமைதியாய் இருந்துவிட்டு வந்துவிடவே எல்லா முயற்சிகளையும் செய்வேன்.

நாங்கள் பார்த்த குடும்பம் உள்ளூரில் நடந்த ஒரு தீபாவளி விழாவிற்கு சென்றுவந்த அனுபவத்தைச் சொல்லிக்கொண்டு இருந்தார்க‌ள்.  பேச்சுவாக்கில் அந்தவிழாவில் அதிகம் கிந்திக்காரர்ளே உள்ளார்கள் என்றும், தமிழர்களுக்கு (அவருக்கு) கிந்தி தெரியாமல் போனதற்கு கருணாநிதிதான் ஒரே காரணம் என்ற ஒரு கேட்டுச் சலித்த அணுகுண்டைப் போட்டார்.

இது போன்ற தருணங்களில் என் மனைவி என்னை ஓரக்கண்ணால் பார்ப்பது வழக்கம். நான் சட்டென்று எழுந்துபோய் ஒரு அப்பளத்தை எடுத்து , கவனமாக கடிக்க ஆரம்பித்துவிட்டேன்.

அடுத்து உள்ளூரில் கட்டப்படும் ஒரு சிவன் கோவில் பற்றி அவர்கள் பேசினார்கள்.  தட்டில் சோறு காலியாகிவிட்டதால் எழுந்துபோய் சாம்பார் எடுக்கும் சாக்கில் சாம்பாரைக் கிண்டிக்கொண்டே இருந்து அந்த உரையாடலில் இருந்தும் கவனமாக தப்பித்தேன்.

எந்தப் பிரச்சனையும் இல்லாமல் சந்திப்பு இனிமையாக முடிந்தது.

#அப்படியே இதை மெயின்டன் செய்ய எண்ணம். 

***

அடுத்த நாள் நடந்த சந்திப்பு வேறு ஒரு குடும்பத்துடன். இவர்களுக்கும் எங்களுக்கும் பல வருடப் பழக்கம். இந்த நண்பரின் அலைவரிசை எனக்குத் தெரியும். சிலவற்றில் எனது நிலைப்பாடுகளும் அவருக்குத் தெரியும். எனவே இவரிடம் சில விசயங்களில் கருத்து சொல்வது வழக்கம்.

தேர்தலின் போது மோடியை ஆதரித்துப் பேசிவர் இவர். இவரிடம் மோடி பற்றி பேசவேகூடாது என்று இருந்தேன். ஆனால் அவராகவே, மோடிதலைமையில் இருக்கும் அரசும் வெளிநாட்டு வங்கிகளில் பணத்தை வைத்து இருக்கும் நபர்களின் பட்டியலை வெளியிட முடியாது என்று சொல்லிவிட்டதைச் சொல்லி  "ஏன் மோடி இப்படிச் செய்தார்?" என்று ஆரம்பித்தார்.

http://www.financialexpress.com/news/black-money-ram-jethmalani-accuses-narendra-modi-govt-of-protecting-culprits/1299539

"மோடி ஒரு சராசரி அரசியல்வாதி + மதவாதி. அவரிடம் இருந்து நீங்கள் வேறு எதை எதிர்பார்க்க முடியும் என்று நான் வாய்திறந்தேன்.  அவரோ "இல்லை இல்லை மோடி கெட்டிக்காரர்" என்று மோடி புராண‌ம் பாடி , "கிரிமினல்களுக்காக வாதாடும் ராம்ஜெத்மலானியெல்லாம் எப்படி மோடியைக் கேள்வி கேக்கலாம்?" என்றார்.

"ராம்ஜெத்மலானி  ஒரு வக்கீல் . கொலைகாரன் அடிபட்டால்கூட சிகிச்சை செய்யவேண்டியது எப்படி மருத்துவரின் தொழில் தர்மமோ அப்படித்தான் ஒரு வக்கீலின் தொழில்தர்மம். அதனால் அவர் அப்படி இருக்கிறார்.  கொள்ளையர்களைப் காப்பது அரசியல்வாதியின் தொழில்தர்மம். அதைத்தான் மோடியும் செய்கிறார்" என்றேன்.

அவருக்கு நான் மோடி பற்றிச் சொன்னதில் மனவருத்தம் போல. இல்லை இல்லை மோடி குஜராத்திற்கு மோட்சம் அளித்தார் என்ற‌ அடுத்த கட்டத்திற்குப் போனார். குஜராத்தில் இரண்டு வருடங்கள் குப்பை கொட்டி இருந்தமையால் எனக்கு அறிமுகமான (மோடிக்கு முன்காலம்) குஜராத்தைப் பற்றி அவருக்குச் சொன்னேன். கொஞ்சம் அமைதியானார்.

மோடி ஒரு குறிக்கோள் அற்ற அரசியல்வாதி. ஒபாமாவிற்கு Affordable health Care  ஒரு கனவுத்திட்டம் சரியோ தவறோ அவர் அதற்காக உழைத்தார். அப்படி ஒரு கனவுத்திட்டம் என்று மோடிக்கு உள்ள ஒன்றைச் சொல்லுங்கள் என்றேன். விடையில்லை அவரிடம். ஆனால் மோடி சிறந்தவர் என்று இன்னும் நம்புகிறார். 

#பிம்பங்களே வாழ்க்கை

*

அடுத்த கட்ட உரையாடலில், அம்மாவின் தண்டனை என்று பேச்சு சென்றது. "அம்மாவைவிட ஊழல் செய்த கருணாநிதியெல்லம் இன்னும் வெளியில்தான் இருக்கிறார்" என்ற வழக்கமான "நீயும் தானே செய்த" என்ற ர.ர   Vs உ.பி  பாணி கருத்தைச் சொன்னார். நாங்கள் சென்ற‌ வாகனத்தை அவர் ஓட்டிக்கொண்டு இருந்ததால் எதற்கு வம்பு என்று அமைதியாய் அந்த அலையைக் கடந்துவிட்டேன்.

***

அம்மாவின் வழக்கு சிறை மற்ற கட்சிகள்
--------------------------------------------------------
இதுவே ஏதோ ஒரு காரணத்தில் அய்யா கலைஞர் சிறை சென்று இருந்தால், அடுத்த கட்சித் தலைவர்களில் சிலர் நிச்சயம்போய் சிறையில் பார்த்து இருப்பார்கள். வைகோவிற்கும் அப்படியே  அவர் சிறையில் இருந்த போது மருத்துவர் அய்யா இராமதாசு உட்பட பலர் சென்று பார்த்தார்கள்  என்று நினைவு. அம்மா அவர்களுக்கு அப்படி நடக்காததற்கு காரணம் , இது ஊழல் வழக்கு என்பதைத்தாண்டி அவர் மற்ற கட்சிக்காரகளை நடத்தியவிதமும் காரணமாக இருக்கலாம்.

யாரும் பார்க்க வரவேண்டாம் என்று சொன்னது காரணம் என்றுகூடச் சொல்லலாம். ஆனால் எனக்கு அதில் நம்பிக்கையில்லை. அம்மா அவரின் அரசியல் நட்புகள் என்று யாரையும் அடையாளம் காண முடியவில்லை என்னால்.

அய்யா கலைஞர் அவர்கள் எதிர்கருத்து கொண்டவர்களை எதிரியாக வரித்துக்கொண்டதில்லை. அதுதான் அவரின் பலமும்கூட.

*

வருங்கால பிரதமர் சூப்பர் அவர்கள் அம்மாவிற்கு கடிதம் எழுதாவிட்டால்தான் பிரச்சனை. "பாரதீய சனதாவின் வருங்கால விடிவெள்ளி" என்று  அடுத்தவர்கள் பேசியபோது ஏதும் சொல்லாமல் அதை அப்படியே மெயின்டன் செய்தார். அம்மா வெளியில் வந்தவுடனும் அமைதி காத்தால் லிங்கா மங்கா ஆகிவிடும் என்று தெரிந்து அறிக்கை கொடுத்துள்ளார்.

முதல் போட்டவர்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் தாண்டி சூப்பருக்கு என்று சில கணக்குகள் உண்டு. சாதகமாய்ப் போகும்வரை கருத்து சொல்லமாட்டார்.இன்னும் கொஞ்சம் போகட்டும் என்று இருப்பார்.  பாதகம் என்ற தெரியவரும் அடுத்த நொடி தைரிய லட்சுமணன் அவதாரம் எடுத்துவிடுவார்.

*

சைக்கிள் , நீச்சல் மற்றும் பல விளையாட்டுகளில் உடலில் உள்ளாடை ஏதும் இல்லாமல் உடலை ஒட்டிய ஆடை அணிவது என்பது அந்த அந்த விளையாட்டின் தன்மைகளுக்காக மட்டுமே. அது ஒரு Technical தேவை. 

அந்த விதிகளின்படி இருந்தாலும் கொலம்பிய நாட்டின் பெண்கள் சைக்கிள் அணி செய்த ஆடை தேர்வு இப்போது சர்ச்சையாகி உள்ளது.

http://guardianlv.com/2014/10/columbia-womens-cycling-team-uniforms-a-controversy/

.