Friday, December 15, 2017

அப்பா:விலையில்லா பண்டம் "மனிதம்"

"நாலு இட்லி பார்சல்" என்று கேட்டு இரசீது வாங்கி , மதுரை அண்ணாநகர் 'அன்னபூர்ணா' உணவகத்தின் "பார்சல்" கவுன்டரில் நின்றேன். வீட்டில் இருந்து இட்லி கொண்டு வந்திருக்கலாம். ஆனால் அப்பாவுடன் போகும் போது அவர் நினைத்ததுதவிர ஒன்றும் நடக்காது. நடக்கவும் விடமாட்டார்.

கைகள் , விரல்கள் என்று உடல் நடுங்கும் அப்பாவிற்கு, உணவை கையில் எடுத்து சாப்பிட அவருக்கான சில வசதிகள் வேண்டும். வீட்டில் அது உள்ளது.

பேப்பரில் பொட்டலமாக கட்டிக்கொடுக்கும் இட்லியை அவரால் சாப்பிடவே முடியாது. தட்டு போன்ற ஒரு தகரம் கிடைத்தால்கூட ரோட்டில் பொறுக்க தயாராக இருந்தேன். 

ஓட்டல் பார்சல் கவுன்டரில் கவலையுடன் நின்று கொண்டிருந்தபோது, அவர்களிடம் சின்ன செவ்வக வடிவில் அலுமினிய டப்பா ( Aluminium Foil Pressed ) இருந்தது பார்வைக்கு தெரிந்தது.

"பார்சலை அந்த கப்பில் கொடுக்க முடியுமா?" என்றேன்.

 "இல்லீங்க இட்லி பார்சலுக்கு பொட்டலம் தான்" என்றார். 

என் அப்பாவின் நிலையைச் சொல்லி , அட்டை போன்ற ஒன்றின் தேவையை,  பிச்சை எடுக்காத குறையாகச் சொன்னேன். 

"இல்ல சார் அதில இட்லி பார்சல் வராது" என்று சொல்லிவிட்டார் கவுண்டரில் இருந்த 30 வயது மதிக்கத்தக்க பெண் .

"அம்மா,  அந்த கப்புக்கான விலையைக் கொடுத்துவிடுகிறேன்" என்றேன்.

 "அப்படியெல்லாம் கொடுக்க முடியாது" என்றார். 

"என்ன வாங்கினால் கப்பில் கொடுப்பீர்கள்?" என்றேன். 

"எதுக்கும் கிடையாது" என்று இட்லியை தினத்தந்தி நாளிதழில், ஒரு பிளாஃச்டிக் பேப்பரை வைத்து கட்ட ஆரம்பித்துவிட்டார்.

அப்பா மருத்துவச் சோதனைக்கு வந்துள்ள "ஆசிர்வாதம்" மருத்துவமனையில் , உட்கார சேர் தவிர ஏதும் இல்லை. அதுவும் சந்து போன்ற ஒரு பகுதி. உணவு சாப்பிடும் முன்னும் பின்னும் செய்யப்பட வேண்டிய சோதனைகள் உண்டு. ஆனால் 82 வயது ஆன , நடக்க , உட்கார,  சாப்பிட அனைத்திற்கும் உடல் நடுங்கும் மனிதர்களுக்கு , உட்கார்ந்து சாப்பிட இடம் இல்லை.

பழைய சோற்றுக்கே பிச்சை எடுக்கும் சம்முவத்தில்,  பிரியாணியில் கறி கம்மி என்று , தனியார் மருத்துவமனை குறித்து நான் புலம்புவதை யாரும் கேள்வி கேட்கலாம். நகைக்கலாம். அது உண்மையும்கூட. 

20 வருடமாக அப்பா இங்குதான் வருகிறார் என்பதால், எத்தனை மணிக்கு வீட்டில் எழுந்திருக்க வேண்டும் என்பதில் இருந்து , என்ன எடுத்துச் செல்ல வேண்டும் என்பதெல்லாம் அவர் கட்டளை. அதை மீறி சிந்தித்தால்கூட சண்டை வந்துவிடும். அவர் திட்டப்படி "கடலில் இறங்கி கப்பலைத் தள்ளு" என்றாலும் தள்ளியாக வேண்டும்.

இந்த மருத்துவமனை மற்றும் அதன் சோதனை முறைகள் குறித்து புரிதல் ஏதும் இல்லாத தற்குறி நான். அக்கா பிள்ளைகள் இருந்தவரை அவர்கள் அழைத்து வருவார்கள். யாரும் ஒன்றும் சொல்லவில்லை. அவர்களுக்கு இதுஎல்லாம் இயல்பானதாய் இருந்திருக்கும் போல.

எனக்குத் தெரிந்திருந்தால் ஒரு தட்டு மற்றும் நாலு இட்லியை வீட்டில் இருந்து அப்பாவிற்கு தெரியாமல் எடுத்து வந்திருப்பேன்.

ஒரு தட்டு கிடைத்தால் இட்லி சாப்பிட வசதியாய் சாம்பார் ஒழுகாமல் , சிந்திவிடாமல் சாப்பிட முடியுமே என்பதே என் கவலை. அழுதாலும் அந்த அலுமினிய டப்பா (3 " x 3" அளவு. இரண்டு இட்லி வைக்கலாம்) கொடுக்க முடியாது என்று சொல்லிவிட்டார் அந்தப் பெண்.

எனது 'தாய்மாம்' உடன் வந்திருந்தால் அவரை , அப்பாவுடன் விட்டுவிட்டு சிறிது தொலைவில் உள்ள கடையில் ஏதேனும் 2018 காலண்டர் அட்டையாவது வாங்கி வந்திருப்பேன். வீட்டில் இருந்து கிளம்பும் போது, எதற்கு "இத்தனைபேர். அவன் வந்தால் நான் வரலை" என்று சண்டை செய்துவிட்டார் அப்பா. வீட்டில் யாராவது ஒருவர் இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார் அப்பா.

பொட்டலத்தை பிரித்து அப்பா எப்படி சாப்பிடுவார் என்ற கவலையில் இட்லி கவுண்டரில் நின்று கொண்டு இருந்தேன். பொட்டல இட்லியில் சாம்பார் ஊற்றி நடுங்கும் ஒரு கையில் பிடித்து, அடுத்த நடுங்கும் கையில் அவரால் சாப்பிடவே முடியாது. 

அவருக்கு ஊட்டி விடுவது என்பது , அவரின் கௌரவக் குறையாகிவிடும் என்றோ அல்லது என்ன காரணமோ, எதுவும் செய்ய விடமாட்டார். வேண்டுமானால் , ஓரமாக உட்கார்ந்து அழுகலாம் நான். அதுவே என்னால் , என் கட்டுப்பாட்டில் உள்ளது. கண்ணீர்கூட என் கட்டுப்பாட்டில் இல்லை.

*
இட்லி வாங்க ஓட்டல் வருவதற்கு முன்னரே , மருத்துவமனை கழிப்பறைத் தொழிலாளி ஒருவரிடம் அதன் அருகில் உள்ள ஒரு சேரில் உட்கார்ந்து சாப்பிடலாமா என்று கேட்டு அனுமதி வாங்கிவிடேன். அவர் பார்த்து "இங்கெல்லாம் முடியாது" என்று சொல்லி இருந்தால், அப்பாவை ஓட்டலுக்குத்தான் அழைத்துவர வேண்டும்.

மருத்துவமனையில் டோக்கன் வாங்கி விட்டால், அங்கேயே இருக்க வேண்டும். டோக்கன் எண்படி , செவிலியர் யாராவது அப்பாவை சோதனைக்கு அழைத்தால் உடனே "உள்ளேன்" சொல்லவேண்டுமாதலால் அப்பா அங்கே இருப்பது அவசியம்.

கண்ணீரைக் கடத்திக்கொண்டே அன்னபூர்னா பார்சல் கவுண்டரில் நிற்கிறேன். 

என் அப்பா சேர்த்து வைத்துள்ள சொத்துகள், வங்கி டெபாசிட்டுகள், என் பணம் , எதுவும் உதவாத நிலை. அந்த ஓட்டலில் பொட்டலம் கட்டும் பெண்ணின் மனமிரங்க எந்த சொத்து /பணம் மசிரும் உதவவில்லை. மனிதம் புரியாத இடத்தில் ஒன்றும் வேலைக்காவாது.

அப்போது அந்த கவுண்டரில் இட்லி எடுக்க வந்த ஒரு சர்வர் , "என்னக்கா?" என்று அந்தப் பெண்ணிடம் கேட்டார். அவர் உள்ளே சாப்பிடுபவர்களுக்கு சப்ளை செய்யும் சர்வர். இந்த பார்சல் கவுன்டர் பெண்ணும் , எனது 'வேண்டுகோளை' , 'பிரச்சனையாக' அவரிடம் சொன்னார்.

அவரிடமும் என் வேண்டுகோளை வைத்தேன். 

அவராலும் முடியாவிட்டால் நாலு வார இதழ்களை வாங்கி அட்டைபோல் வைக்க எண்ணம். அப்படி வைத்தாலும் , அப்பாவால் சாம்பார் ஊற்றிச் சாப்பிடவே முடியாது. 

அந்த சர்வர், என்னிடம் "சார் கேசியர்ட்ட போய் கேளுங்க" என்று சொன்னார். 

கேசியரிடம் சென்று முறையிட்டேன். அவர் அங்கருந்தே, "டப்பால குடுங்க" என்று பார்சல் கவுன்டர் பெண்ணிடம் சொன்னார்.

சர்வர் மற்றும் கேசியர் இருவரும் 20 ல் இருந்து 25 வயதிற்குள் இருப்பார்கள்.

மறு பேச்சு பேசாமல் , பார்சல் கவுன்டர் பெண் , அந்த டப்பாவில் இரண்டு இட்லி வைத்து ( அதற்கு மேல் அது கொள்ளாது) , பொட்டலத்தில் இரண்டு இட்லிகளை மடித்துக் கொடுத்தார்.

அதற்குள் அப்பாவின் டோக்கன் வந்துவிடுமே என்று ஓடி வந்துவிட்டேன். அந்த பார்சல் பெண்ணிடம் நன்றி சொல்லிவிட்டு.

**
மருத்துவமனை , கக்கூசிற்கு அருகில் அப்பா அப்படியே உட்கார்ந்து இருந்தார்.அவருக்கு ஒவ்வொரு இட்லியாக இந்த அலுமினிய கப்பில் கொடுத்து, சிறிதே சாம்பார் ஊற்றி சாப்பிட வைத்தேன். அப்படி இருந்தும் வேட்டியில் சாம்பார் சிந்திவிட்டது . அவரின் நடுங்கும் கைகளால்.

*
மறுபடி அதே ஓட்டலுக்குச் சென்று அந்த சர்வரைத்தேடி நன்றி சொன்னேன். "காசு கொடுத்தாலும் கிடைக்காத உதவி நீங்கள் செய்தது" என்று சொல்லி சின்னதாக சன்மானம் கொடுத்தேன். அந்த பணம் பிழைக்கத்தேவையாய் உள்ளதே தவிர அவரின் உதவியை அளவிட அல்ல.

கேசியரைத்தேடினேன். அவர் இல்லை. அவரிடமும் என் அன்பைத் தெரிவிக்கச் சொல்லி , சர்வரிடமே , கேசியரின் சன்மானப் பணத்தையும்  கொடுத்துவிட்டு வந்துவிட்டேன்.

*
படியில் ஆரம்பித்து, கதவு , தரை வரை நோயாளிகளை மனதில் கொண்டு வடிவமைக்கப்படுவதில்லை. கம்பு ஊன்றி நடந்தாலும் வழுக்கும் பள பள தரை, ஒருக்களித்துச் சென்றாலும் முதியவரை கைபிடித்துச் செல்ல முடியா கதவு . இப்படி பல.

நாலு அறை நாற்பது செவிலியர் என்று தொடங்கப்படும் மருத்துவமனைகள். ஆனால் அவற்றைத்தான் நம்புகிறார்கள் மக்கள். ஒரு வீல் சேர் இருந்திருந்தால் உதவியாய் இருந்து இருக்கும்.

கண் பார்வை குறைந்த , நடுங்கும் கை கால்கள் கொண்ட , குச்சி ஊன்றிய தாத்தாக்கள் , சிறுநீர் சோதனைக்காக சிறுநீர் பிடிக்க முடியாத 2x2 கக்கூசு. 

*
செவிலியர்களையோ ஓட்டல் சிப்பந்திகளையோ குறை சொல்ல முடியாது. 

வழிகாட்டிகள் இல்லா நாடு. என்பதைத்தவிர யாரை நோவது. 😢😢

*
மனிதம் என்பது விலைமதிப்பற்ற உணர்வு. அது எல்லாமட்டத்திலும் இருக்க வேண்டும். கட்டடம் கட்டும் வரைபடத்தில் ஆரம்பித்து ஓட்டல் பார்சல் கவுண்டர் வரை இருக்க வேண்டும்.

Friday, November 10, 2017

கலாச்சார அடியாட்கள்

லாச்சாரம் தமிழில் பண்பாடு எனப்படும்.
பண்பாடு:
ஒரு குறிப்பிட்ட காலத்தில் , ஒரு குறிப்பிட்ட பகுதியில், ஒரு குறிப்பிட்ட மக்கள், ஒரு குறிப்பிட்ட தேவைகளுக்காக, அவர்களின் காலத்தில் மேற்கொண்ட‌ பழக்கம்.

அவர்களின் காலம் கடந்தபின், அந்த நிலப்பகுதியில் பிறந்த அடுத்த தலைமுறை மக்கள், "பழையவர்கள் இயல்பாக அவர்களின் அக்காலத் தேவைக்காக, அக்காலப் புரிதலுகு உட்பட்டு செய்தவற்றை, கலாச்சாரம்/பண்பாடு என்று அட்டவணைப்படுத்துவார்கள்.  அதாவது இன்று இருப்பவர்கள், பழைய வரலாற்று செயல்களை,  அந்த பழைய மக்களின் கலாச்சாரம்/பண்பாடு என்று அட்டவணைப்படுத்துவார்கள்.  picture from: http://buzzkenya.com/wp-content/uploads/2013/08/african_culture.jpg

இந்த தலைமுறை,  பழைய தலைமுறையின் சட்டகத்தில் வாழ நினைப்பது காருக்கு(Car) சாட்டை வாங்குதல் போன்றது. கண்ணகியோ அல்லது சீதையோ உங்களின் கலாச்சார அடையாளம் என்றால்,  என்ன வெங்காயத்துக்கு "சுரிதார்" போட வேண்டும்? ஆண்கள் என்ன வெங்காயத்திற்கு "பேன்ட்" போட வேண்டும் இப்போது?

எல்லாவற்றையும் பழைய புத்தகத்தில் இருந்து பின்பற்றலாமே?

***

இலட்சுமி என்ற குறும்படம். 
https://www.youtube.com/watch?v=vP5dOY42DKI

என்பார்வையில் மகா மொக்கையான படம் . பழையகால பலாசந்தர்வகை குப்பைகளில் இருந்து, சற்றும் மாறாமல் அதே கதை.

"கக்கூசு" ( https://www.youtube.com/watch?v=-UYWRoHUpkU ) போன்ற சமூக அவலங்களைத் தோலுரிக்கும் படங்களை பார்த்து விமர்சிக்க, ஏன் பார்க்கக்கூட திராணியில்லாத போலிச் சம்முவம் இந்தக் குப்பையை அரைக்கிறது.

விலங்கினங்களின் DNA வில் எழுதப்பட்டுள்ள முக்கிய கடமை பிரதியெடுத்து தன்னைப் போன்ற ஒன்றை விட்டுச்செல்லுதல். பல உயிரனங்கள் கலவிக்குப்பின் இறந்து விடுகின்றன. மனிதனின் வாழ்க்கையும்
 பிரதியெடுத்தலைச் சுற்றிப்பின்னப்பட்ட ஒன்றே.

உடல்கள் ஒன்று சேர்வது, பிரதி எடுத்தலில் முக்கியமான ஒன்று. இன்று அது மாறிவிட்டது. இருந்தாலும் , உடல்கள் ஒன்று சேர்வதற்கான காரணிகள் அப்படியேதான் உள்ளது.  இரு உடல்கள் எப்படிப் கவரப்படும் என்பது, அந்த அந்த மூளைகளின் செய்திகளில் உள்ள விசயம்.

சேகர் ‍என்ற ஒருவனும் இலட்சுமி என்ற ஒருத்தியும் அவர்களின் சம்முவப்படி, சந்ததி உருவாக்க சேர்த்து வைக்கப்படுகிறார்கள். ஒரு மனிதக் குழந்தையும் அவர்களுக்கு பிறந்துவிட்டது. அது மூளைக்குத் தெரியும். இருந்தாலும் ,மூளைக்கு உடலில் உண்டாகிக்கொண்டு இருக்கும் பிரதியெடுத்தலுக்கான திரவங்களை கடத்தியாகவேண்டிய கடமை உள்ளது. எனவே இவர்களுக்கு இடையே உடலுறவும் நடந்துகொண்டுள்ளது.

இன்னொரு பக்கம் பெயரில்லாத பெண் உள்ளார்.
  • அவருக்கு திருமணம் ஆகி இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். 
  • அவர் லேத் பட்டறையில் வேலை செய்யலாம் அல்லது IT நிறுவனத்தில் வேலை செய்யலாம். 
  • குழந்தைகள் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். 
  • சேகருக்கும் அந்தப் பெயரில்லாத பெண்ணிற்கும், வெறும் நட்பான உறவோ அல்லது அதனுடன் சேர்த்து உடல் ரீதியான உறவோ இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்.
இதை இயகுநர் சொல்லவில்லை. பார்வையாளனின் யூகத்திற்கு விட்டுவிட்டார். இதுதான் சிக்கல். அந்தக் கதாபாத்திரம் குறித்து ஒரு பேச்சுகளும் இல்லை.

***

இந்தப்படத்திற்கு ஆதரவு எதிர்ப்பு என்று இருதரப்பினரும், இணையத்தில்  பேசும் பேச்சுகள் சிரிப்பாக இருப்பதால் , அதைப் பற்றிப் பேச வேண்டியுள்ளது .
  •  "சேகர் அடுத்த பெண்ணுடன் உடலுறவு தொடர்பில் இருப்பதால்தான் இலட்சுமியும் இப்படிச் செய்கிறார். ஆண்தான் முதலில் திருமண விதிகளை மீறினான்" என்று சப்பைக்கட்டு கட்டுபவர்களுக்கு.
அந்தப் பெயரில்லாத பெண்ணும் , IT யில் வேலை பார்க்கும் அவளின் கணவனின் செயல்களால் சலிப்படைந்து,  "லேத் சேகரின்" பக்கம் வந்திருக்கலாமே? இது ஏன் சேகரின் குற்றமாகப் பார்க்கப்படுகிறது? உங்களுக்கு வசதி என்பதாலா? அல்லது இயக்குநர் அந்தப் பெண்பற்றிச் சொல்லவில்லை எனவே ஆண்தான் நிச்சயம் அழுகுணி ஆட்டக்காரன் என்ற முன்முடிவா?இரண்டு உடல்களில் ஒரு உடலை மற்றும் குற்றம் சொல்வது ஏன்?
  • "லேத்" பட்டறையில் எப்படி  பெண்கள் இருக்கலாம்?  என்று பிரிண்டிங் பிரசில் வேலை செய்யும் இலட்சுமி கேட்கிறாள். 
இயக்குநர் அல்லது வசனம் எழுதியவர் கண்ணகி காலத்தில் இருப்பவர் என்று சொல்லமுடியாது. ஆனால் ஏன் இலட்சுமிக்கு ஒரு நீதி, அந்தப் பெயரில்லாத பெண்ணிற்கு ஒரு நீதி என்று வைக்கிறார் என்று தெரியவில்லை. பிரிண்ட்டிங்க் பிரசில் ஒரு பெண் கதாபாத்திரம் வேலை செய்யும்போது , இன்னொரு பெண் கதாபாத்திரம் லேத்தில் வேலை செய்யக்கூடாதா என்ன?
  • சில‌ அறிவாளி இந்துத்துவவியாதிகள்  "ஏன் இலட்சுமி என்று பெயர்?" என்று கேட்கிறார்கள்.
"ரீட்டா"ன்னு பெயர் வைச்சா உங்க சம்முவம் நிம்மதியா இருக்குமா டியர்? பழைய படங்களில் "ரீட்டா"தானே உங்கள் கதாநாயகிகளின் கலாச்சாரத்தைக் காத்து, தன்னுடலை உங்களுக்கு இரசிக்கத்தந்தவர்கள். அப்படித்தான் இன்னும் இருக்கணும் அதுதான் உங்கள் கவலை சரியா?  உடல் உறவில் ஈடுபடும்  ஈடுபட்டதாகவே கொண்டாலும், இரண்டு உடல்களில் ஒன்றின் பெயர் "இலட்சுமி" மற்ற ஒன்றின் பெயர் "கதிர்".  இன்னொரு சோடியில் ஒன்றின் பெயர் "சேகர்" மற்ற ஒன்றிற்கு பெயரே வைக்கவில்லை இயக்குநர்.
இவர்களுக்கு "இலட்சுமி" என்ற பெயர் தேர்வுதான் கவலை. "கதிர்" என்ற ஆணின் பெயர் "இலட்சுமி" என்ற பெண்ணின் பெயரோடு உறவாடினாலும், "கதிர்" இதில் தப்பிக்கிறார். இந்த சம்முவத்திற்கு கதிர்களின் குறிச்சுத்தம் குறித்து கவலை இல்லை.
  • சில மொண்ணைகள் ஏன் பாரதியார் பாட்டு என்று கேட்கிறார்கள்.
சரி உங்களுக்காக, பின்னணியில் "சவுந்தர்ய லகரி" பக்திப்பாடல் போட்டா ஓக்காவே டியர்?
***

எல்லா உடல் உறவுகளிலும் இரண்டு உடல்கள் பங்கேற்கிறது. அவை விரும்பியே பங்கேற்கும்போது மற்ற உடல்கள் அவர்களின் நியாயத்தராசுகளை வைத்து இந்த உடல்களை அளக்க முற்படுகின்றன.
தேவையின் பொருட்டு இரண்டு உடல்கள் செய்யும் உறவில் எந்த உடலைக் குற்றம் சொல்வீர்கள்?

தினத்தந்தியில் தினம் ஓடிப்போகும் ஒரு ஆணுடன் ஓடுவது ஒரு பெண். எல்லா கள்ளக்காதல்களிலும் ஆணும் உண்டு பெண்ணும் உண்டு.

ஒரு உடல் மட்டுமே கள்ளக்காதலில் ஈடுபடமுடியாது. அதற்குப் பெய‌ர் சுய இன்பம்.

***
தவளைகளுக்கு கிணற்றின் அளவே புரிதல். அதனால்தான் "பறவை என்றால் பறக்கோணும்" என்று இலக்கணம் சொல்கிறார்கள்.

Is marriage becoming totally outdated in Iceland?
http://www.cnn.com/travel/article/wonder-list-bill-weir-iceland/index.html

//Bryndis has three kids with two partners and not a drop of shame or regret.
She explains that since few Icelanders are religious, there is no moral stigma attached to unwed pregnancy. And her country guarantees some of the most generous parental leave in the world: nine months at 80% pay (three months for mom, three for dad and another three to be divvied up).//

**
பழைய கலாச்சாரப் பொங்கல்
கலாச்சாரமும் பிரபலபதிவர் என்ற கூமுட்டைகளும்
http://kalvetu.blogspot.com/2010/10/blog-post_13.html

.

Thursday, April 20, 2017

தமிழ்ப்பெண் மாதவியை தேவடியாளாகக்காட்டும் கதை காவியம்.. மாது ஒரு பாகன் என்றால் உங்க சாதி அவதூறா?

பெருமாள்முருகன் ஒரு நல்ல கதைசொல்லி அவர். அவர் எழுதிய ஒரு புனைவுக்கதையை (fictional story) மையமாக்கி அவர் அமெரிக்கா வ‌ருவதை பலர் பஞ்சாயத்தாக்கிக் கொண்டுள்ளார்கள். இவரை எதிர்ப்பவர்களில் பலர் சாதிப்பித்தர்கள். பெரியார் புத்தகங்களை வீட்டில் அடுக்கி வைத்து இருந்தாலும், மனதில் சாதியைப் practice செய்பவர்கள்.

ஃபெட்னா என்ற ஒரு அமைப்பு அதன் விழாவிற்கு ஒருவரை அழைத்து , அவரும் ஒப்புக்கொண்ட நிலையில், சாதியை முன்னிறுத்தி அவரின் அழைப்பை திரும்பப்பெற்றார்கள் என்ற செய்தி அமெரிக்காவில் தமிழர்களிடையே பல பஞ்சாயத்துக்களை ஏற்படுத்தி உள்ளது.

இன்றைய நிலையில் , ஃபெட்னா அதிகார பூர்வமாக "நாங்கள் விடுத்த அழைப்பு அப்படியே உள்ளது"என்று சொல்லி சரி செய்துள்ளார்கள். பாராட்டுகள்.

பெருமாள்முருகனே இதைப் பற்றிப் பேசவேண்டாம் என்று சொன்னாலும், உள்ளூர் சாதிப் பிரச்சனைகளைப் பேச வேண்டிய தேவை உள்ளது. மேலும் சமீபத்திய சாகித்ய அகடாமி என்ற அரசாங்க அமைப்பு ,  இவரின் அதே கதையை (ஆங்கில மொழிபெயர்ப்புக்காக) பரிசுக்கு தேர்ந்தெடுத்து உள்ள செய்தி , அடுத்த ரவுண்டு பஞ்சாயத்தை ஏற்படுத்தி உள்ளது.

"மாது ஒரு பாகன்" :பெருமாள்முருகன் . அம்பேரிக்காவிலும் சாதித்திமிர் தமிழன்
http://kalvetu.balloonmama.net/2017/04/blog-post.html

"பெருமாள்முருகன் கவுண்டர் சாதியினரையும், பெண்களையும் அவமானப்படுத்திவிட்டார் அவரது கதையில்", என்பதுதான் அம்பேரிக்க, பெட்னாவில் உட்கார்ந்து இருக்கும் சில சாதிப்பிரியர்கள் வைக்கும் குற்றச்சாட்டு. இந்தப் பெரிசுகளில் பலருக்கு இந்த பெட்னா அரசியல்தான் முழுநேர வேலை.  தமிழும் தெரியாது புனைவும் தெரியாது. ஏதோ இவர்களின் காலம்போன காலத்தில் நாங்களும் உள்ளோம் என்று சொல்லிக்கொள்ள பெட்னா ஒரு அரசியல் மேடை.

தமிழில் உள்ள பல வரலாற்றுக் கதைகள் , காப்பியங்கள், கவிதைகளில் களவொழுக்கம், தொடுப்பு, திறப்பு என்று பலகூறுகள் உள்ளது. தலைவன் தலைவி என்பது கணவன் மனைவி அல்ல. கதையில் வரும் முக்கிய ஆண் பெண் கதாபாத்திரங்கள். அவர்களின் காதல் , கலவி, களவொழுக்கம் எல்லாம் படித்து வளர்ந்தவர்கள்தான் நாம். இலக்கியம் என்பது பேசாப்பொருளையும் பேச களம் அமைத்துக்கொடுக்கும் இடமாக இருக்க வேண்டும்.

பெட்னாவிலும் சரி பல லோக்கல் தமிழ் சங்கங்களிலும் சரி "கண்ணகியின் கதை" என்ற ஒன்றை  மேடையேற்றுவார்கள். அப்படிச் செய்வதால் ஏதோ இவர்கள் தமிழைக் காப்பதாய் நினைப்பு.

இந்த கண்ணகி கதை எத்தனை பேரை கேவலப்படுத்துகிறது தெரியுமா?

(1) வணிகம் செய்யும் சாதியினர் (செட்டியார்கள்?) வப்பாட்டி வைத்திருந்த கேவலமானவர்கள்.
(2) தமிழ்ப் பெண் மாதவி மற்றும் அவர் சாதியினர் பரத்தை தொழில் செய்த கேவலமானவர்கள்.
(3) தமிழ் ஆண்கள் (கோவலன்) பரத்தையிடம் தொடுப்பு வைத்த‌ கேவலமானவர்கள்.
(4) மதுரைக்கார பொற்கொல்லர் சாதியினர் போட்டுக்கொடுக்கும் கூட்டம். வந்த வாடிக்கையாளரை  அரசனிடம் மாட்டிவிட்ட கூட்டம்.

இப்படியாக பலரையும் கேவலப்படுத்துகிறது இந்த சிலப்பதிகாரக் கதை.

இதை எந்த வெட்கமும் இல்லாமல் பெருமையுடன் மேடையேற்றும் பெட்னா மற்றும் லோக்கல் 'டமுலு' சங்கங்கள், பெருமாள்முருகன் , அவர்களின் கவுண்டசாதியை அவமதித்துவிட்டார் என்று சொல்லி அழுகிறார்கள்.

என்னங்கடா உங்க நியாயம்?
உங்க சாதிப் பிரச்சனைன்னா அதை தமிழ்ப் பிரச்சனைன்னு ஆக்கி பெருமாள்முருகனை எதிர்க்கிறீர்கள்.
அடுத்தவன் சாதியை கேவலைப்படுத்தும் , தமிழ்ப்பெண் மாதவியை தேவடியாளாகக்காட்டும் , கதைன்னா அது தமிழ்ப்பெருமையா என்ன?

*
இந்தியாவில் பல கோவில் சுவர்களில் புடைப்புச் சிற்பமாக, கோபுரங்களில் பதுமைகளாக அலங்கரிப்பவை பாலியல் உறவு சார்ந்த கலவிநிலைகளே. காமசூத்திரம், கசுரகோ சிற்பங்கள் என்று பல சாட்சிகள் இந்தியாவின் கட்டற்ற பாலியல் உறவுகளுக்கு இன்றும் சாட்சியாக உள்ளது.

14 Temples In India Where You Get A Lot More Than Just The Traditional Prasad
http://www.indiatimes.com/culture/who-we-are/14-temples-in-india-where-you-get-a-lot-more-than-just-the-traditional-prasad-231878.html

இவை எல்லாம் வரலாற்று எச்சங்கள்.  இன்று வாழும் நம்மை அது பெருமைப்படுத்துகிறதா அல்லது அசிங்கப்படுத்துகிறதா என்பது, நம் மூளையில் ஏற்றப்பட்டு இருக்கும் புனித/மத/சாதிய/ கருத்துக்களைப் பொறுத்து மாறும்.

இந்தியாவை இந்தக் கோவில்கள் அசிங்கப்படுத்துகிறது என்று சொல்லி இவற்றை இடித்துவிட்டால் இழப்பு நமக்கே.

*
அமெரிக்க அதிபரையும் இன்னும் அனைவரையும் Talk Show க்களில் வெளுத்து வாங்கும் ஒரு நாட்டில் இருந்துகொண்டு, பேச்சு சுதந்திரத்தை ஆதரிக்கும் மண்ணில் இருந்துகொண்டு "என் சாதியை கேவலப்படுத்தினான்", "என் மதத்தை கேவலப்படுத்தினான்", என்று சாதி மதம் பார்த்து கலைஞர்களைத் தடை செய்வது தவறானது.

இப்படியே போனால் கலைகளை , சாதி மதங்களின் பெயரால் அடக்குமுறை செய்தவர்களின் பட்டியலில் (உதாரணம் சல்மான் ருஃச்டிக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனை) தமிழர்களும் வந்துவிடுவோம்.

ஏற்கனவே விசுவரூபம் மற்றும் டாவின்சு கோடுகளை நாசமாக்கிய மதப்பாதையில்,  தமிழனாகச் செல்ல வேண்டாம்.

-----------------

தகவலுக்கு:
ஜாதி - மத வெறியர்களின் பிடியில் வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை
http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/32827-2017-04-08-02-57-56

ஜாதிவெறியர்களிடமிருந்து ஃபெட்னாவைக் காக்க வேண்டும்
http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/32845-2017-04-11-00-01-37

FeTNA காசிருந்தால் முன்னாள் உட்காரலாம். ஜிகினா சிரியுடன் சேர்ந்து சாப்பிடலாம்
http://kalvetu.balloonmama.net/2012/06/fetna.html

Thursday, April 06, 2017

"மாது ஒரு பாகன்" :பெருமாள்முருகன் . அம்பேரிக்காவிலும் சாதித்திமிர் தமிழன்

னக்கும் கதைப் புத்தகங்களுக்குமான உறவு பலர் அறிந்தது. போகாத‌ பொழுதுகளை இழுத்துப்பிடித்து , போகவைக்க எனக்கு கதைப் புத்தங்களின் தேவை கிடையாது. அதே சமயம் புனைவுக்கதைகள் நம் சன்னலை திறக்கும் சாவிகள் என்பதில் மாற்றுக்கருத்தும் கிடையாது. சுவாசிப்பது போல வாசிப்பதும் ஒரு தன்னிச்சையான செயலாக இருக்கலாம். அதில் எந்த சிறப்பும் கிடையாது என்பது என் நிலை.

நண்பர் ஒருவருடன் நடந்த உரையாடல் ஒன்றில், மாதொருபாகன் என்ற கதை,  உள்ளூர் அம்பேரிக்க தமிழ்சங்க அரசியல் விளையாட்டில் ஒரு முக்கிய இடம் பிடித்துள்ளது என்று அறிய வந்தேன். ஏற்கனவே இணையப் பஞ்சாயத்துகளில் பெருமாள்முருகனுக்கு நேர்ந்த சம்பவங்கள் எனக்கு தெரிந்தே இருந்தது. ஆனால் அம்பேரிக்காவரை வந்து ஆடும் இந்த சாதிக்கொடுமைகள் குறித்து பேச வேண்டிய தேவையால் இன்று பேசுகிறேன்.

புனைவுக்கதைகளை அப்படியே தனக்கான சட்டையாக  எடுத்துப்போட்டுக்கொண்டு, குத்துதே குடையுதே என்று புலம்புவதில் பயன் இல்லை. சல்மான் ருஃச்டி , ஓவியர் ஃகுசேன், தஃச்லிமா என்று பலரை ஓட ஓட விரட்டியுள்ளது இந்த சம்முவம். அதே சமயம் , பைபிள்,குரான்,இராமயணம் என்று பலவற்றை கொண்டாடி,  அப்படியே உண்மை என்று   நம்பும் சம்முவமும் இதுதான்.  எது புனைவு? எது வரலாறு?   எது வரலாற்றின் மீதான ஆசிரியரின் பார்வை? என்று பிரித்துப் பார்ப்பது நம் மூளை என்பதால், அதன் பகுத்தாயும் திறனையொட்டியே நமது பகுத்தறியும் அறிவின் எல்லை இருக்கும்.

நோவாவின் கப்பலில் , அண்டார்டிகாவில் இருந்து மண்டைய மண்டைய ஆட்டி, பல ஆயிரம் மைல்கள் தூரம் நடந்து வந்து , அரபு நாட்டுப்பக்கம் நோவாவின் கப்பலில் ஏறியதால்தான் இன்றும் பெங்குவின்கள் உள்ளது என்றும், அப்படி கப்பலைத் தவறவிட்டதால்தான் டைனோசர்கள் இல்லை என்றும் நம்பி, வாரம்தோறும் அந்த கதைகளை வாசிப்பவர்கள் இன்றும் உள்ளார்கள். சீக்கா வைரசுகூட ( zika virus)இப்படி நோவாவின் கப்பலில் ஏறிக்கொண்ட ஒன்றுதான். 2016 ஒலிம்பிக்கில் இது பிரேசிலைப் பாடாய்படுத்தியது. இதுபோன்ற வைரசுகளை நோவா ஏற்றிக்கொண்டு வராமலேயே இருந்து இருக்கலாம்.

இப்படியான கதைகளில், புதியதாய் வந்து சேர்ந்து இருப்பது பெருமாள் முருகனின் 'மாதொருபாகன்'. எந்த ஒரு புனைவிலும் வரலாற்றின் எச்சங்கள் அல்லது வரலாற்றுச் சம்பவங்கள் என்று நம்பியவற்றை ஆசிரியர் கருவாக வைத்து , அவரின் கற்பனையைப் பின்னுவார். இது வாசிக்கும் இரசிகர்களுக்கு வாசிப்பின்பம் கொடுக்க. பெருமாள்முருகனின் இந்தக் கதை மையமாக வைக்கும் கருத்து அல்லது இந்தக் கதை வழியாக அவர் சொல்லவரும் வரலாற்றுக் கருத்து அல்லது வரலாற்றில் அவரின் பார்வை அல்லது அவரின் ஆராய்ச்சிகளின் வழி வந்த கருத்து எது என்று கேட்டால், "திருச்சங்கோடு திருவிழாவில் கிடைக்கும் கட்டற்ற புணர்வுச் சுதந்திரம்". அவ்வளவே. அதைத் தாண்டி இதில் வரலாற்றுப் பார்வை அல்லது குறிப்பு என்று வேறு ஏதும் இல்லை. இந்த இழையைச் சுற்றிப் பின்னப்பட்டுள்ள கதைமாந்தர்களால் இந்தக் கருத்து , கதையாக வளர்க்கப்படுகிறது.

என்னைப் போன்ற ஆட்களுக்கு விவரணைகள் தேவை இல்லாதது. "சரி பாசு மேட்டர் என்ன சொல்லுங்க" என்று குறுக்குவெட்டுத் தோற்றத்தை மட்டுமே காண விளையும் இரகம் நான். இருந்தாலும் பொறுமையாக பெருமாள்முருகனின் கதையைப் படித்தேன். பெருமாள்முருகன் அப்படி என்னதான் எழுதியுள்ளார் என்று வாசித்தேன். 190 பக்கங்கள் சில மணி நேரங்களில் முடிந்து போயிற்று. பொன்னாவின் வீட்டை அறிமுகப்படுத்தும் போது இருக்கும் விவரணைகள் , வீடு, பூவரச மரம் என்று நின்றுவிடுகிறது. ஏதோ வெட்ட வெளியில் 'செட்' போட்ட மாதிரி விட்டுவிட்டார் வீட்டை. ஊரை, தெருவை கொஞ்சம் எழுதிக்காட்டி இருக்கலாம் அறிமுகத்தில். திருச்செங்கோடு , பாவாத்தா ,தேவடியாள்தெரு என்று அவர் சொல்லிச் சென்றாலும் முழுமையாக ஒரு ஊரின் சித்திரத்தை வரைந்துகொள்ள‌ முடியவில்லை என்னால். திருவிழாவிற்கு நம்மைக் கூட்டிச்செல்ல அவசரப்படுகிறார். அதிக விவரணைகள் அங்கே இருப்பதாக எனக்குத் தெரிகிறது.

பெருமாள்முருகன் இந்தக் கதைவழியாக சொல்லவரும் செய்தி அல்லது இந்தக் கதைக்காக அவர் மெனக்கெட்டுச் செய்த ஆராய்ச்சியின் முடிவு எது என்று பார்த்தால் , கட்டற்ற புணர்வுச் சுதந்திரம் கொண்ட அந்தக்கால திருவிழா என்ற விடைதான். அதுதாண்டி இங்கே வரலாற்றுக்குறிப்பாக ஏதும் இல்லை. இந்தியாவில் பல கோவில் சுவர்களில் புடைப்புச் சிற்பமாக, கோபுரங்களில் பதுமைகளாக அலங்கரிப்பவை பாலியல் உறவு சார்ந்த கலவிநிலைகளே. காமசூத்திரம், கசுரகோ சிற்பங்கள் என்று பல சாட்சிகள் இந்தியாவின் கட்டற்ற பாலியல் உறவுகளுக்கு இன்றும் சாட்சியாக உள்ளது.

14 Temples In India Where You Get A Lot More Than Just The Traditional Prasad
http://www.indiatimes.com/culture/who-we-are/14-temples-in-india-where-you-get-a-lot-more-than-just-the-traditional-prasad-231878.html
இவை எல்லாம் வரலாற்று எச்சங்கள்.  இன்று வாழும் நம்மை அது பெருமைப்படுத்துகிறதா அல்லது அசிங்கப்படுத்துகிறதா என்பது, நம் மூளையில் ஏற்றப்பட்டு இருக்கும் புனித/மத/சாதிய/ கருத்துக்களைப் பொறுத்து மாறும். இந்தியாவை இந்தக் கோவில்கள் அசிங்கப்படுத்துகிறது என்று சொல்லி இவற்றை இடித்துவிட்டால் இழப்பு நமக்கே. மகாபாரதக் கதையை உக்காந்து படிச்சாலே தலை சுத்தும். பாலியல், கலவி குறித்தான அந்தக் கால நடைமுறைகள், பிள்ளை பெற அவர்கள் செய்த முயற்சிகள் அதற்கான சாமி விளக்கங்கள், சப்பைக் கட்டுகள், என்று பல உள்ளது அதில். நாம் இன்றும் அதை படிக்கிறோம். வேலை வெட்டி இல்லாத சிலர் அதை தூர்வாரி, அதன்மேல் அவர்களின் புனைவைச் சமைக்கிறார்கள்.

தமிழில் உள்ள பல வரலாற்றுக் கதைகள் , காப்பியங்கள், கவிதைகளில் களவொழுக்கம், தொடுப்பு, திறப்பு என்று பலகூறுகள் உள்ளது. தலைவன் தலைவி என்பது கணவன் மனைவி அல்ல. கதையில் வரும் முக்கிய ஆண் பெண் கதாபாத்திரங்கள். அவர்களின் காதல் , கலவி, களவொழுக்கம் எல்லாம் படித்து வளர்ந்தவர்கள்தான் நாம்.

பொன்னாவையும் மகாபாரத குந்தியையும் , காளியையும் மகாபாரத  பாண்டுவையும் ஒப்பிடலாம்.  அப்படி ஒப்பிட்டால் பெருமாள்முருகன் எதையும் புதிதாகச் சொல்லவில்லை என்ற உண்மை தெரியவரும். அவர் புதிதாகச் சொன்னது , கதை நடக்கும் இடமாக அவர் சொன்ன திருச்சங்கோடும் , அந்த சாதி சனங்களும்தான்.

பெருமாள்முருகன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு "நம்ம சாதிப் பொம்பளைகளை திருவிழாவில் பிள்ளைவரம் தேடுபவர்கள் என்று ஆக்கிவிட்டார். அவரைக் குத்து , கொல்லு, தடை செய்" என்பதுதான். இதைச் சொல்பவர்கள் மகாபாரத்தைப் போல மாதொருபாகனையும் முழுக்க முழுக்க அக்மார்க் வரலாறாகப் பார்க்கிறார்கள் என்றே நினைக்கிறேன். இவர்களிடம் புனைவாய் 'காதில் செய்தி சொல்வது' வேலைக்காவாது. கதை எழுதும் தொழிலாளிகள் கவனமாக இருக்க வேண்டும்.

ஊர்த்திருவிழாவில் காளியும் , முத்துவும் , மற்றவர்களும் அடுத்தவர்களின் பெண்களுக்கு 'சாமி'யாய் அலைந்த கதையும் இதில்தான் உள்ளது. எந்த ஒரு நபரும் "நம்ம சாதி ஆண்களை , திருவிழாவில் கோவணத்தோடு நீட்டிக்கொண்டு அலையும் காமுகன்கள்   என்று சொல்லிவிட்டார் பெருமாள்முருகன்" என்று சொல்லவேயில்லை. ஒரு காமச் செயலில் ஈடுபடும் ஆணை ஒன்றும் சொல்லாமல் , பெண்ணை முன் வைத்து , கலாச்சாரம் காப்பதே நம் வேலை என்றாகிவிட்டது.

பிள்ளை இல்லை என்பதால் பொன்னாவை அந்த ஊர் பெண்கள் (அதே சாதி சனம்) குத்திக்கிழிக்கிறது வார்த்தைகளால். பிள்ளை இல்லாத காரணத்தால் அவளை நம் படுக்கைக்கு கடத்திவிடலாம், வந்துவிடுவாள் என்று அதே ஊர் ஆண்கள் (அதே சாதி சனம்) வலைவிரிக்கிறது. இதையும் அவர் காட்சிப்படுத்தியுள்ளார். பெருமாள்முருகனை எதிர்த்துப் போரிட்டவர்களில் யாரும் " அட பக்கிகளா இன்றும் நம் பொம்பிளைகளை , பிள்ளை இல்லை என்று இப்படித்தானே பாடாய்ப் படுத்துகிறீர்கள். நம்ம சாதிப் பிள்ளைகளை நாமே இப்படிப் படுத்தினா என்னதான் விடிவு" என்று அதே சாதி சனத்தை கண்டிக்கவில்லை. மாறாக பெண்களை கேவலப்படுத்திவிட்டார் என்று கொடிபிடித்தார்கள். அதே பெண்களுடன் உறவு கொண்ட அதே சாதி சன ஆண்களை ஒன்றும் சொல்லவில்லை.

பிள்ளை இல்லாத பெண்களை , அதே சாதி மதப் பெண்கள் வார்த்தைகளால் மறைமுகமாக சாட்டையடி அடிப்பதும், நல்ல காரியங்கள் துக்க காரியங்களில் அவர்களை சடங்குகள், சாத்திரங்கள் என்ற பெயரில் அதே சாதி மதப் பெண்கள் அசிங்கப்படுத்துவதும் இன்றும் உள்ளது.

"இப்படியான சாதி மத சாங்கியங்களை நாம் இன்றும் கட்டிக்கொண்டு அழுகிறோமே, இப்படி இருந்தால் நாமே இவர்களுக்கான திருவிழாவை திணிப்பவர்களாகிவிடுவோமே" என்று இவர்கள் நினைப்பதே இல்லை. பெருமாள்முருகன் கதையினால் ஏற்பட வேண்டிய மாற்றம் என்றால், அந்த சாதி /சன/ மத மக்கள் , அவர்களின் பிள்ளையில்லாப் பெண்களை நடத்தும்  முறையில் மாற்றம் கொண்டுவரவேண்டும். இதை விட்டுவிட்டு கதைசொல்லிய பெருமாள்முருகனை சட்டையைப் பிடிப்பது சரியல்ல.

"மாதும் ஒரு பாகம்" என்ற தலைப்பு இருந்தாலும் இந்தக் கதையில் அதை எப்படி நியாயப்படுத்துகிறார் என்று தெரியவில்லை. பெண்ணுக்கும் சம வாய்ப்பு திறந்தவெளிக்கலவியில் உள்ளது என்பதாலா? அல்லது உடலால் பிரியாமல் இருக்கும் பிரியத்தை , காளி பொன்னாவின் மீது வைத்துள்ள காதல் என்று சொல்கிறாரா தெரியவில்லை. பாவாத்தாதான் மாதொருபாகன் என்று சொல்கிறார். ஆனால் பாவாத்தாவின் கதை வேறாக உள்ளது. காட்டில் வன்புணர்வு செய்யப்பட்ட மலைப்பெண்தான் பாவாத்தா என்று நான் புரிந்துகொண்டேன். ஆனால் கோவில் பூசாரி அதுதான் இந்தப்பழம் என்று செந்தில் காமெடியாய் குழப்புகிறார் மிசுடர் முருகன்.

இன்றுவரை "மாதும் ஒரு பாகம்" என்பது சிலையாய்தான் உள்ளதே தவிர செயல்பாட்டில் இல்லை. ஆம் அந்தக் கோவிலுக்கு பெண்கள் அர்ச்சகராக முடியுமா? அல்லது அய்யப்பன் கோவிலுக்கு நாப்கின் போட்ட பெண்கள் போகத்தான் முடியுமா? கோவணத்தில் விந்துசிந்தினாலும் ஆண் எங்கும் போகலாம். ஆனால் பெண் அப்படிப்போக முடியாது. எனவே "மாதும் ஒரு பாகம். எங்ககிட்ட அர்த்தநாதிசுவரர் இருக்கார்" என்று சொல்லாமல் செயலில் காட்டலாம அந்த சாதி சன மக்கள்.

விழிப்பதற்கான‌  ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொள்வதைவிட்டுவிட்டு கதைசொல்லியைப் பழிப்பது வீண். ஆஃப்டரால் அது ஒரு புனைவு.

**

இந்த வருட அம்பேரிக்க டான்ஃசு கிளப்பிற்கு (FeTNA) பெருமாள்முருகன் வந்தால் தங்களின் சாதித்திமிரில் ஒரு மாற்று குறைந்துவிடும் என்று நினைக்கும் ஆண்களும் பெண்களும் ,  உங்கள் வீட்டில் , நீங்கள் எப்படி உங்கள் மத சாதி சாங்கிய சடங்குகளில் பிள்ளையில்லாப் பெண்கள், கணவனை இழந்த  கைம்பெண்கள், குருதி கொட்டும் நாளில் இருக்கும் உங்கள் வீட்டுப் பெண்கள் அல்லது நீங்களே உங்களை நடத்திக்கொள்கிறீர்கள் என்று சிந்திக்கலாம்.

#மாது ஒரு பாகன்

கடுப்பைக் கிளப்பும் - FeTNA சேர்ந்தே டான்ஸ் பாக்கலாம் கவித வாசிக்கலாம் வாங்க ப்ளீஸ்
http://kalvetu.balloonmama.net/2010/06/fetna.html

Monday, March 27, 2017

இலக்கிய அடியாள்: செயமோகன்

சினிமாவில் டாக்டராக நடிப்பவரைப் பார்த்து "நீ டாக்டருக்கு படித்துள்ளாயா? என்ன தகுதியின் அடிப்படையில் டாக்டராக நடிக்கிறாய்?" என்று யாரும் கேட்பது இல்லை. மகாபாரதக் கதை ரீமேக் செய்பவரைப் பார்த்து "நீ மகாபரதப்போரில் பங்கு கொண்டாயா? குந்திக்கு போத்தீசில் சேலை வாங்கினாயா? என்ன தகுதியில் போரைப் பற்றிப் புனைகிறாய்?" என்று கேட்பது இல்லை. ஆனால் கதைப் பொத்தகம் எழுதும் ஒருவரின் அன்றாட செயல்பாட்டை, அவரின் பதிவுகள் வழியே அவர் அறியத்தருவதை வைத்து விமர்சித்தால், "நீ அவரின் கதைப் புத்தகம் படி" என்று சொல்லும் மடையர்கள் உள்ளார்கள் இங்கே.  வங்கி ஊழியர் பணத்தை கையாளும் விதத்தைப் பற்றி வக்கிரமாக விமர்சிக்கும்போது , அல்லது தொப்பி&திலகம் எழுதி மறைந்து கொள்ளும்போது "நீ சினிமாவில் நடித்துள்ளாயா? உனக்கு என்ன தகுதி உள்ளது?" என்று எந்த முட்டாள்கள்களும் கேட்பது இல்லை.

தமிழ் இணையவெளியில் முதலில் வந்தவர்களில் பெரும்பாலனவர்கள் வாரப்பத்திரிக்கை முதல் பெத்தப் பெரிய கதை பொத்தகம் வரை படித்தவர்களாக இருந்தார்கள். இவர்களுக்கு பேச எதுவும் இல்லாத காரணத்தால், அடுத்தவர் எழுதி , இவர்களின் சன்னலில் வீசப்பட்ட ரொட்டித்துண்டுகளை வைத்து பேசிக்கொண்டு இருந்தார்கள். அடுத்தவன் அவன் பார்வையில் வடிக்கும் செய்தியின் வழியாக,  இவர்களுக்கு வரும் செய்திகள், உணர்வுகள் மட்டுமே இவர்களுக்கு பெரிதாக இருந்தது மட்டும் அல்ல , அதுவே இறுதி என்றும் நம்பினார்கள்.

இவர்களுக்கான கதவை திறந்துகொண்டு , தனக்கு எட்டும் தூரத்தில் இருக்கும் இடத்திற்கு சென்று சுயமாக அறிய எந்த முயற்சியும் செய்யாதவர்களாக மாறிப்போனார்கள். அலங்காநல்லூரில் பிறந்து அந்த வாடிவாசலில் ஏறிக்குதித்த என்னிடமே , அலங்காநல்லூர் சல்லிகட்டு பற்றி அறிய யாரோ ஒருவர் எழுதிய "வாடிவாசல்" கதைப் புத்தகம் படி என்று சொல்லும் அளவிற்கு தங்களை இருத்திக்கொண்டார்கள்.

மதவாதிகள் உலக விசயங்கள் அனைத்திற்கும் விடையை அவர்களின் மதப்புத்தகத்தில் தேடுவதுபோல, இவர்கள், தங்களின் பீடாதிபதிகளின் புத்தகங்களில் எல்லாவற்றுக்குமான விடைகளைத் தேட ஆரம்பித்துவிட்டார்கள். கதையும் கதை சார்ந்த வாசிப்பு அதையொட்டிய இரசிக சபை என்று இதை ஒரு மதமாக்கி வருகிறார்கள்.

புத்தகம் ஒரு சன்னல். ஆனால் உங்களுக்கான கதவை நீங்கள்தான் திறக்க வேண்டும். எல்லாவற்றையும் நேரடி அனுபவத்தில் அறியமுடியாது. அப்படியான வேளையில் புத்தகங்கள்தான் சன்னல். ஆனால் சன்னல்வழி பிம்பத்திலேயே தங்கிவிடுதல் என்பது நோய்.

தமிழில் "படைப்பு" (Creative work)  , "படைப்பாளி" (creative worker)  என்ற வார்த்தைகளுக்கு,  தாயத்து கட்டி, மந்திரம் ஓதி அதைப் புனிதமாக‌ உருவேற்றி , கதைப் பொத்தகம் எழுதும் தொழிலுக்கு தாலியாக கட்டிவிட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது.

கதை எழுதுபவன் மட்டுமே படைப்பாளி , மற்ற தொழில்கள் செய்பவன் படைப்பாளியாக இருந்துவிடவே முடியாது என்று நம்ப வைக்கப்பட்டுள்ளார்கள். "மல்ட்டி லெவல்" மார்க்கெட்டிங்கில் இருக்கும் பதவிகள் போல , இவர்களின் வாசகப் பதவியை அடைகிறார்கள். அதைப் புனிதம் என்றும் மனதார நம்புகிறார்கள். "சினிமா என்ற படைப்பின் இரசிகனும் , கதை என்ற படைப்பின் இரசிகனும் , படைப்பு & இரசிகன் என்ற‌ தளத்தில் ஒன்றே" என்றால், ஏதோ மேன்மக்களை தீண்டத்தகாதவர்களோடு ஒப்பீடு செய்துவிட்டதுபோல பதறுகிறார்கள்.

இவர்களின் புனித வார்த்தையான படைப்பு /படைப்பாளி என்றால் என்ன என்று பார்ப்போம்.

சின்னக்குழந்தையின் கிறுக்கல்கள்கூட Creative  (படைப்பு) என்ற வகையில்தன் வரும். கதைபொத்தக் தொழிலும் Creative (படைப்பு) தன்மை உள்ளது. கதைபொத்தம் எழுதுபவர்கள் மட்டுமே Creative (படைப்பு) தன்மையுள்ளவர்கள் என்று இவர்கள் நம்ப வைக்கப்பட்டுள்ளார்கள். ஓவியம், நாடகம், சிற்பம், பேச்சு கட்டடக்கலை, கோலம் போடுதல் என்று எல்லா செயல்பாடுகளிலும் Creative (படைப்பு) தன்மை உள்ளது.  புரோட்டா சுற்றும் 100 பேரை எடுத்துக்கொண்டால் , ஒவ்வொருவரின் கை லாகவமும் ஒருமாதிரி இருக்கும். அந்த தொழிலிலும் படைப்பு வாய்ப்பு (creative scope ) உள்ளது என்பதை,  கதைத் தொழிலில் உள்ளவர்கள்  ஏற்கவே மறுக்கிறார்கள்.  எழுதுவதை வேலை (work), தொழில் (job/business) , பொழுது போக்கு (hobby ) என்று எந்த வகைப்பாட்டில் வைத்தாலும் , அதைப்போல மற்ற செயல்களுக்கும்  படைப்பு வாய்ப்பு (creative scope ) இருக்கலாம் என்பதை  மனதார மறுக்கிறார்கள். இது ஒரு மன நோய்.

ஒவ்வொரு தொழிலும் அந்த தொழிலைச் செய்பவருக்கு அந்த தளத்திற்கான படைப்பு வாய்ப்பு (creative scope ) உள்ளது. இதுதான் உண்மை. அந்த வாய்ப்பை எப்படி பயன்படுத்துகிறார்கள் , அதில் இருந்து சமூகத்திற்கு என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள் என்பது அடுத்த கட்டம். உடனே பிக்பாக்கெட்டும் தொழில்தானேஎன்றால் "ஆம் தொழில்தான்". ஆனால் , அது சமூகத்தில் என்ன தாக்கம் ஏற்படுத்துகிறது என்பதில் அடுத்த கட்டம் உள்ளது. சமூகத்தில் நடக்கும் ஒவ்வொரு செயல்களும் , அந்த சமூகத்தில் அதற்கான தடத்தை விட்டுச் செல்கிறது. எது சரி? எது தவறு? எது அளவில் சிறந்தது? என்பது எல்லாம்,  அடுத்த கட்ட அளவீடுகள்.

படைப்பு = Creation
படைப்புத்தன்மை = Creativeness
எழுத்து = Writing
எழுத்தாளுமை = Proficiency in writing.

ஒவ்வொரு துறையிலும் ஆளுமைகள் (professional and commanding)  ஆட்கள் இருக்கிறார்கள். அப்படி இருக்கையில் படைப்பு/ஆளுமை என்பதை ஒரு துறைக்கும் மட்டுமான புனித பரிவட்டமாக மாற்றிவிட்டார்கள் இந்த தமிழ் எழுத்துவேலை செய்பவர்களும் , அவர்களின் இரசிகர்களும்.

இணையத்தில் இவர்கள் அரசியல் அடியாட்கள்போல , அவர்களுக்கான ஒரு அடியாட்கள் கூட்டத்தையும் வைத்துள்ளார்கள். இவர்களை எதிர்த்து ஏதேனும் சொல்லிவிட்டால் "நீ முட்டாள். கதை படி " என்ற மந்திரத்தை எடுத்து வீசுவார்கள்.

இப்படியான ஒரு கூட்டத்தை செயமோகன் என்பவர் இணையத்தில் வளர்த்து வருகிறார். வருடம் ஒரு முறை ஊட்டியில் தங்கி இலக்கியம் பேசுவது என்று காலம் தள்ளிய இவர்கள், இவருக்கு மத்திய அரசின் விருது வேண்டி நடிகர்களின் சிபாரிக்கடிதங்களை பெற்றவர்கள்தான் என்றும் சொல்கிறார்கள் இவரின் எதிர் முகாம் மக்கள்.  வெகுசன அங்கீகார‌ மோகம் தலைக்கேறிய பித்தசபை இது. இறுதியில் இவர்களே "விசுணுபுர அவார்டு கம்பெனி" ஒன்றை ஆரம்பித்தும் விட்டார்கள். இது எல்லாம் அவர்களின் தொழில் சார்ந்தது , இருந்துவிட்டும் போகட்டும்.

இவர்களில் பலர் வேத (வர்ணாசிரம) விரும்பிகளாகவும், இந்துத்துவா கட்சி சார்பானவர்களாகவும் இருப்பதில் வியப்பு இல்லை. ஆரம்பத்தில் இருந்து நான் இவரை,  வர்ணாசிரமப் பற்றாளராக , இந்துத்துவா இயக்கங்களின் இலக்கிய அதிகாரகமாகவே அறிந்து வந்துள்ளேன். அதற்கு அவரே இன்று சாட்சியமும் கொடுத்துள்ளார்.

சமீபத்தில் மறைந்த அசோகமித்திரன் என்ற எழுத்தாளரை ஒட்டி இவர் சொல்லிய கருத்துகள் பொய்யா இல்லையா என்பது கதை பொத்தக தொழிற்சாலைப் பணியாளர்களின் பிரச்சனை. ஆனால் அந்த விசயத்தைப் பற்றிப் பேசும்போது,  இவர் எப்படி சாதியத்தைக் கையாள்கிறார் என்பது இவரைக் காட்டிக்கொடுக்கிறது. http://www.jeyamohan.in/96793#.WNkeP1PytyE


கருத்து, செய்தி என்ற அளவில் மாறுபடுகிறார்கள் என்பதற்காக, தன்னை விமர்சிப்பவர்களை எல்லாம் " அந்த எழுத்தாளரின் சாதிக்காகப் பேசுபவர்கள்" என்று சொல்லுகிறார். அரசியல்வாதிகளில் பலர் இப்படி உள்ளார்கள். ஊரையே அடித்து உலையில் போடும்போது எதையும் சொல்லாதவர்கள், ஏதாவாது பிரச்சனையில் மாட்டிக்கொண்டால் "நான் இன்ன சாதி என்பதால் என்னை இபப்டிச் செய்கிறார்கள். மக்களே பாருங்கள்" என்று கதறுவார்கள். இந்த நபர் இன்று செய்வதும் அப்படித்தான் உள்ளது.

இவருக்கு கப்பம் கட்டாவிட்டால் கடை நடத்த விடமாட்டார் போல. உயிர்க் காப்பீடு எடுப்பது போல தமிழகத்தில் எழுத்து தொழிலில் இருப்பவர்கள்,இவரிடம் காப்பீடு எடுத்து , அதற்கான பிரீமியத்தை கட்டிவிடுங்கள். இல்லாவிட்டால் நீங்கள் மறைந்த சிலமணி நேரத்தில், எதையாவது எழுதி, உங்களின் நண்பர்களை அல்லது குடும்பத்தை கேலிக்குரியவர்களாக மாற்றிவிடும் வல்லமை கொண்டவர்.

ஆம் இவர் தமிழக இலக்கிய அடியாள்.

.

Wednesday, March 22, 2017

கூமுட்டை பெண்கள் - நீயா? நாயா?

மீபத்திய‌ நீயா நாயா நிகழ்ச்சியில் (March 19, 2017)  இருந்து எனக்கு தெரிவது

இது காசுக்காக நடக்கும் தொலைக்காட்சியின் சம்பாதிக்கும் வேலை

  • வேண்டும் என்றே இவர்கள் இப்படி திரைக்கதை தயாரித்து நடிக்கச் சொல்கிறார்கள். 
  • அல்லது மதில்மேல் இருக்கும் அரைகுறைகளை இப்படி தள்ளிவிட்டு விளம்பரங்கள் மூலம் பணம் சம்பாரிக்கிறார்கள்.

அல்லது உண்மையில் இப்படி ஒரு தறுதலைச் சமுதாயம் வள‌ர்ந்து வருகிறது

  • இருப்பாங்களோ இருக்க மாட்டாங்களோ (பெற்றோர்) சாகுறதுக்குள்ள சொத்தை மாத்திக்கொடுத்தா நல்லது. பத்திரம் பதிவுன்னு அலைச்சல் இல்லை.
  • திருமணம் என்பது மண வாழ்க்கையின் தொடக்கம் அல்ல. அடுத்தவன் வயுறு எரிய வைக்கும் ஆடம்பரம்.
  • அதுதான் பொம்பளப்பிள்ளை பொறந்துருக்குல்ல ஏன் சேத்து வைக்கைல. அது உன் குற்றம் இப்ப கடன் வாங்கு.
  • எங்க அப்பா நல்ல வாழ்க்கை வாழவே இல்லை. இன்றும் கடின உழைப்பு உழைக்கிறார். அது போல என் கணவன் கசுடப்படக்கூடாது. அதனால என் அப்பா இன்னும் நாசமாப் போனாலும் எனக்கு 50 பவுன் போட வேண்டும்.
  • சாகுறவரை பென்சன் வருது, செஞ்சா என்ன குறைஞ்சிருவியா நீயி? ( பெற்றோரைப் பார்த்து)
  • 365 சேலைகள் வேண்டும். நாளுக்கு ஒன்றாக கட்ட.
  • சிம்பிள் கொசுட்டின் "வெட்னரி டாக்கடர். அப்பா மேனசர் செஞ்சா என்ன?. கண்டிப்பா செய்யலாம்" பெற்றோரைப் பார்த்து காசு கேட்பவர்கள்.
  • அப்பா கார் ஓட்டி காசு சம்பாதித்தாலும், கடன்பட்டாவது எனக்கு கார் வாங்கிக் கொடு. என்ன குறைஞ்சா போவாங்க. இசுசேட்டட்சு இருக்கில்ல.

பெற்றோருக்கான கேள்வி:
"அண்ணனுக்கு கல்விக்கு காசு உனக்கு சீர் வரிசைக்கு காசு" என்ற ஒற்றை நிலைப்பாட்டில் இவர்களை பிரியாணிக்கு வளர்க்கப்படும் ஆடு போல, இந்த நூற்றாண்டிலுமா நீங்கள் வளர்க்கிறீர்கள்?

தறுதலைப் பிள்ளைகளுக்கு கேள்வி:
திருமணம் என்பது இணைந்து வாழும் வாழ்க்கை. நீங்கள் அதைச் சுற்றியுள்ள சடங்குகளில்தான் இன்னும் இருக்கிறீர்கள். உங்களின் கல்வி உங்களை வேற்று மொழியில் இருந்து ஆடம்பரத்தை அறிந்து கொள்ள கற்றுத்தந்துள்ளதே தவிர வேறு எதையும் அல்ல.

நான் தெரிந்து கொண்ட வார்த்தைகள்:
சங்கீத் , மெகந்தி, லெகங்கா, சிரிவாரி மண்டபம், காசா கிராண்டே வில்லா.

என்ன கருமங்கள் இது? இதற்கும் திருமணத்திற்கும் என்ன தொடர்பு உள்ளது?

இன்றைய‌ திருமணங்களில் ஆண்களும் சிகினா வேலைப்பாடுகள் கொண்ட சுரிதார்களை அணிய ஆரம்பித்துவிட்டார்கள். அதற்கு "குருதா குருமா" என்று பெயர் வைத்துக்கொண்டுள்ளார்கள்.

முட்டாள்களே, 5 பேரை வைத்து டவுசர் போட்ட மாப்பிள்ளையுடன் பீச்சில் எளிய முறையில் இன்றும் திருமணங்கள் நடக்கிறது அம்பேரிக்காவில்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மண்டபத்தில் இன்றும் எளிய திருமணங்கள் நடக்கிறது.

இந்த தறுதலைப் பெண்களை இப்படி ஆக்கியது சம்முவம் என்று சொல்லிவிடாதீர்கள். இதே சம்முவத்தில்தான் நல்ல பெண்களும் உள்ளார்கள். தறுதலைகளாக வளர்த்த பெற்றோர்கள் முக்கிய குற்றவாளிகள் இதில்.


#நீயா_நாயா

Monday, March 20, 2017

காற்றின் தயவு கிடைக்காத பாய்மரக் கப்பல்கள் - ஐரோம் சர்மிளா

ஒரு உரையாடலில் இணைய நண்பர் , "இணையம் வழியாக நாம் காணும் அல்லது காண வைக்கப்படும் 'ஐரோம் சர்மிளா' என்ற கட்டமைப்பு ,பொய்யாக இருந்தால்?" என்று கேட்டிருந்தார். மேலும் ஒரு படி மேலே போய், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் , சமீபத்தில் மறைந்த செயலலிதா அவர்களை, ஊடகம் வழியாக அறியும் மற்ற மாநிலத்துக்காரர்களின் நிலையோடு ஒப்பிட்டுக் கேட்டு இருந்தார். இது தேவையான , மிகவும் முக்கியமான  ஒப்பீடு. பல நேரம் நாம் மறந்துவிடும் ஒன்று.

இன்று எதைப் படிக்க வேண்டும்,  காலை இணையத்தில் எந்த உரையாடல் முன்னிலை வகுக்கவேண்டும் என்று தீர்மானிப்பது நாம் அல்ல. பல நாட்களில்  அன்றைய பொழுதை ஆரம்பிக்கும்போது , நான் ஒரு கருத்து குறித்து எழுத வேண்டும் என்று நினைத்திருப்பேன். முந்திய நாள் இரவே அல்லது சில நாட்களுக்கு முன்னரே திட்டம் போட்ட ஒன்றாக இருக்கும். காலையில் இணையம் வந்தவுடன் , ஏற்கனவே பேசப்பட்டுக்கொண்டு இருக்கும் செய்தியில் அடித்துச் செல்லப்பட்டு , பேச வந்ததை விடுத்து , நானும் பெரும்பான்மை பேசிக்கொண்டு இருக்கும் ஒரு செய்தியில், கருத்து சொல்லி நான் திட்டமிட்ட செயல் தள்ளிப்போகும். இன்று  பல அமரிக்க Talk Show க்கள் அதிபர் 'ட்ரம்ப்' செய்திகளை மட்டுமே பேசிக்கொண்டு இருக்கிறது.

நாம் என்ன பேச வேண்டும், யாரைப் பற்றிப் பேசவேண்டும் என்று ஒரு திட்டவட்டமான பட்டியலைக் கொடுத்து,  அதை மட்டுமே பேச வைத்து , அதைச் சுற்றி விவாதங்கள் அமைவதில், சிந்திக்க வைப்பதில் ஊடகம் வெகு நேர்த்தியாகச் செயல்படுகிறது. ஊடகங்களின் நோக்கம் வணிகம் ,பணம் ஈட்டல். அதுதாண்டி ஏதும் இல்லை. பணம் வந்தபிறகு ஏதாவது செய்து Charity Jeep ல் ஏறிக்கொள்வார்கள்.  மற்றபடி அவர்களின் பயணம் பணம் நோக்கியதாக இருக்கும். இது வணிக நியதிப்படி தவறல்ல. நான், நீங்கள் எல்லாரும் பொருள் ஈட்டீ பிழைத்திருக்கிறோம். நமக்கான நியாயங்கள் நமக்கு, அவர்களுக்கான நியாயங்கள் அவர்களுக்கு. அவர்கள் வணிகர்கள், வணிகம் செய்ய இருக்கிறார்கள் என்ற புரிதலுடன் அவர்களைத் தொடர்வது நல்லது.


The Filter Bubble
https://www.youtube.com/watch?v=p6vM4dhI9I8



 வாரமலர் படித்துக்கொண்டு இருந்த காலத்தில், வாரம்தோறும் 'இளவரசி டயானா' அவர்களின் ஒரு படத்தைப் போட்டு ஏதேனும் ஒரு செய்தி வந்துகொண்டு இருக்கும்.  அதைப் படிக்கும்போதும் , அந்தப் படத்தைப் பார்க்கும் போதும் , என் மனத்தில்  இங்கிலாந்து மற்றும் டயானாவின்  வாழ்க்கை இப்படித்தான் என்ற ஒரு பிம்பத்தை நான் தீட்டிக்கொண்டேன். ஒவ்வொரு வாரமும் , வாரமலர் எனக்கு ஒரு செங்கலை எடுத்துக்கொடுத்து, டயானா பற்றிய மிம்பத்தை எனக்குள் மேலும் மேலும் கட்டிக்கொள்ள உதவி செய்யும். வாரமலர் என்ற‌ வட்டத்தை தாண்டியபிறகு,  எனக்கு வந்து சேர்ந்த செய்திகள், இளவரசி டயானா குறித்து வேறு செய்திகளைச் சொல்லி, என் பழயை புரிதல்களை மாற்றிக்கொள்ள உதவியது.

லருக்கு விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் குறித்த ஒரு பிம்பம் இருக்கும். அந்த பிம்பம் நீங்கள் படித்த, அறிந்த செய்திகளின் செங்கலில் கட்டப்பட்ட ஒன்றாக இருக்கும். நானும் அவரை நேரில் சந்தித்தது இல்லை. அம்மக்களைப் போல நான் போர்கால சூழல்களின் அவலங்களை , இனக்கொடுமைகளை  அனுபவித்ததும் இல்லை. எல்லாம் செவிவ‌ழிச் செய்தி. திண்டுக்கல்லில் படித்துக்கொண்டு இருந்தபோது, எங்கள் வகுப்பில் வந்து சேர்ந்த ஒரு மாணவன் மூலம் எனக்கு வேறு சில பிம்பங்கள் கிடைத்தது.

அப்போது நான் துக்ளக்கும் , அமுதசுரபியும், மஞ்சரியும், வண்ணத்திரையும்,அம்புலிமாமவும் , யுனஃச்கோ கூரியரும் (The UNESCO Courier) , உண்மை இதழும் கலந்துகட்டி வாசித்துக்கொண்டிருந்தேன். என்னை வந்து சேரும் செய்திகள் திக்குமுக்காடச் செய்தாலும் , பிரித்தறிய என்னால் இயலவில்லை. ஆனால் எல்லாவற்றையும் மனதில் சேகரித்து வைத்துக்கொண்டேன். ஒருவேளை பின்னாட்களில் அசை போட உதவலாம் என்று. ஆம் உதவியது. இன்றுவரை உதவுகிறது

துக்ளக் மட்டும் படித்திருந்தால் அல்லது 'இந்தியா டுடே'யில் அப்போது வந்த ஈழம் குறித்த கட்டுரைகள் மட்டும் படித்து இருந்தால் அல்லது இவை ஏதும் இல்லாமல் என்னுடன் படித்த அந்த ஈழத்து மாணவனிடம் மட்டும் பழகி இருந்தால் இன்று எனக்கும் புரிதல் இல்லாமலே போய் இருக்கும் ஈழ விசயங்களில். என் புரிதல் சரியா? தவறா? என்று சொல்லமுடியாது. ஆனால், மையத்தில் இருந்தும் , விளிம்பில் இருந்தும் பார்த்து, அதன் மூலம் நான் எற்படுத்திக்கொள்ளும் பிம்பங்கள் தாண்டி, எனக்கு வாய்க்கப்பெறாத வேறு சில கோணங்களும் இருக்கலாம்,  என்று ஒரு புரிதல் கைவரப்பெற்றது.

'யாசர் அராபத்' உங்களுக்கு தெரிந்து இருக்கும். எனக்கு கிடைத்த முதல்பக்க செய்திகள் எல்லாம், அவர் எப்போதும் ஏதேனும் ஒரு தலைவரைச் சந்தித்துக்கொண்டே இருப்பார் என்பதுபோலவே இருக்கும். யார் இவர்? ஏன் இப்படி தலைவர்களைப் போய் சந்திக்கிறார்? என்று மேற்கொண்டு தேடல் செய்ய அது உதவியது என்பது உண்மை. நான் வெறுமனே வாரமலர் அல்லது பத்திரிக்கைகளின் தலைப்புச் செய்திகளோடு கடந்து போயிருந்தால், இன்று என்னுள் இருக்கும் டயானா, பிரபாகரன் மற்றும் யாசர் அராபத்தின் பிம்பங்கள் அந்த பத்திரிக்கைகள் சொன்ன பிம்பமாகவே இருந்து இருக்கும். இந்த பிம்பங்கள் நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் , உங்கள் மூளையின் ஓரத்தில் இருக்கும். யாராவது இது பற்றிக்கேட்டால்,  உங்களுக்குத் தெரிந்த செய்தியில் இருந்து சிலவற்றைச் சொல்வீர்கள்.

நமக்கு வாய்த்த சன்னல்களின் வழியே,   நமக்குத் தெரிந்த தகவல்கள் அது அவ்வளவே. இது யாரின் குற்றமோ அல்லது குறையோ அல்ல. சன்னல்களில் நீள அகலங்கள் , மேலும் சன்னல் தாண்டி நமக்கான கதவை நாமே திறந்துகொண்டு , எவ்வளவு தூரம் பயணப்பட தயாராகிறோம் என்பதைப் பொறுத்து நம்மிடம் உள்ள தகவல்கள் மாறும்.

'லாய் லாமா' குறித்து இப்படியான ஒரு பிம்பம் உங்களுக்கு இருக்கலாம்.அமெரிக்காவில் மக்களால் பாராட்டப்படும் சிலரில் 6 வது ( Gallup Poll ) இடத்தில் இருப்பவர் 'தலாய் லாமா'. John Oliver - ன் நிகழ்ச்சியின் சார்பாக சிலரை "தலாய் லாமா யார்?" என்று கேட்கிறார்கள். அதற்கு அவர்கள் " அவர் நல்லவர், வல்லவர், வழிகாட்டி , நல்ல கருத்துகளைச் சொல்பவர் , அமைதியானவர்" என்று சொல்கிறார்கள். இங்கே இவர்கள் ஊடகம் தலைப்புச் செய்திகள் வழியாக அவர்களுக்கு கொடுத்திருந்த ஒன்றைச் சொல்கிறார்கள். அடுத்த கேள்வியாக "சரி , தலாய் லாமா என்னதான் செய்கிறார்?" என்று கேட்டால் யாருக்கும் எதுவும் தெரியவில்லை. தெரியவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். பிறகு சிந்தித்து , "இந்துக் கடவுள் ..புத்தக் கடவுள்" என்று யூகம் செய்கிறார்கள்.

Dalai Lama: Last Week Tonight with John Oliver (HBO)
https://www.youtube.com/watch?v=bLY45o6rHm0

இப்படித்தான் , நமது சன்னல்களின் வழியாக வந்துசேரும் தலைப்புச் செய்திகள் சில பிம்பங்களை நம் மூளையில் விட்டுச்செல்லும். நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும். எது தலைப்புச் செய்தியாக வேண்டும், எப்போது அது பேசப்படவேண்டும் என்பதை நாம் முடிவு செய்வது இல்லை. ஊடகங்கள் முடிவு செய்கிறது.

செயலலிதா அவர்கள் இறந்தவுடன் , அவர் நல்லவர் வல்லவர் , இரும்புப் பெண்மணி, பெண்கள்குல வழிகாட்டி, ரோல்மாடல் என்று பல பெண்கள் இங்கே பேசினார்கள். இவர்கள் அனைவரும் செயலலிதாவால் பலகாலம் ஆளப்பட்டவர்கள். வாக்களித்தவர்கள். ஒப்பீட்டளவில்,  தமிழர்கள் 'யாசர் அராபத்', 'இளவரசி டயானா', 'பிரபாகரன்' ஆகியோரைவிட 'செயலலிதா 'அவர்களின் செயல்களை நன்கு அறிந்தவர்கள். ஆனால் அவர்களே ஒரு அதிர்ச்சிகரமான கருத்துகளை வெளியிட்டார்கள். தர்மபுரி பேருந்து எரிப்பு , ஆசிட் வீச்சு, ஆடிட்டர் கலவரம் , அமிர்தாஞ்சன் கலவரம் என்று செய்திகள் வந்ததையும் தாண்டி , இவர்கள் மனதில் ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது என்றால் அந்த ஊடகங்களின் வலிமையை என்ன சொல்வது?

ரு மனிதரை அல்லது தலைவரை எப்படி முன்னெடுக்க வேண்டும் என்பது நேர்த்தியான திரைக்கதை எழுதுவதை விடவும் மேலான சவாலான ஒன்று. ஒரு எடுத்துக்காட்டு பிரதமர் மோடி அவர்களுக்கு அப்படியான ஒரு நல்ல திரைக்கதை அமைப்பாளர்கள் வாய்த்துள்ளார்கள் என்றால் அது மிகையாகாது.

ஐரோம் சர்மிளா அவர்கள் இப்படி தெளிவான திரைக்கதையுடன் , நமது சராசரி ஊடகம் உருவாக்கிய பிம்பமா?
---------------------------------------------

இல்லை நிச்சயம் இல்லை. இவர் ஊடகங்களால் ,  எதை நாம்  ஊடகங்கள் என்று நம்பிக்கொண்டுள்ளோமோ , எது நமது சன்னல்கள் வழியாக நம் மூளையில் பிம்பங்களை உருவாக்கி , நம்மை அவர்கள் சொல்லும் திசையில் சிந்திக்க வைக்கிறதோ,  அவைகள் இவரை கண்டுகொள்ளவே இல்லை. தவிர்த்தார்கள் என்பதே உண்மை.  ஆடம்பரமாக பந்தல்போட்டு ,  கல்யாண உண்ணாவிரதம் இருந்த 'அன்னா கசாரே' போன்ற நடிகர்களுக்கு கிடைத்த ஊடக வெளிச்சம் இவருக்கு ஒருமுறைகூட கிடைத்தது இல்லை.

Sovereignty என்ற ஒன்று தமிழில் 'இறையாண்மை' என்று அறியப்பட்டு அதற்கு ஒருவித வார்த்தைக்கு ஒருவித 'இறைபக்தி' போன்ற என்ற அர்த்தத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.  இறையாண்மை என்பது ஆளுவதற்கான அல்லது ஆண்டுகொள்வதற்கான அதிகார அமைப்பின் அதிகாரத்தைக் குறிப்பது. சுருக்கமாகச் சொன்னால் , இந்தியாவின் இறையாண்மை என்பது இந்திய அரசு இந்தியாவை வேறு எந்த தலையீடுகளும் இல்லாமல் ஆளும் அதிகாரம் என்று சொல்லலாம். இதில் 'அதிகாரம்தான்' பேசப்படுகிறதே தவிர 'புனிதங்கள்' என்று ஏதும் இல்லை. மக்களாட்சியில் மக்களுக்கு அதிகாரம். மக்களின் அரசு செயல்படும்போது மக்களுக்காக அது செயல்படும்.

இந்த இறையாண்மை வார்த்தைக்கு அடுத்து அதிகப் புனிதம் உள்ள மற்ற ஒரு வார்த்தை 'இராணுவம்'. எந்த ஒரு நாட்டிலும், சரியோ, தவறோ அந்த நாட்டின் இராணுவத்தை நோக்கி விமர்சனம் வைக்கவே முடியாது.  அமெரிக்காவில் 'ஈராக் போர் தவறு', 'வியட்நாம் போர் தவறு' என்று வெளிப்படையாக சொல்லும் அரசியல்வாதிகள், பொதுமக்கள்கூட , இராணுவம் என்று விமர்சனம் வைத்துவிடமுடியாது. மிகவும் புனிதமானது இராணுவம் . அவர்கள் செய்யும் செயல்கள் நாட்டுக்காக , அதற்காக அவர்கள் உயிரைப்பண‌யம் வைக்கிறார்கள். எனவே அவர்களை விமர்சிப்பது நடைமுறையில் தவிர்க்கப்படும் ஒன்று. இலங்கையில் இருந்து வந்த அமைதிப்படையை வரவேற்கவில்லை என்பதற்காக 'முதல்வர் கருணாநிதி 'அவர்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இராணுவம் என்ன செய்தது என்பதை விமர்சிக்க இடம் இல்லை. இது எல்லா நாடுகளுக்கும் பொதுவானது.

ஐரோம் சர்மிளா போராடியது இப்படியான இராணுவ நடவடிக்கையை எதிர்த்து Armed Forces (Special Powers) Acts (AFSPA). ஊடகங்கள் அவரை திட்டமிட்டு தவிர்த்தது. உதாரணத்திற்கு நீங்கள் கலெக்டர் முன்னிலையில் சத்தம் போடலாம். ஆனால் காவல் ஆணையாளர் முன்னால் சத்தம் போட்டால், அடிவிழுவதற்கு அதிகம் வாய்ப்புள்ளது. இன்னொரு உதாரணம் 'மேதாபட்கர்' போராடியது சிவில் வழக்கு என்றால் , ஐரோம் சர்மிளா போராடியது இராணுவ வழக்கு. ஊடகங்களால் ஒரு நாட்டின் இராணுவத்தை எதிர்த்துப் போராடும் ஒருவரை அங்கீகரிக்கவே முடியாது. தேசத்துரோகிகளாக கட்டம் கட்டப்படுவார்கள்.

நான் அறிந்துள்ள ஐரோம் சர்மிளா , தலைப்புச் செய்திகளில் வழியே அல்லது கல்யாண உண்ணாவிரத விழாக்கள் மூலம் , மோடி மற்றும் செயலலிதா போல தேர்ந்த திரைக்கதை அமைப்பாளர்களின் திறமையில் ஊடகங்களின் உதவியால் அறியக்கிடைத்த‌ பிம்பம் அல்ல. தேடினால் மட்டுமே அதிக தகவல் கிடைக்கும் தொலைவில்தான் இவர் இன்றும் இருக்கிறார். தகவல்கள் வந்து சேராது நம் சன்னல் வழியாக.

திபெத் பிரச்சனையில் என்ன நிலைப்பாடுகளின் பேரில் இந்தியா 'தலாய் லாமா'விற்கு அடைக்கலம் கொடுத்துள்ளதோ , அதே மாதிரியான ஒரு நிலையில் போராடும் தன் குடிமகளின் கோரிக்கைகளை புறக்கணித்தது. மணிப்பூர் மட்டும் அல்லாமல் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் அனைத்தும் மாற்றாந்தாய் மனப்பான்மையில்தான் மத்தியரசால் நடத்தப்படுகிறது.  மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சுற்றுச்சுவரை ஒட்டி , ஒருகாலத்தில் கடைகள் இருந்தது. அதில் கம்பளி விற்ற இந்தியர்களை , நான் சீனர்கள் என்றே நம்பியிருந்தேன். இந்தியாவின் மைய நீரோட்டத்தில் அவர்கள் இல்லை என்பதும் மீடியா புறக்கணிப்பிற்கு ஒரு காரணம்.

காந்தியின் தேசம் என்ற‌ பொய்மை
http://kalvetu.balloonmama.net/2016/08/blog-post_10.html

ஐரோம் சர்மிளா உண்ணாவிரதத்தை விடுத்து "தேர்தலில் நிற்பேன்",  என்ற போது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. இவர் வெற்றி பெறுவார் என்று நம்பவில்லை என்றாலும் , வெற்றி பெறவேண்டும் என்ற ஆசை இருந்தது எனக்கு. மிகவும் குறைவான வாக்குகள் பெற்று (90) தோற்றது எனக்கு வலியான ஒரு நிகழவுதான்.

ஊடகத்தின் வெளிச்சம் , பணம், அரசியல் விளையாட்டில் வெற்றி பெறவென்றே இருக்கும் விதிகள்  எல்லாவற்றையும்தாண்டி ,இவருக்கு மக்கள் வாக்களிக்காமைக்கு காரணமாக‌  நான் நினைப்பது இரண்டு காரணங்கள்.

முதல் காரணம்:
மக்கள் Armed Forces (Special Powers) Acts (AFSPA), க்குப் பழகிவிட்டார்கள் . இன்றைய தேதியில் வலிகளுடன் வாழ்வை  நகர்த்துவது எப்படி என்று கற்றுக்கொண்டுவிட்டார்கள . அவர்களுக்கு ஐரோம் சர்மிளா தேவைப்படவில்லை.

இரண்டாவது காரணம்:
ஐரோம் சர்மிளா உண்ணாவிரதத்தை விட்டது அவர்களுக்கு ஏமாற்றம். சாய்ந்து கொள்ள, நம்பிக்கை வைக்க என்று இருந்த ஒன்று இல்லாமல் போய்விட்டதின் விரக்தி. மணிப்பூரின் அடையாளமாக , மணிப்பூரிகளின் 'தலாய் லாமா'வாக இருந்த ஒருவர் , சட்டடென்று அந்த நிலையைவிட்டு இறங்கியது, சக மனிதர்களுடன் மனிதராக அரசியலில் நிற்க நினைத்த முடிவை அவர்கள் ஏற்கவில்லை.

நீங்கள் கடவுள் என்றும் நம்பும் பிம்பமானது,  ஒருநாள் தரைக்கு வந்து, 'பப்ளிக் பாத்ரூமிற்கு' வழிகேட்டால், என்ன செய்வீர்கள்? "இவருக்கு எதுக்கு இந்தவேலை" என்று சொல்வீர்கள் அல்லது ஏன்  பீடம் விட்டு இறங்கினாய் என்று கோபம் கொள்வீர்கள். அதுதான் ஐரோம் சர்மிளாவிற்கு நடந்துள்ளது. அவர் சாதரண மனுசியாக இருக்க விரும்புகிறார். ஆனால் மக்கள் அதை அங்கீகரிக்க வில்லை.

தனக்கு சரியென்றுபடுவதை முன்னெடுத்து செல்வதுதான் வாழ்க்கை. மற்ற அனைத்தும் பிழைப்பு. நீங்கள்  உங்கள் விருப்பத்தின்படி வாழ வாழ்த்துகிறேன்.



#Irom Sharmila


Thursday, March 16, 2017

பெரியாரிஃச்ட் - ட்வீட்டர் களேபரங்கள்

சங்கள் , சத்தகுருக்கள், பொரட்சிகள், சூப்பருகள், காமகோடிகள் எல்லாம் என்ன அர்த்தங்களை தருகிறது என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். "நான் ஒரு பெரியாரிஃச்ட்" அல்லது "நான் அம்மாவின் அடிமை" என்று "யாட்கின்" ஆற்றில் மீன்பிடிக்கும் ஒரு 70 வயது வெள்ளக்கார தாத்தாவிடம் நான் சொன்னால் அவர் அதை எப்படி எடுத்துக்கொள்வார்? நிற்க, அப்படியே இதற்குமுன் நான் எழுதிய

உங்களின் கனவுகளுக்கும் கற்பனைக்கும் எல்லையுண்டு
http://kalvetu.balloonmama.net/2010/11/blog-post.html

என்ற பதிவை வாசித்துவிடவும். அப்படியே இதையும்

கம்யூனிசம்-காந்தியம்-நாடி ஜோதிடம் மற்றும் பக்கவாட்டு நவீனத்துவம்
http://kalvetu.balloonmama.net/2007/10/blog-post_26.html

// நிகழ்காலப் பிரச்சனைக்கு தீர்வாக புதிய சிந்தனைகள் வளரவேண்டும். கம்யூனிசம் அல்லது காந்தி சொன்னார் என்பதற்காக கடிவாளத்தைக் கொண்டு காரை ஓட்ட நினைக்கக்கூடாது. கடிவாளத்தை அடிப்படையாக அல்லது உதாரணமாக வைத்து காருக்கு ஒரு தீர்வு காண முற்பட வேண்டுமே தவிர கடிவாளத்துடன் வாழ்க்கை முழுவதும் அலையக்கூடாது.

இசங்களைப் படித்தவர்கள் அங்கேயே நின்றுவிட்டதால்தான் நிகழ்கால சமூகப் பிரச்சனைகளுக்கு புதிய தீர்வுகள் இன்னும் பழைய புத்தகங்களிலேயே தேடப்படுகிறது. //

***

அக்மார்க் ஒரிசினல் கம்யூனிசம் என்பது மார்க்ஃசும் எங்கெலும் சேர்ந்து வெளியிட்ட அறுபது பக்கங்கள் கொண்ட ஒரு அறிக்கை (The Communist Manifesto published 1847 -1848  ) .

ஒகே இப்போது கேட்போம்.

கம்யூனிஃச்ட் என்பவர் யார்?  

  • "1847 - 1848 ல் வெளியான Communist Manifesto யை வாசித்தவர்? 
  • வாசித்து அதற்கு ஆமோதித்துவிட்டு தன் வேலையைப் பார்க்கப் போனவர்?
  • வாசித்து அதற்கு மயங்கி  மார்க்ஃசுக்கும் எங்கெலுக்கும் சிலை வைத்து வணங்கியவர்?
  • வாசித்து அந்த அறிக்கையை பொக்காகப் போட்டு காசு பார்த்தவர்?

இதில் யாரை கம்யூனிஃச்ட் என்பீர்கள்?

மேலே சொல்லியவர்களில் யாரும் கம்யூனிஃச்ட் அல்ல.  யாரையாவது நீங்கள் கம்யூனிஃச்ட் என்று சொல்லியே ஆக வேண்டும் என்றால், எவனொருவன் அந்த 60 பக்க அறிக்கை மொத்தத்தையும் தன் வாழ்வில் இம்மி பிசகாமல் கடைபிடிக்கிறானோ அவனை வேண்டுமானால் "கம்யூனிஃச்ட்" என்று சொல்லலாம்.

வேதியியலில் ஒரு தனிமத்தின் கட்டமைப்பில் எதையாவது கூடக் குறைய மாற்றினால் அதற்கு வேறு பெயர் வைக்கப்படும். ஒன்றில் இருந்து சிலவற்றைப் பிரித்து அல்லது சேர்த்து வேறொன்றை உருவாக்கினால்,  அதை வேறு பெயரில்தான் அறிவியல் அழைக்கும்.  பீரியாடிக் டேபிளில் Atomic Mass-ல்  கொஞ்சம்தான் வித்தியாசம் என்பதற்காக பொட்டாசியத்தையும் (k 39.0983) அர்கனையும்(Argon- Ar 39.948)  ஒரே பேரில் அழைப்பது இல்லை.

அதுபோல மாவோயும், லெனினையும், நம்மூர் நல்லக்கண்ணுவையும் அவர்கள் அந்த 60 பக்க Communist Manifesto யை வாசித்தவர்கள் என்பதற்காக‌ கம்யூனிஃச்ட் என்று ஒரு வட்டத்தில் சேர்க்கவே முடியாது.  மாவோயிசம் , லெனினிசம் , நல்லக்கண்ணிசம் என்று வேண்டுமானல் சொல்லலாம்.

பிரபல கல்லூரி ஓனர் மற்றும் பல நிறுவனங்களின் முதலாளி வீரமணி அவர்களின் கொள்கையை "வீர‌மணியிசம்" என்று  சொல்லலாமே தவிர வேறு பெயரில் அழைக்க முடியாது. கூடாது. சரி 'பெரியாரிஃச்ட்' என்று யாராவது இருக்க முடியுமா என்றால்,  இல்லை. இல்லவே இல்லை. தன் சுய புத்தியைப் பயன்படுத்தி , தனக்கான சரி தவற்றை அறிந்துகொள்ள அல்லது தேடிக்கொள்ள முடியாதவன்  அல்லது பழைய இசங்களில் தன்னை தோய்த்து அடையாளம் காட்டிக்கொள்ள விரும்புகிறவன் , நிச்சயம் பெரியாரைப் புரிந்தவனாக இருக்கவே முடியாது.

எனவே 'பெரியாரிஃச்ட்' என்பது நகைமுரண்.

இராமசாமி அய்யா "இதுதான் 10 கட்டளைகள். இதை தினந்தோறும் ஓதினால் அல்லது கடைபிடித்தால் நீ என் விசுவாசி/அடிமை/பக்தன் என்று போட்டுக்கொள்ளலாம்" என்று சொல்லியது இல்லை.

அவர் சொல்லியவற்றை சீர்தூக்கிப் பார்த்து ,  பகுத்து அறிந்து எப்பொருள் யார் யார் வாய் கேட்ப்பினும் ,  அதில் ஏதாவது  உங்களுக்கு சரி என்று பட்டால் அதை நடைமுறைப்படுத்திக் கொள்ளலாம். அல்லது அவர் சொன்னதில் இருந்து பட்டி டிங்கரிங் பார்த்து "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்றும் உங்களுக்கான புதிய‌ இசங்களை அமைத்துக்கொள்ளலாம். ஆனால் , அப்படி அமைத்துக்கொண்ட பிறகு ,  அதை அவர் சொன்னார் என்று அவர் கருத்தாகச் சொல்ல வேண்டாம். அது உங்கள் கருத்தாகவே இருக்கட்டும்.

ஏதோ ஒரு இடத்தில் இன்று அய்போன் பயன்படுத்தும் ஒரு 6 ஆம் வகுப்பு மாணவருக்கு,  கிரகாம்பெல்லில் இருந்து ஃச்டீவ் வரையும் ,  போனுக்கு செலவிடும் மின்சாரத்தை கடத்தி வர , விஞ்ஞானிகளுக்குள் நடந்த AC vs DC சண்டைகளும் மின்சார வரலாறும், அய்போன்  தயாரிக்க சீன மக்கள் கொடுக்கும் விலையும், அதன் முதலீட்டார்களின் பயன்களும் ஏதும் தெரிந்து இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயம் இல்லை. அந்த மாணவருக்கு அது அவரின் அப்பா கொடுத்த ஒரு gadget  அவ்வளவுதான். அவரிடம் போய் மல்லுக்கு நிற்பது , 'யாட்கின்' ஆற்றில் மீன் பிடிக்கும் 70 வயது வெள்ளைக்கார முதியவரிடம் "அம்மாதான் தமிழகத்தின் நிரந்த முதல்வர் , ஆனா செத்துட்டார், நிரந்தர பொதுச்செயலாளர் சிறையில் இருக்கார்..." என்ற கதைகள்  எல்லாம் தேவை அற்றது.

ட்வீட்டரில் "ராமசாமி என்ன கிழித்தார் எனக்கு?" என்று கேட்கும் பெண்களின் கேள்விகளுக்கு விடை . "அம்மா அவர் ஒன்றும் கிழிக்கவில்லை அப்படி ஒருவர் தமிழ் நாட்டில் பிறக்கவே இல்லை. சுவீட் எடு கொண்டாடு " என்று சொல்லிவிட்டு போக வேண்டியதுதான்.

இராமசாமியை விமர்சிக்க எத்தனையோ இருக்கிறது. அதைவிடுத்து

  • எனக்கு என்ன செய்தார்?
  • கிழவன் குமரியைக் கல்யாணம் செய்யலாமா?
  • பெரியாரைப் பிடிக்கும் என்று சொல்கிறாயே நீ ஒரு கிழவனைக் கட்டிக்கொள்வாயா?

போன்ற மயிர் பிளக்கும் கேள்விகளுக்கு பதில் யாரிடம் உள்ளது? மனைவி இறந்த பிறகு , சட்டப்படி திருமண வயதை அடைந்த பெண்ணை , மனம் ஒப்பி மணப்பதை எதிர்க்கும் சம்முவம் இப்படியான கேள்விகளையும் கேட்கலாம்.

  • ரெண்டு பொண்டாட்டிக்கார கடவுளை வணங்குகிறீர்களே , "அய்யாம் ஆல்ரெடி மேரிடு, பட் அய் லைக் யூ ஆசைக்காக கட்டிக்கொள்கிறேன் " என்று ஒரு குறவர் வந்து கேட்டால் , ரெண்டாவது பொண்டாட்டியாக வாக்கப்படுவீர்களா?
  • அடுத்தவன் பொண்டாட்டியை அபகரித்த கடவுளை வணங்குகிறீர்களே  உங்கள் குடும்பத்தில் அப்படி நடந்தால் அதை ஏற்பீர்களா?
  • சிறு பிள்ளைகளை மணந்தவர்களை புகழ்கிறீர்களே , சிறு பிள்ளைகளை காவுகேட்டவர்களை கடவுள் சொல்கிறீர்களே என்று கேட்டுக்கொண்டே போகலாம். Hypocrisy  க்கு ஏதேனும் விடை உள்ளதா என்ன?

இராமசாமியை விமர்சித்து துவைத்துக் காயப்போடுவதே நீங்கள் அவருக்கு செய்யும் நல்ல செயல். அதற்காக இப்படி மொக்கை வாதங்களை வைக்க வேண்டாம்.

அன்றாடம் நீங்கள் செய்யும் செயல்களுக்கான விடைகளையும் சேர்த்தே கேளுங்கள்.  கடவுள் என்ற கதாபாத்திரம் சொன்னதாகச் சொன்னாலும் நம் வள்ளுப்பாட்டையா சொன்னதைக் கடைபிடியுங்கள். பாட்டையாவையும் கேள்வி கேளுங்கள்.  ஈரோட்டுக் கிழவனின் வாய் என்றாலும் , கடவுளின் வாய் என்றாலும் உங்களின் காதுகளுக்கு வரும் செய்திகளை,  கேள்வியோடு எதிர்கொள்ளுங்கள்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் 
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
.

பேய்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை - கதபொக்

டுகபட்டியில் இருந்து 'தனிச்சியம்' பிரிவு வழியாக 'கொண்டையம்பட்டி' வந்து சேரவேண்டும். ஒரு நாளைக்கு மூன்றுமுறை மட்டுமே இந்த தடத்தில் அரசு பேருந்து இருக்கும். பகல் நேரங்களில், சர்க்கரை ஆலைக்குச் செல்லும் 'ட்ராக்டர் வண்டிக்காரர்' ஏற அனுமதித்தால் , அதில் ஏறி வந்துவிடலாம். 'டயர் வண்டிக்கார‌ (மாட்டு வண்டி with டயர் சக்கரம்) அண்ணனுக்கே உட்கார இடம் இருக்காது. கரும்பை கழுத்துவரை கட்டி இழுத்து வரும் வண்டி அது. எனவே சும்மா வண்டியை வழித்துணைக்குப் பிடித்துக்கொண்டே வரவேண்டும்.

அப்போது 8 ஆம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தேன்.  மதுரைப் பதிப்பாக வரும் 'தினத்தந்தி' மற்றும் 'தினமலருக்கு' இடையே கண்ணுக்கு தெரியாத வாய்க்கா வரப்பு தகராறு நடந்துகொண்டே இருக்கும். சில நேரம் அது வெளியில் தெரியும் அளவுக்கு "ஆதித்தனார் எல்லாருக்கும் அப்பாவா?" என்று தினமலர் அதன் தகுதிக்கு (அதன் தகுதி எனக்கு பின்னாட்களில்தான் தெரிந்தது) பேசும். அந்த வயதில் எனக்கு தினத்தந்தியில் வரும் "சிந்துபாத்" தொடரும் , தினமலரில் வரும் "டார்சன்" தொடரும் பிடிக்கும் என்பதால் , இரண்டுக்குமே இரசிகன். தினமலர் 'வாரமலர்' வந்தவுடன் , தினமலர் ஏதோ தரம் உயர்ந்துவிட்டது போல எனக்குத் தோன்றியது. அப்பாவிடம் சொல்லி , ஞாயிற்றுக்கிழமை மட்டும் தினமலர் வீட்டுக்கு வருமாறு சந்தா செலுத்தி வாரமலர் வாசகனாகிவிட்டேன்.


வாரமலரில் 'ஆர்னிகா  நாசர்' என்ற புனைப்பெயரில் வரும் பேய்க்கதைகள் , டெரர் கதைகள் அப்போது எனக்கு பிடித்திருந்தது. "அடுத்தவாரம் என்ன நடக்கும்?" என்று பள்ளியில் மதிய நேர இடைவேளையில் 'வாவரக்காச்சி' மரத்தடியில் உட்கார்ந்து விவாதிப்போம் நாங்கள். அப்படியான சூழலில் , "நாம் ஏன் டெரர் கதை எழுதக்கூடாது?" என்ற விபரீத ஆசை வந்தது எனக்கு. ஆனால் எனக்கு அந்த தேதியில் பேய் அனுபவங்கள் இருந்தது இல்லை என்பது பெருங்குறை.  நேரடி அனுபவம் இல்லாமல் எப்படி கதை எழுதமுடியும்? கதை புனைவாக இருந்தாலும்,  பார்க்காத பேய்களை கதையில் எப்படி கூட்டிவருவது? என்ற அறிவுச்சிக்கல் எனக்கு.

நீங்கள் பேயைச் சந்தித்து இருக்கிறீர்களா? எனக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை.  ஒருவேளை பேய்களுக்கு என்னை பிடிக்காமல் போய் இருந்திருக்கலாம்.  இத்தனைக்கும் பக்கத்துவீட்டில் எதிர்காலத்தை கணிக்கும் சோதிடரும் , பேய்களையும் , முனிகளையும் பெண்களிடம் இருந்து விரட்டும் சாமியாடியும் (முத்தண்ணனின் தம்பி அவர் பெயர் நினைவிற்கு வரவில்லை) இருந்தார். எங்கள் பக்கத்துவீட்டுச் சோதிடரின் தம்பி பிற்காலத்தில் கேப்டனின் ஆஃச்தான சோதிடராக ஆகிவிட்டார் என்பது தனிக்கதை. நான் பத்தாவது பெயில் ஆவேன் , என்று கணித்துச் சொன்னவர் அவர். அப்பாலிக்கா 435 (445 ??) மார்க்கும் கணக்கில் சதமும் அடித்தபின்னால் அவர் வீட்டு வழி போகும் போதெல்லாம்,  'அய்யோ பாவம் விசயகாந்த்' என்றுதான் தோன்றும். நிசமாகவே கேப்டன் இன்று பாவமாகிவிட்டார்.


அது என்னவோ எங்கள் ஊர் பேய்களும் , முனிகளும் பெண்களை மட்டுமே பிடிக்கும் போல. பக்கத்துவீட்டு சாமியாடி அண்ணன் , பெண்களைப் பிடித்த பேய்களை ஓட ஒட விரட்டி  , 'கல்லணை' போகும் வழியில் உள்ள ஒரு மரத்தில், ஆணி அடித்து முடிப்பார்.  மண்டையை மரத்தோடு சேர்த்து , பெண்ணின் முடியில் சில கற்றைகளை எடுத்து ஆணியில் மரத்தோடு அறைந்து, சடக்கென்று மண்டையை ஆட்டி , முடி  பிடுங்கிக்கொள்ளுமாறு செய்வார்.. இந்த சிகிச்சை , பேயின் 'பிடி' தன்மைக்கு ஏற்ப மாறும். சில பேய்கள் சாமியாடி சொன்னாலே போய்விடும்.  சில பேய்களை தண்ணீர் அடித்து விபூதி அடித்து சில நேரம் கம்பால் அடித்தும் விரட்டுவார். இவரின் இந்த அட்டூழியங்களை அருகில் இருந்து பார்த்து பார்த்து , "எனக்கு பேய்பிடிச்சா சின்னப்பேயா பிடிக்கனும் விபூதி தண்ணீர் அடிப்பதில் ஓடும் பேயாக இருக்க வேண்டும்" என்று ஊர் முனியாண்டியிடம் வேண்டிக்கொள்வேன்.

இவர் ஆணி அடித்த‌ அந்த மரங்களைச் சுற்றி சுற்றி வந்தாலும், 'கூட்டாம்பீ பேள 'நண்பர்களுடன் பலமுறை மரத்தைச் சுத்தி உட்காந்தாலும் , பேய்கள் வந்து சிநேகம் கொள்ளவே இல்லை என்னிடம். அனுபவம் இல்லாமல் எப்படி வாரமலர் ஆர்னிகாக நாசர் மாதிரி பேய்க்கதை எழுதுவது?  எனக்கு அப்போது இது பெரும் சவாலாக இருந்தது. அதுவும் ஆர்னிகா நாசர் ஊட்டி போன்ற குளிர் பிரதேச 'முட்டைக்கோசு' தோட்டங்களை எல்லாம் வர்ணித்து எழுதும்போது,  எங்க ஊர் நெல்வயல் , பாரதிராசா  காதல் கதைகளுக்கு மட்டுமே உதவும் என்று நம்பிவிட்டேன். எங்கள்   ஊர் புளியமரங்கள்கூட என்னை பேய்களுக்கு அறிமுகப்படுத்தவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் எனக்கும் பேய்க்குமான ஏழாம் பொருத்தங்களை . இத்தனைக்கும் சாமியாடி அண்ணன் பேயோட்டும்போது அவருக்கு எடுபிடி வேலைகளைச் செய்வது நானும் அவரின் மகன் சுப்பிரமணியனும்தான்.


இந்த தடைகளை எல்லாம் உடைத்து , பேய்களை நேருக்கு நேர் சந்திக்க வேண்டும் , அந்த அனுபவத்தில் ஒரு ஆர்னிகாநாசர் தரக் கதை எழுதி புகழ் பெறவேண்டும் என்ற வெறி ஏறிக்கொண்டே போனது.  ஊர்தாண்டி 'புதுப்பட்டி' அருகே உள்ள 'செவக்காட்டு' பனங்காட்டில் ஒருவரை முனி அடித்துவிட்டதாக செய்தி வந்தது. இந்த 'செவக்காடு' ஒரு காலத்தில் சோளம் விளைந்த பூமி. வீடுகட்ட செம்மண் தோண்டி தோண்டி , இறுதியில் பெரும் பள்ளங்களும் , கத்தாழைகளும் ,பனைமரங்களும் மட்டுமே நிறைந்த இடமாகி, முனிகள் வாசம் செய்ய தோதான இடமாகிவிட்டது.  நான் சொன்ன அந்த பக்கத்து வீட்டு முத்தண்ணன் வழி சொந்தங்களில் ஒருவர்,  எருமைமாடு மேய்ப்பவர். சுமார் 40 எருமைகள் வைத்து இருப்பார். அவரின் சொந்த எருமைகள் போக , பிறரின் எருமைகளையும் கூலிக்கு மேய்ப்பார். அவரோடு சேர்ந்து சின்ன வயதில் அந்த செவக்காட்டு பகுதிக்கு மாடு மேய்க்க சென்றுள்ளேன். அப்போது அது சோளக்காடு.


செவக்காட்டுப் பகுதி மட்டும் இல்லாமல், கொண்டையம்பட்டி செல்லும்வரை பல பேய்கள் இருப்பதாக 'கள்வேலிபட்டி' சகா ஒருவன் சொன்னான். ஆர்னிகா நாசர் பித்தம் தலைக்கேறி, பேய்களைச் சந்தித்து மல்லிப்பூ மற்றும் கொலுசு சத்தத்தை நேரிடையாக அனுபவிக்க வேண்டும் இப்படி எல்லா ஆசைகளும் சேர்ந்து என்னை ஆட்டுவித்துக்கொண்டு இருந்தது.  வடுகபட்டியில் உள்ள சக ஆசிரிய நண்பரிடம் அப்பா கடன் வாங்கி இருந்தார். அவரிடம் வட்டிப்பணம் கொடுத்துவிட்டு வருவதற்காக என்னை அனுப்பினார். அந்தி சாயும் வேளையில், வடுகபட்டியில் இருந்து வரும் பேருந்தில் திரும்பிவந்துவிடச் சொல்லி என்னை அனுப்பினார். போகும்போது பேருந்தில் சென்றுவிட்டேன். வரும்போது எனது 'பேயாசை' பிடித்து ஆட்ட , வேண்டும் என்றே பேருந்தை தவறவிட்டு விட்டு விட்டு நடக்க ஆரம்பித்தேன்.

'வடுகபட்டியில்' இருந்து 'தனிச்சியம்' வரை வருவது சிக்கல் இல்லை. NH 7 ஃகைவேயில் நடந்து வந்துவிடலாம்.  திண்டுக்கல் செல்லும் பேருந்தில் அடிபடாமல்  இருந்தால் போதும். ஆனால், தனிச்சியம் பிரிவில் இருந்து , 'கொண்டையம்பட்டி' வழியாக ஊர் வந்து சேருவது என்பது இம்சையானது. கரும்புக்காடுகள் சூழ ஆங்காங்கே மண்ட‌வெல்லம் காய்ச்சும் கூடாரங்களில் சிலர் வேலை செய்து கொண்டிருக்க என்று கலவையான வழி. கவலையானதும் கூட. பல மைல் தூரங்களுகுக்கு தவக்கா சத்தம் மட்டுமே துணை.

என் கவலை எல்லாம் பேய்கள் என்னைப் பார்க்க வேண்டுமே என்பதுதான். எனவே , ட்ராக்டர் , டயர்வண்டி எல்லாவற்றையும் தவிர்த்து,  மங்கிய‌ நிலா வெளிச்சத்தில் நடக்க ஆரம்பித்தேன். கொண்டயம்பட்டி தாண்டி மேலச்சின்னன்பட்டி வரும்வரை பேய்கள் என்னைப் பார்க்கவே இல்லை. கள்வேலிபட்டிக்கும் நான் சொன்ன அந்த செவக்காட்டுக்கும் இடையில் பேய்கள் என்னை சந்தித்தால்தான் உண்டு. இல்லையென்றால் ஊர்வந்துவிடும். கடைசிவரை எந்த கொலுசு சத்தமோ மல்லிகை வாசமோ எனக்கு கிடைக்கவே இல்லை.

புதுப்பட்டி அருகே வரும்போது முதல் ஆட்டம் சினிமா பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்த பெண்களின் கொலுசு சத்தமும், அவர்கள் தலையில் வைத்து இருந்த மல்லிகைப்பூ வாசமும்தான் அந்த செவக்காட்டுப் பகுதியில் கிடைத்தது. பேய்கள் என்னைச் சீந்தவே இல்லை.

ஒருவேளை ஊட்டி முட்டைக்கோசு தோட்டங்களில் ஆர்னிகாநாசருக்கு மட்டுமே  பேய்கள் கிடைக்கும்போல என்று மனதைத் தேத்திக்கொண்டேன். வீடு வந்து அப்பாவிடம் மண்டகப்படி அர்ச்சனையும் அம்மாவின்  பூசைகளும் கிடைத்து கிளைக்கதை. அப்ப எல்லாம் செல்போனா இருந்தது? போன ஆள் திரும்ப‌ வரும் அவரை காத்து இருப்பதைத் தவிர வேறு வழியே இல்லை. திரும்பி வந்துவிட்டால் சாத்துவார்கள் ஏன் போனே என்று. திரும்பி வராவிட்டால் ஊரே கவலைப்பட்டு ஆத்துப்பக்கம் போய் பிணந்தேட ஆரம்பித்துவிடுவார்கள்.

இருந்தாலும் நான் சில பேய்களைச் சந்தித்ததாக கதைகட்டி , அடுத்த நாள் ப‌ள்ளிக்கூட வாவரக்காச்சி மரத்தில் கதை கட்டிவிட்டேன். உணவு இடைவேளைக்குப் பிறகும் கதை தொக்கி நின்றதால், கதை எழுதும் நிலை வந்துவிட்டது. நானே ஏற்படுத்தினேன் என்று சொல்லக்கூடாது அது எழுத்தாளருக்கு அழகல்ல.  வாரம் ஒரு பகுதியாக திகில்கதை எழுதி கதையின் தொடர்ச்சி கெட்டுவிடாமல் இருக்க அவ்வப்போது செவக்காட்டுப்பக்கம் நடந்துகொண்டு இருப்பேன்.  நண்பர்களுக்குத்தான் திகில் பிடித்தது எனக்கு கடைசிவரை பேய்பிடிக்கவே இல்லை.

#கதபொக்

Friday, February 24, 2017

பாலினம்மாறியவர்கள் -Transgenders - Restroom -NC HB2 law

நான் வசிக்கும் வடக்கு கெரொலைனா (North Carolina) மாநிலத்தில் சென்ற ஆண்டு ஒரு பெரும் பிரச்சனை நடந்தது. அது அமெரிக்க அளவில் தேசிய விவாதத்திற்கு உள்ளாகி, மாநிலத்திற்கான கவர்னர் தேர்தலில் முக்கிய விசயமாகி, ஆண்டு கொண்டு இருந்த கவர்னரை (Pat McCrory) அடுத்த தேர்தலில் கவிழ்த்துவிட்டது.

வடக்கு கெரொலைனா மாநிலத்தில் உள்ள சார்லட் ( Charlotte ) என்ற நகரத்தின் நகராட்சி ஒரு சட்டத்தை இயற்றுகிறது. அதன் சுருக்கம் இதுதான். "சார்லட் நகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் , ஒருவர் தன்னை யாராக உணர்கிறாரோ , இன்று புற வடிவத்தில் யாராக இருக்கிறாரோ அந்த அடிப்படையில் ஓய்வறையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்". இதுதவிர வேறு சில திட்டங்களையும் அந்த சட்டம் சொல்லியுள்ளது. ஆனால் இதுதான் முக்கியமான விவாதமாகிவிட்டது.

இப்படியான சட்டத்தை எதிர்த்து , மாநில அரசாங்கம் ஏதாவது செய்ய வேண்டும் என்று ஒருதரப்பு மக்கள் மாநில ஆளுநரிடம் முறையிடுகிறார்கள். ரிபப்ளிகன் ஆளுநர் , ரிபப்ளிகன் செனட்(மாநில செனட்) பெரும்பான்மை என்று ரிபப்ளிகன் பெரும்பானமை கொண்ட மாநில அரசு , இதை உடனே பரிசீலிக்கிறது.  மிக அவசரமாக ஒரு சட்டத்தை மாநிலங்களவையில் நிறைவேற்றிவிடுகிறது. அந்த சட்டம்தான் HB2 என்று சொல்லப்படும் House Bill 2 . இந்த சட்டத்தின் முக்கிய அம்சம் இதுதான்.
  • நகராட்சிகள் அவைகளுக்கான சட்டம் இயற்றும் அதிகாரத்தை மாநிலம் தடுக்கிறது. 
  • மாநிலத்தின் எல்லைக்குட்பட்ட  அளவில் ஒருவர் பிறக்கும்போது என்னவாக இருந்தாரோ , அந்த‌ அடிப்படையில் மட்டுமே ஓய்வறையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
  • இது மேலும் ஒரு படி சென்று , பாலினமாறிவர்கள் வேலை செய்யும் இடத்தில் பிரச்சனைகளைச் சந்தித்தால் அவர்கள் மாநில நீதிமன்றங்களை அணுகவும் முடியாது என்றும் சொல்லிவிட்டது. 
இந்த சட்டம் அவசர கோலத்தில் ஒரே நாளில் , எந்த விவாதமும் இன்றி அமலாக்கம் செய்யப்படுவிட்டது. முக்கிய விசயங்களை படிக்காமலேயே கையெழுத்துப் போட்ட கவர்னர், தான் அனுமதித்த சட்டத்தில் இருந்து ஒன்றை விலக்க தானே மற்ற‌ ஒரு ஒரு ஆணையை Executive Order  வெளியிட வேண்டிய சூழலுக்கு உள்ளாகிறார்.
  • சார்லட் நகராட்சி சட்டம். 
  • அதை  மாற்ற மாநிலச் சட்டம். 
  • மாநிலச் சட்டத்தில் நடந்த ஒரு குளறுபடியை அகற்ற கவர்னரின் தனியான ஆணை (Executive Order) என்று இடியாப்பச் சிக்கலாகிக் கோண்டே போனது.
இந்த HB2 சட்டத்தை  எதிர்த்து பல வணிக நிறுவனங்கள் தங்களின் முதலீடுகளை நிறுத்திவிடுகிறது. உதாரணம்: PayPal அதன் விரிவாக்கத்தை நிறுத்திவிட்டது.  பல விளையாட்டுப்போட்டிகள் நாங்கள் இனிமேல் இந்த மாநிலத்திற்கு வரமாட்டோம் என்று சொல்லிவிட்டார்கள். N.C. Sports Association urges HB2 repeal to avoid losing NCAA bids from 2018-22 . பல இசை நிகழ்ச்சிகள் இரத்து செய்யப்பட்டுவிட்டன.  இப்படி மாநிலத்திற்கு பெரும் அளவில் பொருளாதாரச் சிக்கல் வந்து சேர்ந்தது.

அப்போது மாநில சட்டத்துறைக்கு பொறுப்பாக இருந்த North Carolina Attorney General " Roy Cooper " டெமாக்ரடிக் கட்சியைச் சார்ந்தவர். அவர் தான் இந்த புதிய சட்டத்தை ஆதரிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டார்.
  • மாநிலம் சட்டம் இயற்றுகிறது. 
  • ஆனால் அந்த மாநிலத்தின் Attorney General அதை தான் மதிக்கப்போவது இல்லை என்றும் அதை காக்க (To defend in federal court) எந்த முயற்சியும் செய்யப்போவது இல்லை என்றும் சொல்லிவிட்டார்.
இந்த சந்தடியில் அப்போது அதிபராக இருந்த ஒபாமா அவர்கள், ஒரு சுற்றறிக்கையை விடுகிறார். "மத்திய அரசாங்கத்தின் உதவி பெறும் பள்ளிகள், மாணவர்களை அவர்களின் இன்றைய அடையாளத்தின் அடிப்படையில் ஓய்வறையைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்" . இதை எதிர்த்து பல மாநிலங்கள் நீதி மன்றத்தை அணுக, இது பெரும் தேசிய அளவிலான விவாதமாகிவிட்டது.

இன்றைய நிலை:
  1. இந்த HB2  சட்டத்தால் பழைய Republican கவர்னர் Pat McCrory மறு தேர்தலில் தோற்கிறார்.
  2. அப்போது மாநில சட்டத்துறைக்கு பொறுப்பாக இருந்த North Carolina Attorney General " Roy Cooper " இதை முக்கிய விசயமாக்கி கவர்னர் தேர்தலில் களம் கண்டு இன்று புதிய கவர்னராகிவிட்டார்.
  3. சார்லட் நகரம் அதன் சட்டத்தை திரும்பப் பெற்றுக்கொண்டுவிட்டது. (அப்படிச் செய்தால் மாநில அளவிலான HB2 சட்டமும் திரும்பப் பெறப்படும் என்ற நோக்கத்தில்..to reduce bigger damage to LGBT community)
  4. ஆனால் புதிய ஆளுநர் டெமாக்ரடிக்  கட்சிக்காரராக இருந்தாலும், ரிபப்ளிகன் செனட்(மாநில செனட்) பெரும்பான்மை கொண்ட அரசாங்கம் HB2 வை திரும்பப்பெறவில்லை இன்றுவரை. புதிய கவர்னர் முயன்று கொண்டே உள்ளார்.
  5. புதிய அதிபர் ட்ரம்ப் , ஒபாமாவின் சுற்றறிக்கையை திரும்ப பெற்றுக்கொள்கிறார்..தேசிய அளவில்.
அமெரிக்க சட்டப் பிரச்சனைகளைத் தாண்டி எது சரி எது தவறு என்று பார்ப்போம்.

பாலினம் மாறுதல்:
இதை யாரும் விரும்பிச் செய்வது இல்லை. என்னை ஒரு பெண்ணாக மாற்றிக்கொள்ள எனது எண்ணங்களோ அல்லது உடலோ விரும்புவது இல்லை. ஆனால்  ஒருவர்  அப்படியான நிலைக்கு வருகிறார் என்றால்,  அது ஏதோ "இங்கி பிங்கி பாங்கி" போட்டு எடுக்கும் விடை அல்ல.

உடலில் நடக்கும் இராசாயன மாற்றங்கள் அப்படியான ஒன்றைத் தூண்டுகிறது. அப்படியான இயற்கை மாற்றங்களுக்கு உட்படுபவர்கள் , அவர்களின் உடலளவில் வெளிப்புற மாற்றங்களைக் கொண்டுவருவது என்பது, சமூகம் அவர்களை, அவர்கள் இன்று எப்படி உள்ளார்களோ அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஒரு முயற்சி. ஆணாக இருந்து பெண்ணாக மாறுபவர் அல்லது பெண்ணாக இருந்து ஆணாக மாறுபவர்  தன்னையும் அடுத்த பெண்கள் / ஆண்கள் அவர்களில் ஒருவராக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புவது , அவருக்கான ஒரு சமூக அங்கீகாரத் தேடல். இதில் தவறேதும் இல்லை.

ஒருபால் உறவில் (Homo Sexual) இருப்பவர்களுக்கு இந்த HB2 அடையாளக் குழப்பம் இல்லை.
  • ஆணாக இருந்து ஆணை விரும்பும் ஆண்கள் , ஆண்கள் ஓய்வறையப் பயன்படுத்துகிறார்கள்.
  • பெண்ணாக‌ இருந்து பெண்ணை விரும்பும் பெண்கள் , பெண்கள் ஓய்வறையப் பயன்படுத்துகிறார்கள்.
பாலினம் மாறிவர்களின் (Transgender) அடையாளச்  (Identity )சிக்கல்தான் இங்கே பேசப்படுகிறது.

"தனக்கு வந்தால்தான் காய்ச்சலும் தலைவலியும் தெரியும்" என்பது போல இதை மற்றவர்கள் முழுதுமாகப் புரிந்து கொள்ளமுடியாது. ஒரு ஆண் குழந்தைப்பேறு மருத்துவர் (Gynecologist) , அறிவியல் ரீதியாக குழந்தைப் பேறு பற்றி தெரிந்து இருந்தாலும், குழந்தைகளை பிரசவித்தல் முறையில் நிபுணராக இருந்தாலும் , உணர்வளவில் பிரசவிக்கும் பெண்களை புரிந்தவர் என்று சொல்ல முடியாது. அதுவே மருத்துவர் (Gynecologist) பெண்ணாக இருந்தால், அதில் அறிவியலும் , உணர்வும் கலந்து இருக்கும்.

எனவே நானோ நீங்களோ என்னதான் பல்ட்டி அடித்தாலும் நாம் சந்தித்திராத‌ ஒன்றை முற்றிலும் புரிந்துகொள்ள முடியாது உணர்வளவில்.

அமெரிக்காவில் ஓய்வறைப் பிரச்சனை பெரும் பிரச்சனையாகி வருகிறது.

இரண்டு நிலைப்பாடுகள்
  • ஆணுக்கான ஓய்வறையை பயனபடுத்த தகுதி அவரின் பிறப்புச் சான்றிதழலில் (Birth Certificate) ஆண் என்று இருக்க வேண்டும்.
  • பெண்ணுக்கான ஓய்வறையை பயனபடுத்த தகுதி அவரின் பிறப்புச் சான்றிதழலில் (Birth Certificate) பெண் என்று இருக்க வேண்டும். 
இதுதான் கன்சர்வேட்டிவ் (Conservative) மக்கள் மற்றும் மதக்காரர்களின் (religious) நிலை.
  • ஓய்வறையின் பிரிவு அல்லது எந்த ஓய்வறை என்பது ஒருவர் இன்று மனதளவில், உடலளவில் என்னவாக இருக்கிறார்  என்றுதான் இருக்கவேண்டுமே தவிர , அவர் பிறக்கும்போது என்ன புறக்குறியோடு பிறந்தார் என்பதல்ல. 
இது மற்றவர்கள் வைக்கும் வாதம்.

இதில் எது சரி எது தவறு என்பது சுலபமாகச் சொல்லிச் செல்லும் விசயம் அல்ல. இரண்டிலுமே சரி விகிதத்தில் சாதக பாதகங்கள் உள்ளது.

பிறப்புச் சான்றிதழ் அடிப்படையில் உரிமை தான் சரியான தீர்வு என்றால்:

ஆண்களுக்கான ஓய்வறை:
பிறக்கும்போது ஆணாகப் பிறந்தவர் இன்று தன்னை பெண்ணாக‌ மாற்றிக்கொண்டு  (உடல் & உடை) பெண்களுக்கான புற அடையாளங்களுடன் இருப்பவர், தனது பிறப்புச் சான்றிதழ் தன்னை ஆண் என்று சொல்கிறது என்ற அடிப்படையில் அங்கு சென்றால் அவருக்கும் மற்றவர்களுக்கும் அந்த இடம் உகந்ததாக இருக்குமா?

பெண்களுக்கான ஓய்வறை:
பிறக்கும்போது பெண்ணாகப் பிறந்தவர் இன்று தன்னை ஆணாக‌ மாற்றிக்கொண்டு  (உடல் & உடை) ஆண்களுக்கான‌ புற அடையாளங்களுடன் இருப்பவர், தனது பிறப்புச் சான்றிதழ் தன்னை பெண் என்று சொல்கிறது என்ற அடிப்படையில் அங்கு சென்றால் அவருக்கும் மற்றவர்களுக்கும் அந்த இடம் உகந்ததாக இருக்குமா?

இன்று என்னவாய் இருக்கிறாய் என்ற‌ அடிப்படையில் உரிமை தான் சரியான தீர்வு என்றால்:

ஆண்களுக்கான ஓய்வறை:
பிறக்கும்போது பெண்ணாகப் பிறந்தவர் இன்று தன்னை ஆணாக‌ மாற்றிக்கொண்டு  (உடல் & உடை) ஆண்களுக்கான‌ புற அடையாளங்களுடன் இருப்பவர், தனது பிறப்புச் சான்றிதழ் தன்னை பெண் என்று சொன்னாலும் , இன்று தான் என்னவாக இருக்கிறார் அடிப்படையில் அங்கு சென்றால் அவருக்கும் மற்றவர்களுக்கும் அந்த இடம் உகந்ததாக இருக்குமா?

பெண்களுக்கான ஓய்வறை:
பிறக்கும்போது ஆணாகப் பிறந்தவர் இன்று தன்னை பெண்ணாக‌ மாற்றிக்கொண்டு  (உடல் & உடை) பெண்களுக்கான‌ புற அடையாளங்களுடன் இருப்பவர், தனது பிறப்புச் சான்றிதழ் தன்னை ஆண் என்று சொன்னாலும் , இன்று தான் என்னவாக இருக்கிறார் அடிப்படையில் அங்கு சென்றால் அவருக்கும் மற்றவர்களுக்கும் அந்த இடம் உகந்ததாக இருக்குமா?

இதில் எது சரியானது? சிக்கல் இரண்டிலும் உள்ளது.

பெண்களும் (பிறப்பில் இருந்து இன்றுவரை பெண்ணாகவே உள்ள) , குழந்தைகளும் பாதிக்கப்படுவார்கள் என்றால் , அந்த பாதிப்பின் காரணிகள் இரண்டிலும் உள்ளது. எதை சரி என்று சொல்வது அல்லது எதை தவறு என்று சொல்வது?

இன்று என்னவாய் இருக்கிறார்கள் உணருகிறார்கள் என்ற அடிப்படையில் ஓய்வறையைப் பயன்படுத்துவதே சரியானதாக இருக்கும். என்பதே என் நிலை.

.