Tuesday, June 27, 2006

We killed Rajiv, confesses LTTE

சிதம்பர ரகசியம போல் இருந்த ராஜீவ் கொலை இன்று புலிகளின் அமைப்பினால் பகிங்கரமாக ஒத்துக்கொள்ளப்பட்டு மன்னிப்பும் கேட்கப்பட்டு இருக்கிறது.

http://timesofindia.indiatimes.com/articleshow/1686574.cms



  • "As far as that event is concerned...I would say it is a great tragedy... a monumental historical tragedy... which we deeply regret, and we call upon the government of India and people of India to be magnanimous to put the past behind... and to approach the ethnic question in a different perspective," Balasingham said.

அதற்கும் மேலாக பாலசிங்கம் கூறியதும் கவனிக்கப்படவேண்டும்.

  • Asked if the LTTE could promise that it would not commit such acts again, Balasingham added: "We have made pledges to the government of India that under no circumstance will we act against the interests of the government of India."

எனது முந்தைய பதிவில் "...ஒரு வாதத்திற்கு இந்தியாவின் தற்போதைய பிரதமர் புலிகளுடன் பேசி, புலிகளும் ஒத்துக் கொண்டு ஒரு முடிவை ஏற்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த முடிவின் காரணமாக புலிகளுக்கு வேறு வகையில் ஒரு பெரிய இழப்பு வந்தால் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட இப்போதைய பிரதமரும் கொல்லப்படுவாரா?.." என்ற கேள்வியை எழுப்பி இருந்தேன். அந்த சந்தேகமும் தீர்க்கப்பட்டது.

புலிகளின் போக்கில் இது ஒரு நல்ல மாற்றமே. இருந்தாலும் தேடப்படும் குற்றவாளியாக புலித்தலைமை இருக்கும் வரை இந்தியா உடனடி கொள்கை மாற்றங்களை அறிவிக்காது.

  • In another interview, minister of state for external affairs Anand Sharma said it would be impossible to put the past behind, as Balasingham suggested, because India had "rule of law" and it could not be seen to be condoning the politics of violence by rehabilitating the LTTE.

நான் விரும்பும் ஆறு விசயங்கள் பதிவில் சொன்னது போல் புலித்தலைமை தன்னை முழுவிசாரணைக்கு உட்படுத்திக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.

புலிகளின் அமைப்பு போன்ற எந்த ஒரு அமைப்பும் நல்ல நோக்கத்திலேயே அரம்பிக்கப்படுகின்றன.புலிகளின் செயல்பாட்டிற்கு ஞாயமான காரணங்கள் பல இருந்த போதும் அவர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்ட யாரும் இல்லை. புலி ஆதரவாளர்கள் இப்போதும் வைக்கும் வாதங்கள்.

  • நாங்கள் பஞ்சாப் அல்ல, புலிகள்.
  • முதலில் இந்தியா மன்னிப்பு கேட்கவேண்டும்.
  • இந்தியாவின் உதவி தேவை இல்லை.

"இந்தியா இந்த தவறு செய்தது, அதற்காகத்தான் ராஜிவைக் கொன்றோம் "

என்று இதுநாள் வரை புலிகள் பகிங்கரமாக எங்கும் சொல்ல வில்லை.அதற்காக இந்திய ராணுவம் எதுவுமே செய்யவில்லை என்று அர்த்தம் கொள்ளக்கூடாது.இந்திய ராணுவம் செய்த அத்து மீறல்கள் இன்னும் புலிகளால் குற்றச்சாட்டாக பதிவு செய்யப்படவில்லை. ஏன் என்ற காரணம் புலித்தலைமை மட்டுமே அறிந்த ஒன்று.புலி ஆதரவாளர்களால் வைக்கப்படும் மேலே சொன்ன வாதங்கள் எந்த வகையிலும் இப்போதுள்ள சூழலுக்கு உதவாது.

இந்தியாவின் தவறுகளும் பதிவு செய்யப்பட வேண்டும்.


இந்தியாவின் தவறுகள் பதிவு செய்யப்படும் பட்சத்தில் இந்திரா காந்தி கொலையின் போது சீக்கிய சமுதாயத்தின் மீது பிரயோகிக்கப்பட்ட வன்முறைக்கு மன்னிப்பு கேட்ட இப்போதைய பிரதமர் நிச்சயம் மன்னிப்பு கேட்பார்.

The LTTE statement comes as the outfit finds itself with virtually no friends, especially after the European Union banned it last month.

காரணம் எதுவாக இருந்தாலும் புலிகள் முதன் முதலாக தாங்கள் செய்த செயலுக்கு மன்னிப்பு கோருவது என்பது நல்ல பாதையே.எனது ஆறு ஆசைகளும் நிறைவேறும் என்ற நம்பிக்கை துளிர்விட ஆரம்பித்து இருக்கிறது.

IPKF
http://www.rediff.com/news/2000/mar/23lanka.htm

Friday, June 23, 2006

குழந்தைகளின் கல்லறையின் மேல் கோபுரங்கள்

புலிகள் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவைப் படு கொலை செய்ததற்கு இதுவரை நம்பப்படும் காரணம் ஒன்றே. ராஜீவ் காலத்தில் அனுப்பப்பட்ட இந்தியப் அமைதிப் படைகள் இலங்கை மண்ணில் நடத்திய கொடுமைகள்.இதைத் தவிர வேறு காரணங்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. தமிழ்சசியின் பதிவில் இதனை வேறுவிதமாக பார்க்கிறார்.

//..ஒருவர் ராஜீவ் காந்தி மட்டுமே. அவரைத் தவிர இந்தப் பிரச்சனையில் ஆர்வம் காட்டக் கூடிய இந்திய தலைவர்கள் யாருமே இல்லை. அவரை அகற்றுவது மூலம் இந்தியாவை நிரந்தரமாக இந்தப் பிரச்சனையில் இருந்து விலக்கி வைக்க முடியும் என்று பிரபாகரன் முடிவு செய்தார்.//

அவர் அவர்களுக்கு அவர்களின் அனுபவங்களே பாடம்.எட்டாம் வகுப்பு படிக்கும் போது, இதே புலிகளுக்காக பல முறை தொண்டை கிழிய கத்தி, ஊர்வலம் போய் நிதி சேகரிதவன் நான். அப்போது நான் படித்த அரசாங்கப் பள்ளியே ஜெயவர்த்தேனேக்கு எதிராக ஊர்வலம் ஏற்பாடு செய்தது.என்னுடன் பத்தாம் வகுப்பில் படித்த இலங்கைத் தமிழ் நண்பன் ஒருவன் மூலம் அப்போதே இலங்கையைப் பற்றிய ஒரு புரிதல் இருந்தது. அப்போது இருந்த தமிழக முதல்வர் (எம்.ஜி.ஆர் ) புலிகளுக்கு ஆதரவாகவே இருந்தார்.ஒட்டு மொத்த தமிழகமுமே புலிகளைத் தங்களில் ஒருவராகத்தான் பார்த்தது. திண்டுக்கல் அருகே சிறுமலையில் புலிப்பயிற்சி முகாம் இருந்ததாக நான் பள்ளியில் படித்த காலங்களில் ஒரு பேச்சு இருந்தது.ஆனால் இப்போது என்னால் புலிகளை ஒரு நல்ல இயக்கமாகப் பார்க்க முடியவில்லை.அதற்கு ராஜிவ் கொலை ஒரு முக்கியக் காரணம் .

சரி ராஜீவ் என்ன தவறு செய்தார் என்று பார்ப்போம்.

புலிகள்,இலங்கை அரசாங்கம் மற்றும் இந்தியா ஆகிய மூன்றும் மனம் ஒப்பி செய்த நடவடிக்கையே அமைதிப்படை அனுப்பும் முடிவு. ஒரு இராணுவத்தை நிர்வகிக்கும், அதிலும் பல நாட்டு இராணுவங்களின் போர்க்கால செயல்பாடுகள் பற்றி அறிந்த புலிகளின் விருப்பத்தின் பேரிலேயே அமைதிப்படை இலங்கை சென்றது.மக்களும் அதனை வரவேற்றார்கள். அமைதிப்படை வந்த போது மக்கள் கூட்டம் ஆரவராமாக வரவேற்ற உண்மைகளை மறுத்துவிட முடியாது.இவ்வாறு சென்ற படை தவறு செய்த போது அதற்கான தண்டனை ராஜிவுக்கு மட்டுமே. அதுவும் புலிகளின் வழக்கமான வழியில்.ராஜிவோ அல்லது எந்த ஒரு மனிதனோ அவனால் வழி நடத்தப்படும் ஒரு குழுவின் செயல்களுக்கு தார்மீகப் பொறுப்பு ஏற்க வேண்டும். அதில் மாற்றுக் கருத்து இல்லை.ஆனால் அதற்கான தண்டனை கொலைதான் என்றால் எவனும் எந்தப் பேச்சு வார்த்தையிலுமே ஈடுபடமாட்டான்.

கொலைக்கான காரணம் எதுவாக இருந்தாலும் புலிகள் ராஜிவைக் கொன்றது திட்டமிடப்பட்டு செய்த ஒன்று. இதனால் வரும் எதிர்கால இழப்புகளை சீர்தூக்கிப் பார்க்காமல் இவ்வளவு பெரிய செயலைச் செய்ய புலிகள் முட்டாள்கள் கிடையாது.இந்தியாவை இலங்கைப் பிரச்சனையில் இருந்து நிரந்தரமாக விலக்க வேண்டும் அல்லது அமைதிப் படைகள் செய்த தவறுக்கு பலி வாங்க வேண்டும் அல்லது இரண்டிற்காகவும் புலிகள் நடத்திய கொடூரமே ராஜீவின் கொலை.ராஜீவைக் கொல்வதன் மூலம் இந்தியாவை நிரந்தரமாக இந்தப் பிரச்சனையில் இருந்து விலக்கி வைக்க விரும்பிய புலித் தலைமை இப்போது இந்தியாவின் தலையீட்டை விரும்புகிறதா? ஒரு வாதத்திற்கு இந்தியாவின் தற்போதைய பிரதமர் புலிகளுடன் பேசி, புலிகளும் ஒத்துக் கொண்டு ஒரு முடிவை ஏற்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த முடிவின் காரணமாக புலிகளுக்கு வேறு வகையில் ஒரு பெரிய இழப்பு வந்தால் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட இப்போதைய பிரதமரும் கொல்லப்படுவாரா?

புலிகளின் ஆதரவாளர்கள் எடுத்துக்காட்டும் உதாரணம் இந்தியர்களாலேயே கொல்லப்பட்ட இந்திராவும் ,மகாத்மா காந்தியும். இவர்களின் கொலைக்குப் பிறகும் அதே இன மக்கள் இந்தியாவில் வாழுகிறார்கள்.அவர்களை எல்லாம் மன்னித்த இந்தியா ஏன் புலிகளையும் மன்னிக்கக்கூடாது. இவர்கள் ஒன்றை வசதியாக மறந்து விடுகிறார்கள். இந்திரா மற்றும் மகாத்மா வின் கொலைகளில் குற்றவாளிகள் விசாரிக்கப்பட்டனர்.இந்திய மக்களால் நடத்தப்படும் அரசாங்கத்தின் முன்னால் இது விசாரிக்கப்பட்டது.
ரரஜீவின் கொலை வழக்கிலேயே குற்றம் சாட்டப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் மன்னிக்கப்பட்டவர்கள் உண்டு. கர்ப்பிணி என்பதற்காக நளினிக்கு மனம் இறங்கியதும் அதே ராஜீவின் மனைவிதான்.

நான் ஏற்கனவே சொன்னது போல் காயங்களை மறந்து இனி வரும் சமுதாயம் நன்றாக இருக்க தியாகங்கள் செய்ய தயாராக இருக்க வேண்டும்.

புலிகளின் தலைமை தேடப்படும் குற்றவாளியாகவே இன்னும் இருக்கிறது.சென்ற முறை நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் ராஜீவின் கொலை பற்றிய கேள்விக்கு அவர் "அது ஒரு வருத்தமான நிகழ்வு" என்று மட்டுமே சொன்னதாக நினைவு.இது போல் ராஜிவுக்கும் அமைதிப்படையின் செயல்பாடு ஒரு வருத்தாமான நிகழ்வு என்று சொல்ல சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டதா என்று தெரியவில்லை.புலித்தலைமை ராஜீவின் கொலைக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.அப்படி ஒரு விசாரணை நடந்தால் இந்தியப் படைகள் செய்த தவறுகளும் நிரந்தராமாக நீதி மன்றங்களில் பதிவாக ஒரு வாய்ப்பு உள்ளது.


இலங்கையில் துன்புறும் மக்களுக்கு நிச்சயம் ஒரு நல்ல விடிவு வேண்டும் இதில் மாற்றுக் கருத்து இல்லை.புலித் தலைமை சொல்லியது போல் என்னால் "இலங்கைப் பிரச்சனையும் ஒரு துன்பமான நிகழ்வு"என்று சொல்லி நழுவதற்கு மனம் வரவில்லை.நல்ல மனிதனால் அப்படி சொல்ல முடியாது.

குழந்தைகளின் வாழ்க்கையில் நெருங்கிப் பழகி வரும் என்னால் அப்பாவி பிஞ்சுகளின் கொலைகளை இனம்/மதம்/மொழி வேறுபாடு காட்டி வருத்தப்பட முடியாது.அது தமிழ் ஈழக்குழந்தையாக இருந்தாலும் சரி சிங்களக் குழந்தையாக இருந்தாலும் சரி ஈராக் குழந்தையாக இருந்தாலும் சரி.குழந்தைகள் குழந்தைகளே.

மாற்று இயக்கங்கள் எல்லாம் புலிகளால் திட்டமிடப்பட்டு அழிக்கப்பட்டுவிட்ட நிலையில் ஈழத் தமிழர்களுக்கு அவர்களைவிட்டால் வேறு வழியும் இல்லை.

இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வாக நான் முன்வைப்பவையே ப்போது ங்கே நான் விரும்பும் ஆறு.

1.இந்தியாவிடம் புலித்தலைமை ராஜீவின் கொலைக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.தன்னை முழு விசாரணைக்கு உட்படுத்த தயராக இருக்க வேண்டும்.

2.விசாரணையில் இந்தியாவின் தவறுகள் பதிவு செய்யப்பட்டு நேர்ந்த தவறுகளுக்கு இந்தியா பாதிக்கப்பட்ட மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

3.புலிகள் இந்தியாவின் உதவி தேவை என்று பகிங்கராமாகக் கூற வேண்டும்.(வருங்காலத்தில் நான் இந்தியாவுடன் போரிட நேரிடும் என்று கூறினால், அது தீர்க்க தரிசனம் என்று பலர் சிலாகிக்கலாம். ஆனால் அது இப்போது துன்பப்படும் மக்களுக்கு தீர்வாகாது.)

4.மேலே சொல்லியுள்ள மூன்றும் நடக்கும் பட்சத்தில் இந்தியா புலிகளின் அழைப்பை பரிசீலிக்க வேண்டும். நல்லது நடக்க அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டும்.

5.இலங்கை அரசாங்கம் தனி நாடு கொடுக்க எக்காலத்திலும் சம்மதிக்காது. புலிகள் தனி நாட்டைத் தவிர வேறு எதும் ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை. பின்பு எதற்கு மண்ணாங்கட்டிப் பேச்சு வார்த்தை?தனி நாடு புலிகளின் இலட்சியமாக இருக்கலாம்.நாடு கொடுக்க முடியாது என்பது இலங்கை அரசின் முடிவாக இருக்கலாம்.ஆனால் பேச்சுவார்த்தை என்று வரும் போது Option B என்ற ஒன்றை இருவரும் வைத்து இருக்க வேண்டும்.

6.சண்டைகள் அற்ற அந்த இலங்கை மண்ணில் என்றாவது ஒரு நாள் சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு பலூன்மாமா பலூன் செய்து கொடுக்க வேண்டும்.


போர்தான் Option B என்று ஒரு தரப்பு நினைத்தாலும்....

குழந்தைகளின் கல்லறைகளின் மேல் எழுப்பப்படும் எந்த கோபுரங்களும் புனிதமானவை அல்ல.

வெற்றி பெற்றவர்களாலேயே சரித்திரம் எழுதப்படுகிறது.யார் வெல்கிறார்கள் என்பதைப் பொருத்தே இனி வரும் தலைமுறை இப்போது நடந்து வரும் அரசியலைத் தெரிந்து கொள்ளும்.இப்போது செய்யப்படும் குழந்தைக் கொலைகளுக்கு நியாயம் கற்பிக்கும் கனவான்கள் அப்போது இருக்க மாட்டார்கள்.உண்மையைச் சொல்ல நம்மில் பெரும்பாலனவர்கள் இருக்க மாட்டோம். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்....குழந்தைகளின் கல்லறைகளின் மேல் எழுப்பப்படும் எந்த கோபுரங்களும் புனிதமானவை அல்ல.

இந்தப் பதிவை இலங்கை மண்ணில் செய்வதறியாது பேதலித்துப் போய் இருக்கும் குழந்தைகளுக்கு சமர்ப்பிக்கிறேன்.

=============================================

நான் அழைக்கும் ஆறு பேர்.

1. சிறுவர் பூங்கா பரஞ்சோதி
2. ஜென் கதை கங்கா
3. நிகழ்வுகளின் தாக்கங்கள் ரம்யா
4. இயற்கையின் வினோதங்கள் இயற்கை நேசி
5. விஞ்ஞான மற்றும் அறிவியல் செய்திகள் குருவிகள்
6. பிச்சைப்பாத்திரம் சுரேஷ் கண்ணன்


என்னை அழைத்த விடாது கருப்பு மற்றும் நுனிப்புல் உஷா விற்கு நன்றி!



****************


****************

Sunday, June 18, 2006

தமிழ்மணம் விற்பனைக்கு!!

காலையில் இந்த அறிவிப்பை தமிழ்மணத்தில் பார்த்தேன்.மனதில் இனம் புரியாத ஒரு வருத்தம், வெற்றிடம் என்னவோ சொல்ல முடியாத ஒரு உணர்வு. மாற்றங்கள் மட்டுமே நிரந்தரம் என்று எண்ணி வாழப்பழகிக் கொண்டவனாய் இருந்தாலும் சில நேரத்தில் மாற்றங்கள் சில கீறல்களை மனதில் ஏற்படுத்தவே செய்கிறது.

தமிழ்மணத்தின் விற்பனை என்பது அதன் உரிமையாளரின் விருப்பம்.இதில் நான் (யாரும்) ஏதும் சொல்ல முடியாது. நான் எனது வலைப்பதிவுகளை தமிழ்மணத்தில் பட்டியல் இடுவதில் இருந்து விலக்கி பல மாதங்கள் ஆகிவிட்டது. இருந்தாலும் ஒரு வாசகனாக தினமும் தமிழ்மணத்தை வலம் வருவது உண்டு.

காசியின் ஆர்வமும் இந்த திரட்டியை அவர் பார்த்துப் பார்த்து உருவாக்கியதும் (செதுக்கியதும்) அதனால பல சிரமங்களை அவர் சந்திக்க நேர்ந்ததும் அனைவரும் அறிந்த ஒன்று. எனது பங்குக்கு தமிழ்மண உபயோகிப்பாளர் என்ற முறையில் நானும் சில கேள்விகளை அவரிடம் கேட்டதுண்டு.

எது எப்படி இருப்பினும் ஒரு சிறந்த தமிழ் வலைப்பதிவு திரட்டியை உருவாக்கியவர் என்ற முறையிலும்,எளிதில் அனுகக்கூடிய ஒரு நிர்வாகி என்ற முறையிலும் காசி எனக்குப் பிடித்தவரே.

சக வலைப்பதிவாளர் என்ற முறையில் காசி எடுக்கும் முயற்சிகள் அவருக்கு நல்ல முன்னேற்றத்தையும் மன அமைதியையும் வழங்கட்டும் என விரும்புகிறேன்.


அன்புடன்,
கல்வெட்டு (எ) பலூன் மாமா

****************


****************