Thursday, July 06, 2006

மலக்குடலுடன் இறைவனைத் தரிசிக்கலாமா?

தனையும் கேள்விக்குள்ளாக்காமல் கிளிப்பிள்ளைபோல் சொன்னதையே சொல்லிக் கொண்டிருப்பதுதான் மதத்தின் மூல ஆதாரம்.மனிதனுக்கு உள்ள நவ துவாரங்களில் இருந்து தினமும் கழிவு வெளியேறுகிறது.மனித உடலே ஒரு உற்பத்திக்கூடம் போலத்தான்.உண்ணும் உணவும், சுவாசிக்கும் காற்றும், குடிக்கும் நீரும் வேதி மாற்றங்களை அடைந்து வேர்வையாக,மூச்சுக்காற்றாக,சிறுநீராக,மலமாக,ஆசனவாய் காற்றாக,சளியாக,காதில் இருந்து அழுக்காக,கண்களில் இருந்து கழிவாக,வாயில் இருந்து எச்சிலாக ..

இப்படி ஏதேனும் ஒரு வகையில் தினமும் வெளிவந்து கொண்டேதான் இருக்கிறது.இவற்றில் சிலவற்றைத்தான் மனிதனால் கட்டுப்படுத்த முடியும்.

ஆணுக்கும் பெண்ணுக்கும் மேற்சொன்னவை எல்லாம் பொதுவானவை.மனிதனின் உடல் அவன்/அவள் தூங்கும் போதும் சரி ,கடவுள் வணக்கம் செய்யும் போதும் சரி சும்மா தெருவில் சுத்தும் பொதும் சரி மேற்கண்ட வேலைகளை செய்து கொண்டுதான் இருக்கிறது.புரியும்படி சொல்வதானால் நமது மலக்குடலும், சிறுநீரகமும் ஒரு நொடி ஓய்வில்லாமல் கழிவு சேகரிப்பை செய்து கொண்டுதான் இருக்கின்றன.எங்கு போனாலும் கூடவே வருகிறது.புனிதமான இடமாக இருந்தாலும் சரி அது பூங்காவாக இருந்தாலும் சரி.

கடவுளின் தூதுவர்களாக ,அவதாரமாக வந்த எல்லா மனிதப் பிறவிகளின் உடல்களும் அன்றாடம் மேற்சொன்ன அனைத்து வேலைகளையும் செய்து கொண்டுதான் இருந்தன.

ஆணுக்கு உற்பத்தியாகும் விந்துக்கு எந்த சுழற்சி முறையும் கிடையாது.ஒரு அளவுக்கு மேல் சுரந்துவிட்டால் அது தானாக வெளியேறிவிடும் அல்லது கனவு வழியாக வெளியேற்றப்பட்டு விடும்(சொப்பன ஸ்கலிதம் ???).மேலும் வயது ஆக ஆக இதன் உற்பத்தி குறைந்து விடும்.பெண்களின் சினை முட்டை உற்பத்தியும் இது போலவே என்ன,அது ஒரு சுழற்சி முறைக்கு உட்பட்டது.உருவாகும் சினைமுட்டைகள் கருவாக மாறாத பட்சத்தில் கருப்பை அதை வெளியே அனுப்பிவிட்டு அடுத்த முட்டை உற்பத்திக்கு தன்னை தயார் செய்யும் சுய சுத்திகரிப்பே இந்த இரத்தப்போக்கு.

ஆண் உடம்பில் இருந்து வரும் கழிவுகள் எல்லாம் மறக்கப்பட்டு பெண்களின் இந்த இரத்தப்போக்கு மட்டும் தீட்டாகிவிட்டது கொடுமை.எல்லாம் பணமும்,அதிகாரமும்,ஆணவமும்,புஜ வலிமையும் கொண்ட ஆணாதிக்கம், மதம் என்ற போர்வையில் செய்யும் கொடுமைகளில் இதுவும் ஒன்று.கிடப்பதெல்லாம் கிடக்கட்டும் கிழவியைத்தூக்கி மனையில் வை என்ற கதையாக ஆண் வர்க்கம் புனிதம் தீட்டு என்ற பெயரில் செய்யும் பெண்ணடிமைத்தனம்தான் தீட்டு/பெண்ணடிமைத்தனம்.

மதம் அதைப் பின்பற்றுபவர்களின் தனிப்பட்ட நம்பிக்கை என்றாலும்,பெண்களை சமமாகப் பாவிக்கவில்லை என்றால் அது பச்சையான ஆணாதிக்கமே! இதைச் சொல்வதற்கு மதவாதியாக இருக்கத் தேவையில்லை.மனிதனாக இருந்தாலே போதும்.