Tuesday, January 29, 2013

விஸ்வரூப சினிமா வழியாக


Gabbeh திரைப்படம் பார்த்தவுடன் ஏதோ வண்ணமயமான பூக்கள் நிறைந்த சோலைக்கு போய்வந்த உணர்வு வந்தது. அதை அப்படியே பதிந்து வைக்க வேண்டும் என்று 2008 ல் ஒரு பதிவு எழுதினேன். http://kalvetu.balloonmama.net/2008/02/gabbeh.html . அதற்குப்பிறகும் படம் பார்த்துக்கொண்டுதான் உள்ளேன் இருந்தாலும் எழுத வேண்டும் என்ற ஒரு உந்துதல் உடனே வந்தது இல்லை. எழுத வேண்டும் என்று தோன்றும் , இரண்டொருநாளில் அது மறந்துவிடும். அல்லது வேறு ஒரு வேலை வந்துவிடும்.

மதம் / சொர்க்கம் எனது நிலை
மதம் என்பது ஒருவகை குழு. அவர்களுக்கான சில விதிகள், சில நடைமுறைகள் இருக்கும் மற்றபடி அவர்கள் பெரும்பாலும் கடவுள் என்ற ஒன்றிற்கு பயந்து வாழ நிர்பந்திக்கப்பட்டவர்கள். கடவுள் என்ற கருத்தாக்கமும் , அந்த ஒன்று இறந்த பின் கொடுக்கப்போகும் சில வெகுமதிகளும் அல்லது வாழும் காலத்தில் கிடைக்கும் (கிடைக்கிறது என்று நம்பும்) சில பொருள் சார்ந்த விசயங்களுமே மதங்களின் இருப்புக்கு காரணம். 

அடுத்தவர்களின் நினைவில் வாழ்வதுதான் / மறுமை சொர்க்கம் என்று சொல்லப்படுவது. இதை யாரும் மக்கள் புரியும் வண்ணம் விளக்குவது இல்லை. அப்படி விளக்கினால் மதத்திற்கு மக்கள் வரமாட்டார்கள் என்பது மதவாதிகளுக்கு நன்கு தெரியும்.

வாழ்வு என்பதே சேகரிக்கப்படும் நினைவுகளும், நினைவுகளின் துணையில் உயிர்த்திருப்பதும்தான். மூளையின் நினைவுகள் அனைத்தும் அழிக்கப்பட்ட நிலையில் உடல் இயங்கிக்கொண்டு இருந்தாலும் அது வாழ்வது ஆகாது. வெறுமனே பிழைத்திருக்கும் உடல்தான் அது. எனவே வாழ்க்கை என்பது நினைவுகளே. ஒருவன் இறந்தபின் அவன் குறித்த நினைவுகள் மற்றவர்களிடம் இருக்கும்வரை அவனும் இவ்வுலகில் இருக்கிறான் ஆனால் உடலாக இல்லாமல். 


இதுவே எல்லாப் புராணம் / கதை /மதங்களில் வலியுறுத்தப்படும் சொர்க்கம்.
இறந்த பின்னாலும் ஒருவர் மற்றவரின் நினைவுகளில் நல்லவிதமாக நிலைத்திருக்க அவர் சமூகக் கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப நல்லவராக இருந்திருக்க வேண்டும். அப்படி இருந்து மற்றவரின் நினைவுகளில் நிலைத்திருந்தால் அது அவர் சொர்க்கத்தில் இருக்கிறார் என்று பொருள்.கெட்டவராக நினைவுகளில் நிலைத்து இருந்தால் அதுதான் நரகம் எனப்படுவது.

இதில் சிறப்பான மற்ற ஒன்றும் உள்ளது. அதாவது உங்கள் மூளையில் (நினைவுகளில்)நீங்கள் அடுத்தவருக்கு இடம் கொடுக்கும்போது நீங்களே சொர்க்கத்தின் அதிபதியாகிறீர்கள். கெட்டவர்களுக்கு இடம் கொடுக்கும்போது நீங்களே நரகத்தின் அதிபதியாகிறீர்கள்.
உங்கள் மூளை அல்லது மனது என்று கவர்ச்சியாகச் சொல்லப்படும் இடம்தான் எல்லாம். அடுத்தவ‌ருக்கு இடம் கொடுப்பதால் அது சொர்க்கமாகிறது. நீங்களும் அடுத்தவரின் சொர்க்கத்தில் இடம் பிடிக்கலாம். 

எல்லா மத சாதிக் குப்பைகளையும் ஒதுக்கிவிட்டு நாமே சொர்க்கமாகவும், அடுத்தவர் சொர்க்கத்தில் இடம் பிடிக்கவு முடியும். ஏன் என்றால் தூதர்கள் வெளியில் இருந்து வருவது இல்லை.
*************************************

தைச் சொல்ல வேண்டிய தேவை உள்ளது. பொதுவாக மதங்கள் மனிதற்கு இடையில் வேற்றுமையை ஆராதிக்க கற்றுக்கொடுக்காமல், அவற்றை வைத்து பிரிக்கவே செய்கிறது. எந்த ஒரு மதமும், "உனது அம்மா போல மற்ற அம்மாக்களும் சிறந்தவர்களே" என்று சொல்வது இல்லை. இந்த மதம் மட்டுமே சிறந்தது என்று நிறுவவே பார்க்கிறது. அதாவது ஒரு ஒற்றைத் தன்மையை நோக்கிய காய்நகர்த்தல்.


தமிழகத்தில் இஸ்லாம் விமர்சனம்

இஸ்லாத்தின் வரலாறு தெரியாமல், அந்த மதப் பெற்றோர்களுக்கு பிறப்பதால் பிறந்தவுடன் அதே மதம் அவர்களுக்கும் வந்துவிடுகிறது. இது எல்லா மதங்களுக்கும் உள்ள நிலை. இஸ்லாம் ஒரு எடுத்துக்காட்டு இங்கே. பிறரைப் புண்படுத்தாமல் கருத்தைச் சொல்லவேண்டும். மதத்தை விமர்சிக்கக்கூடாது என்றும் சொல்லும் இவர்கள் ஒன்றை மறந்துவிடுகிறார்கள்.  பலருக்கு மன வருத்தம் கொடுத்துதான் புதிய மதங்கள் உருவாகிறது. 

  • யூத மதத்தை அதன் குறைகளை விமர்சித்தவர் தூதர் இயேசு.
  • பல உருவ வழிபாடுகளை வைத்துக்கொண்டிருந்த ஒரு பெருங்கூட்டத்தை விமர்சித்தவர் தூதர் நபி. 
இவர்கள் (தூதர் இயேசு & தூதர் நபி )  தான் நம்பிய ஒன்றை வளர்த்தெடுக்க , தான் நம்பாத ஒன்றை பகிரங்கமாக விமர்சனம் செய்தவர்கள். எனவே மதங்களில் இருப்பவர்கள், அவர்கள் மதத்தை கட்டிக்காக்க வேண்டிய தேவை இல்லை. காலம் பார்த்துக்கொள்ளும். யாரும் ஏதும் பேசக்கூடாது, அல்லது எங்களிடம் தான் பேசவேண்டும் என்பது தவறு. அமேசான் டாட் காமில் கிடைக்கும் குரானை வாங்கிப்படித்து எனது கருத்தை வைக்க எந்த தடையும் இல்லை. அப்படி குரானை உங்களிடம் படித்து உங்களிடம் மட்டுமே விமரசிக்க வேண்டும் என்றால், அதை பள்ளிவாசலில் மட்டும் கிடைக்கும்படி பார்த்துக் கொள்ளலாம்.

கலை
கலை (Art ) என்பது வெளிப்படுத்தும் ஒன்று. அதாவது exhibiting   தன்மை கொண்டதுதான் கலை. உள்ளுக்குள் வைத்து புகைந்துகொண்டு இருப்பது கலை அல்ல.
கலாச்சாரம்
கலைகளின் சாரம் அல்லது கலையின் ஆதாரம். ஏதோ ஒரு ஆதாரத்தைக் கொண்டது. இன்று உள்ள ஒரு நிலைக்கு அதற்கு முந்தைய நிலையும் உண்டு என்பது.
பண்பாடு
பண்+பாடு. பண்பட்ட (பதப்படுத்தப்பட்ட) பழக்கங்கள் என்பதுவே பண்பாடு எனப்படுவது.

கலாச்சாரம் அல்லது பண்பாடு என்பது இறந்த காலத்தைச் சுட்டுவது. அல்லது நிகழ்காலத்தில் உள்ள ஒரு பழக்கத்திற்கு வேறு ஒரு பழைய வடிவம் இருக்கலாம் என்பதே கலாச்சாரம். மற்றபடி அந்த பழைய வடிவத்தை இன்றும் பின்பற்ற வேண்டும் என்பது கலாச்சாரம் அல்ல. அதன் பொருளும் அதுவல்ல. அப்படி இருந்தால் நாம் இன்னும் கண்ணகிபோல கோவலன் போல வள்ளுவன் போல அதே கால முறைகளில் ஜீவித்து இருக்க வேண்டும். நாம் அப்படியில்லை. எனவே குழப்பிக்கொள்ளக்கூடாது.


கமல்
கமலின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எனக்கு மதிப்பு உண்டு. அவரின் நடிப்பு அல்லது திரைசார்ந்தவகைள் குறித்து பெரிய பிம்பங்கள் இல்லை. போகாத பொழுதுகளைப் போக்கப் பயன்படும் படங்களில் இவருடையதும் ஒன்று. மகாநதி போன்றவை நினைவில் நிற்கும், சகலகலா வல்லவன் போன்றவை நினைவில் நிற்காது. மற்றபடி சொல்ல ஒன்றும் இல்லை. நான் குணா (கல்லூரியில் படிக்கும் போது ரீலிஸ்) படத்திற்கு அடுத்து திரை அரங்கில் பார்க்கும் கமல் படம். 10 ஆண்டுகளுக்கு பிறகு திரையரங்கில் பார்க்கும் தமிழ்படம். இந்தப்படத்திற்கு இஸ்லாமிய அமைப்புகளால் வந்த எதிர்ப்பால் , அப்படி என்னதான் உள்ளது என்பதை அறிய பார்க்கவேண்டும் என்று பார்த்த படம்.
விஸ்வரூபம்


நானும் என் மனைவியும் இந்தப்படத்திற்குச் சென்றோம்.குழந்தைகளை நண்பர் வீட்டில் விட்டுவிட்டுச் சென்றோம். படம் தொடங்குவதற்கு முன் திரையரங்கு நிறைந்துவிட்டது. அருகில் உள்ள தெலுங்கு பதிப்பிற்கான அரங்கமும் நிறைந்தே இருந்தது. படம் ஆரம்பித்தவுடன் கமலின் இரசிகர்களின் கைதட்டலும், உற்சாகமும் அரங்கத்தை நிறைத்தது. நான் படம் பார்க்க வந்த நோக்கம் வேறு என்பதால், நான் கொண்டாட்ட மனநிலையில் இல்லை. போஸ்ர்ட்மாட்டம் செய்யப்போகும் ஒரு மருத்துவரைப் போலவே இருந்தேன். ஒரு கலையை இப்படி அணுகுவதே தவறு. இருந்தாலும் நான் அப்படித்தான் இருந்தேன்.

டத்திற்கான பெயர், வலம் இருந்து இடமாக திரையில் எழுதப்படுகிறது. அரபி வடிவ எழுத்துகள், அதன் பாணியில் எழுதப்படுகிறது. அரபி என்பது ஒருமதத்திற்கான மொழி அல்ல. அதை பலர் பயன்படுத்துகிறார்கள். சமஸ்கிரகம் மந்திரங்கள் பயன்படுத்தும் அதே எழுத்துருவில்தான் இந்தி மசால சினிமாவின் எழுத்துகளும் பதியப்படுகிறது. இதில் ஏதும் பிரச்சனை இருக்க முடியாது. எனக்கு எந்த அரசியலும் தெரியவில்லை.

டத்தின் தொடக்கத்தில் இருக்கும் நடனம் ஒரு அற்புதமான அனுபவம். இந்தக்கணம்  வரை எனக்கு மனதில் இருப்பது, அந்த நடனமும் அதில் வரும் அழகுப் பெண்களுமே. அற்புதமான நடனம். அரைகுறை ஆடைகள் இல்லாமல் ஒரு நல்ல நடனம். இந்த நடனத்தை காட்சிப்படுத்திய விதம் என்று யூட்யூப்பில் பல காட்சிகள் கிடைக்கிறது. http://www.youtube.com/watch?v=olkPxE569OY . அந்தப்பாடல் காட்சியின்போது கமல் என்ற கலைஞன் தெரிகிறார். இந்தப்பாடலினூடே கதைமாந்தர்கள் அறிமுகமாகிறார்கள்.

மல் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அய்யர்/ஐயங்கார் பேச்சுவழக்கை நுழைத்துவிடுகிறார். இந்தப்படத்திலும் உண்டு. ஆரம்பக் காட்சிகளிலேயே நாயகி என்ன சாதி என்பதை இப்படி மெனக்கெட்டு காட்டுகிறார். இல்லாத ஒன்றைக்காட்ட வில்லை அவர். அவர் விருப்பம் அவரே இயக்குநர் என்பதால் அவர் சுதந்திரம். ஆனால், நாயகியின் சாதி நிறுவல் கதைக்கு என்ன வலுச் சேர்க்கிறது என்று புரியவில்லை. நல்லவேளை சீதா பாட்டி, அம்புஜம் மாமி என்று கேரக்டர்கள் இல்லை. எங்கே அவர்களும் (மைக்கேல் மதன காமராசன்) வந்துவிடுவார்களோ என்று ஒரு பயத்திலேயே கடைசிவரை இருந்தேன்.

ந்த அறிமுக கதக் ஆட்டத்திற்குப்பிறகு என்னளவில் படத்தில் ஒன்றும் இல்லை. ஒரு கடத்தல், பாம் வைக்கும் கதை,போலீஸ் என்று உள்ள பார்முலாப்படி அனைத்தும். படம் முழுவதும் பார்த்தே ஆகவேண்டும் என்ற வைராக்கியத்திற்காக இருந்தேன்.ப்கானில் கமல் பயிற்சி பெறுவதாக காட்டப்படும் காட்சிகள் அதிக நேரத்தை விழுங்குகிறது. எவ்வளவு யோசிச்சாலும் அல்லது மண்டபம் போட்டு யோசனை செய்தாலும் , இந்தப்படத்தில் கமல் செய்த இமாலயத் தவறு (இஸ்லாமியப் பிரச்சனை) என்னவென்று புரிந்துகொள்ள முடியவில்லை.

மல் ஏன் இந்தக் கதையை எடுத்தார் என்று தெரியாது. அது படைப்பாளியின் சுதந்திரம். ஏன் இந்தக் கதையை எடுக்கக்கூடாது என்பதே எனது கேள்வி?

லக அளவில் கவனிக்கப்பட்ட,இன்னும் கவனிக்கப்படும் ஒரு நிகழ்வை தனது திரைப்படத்திற்கு களமாகப் பயன்படுத்தியுள்ளார். இதில் ஒரு தவறும் தெரியவில்லை எனக்கு. இது போல உள்ளூர் நிகழ்வில் இருந்து, உலக நிகழ்வுவரை எதை வேண்டுமானாலும் தனது கதையின் மூலமாகப் பயன்படுத்திக்கொள்ள யாருக்கும் தடை இருப்பதாகத் தெரியவில்லை. உலகின் மற்ற பாகங்களில் தோன்றிய மதங்களையும், உலகின் மற்ற பாகங்களில் உருவான பொருட்களையும் ஏற்றுக்கொள்ளும் நாம், உலகின் மற்ற பாகங்களில் நடக்கும் ஒரு நிகழ்வைக் களமாகக் கொண்ட கதையை ஏன் எற்றுக்கொள்ளக் கூடாது?

ந்தப்படத்தில் குண்டுவைக்கும் ஒருவரும், அந்த குண்டை எடுக்கும் ஒருவரும் இஸ்லாமியர். அதாவது நல்ல பாத்திரமும், கெட்ட பாத்திரமும் இஸ்லாமியர். இருவரும் அவர்களின் செயலைச் செய்யும்போது அவர்கள் நம்பும் அதே இறைவனைத் தொழுதுவிட்டுச் செய்கிறார்கள். கதைப்படி வில்லனும் இஸ்லாம், கதாநாயகனும் இஸ்லாம். இருவருமே தொழுகிறார்கள் நேரம் கிடைக்கும்போது. ஒருவர் தொழுதுவிட்டு நல்லது செய்கிறார், மற்றவர் தொழுதுவிட்டு கெட்டது செய்கிறார். தமிழ் திரைப்படங்களில் இது ஒன்றும் புதியது அல்ல.

ரே சாதிகளுக்கு இடையேயான மோதல் (கிழக்குச் சீமையிலே) படமாக்கப்பட்டுள்ளது.  90 சதவீத தமிழ்ப்படங்களில் ஒரே மதங்களைச் (இந்து/சனாதனம்) சார்ந்தவர்களே கதையின் நாயக பாத்திரமாகவும், வில்லன் பாத்திரமாகவும் வருகிறார்கள். உதாரணத்திற்கு சாமி படங்கள் என்று சொல்லப்படும் ராமநாராயணன் அவர்களின் படங்களில்,  காளிபூசை செய்யும் மந்திரவாதி வில்லனாகவும், அதே காளியைக் கும்பிடும் ஒரு குடும்பம் நல்லவர்களாகவும் வருவார்கள்.

ந்த ஒரு மதம் அல்லது சாதி அல்லது ஒரே இனக்குழுக்களை எடுத்துக்கொண்டாலும், அவர்களுக்கு இடையே வேற்றுமைகளும், பூசல்களும் உண்டு. இஸ்லாம் என்ற மதம் உலக அளவில் பரவி இருந்தாலும், அதிலும் வேறுபாடுகள், சண்டைகள்,பூசல்கள் உண்டு. ஈராக்  சாதாம் உசேனின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரண‌ம்,  அங்கே நிலவிய சியா, சன்னிப் பிரிவுகளின் உச்சகட்ட பூசல்கள் சண்டைகள். எனவே முஸ்லிம்கள் என்றால் அவர்களுக்கு இடையே சண்டைகள் கிடையாது என்றோ, அதில் உள்ளவர்கள் அனைவரும் சாந்தசொருபீகள் என்றோ சொல்லமுடியாது.

மீபத்தில் வெளியாகி இருக்கும் ஒரு இஸ்லாம் தலைவரின் http://vimeo.com/58302985 ஆபாசப் பேச்சுகளும், அதை கைதட்டி இரசிக்கும் பெண்கள்,குழந்தைகள் அனைவரும் விஸ்வரூபம் என்ற ஒரு படத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள். ஒரு சினிமாப்படத்திற்கு இத்தகைய அமிலப் பேச்சுகளை பேசும் இந்த போக்கு,  தமிழகத்தில் இருக்கும் வேறு எந்த சமூகத்தில் இருந்தும் வேறுபடவில்லை. "வேலைக்குபோகும் பெண்கள் விபச்சாரிகள் போன்ற‌வர்கள்" என்று ஒரு இந்து மடாதிபதி சொல்லுவதும், "மகள் அப்பாவுடன் படுக்க நினைக்கிறாள், அடுத்து அவர் தன் மகளை வைத்துக்கொள்வார்" என்று பேசும் இந்த மத தலைவரும் எந்த அளவிலும் வேறுபாடு கொண்டவர்கள் அல்லர்.  சமீபத்தில் நான் வருத்தப்பட்ட சம்பவங்களில் இந்த மதத் தலைவரின் பேச்சும் ஒன்று. வருத்தமான ஒன்று. சமூகத்திற்கு அடையாளமாக இருப்பவர்ககுக்கு நிதானம் தேவை.

யாராவது இந்தப் படத்தை எதிர்த்து போராட வேண்டும் என்றால், சூரனைக் கொன்றதற்காக தீபாவளி கொண்டாடும் மக்கள்தான் போராடவேண்டும் இந்தப்படத்தை எதிர்த்து. ஏன் என்றால்,  ஆப்கான போகும் முன்பே "அசுரன் பக்கமும் அசுரன் தரப்பு நியாயம் இருக்கும், அது அவர்களின் சொந்தங்களுக்கே தெரியும்" என்று சொல்லி விடுகிறார்கள்.

ணையத்தில் பலர் கமல் காட்சிப்படுத்தும் ஆப்கான் கிராமம் குறித்தும் , அதில் காட்டப்படும் கதை மாந்தர்களின் துப்பாக்கி கலாச்சாரம் குறித்தும் கவலை கொள்கிறார்கள். கமல் ஆப்கானில் நடக்கும் பயிற்சிகள் , அங்கு வாழும் மக்கள் என்று ஒரு மாதிரி கிராமத்தை அமைத்துள்ளார். தினமும் போரைச் சந்திக்கும் ஒரு கிராமம், அதுவும் முக்கியமான ஒரு போராட்டத்தலைவர் வசித்துவரும் கிராமம் எப்படி இருக்கும் என்று  இவர்களாக ஒரு கிராமத்தை வடிவமைத்து உள்ளார்கள். எளிதாகக் கிடைக்கும் ஆயுதங்கள், குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை , துப்பாக்கியையும், போரையும் தினசரி வாழ்க்கையில் எளிதாகக் கடக்கிறார்கள்.

துப்பாக்கி அவர்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக உள்ளது என்று காட்டப்படுகிறது. இந்த கிராம அமைப்பில் பல குறைகளைக் காணலாம். ஆனால், எனக்கு இவையாயும் திட்டமிட்ட சதியாகத் தெரியவில்லை. ஏதோ அவர்களுக்கு தெரிந்த ஒரு கிராமத்தை வடிவமைத்து உள்ளார்கள். ஒருவேளை அந்த கிராமத்தில் இருக்கும் ஒரு பெண் கமலை காதலிப்பதாக திரைக்கதை இருந்திருந்தால் , மென்மையான பக்கங்களை காட்டும் வாய்ப்பு கிட்டியிருக்கும். ஆனால் போராளியின் பார்வை, அவர்களின் முகாம் என்று விரிவதால் அத்தகைய சம்பவங்கள் இல்லாமல் துப்பாக்கி,போர் , சார்ந்தே உள்ளது கிராமம்.

மல் இரஷ்யாவின் ஆக்ரமிப்பில் இருந்து கதை சொல்லவேண்டும் என்று நாம் சொல்லலாம். "ஆப்கான் இப்படி ஆனதிற்கு பன்னாட்டு சதி" என்று வரலாறு சொல்ல படம் எடுக்க வேண்டும் என்றும் ஆசைப்படலாம். ஆனால் அதையும் கமல்தான் செய்ய வேண்டும் என்று நிர்பந்திக்க முடியாது. 

தேவர்மகன் எடுத்து தேவர் சாதி பெருமைபேசிய கமலுக்கு, ஒரு காலத்திலும் தலித் பெருமை பேசும் "போற்றிப்பாடடி தலித்" என்று பாடி, அந்தப் தலித் பாத்திரம் பஞ்சாயத்து தலைவராக இருந்து, தேவர் சாதிக்கு தண்டனை கொடுக்கும் காட்சி அமைக்க துணிவு இருக்காது. அவருக்கு தெரிந்தது அவ்வளவுதான். கலைஞனிடம் நாம் எதிர்பார்க்கலாம், விமர்சனம் செய்யலாம் ஆனால் கட்டிவைத்து நிர்ப்பந்திக்க முடியாது. உசேனின் ஒவியச் சணடைபோல கமலை நாடுகடத்த வேண்டுமா என்ன?

டத்தில் தற்கொலைப்படையில் டீனேஜ் குழந்தைகள் உள்ளதாகவும், சிறுவயதில் இருந்தே துப்பாக்கி பழக்கப்படுகிறது என்றும் சொல்லாமல் சொல்லப்பட்டு இருக்கும். எனக்கு இது புதிதாகத் தெரியவில்லை. ஏன் என்றால் தமிழ்ப்படங்களில், அப்பாவைக் கொன்ற வில்லன் குடும்பத்தைப் பழிவாங்க அம்மா சிறுவயதில் இருந்தே தன் குழந்தையை சண்டைப்பயிற்சிகள் கொடுத்து வளர்ப்பதாக பல படங்கள் உள்ளது.  ஒரு பாடல் காட்சி வைத்து, பிள்ளையை உரமேற்றி வளர்ப்பதாக காட்டப்படும் படங்கள் பல உண்டு. அதே அளவுகோளில் நண்பர்களையும், பல சொந்தங்களையும் இழந்த ஒரு ஆப்கான் கிராமப் போராளி , அவன் குழந்தைகளையும் ஒரு போராளியாக வளர்க்க நினைக்கிறான் என்று அவர்கள் தரப்பு நியாயமாகவே காட்டப்படுகிற‌து. இதில் என்ன தவறு உள்ளது என்று தெரியவில்லை. குழந்தைகளை இப்படிக் காட்டுவது தவறு என்றால் , ஆம் தவறுதான் ஆனால் இதை அந்தப் போராளியின் நிலையில் இருந்து பார்க்க வேண்டும்.  கதை போராளியின் பார்வையில் சொல்லப்படுகிறது. மத தலைவர்கள் பேசும் ஆபாச கூட்டத்திற்கு குழந்தைகளை அழைத்துச் செல்லும் பெற்றோர்களுக்கு உள்ள நியாயத்தைவிட அந்தப் போராளிக்கு அதிக நியாம உள்ளது.

லையூர் மம்மட்டியான், மலைக்கள்ளன் போன்ற படங்களில் கிராமங்கள் இவர்களுக்கு (போராளிகளுக்கு) ஆதரவாக இருப்பதாகவே காட்டப்படும். இங்கேயும் அப்படியே. ஒரு கிராமம் , அவர்களின் நியாயத்திற்கு போராடும் போராளிகளுக்கு உதவுகிறது. இதை கதையின் போக்கில் பார்க்காமல் , "கிராமமே இப்படியா?" என்றால் என்ன சொல்வது?  இந்தப்படத்தில் ஏன் தமிழக இஸ்லாமியர்கள் மனம் நோகிறார்கள் என்று தெரியவில்லை. கதையின்படி ஒரு தமிழக இஸ்லாமியன், ஆப்கான் இஸ்லாமியர்கள் செய்யும் கெட்ட செயல்களை (கதையின்படி) முறியடித்து பள்ளிக்குழந்தைகளைக் காக்கிறான். கமல் இதை நினைத்துதான் பிரியாணி பற்றி பேசி இருப்பார் என்று நினைக்கிறேன். ஆனால் தமிழக இஸ்லாமியர்கள் , ஏன் ஆப்கான் இஸ்லாமியரை அப்படிக் காட்டினீர்கள் என்று போராடுகிறார்கள்.

ந்தப்படத்திற்கு எதிராக வழக்குப்போடவேண்டியவர்களில் முக்கியமான இடத்தில் இருப்பவர்கள்
1. சாம்சங் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள். ஏன் என்றால், சாம்சங் கேலக்க்சிபோன் குண்டுவெடிப்பிற்கு பயன்படுத்தப்படுகிறது. அது வேலையும் செய்கிறது.

2. ஆப்பிள் ஐபோன் தயாரிப்பாளர்கள்கூட வழக்குப்போடலாம், ஏன் என்றால் அவர்கள் போனை வைத்து பாம் வெடிக்கச்செய்யும் முயற்சி தோற்றுவிடுகிறது. சிக்னல் தடை செய்யப்படுவதால். சரியான் சிக்னல் ரிசீவர் இல்லை. சாம்சங் வேலை செய்யும்போது ஆப்பிள் வேலை செய்யாதா என்று வழக்குப்போடலாம்.

3. அதுபோல அமெரிக்ககர்களின் நோக்கம் ஆயில்தான் என்றும் சொல்லப்படுகிறது.அவர்களின் போரின் நோக்கமே இப்படி பகிரங்கமாக கேலி செய்யப்படுவதாக அவர்கள் வழக்குப்போடலாம்.

4.கதையில் எந்த சம்பந்தமும் இல்லாமல் திடீரென்று ஒரு நைஜீரிய இளைஞனை மனித வெடிகுண்டாக நுழைப்பதற்காக, கருப்பின மக்கள் போராடலாம்.
தையை எடுத்தவன் தமிழன், அதில் நாயகனாக வரும் பாத்திரம் தமிழன். அவருடன் ஒரு ஆப்கானைச் சேர்ந்த‌ போராளி எப்படி தமிழில் பேசமுடியும்? இதற்காக (மூளையை கசக்கி??)  அந்த ஆப்கான் போராளி சில காலம் தமிழகம் மற்றும் வட மாநிலங்களில் இருந்ததாகச் சொல்லப்படும் ஆதிகாலத்து உத்தி ஒரு பிரச்சனையாகி உள்ளது. அவர் சுற்றி திரிந்த பகுதிகளில் தமிழகமும் என்று வருகிறது. இரண்டு வருடம் அவர் சுற்றி திரிந்ததாக  சொல்லப்படுகிறதே தவிர, அவருக்கு தமிழக இஸ்லாமிய அமைப்புகள் உதவி செய்ததாக இல்லை. ஒருவேளை அதுகூட தவறு என்று அதற்காகப் போராடும் தமிழக இஸ்லாமியர்கள், நல்லது செய்யும் இஸ்லாமிய நாயகன் முழுக்க முழுக்க தமிழனாகவே காட்டப்பட்டு இருந்தாலும் அதை விட்டுவிடுகிறார்கள்.

மல் இதை தமிழக இஸ்லாமியர்கள் கொண்டாடுவார்கள் என்று எதிர்பார்த்து இருப்பார்போல. தமிழக இஸ்லாமியன் நல்லவன் என்பதைக் காட்டிலும், ஆப்கான் இஸ்லாமியன் கெட்டவனாக அதுவும் , தமிழகம் வந்து சென்றதாகச் சொல்லப்பட்ட கதை அவர்களை நோகடிக்கிற‌து என்று நினைக்கிறேன்.

டத்தில் வரும் , தண்டனை முறைகள் புதியதாகத் தெரியவில்லை. கடுமையான சட்டங்கள் உள்ள தாலிபான்களின் பகுதியில் வழங்கப்படும் தண்டனைகள் எனக்கு புதியதாகத் தெரியவில்லை. சவூதியில் சமீபத்தில் ஒரு பெண் வாளால் தலை அறுக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டது. http://www.cnn.com/2013/01/10/world/meast/saudi-arabia-sri-lankan-maid/index.html தாலிபான்களால் ஒரு பள்ளிச் சிறுமிக்கு துப்பாக்கிச் சூடு கிடைத்தது http://www.cnn.com/2012/10/16/world/asia/pakistan-activist-reaction/index.html இத்தகைய தண்டனைகளை நிறைவேற்றுபவர்களும் , தண்டனைக்கு உள்ளாபவர்களும் இஸ்லாமியர்களே. நிசத்தில் நடக்கும் ஒன்று படத்திலும் உள்ளது. அதைத்தாண்டி ஒன்றும் சொல்வதற்கு இல்லை.

ந்தப்படத்திற்காக கமல் அமெரிக்காவிடம் பொட்டி வாங்கிவிட்டார் என்று http://vimeo.com/58302985 சொல்லப்படும் குற்றச்சாட்டையும், ஏன் இது இஸ்லாமிய விரோதப்படம் என்று தமிழக இஸ்லாமியர்கள் நினைக்கிறார்கள் என்றும் என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை. 

தக் நடனக் காட்சிக்காக திரையில் பார்க்கவேண்டும் அருமையான காட்சிப்படுத்தல்.மேலும் அரசியல்/மத காரணங்களுக்காக பார்ப்பதும் பார்க்காமல் இருப்பதும் உங்களின் உரிமை சார்ந்தது.

.

2 comments:

  1. நாங்களும் படம் பார்த்தோம்.
    கதக் நடனக் காட்சியை பார்த்தபோது மெய் சிலிர்த்து போனது!
    எப்பேர்பட்ட கலைஞன் !!

    ReplyDelete
  2. அருமையான பதிவு

    ReplyDelete