Friday, February 24, 2017

பாலினம்மாறியவர்கள் -Transgenders - Restroom -NC HB2 law

நான் வசிக்கும் வடக்கு கெரொலைனா (North Carolina) மாநிலத்தில் சென்ற ஆண்டு ஒரு பெரும் பிரச்சனை நடந்தது. அது அமெரிக்க அளவில் தேசிய விவாதத்திற்கு உள்ளாகி, மாநிலத்திற்கான கவர்னர் தேர்தலில் முக்கிய விசயமாகி, ஆண்டு கொண்டு இருந்த கவர்னரை (Pat McCrory) அடுத்த தேர்தலில் கவிழ்த்துவிட்டது.

வடக்கு கெரொலைனா மாநிலத்தில் உள்ள சார்லட் ( Charlotte ) என்ற நகரத்தின் நகராட்சி ஒரு சட்டத்தை இயற்றுகிறது. அதன் சுருக்கம் இதுதான். "சார்லட் நகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் , ஒருவர் தன்னை யாராக உணர்கிறாரோ , இன்று புற வடிவத்தில் யாராக இருக்கிறாரோ அந்த அடிப்படையில் ஓய்வறையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்". இதுதவிர வேறு சில திட்டங்களையும் அந்த சட்டம் சொல்லியுள்ளது. ஆனால் இதுதான் முக்கியமான விவாதமாகிவிட்டது.

இப்படியான சட்டத்தை எதிர்த்து , மாநில அரசாங்கம் ஏதாவது செய்ய வேண்டும் என்று ஒருதரப்பு மக்கள் மாநில ஆளுநரிடம் முறையிடுகிறார்கள். ரிபப்ளிகன் ஆளுநர் , ரிபப்ளிகன் செனட்(மாநில செனட்) பெரும்பான்மை என்று ரிபப்ளிகன் பெரும்பானமை கொண்ட மாநில அரசு , இதை உடனே பரிசீலிக்கிறது.  மிக அவசரமாக ஒரு சட்டத்தை மாநிலங்களவையில் நிறைவேற்றிவிடுகிறது. அந்த சட்டம்தான் HB2 என்று சொல்லப்படும் House Bill 2 . இந்த சட்டத்தின் முக்கிய அம்சம் இதுதான்.
  • நகராட்சிகள் அவைகளுக்கான சட்டம் இயற்றும் அதிகாரத்தை மாநிலம் தடுக்கிறது. 
  • மாநிலத்தின் எல்லைக்குட்பட்ட  அளவில் ஒருவர் பிறக்கும்போது என்னவாக இருந்தாரோ , அந்த‌ அடிப்படையில் மட்டுமே ஓய்வறையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
  • இது மேலும் ஒரு படி சென்று , பாலினமாறிவர்கள் வேலை செய்யும் இடத்தில் பிரச்சனைகளைச் சந்தித்தால் அவர்கள் மாநில நீதிமன்றங்களை அணுகவும் முடியாது என்றும் சொல்லிவிட்டது. 
இந்த சட்டம் அவசர கோலத்தில் ஒரே நாளில் , எந்த விவாதமும் இன்றி அமலாக்கம் செய்யப்படுவிட்டது. முக்கிய விசயங்களை படிக்காமலேயே கையெழுத்துப் போட்ட கவர்னர், தான் அனுமதித்த சட்டத்தில் இருந்து ஒன்றை விலக்க தானே மற்ற‌ ஒரு ஒரு ஆணையை Executive Order  வெளியிட வேண்டிய சூழலுக்கு உள்ளாகிறார்.
  • சார்லட் நகராட்சி சட்டம். 
  • அதை  மாற்ற மாநிலச் சட்டம். 
  • மாநிலச் சட்டத்தில் நடந்த ஒரு குளறுபடியை அகற்ற கவர்னரின் தனியான ஆணை (Executive Order) என்று இடியாப்பச் சிக்கலாகிக் கோண்டே போனது.
இந்த HB2 சட்டத்தை  எதிர்த்து பல வணிக நிறுவனங்கள் தங்களின் முதலீடுகளை நிறுத்திவிடுகிறது. உதாரணம்: PayPal அதன் விரிவாக்கத்தை நிறுத்திவிட்டது.  பல விளையாட்டுப்போட்டிகள் நாங்கள் இனிமேல் இந்த மாநிலத்திற்கு வரமாட்டோம் என்று சொல்லிவிட்டார்கள். N.C. Sports Association urges HB2 repeal to avoid losing NCAA bids from 2018-22 . பல இசை நிகழ்ச்சிகள் இரத்து செய்யப்பட்டுவிட்டன.  இப்படி மாநிலத்திற்கு பெரும் அளவில் பொருளாதாரச் சிக்கல் வந்து சேர்ந்தது.

அப்போது மாநில சட்டத்துறைக்கு பொறுப்பாக இருந்த North Carolina Attorney General " Roy Cooper " டெமாக்ரடிக் கட்சியைச் சார்ந்தவர். அவர் தான் இந்த புதிய சட்டத்தை ஆதரிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டார்.
  • மாநிலம் சட்டம் இயற்றுகிறது. 
  • ஆனால் அந்த மாநிலத்தின் Attorney General அதை தான் மதிக்கப்போவது இல்லை என்றும் அதை காக்க (To defend in federal court) எந்த முயற்சியும் செய்யப்போவது இல்லை என்றும் சொல்லிவிட்டார்.
இந்த சந்தடியில் அப்போது அதிபராக இருந்த ஒபாமா அவர்கள், ஒரு சுற்றறிக்கையை விடுகிறார். "மத்திய அரசாங்கத்தின் உதவி பெறும் பள்ளிகள், மாணவர்களை அவர்களின் இன்றைய அடையாளத்தின் அடிப்படையில் ஓய்வறையைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்" . இதை எதிர்த்து பல மாநிலங்கள் நீதி மன்றத்தை அணுக, இது பெரும் தேசிய அளவிலான விவாதமாகிவிட்டது.

இன்றைய நிலை:
  1. இந்த HB2  சட்டத்தால் பழைய Republican கவர்னர் Pat McCrory மறு தேர்தலில் தோற்கிறார்.
  2. அப்போது மாநில சட்டத்துறைக்கு பொறுப்பாக இருந்த North Carolina Attorney General " Roy Cooper " இதை முக்கிய விசயமாக்கி கவர்னர் தேர்தலில் களம் கண்டு இன்று புதிய கவர்னராகிவிட்டார்.
  3. சார்லட் நகரம் அதன் சட்டத்தை திரும்பப் பெற்றுக்கொண்டுவிட்டது. (அப்படிச் செய்தால் மாநில அளவிலான HB2 சட்டமும் திரும்பப் பெறப்படும் என்ற நோக்கத்தில்..to reduce bigger damage to LGBT community)
  4. ஆனால் புதிய ஆளுநர் டெமாக்ரடிக்  கட்சிக்காரராக இருந்தாலும், ரிபப்ளிகன் செனட்(மாநில செனட்) பெரும்பான்மை கொண்ட அரசாங்கம் HB2 வை திரும்பப்பெறவில்லை இன்றுவரை. புதிய கவர்னர் முயன்று கொண்டே உள்ளார்.
  5. புதிய அதிபர் ட்ரம்ப் , ஒபாமாவின் சுற்றறிக்கையை திரும்ப பெற்றுக்கொள்கிறார்..தேசிய அளவில்.
அமெரிக்க சட்டப் பிரச்சனைகளைத் தாண்டி எது சரி எது தவறு என்று பார்ப்போம்.

பாலினம் மாறுதல்:
இதை யாரும் விரும்பிச் செய்வது இல்லை. என்னை ஒரு பெண்ணாக மாற்றிக்கொள்ள எனது எண்ணங்களோ அல்லது உடலோ விரும்புவது இல்லை. ஆனால்  ஒருவர்  அப்படியான நிலைக்கு வருகிறார் என்றால்,  அது ஏதோ "இங்கி பிங்கி பாங்கி" போட்டு எடுக்கும் விடை அல்ல.

உடலில் நடக்கும் இராசாயன மாற்றங்கள் அப்படியான ஒன்றைத் தூண்டுகிறது. அப்படியான இயற்கை மாற்றங்களுக்கு உட்படுபவர்கள் , அவர்களின் உடலளவில் வெளிப்புற மாற்றங்களைக் கொண்டுவருவது என்பது, சமூகம் அவர்களை, அவர்கள் இன்று எப்படி உள்ளார்களோ அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஒரு முயற்சி. ஆணாக இருந்து பெண்ணாக மாறுபவர் அல்லது பெண்ணாக இருந்து ஆணாக மாறுபவர்  தன்னையும் அடுத்த பெண்கள் / ஆண்கள் அவர்களில் ஒருவராக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புவது , அவருக்கான ஒரு சமூக அங்கீகாரத் தேடல். இதில் தவறேதும் இல்லை.

ஒருபால் உறவில் (Homo Sexual) இருப்பவர்களுக்கு இந்த HB2 அடையாளக் குழப்பம் இல்லை.
  • ஆணாக இருந்து ஆணை விரும்பும் ஆண்கள் , ஆண்கள் ஓய்வறையப் பயன்படுத்துகிறார்கள்.
  • பெண்ணாக‌ இருந்து பெண்ணை விரும்பும் பெண்கள் , பெண்கள் ஓய்வறையப் பயன்படுத்துகிறார்கள்.
பாலினம் மாறிவர்களின் (Transgender) அடையாளச்  (Identity )சிக்கல்தான் இங்கே பேசப்படுகிறது.

"தனக்கு வந்தால்தான் காய்ச்சலும் தலைவலியும் தெரியும்" என்பது போல இதை மற்றவர்கள் முழுதுமாகப் புரிந்து கொள்ளமுடியாது. ஒரு ஆண் குழந்தைப்பேறு மருத்துவர் (Gynecologist) , அறிவியல் ரீதியாக குழந்தைப் பேறு பற்றி தெரிந்து இருந்தாலும், குழந்தைகளை பிரசவித்தல் முறையில் நிபுணராக இருந்தாலும் , உணர்வளவில் பிரசவிக்கும் பெண்களை புரிந்தவர் என்று சொல்ல முடியாது. அதுவே மருத்துவர் (Gynecologist) பெண்ணாக இருந்தால், அதில் அறிவியலும் , உணர்வும் கலந்து இருக்கும்.

எனவே நானோ நீங்களோ என்னதான் பல்ட்டி அடித்தாலும் நாம் சந்தித்திராத‌ ஒன்றை முற்றிலும் புரிந்துகொள்ள முடியாது உணர்வளவில்.

அமெரிக்காவில் ஓய்வறைப் பிரச்சனை பெரும் பிரச்சனையாகி வருகிறது.

இரண்டு நிலைப்பாடுகள்
  • ஆணுக்கான ஓய்வறையை பயனபடுத்த தகுதி அவரின் பிறப்புச் சான்றிதழலில் (Birth Certificate) ஆண் என்று இருக்க வேண்டும்.
  • பெண்ணுக்கான ஓய்வறையை பயனபடுத்த தகுதி அவரின் பிறப்புச் சான்றிதழலில் (Birth Certificate) பெண் என்று இருக்க வேண்டும். 
இதுதான் கன்சர்வேட்டிவ் (Conservative) மக்கள் மற்றும் மதக்காரர்களின் (religious) நிலை.
  • ஓய்வறையின் பிரிவு அல்லது எந்த ஓய்வறை என்பது ஒருவர் இன்று மனதளவில், உடலளவில் என்னவாக இருக்கிறார்  என்றுதான் இருக்கவேண்டுமே தவிர , அவர் பிறக்கும்போது என்ன புறக்குறியோடு பிறந்தார் என்பதல்ல. 
இது மற்றவர்கள் வைக்கும் வாதம்.

இதில் எது சரி எது தவறு என்பது சுலபமாகச் சொல்லிச் செல்லும் விசயம் அல்ல. இரண்டிலுமே சரி விகிதத்தில் சாதக பாதகங்கள் உள்ளது.

பிறப்புச் சான்றிதழ் அடிப்படையில் உரிமை தான் சரியான தீர்வு என்றால்:

ஆண்களுக்கான ஓய்வறை:
பிறக்கும்போது ஆணாகப் பிறந்தவர் இன்று தன்னை பெண்ணாக‌ மாற்றிக்கொண்டு  (உடல் & உடை) பெண்களுக்கான புற அடையாளங்களுடன் இருப்பவர், தனது பிறப்புச் சான்றிதழ் தன்னை ஆண் என்று சொல்கிறது என்ற அடிப்படையில் அங்கு சென்றால் அவருக்கும் மற்றவர்களுக்கும் அந்த இடம் உகந்ததாக இருக்குமா?

பெண்களுக்கான ஓய்வறை:
பிறக்கும்போது பெண்ணாகப் பிறந்தவர் இன்று தன்னை ஆணாக‌ மாற்றிக்கொண்டு  (உடல் & உடை) ஆண்களுக்கான‌ புற அடையாளங்களுடன் இருப்பவர், தனது பிறப்புச் சான்றிதழ் தன்னை பெண் என்று சொல்கிறது என்ற அடிப்படையில் அங்கு சென்றால் அவருக்கும் மற்றவர்களுக்கும் அந்த இடம் உகந்ததாக இருக்குமா?

இன்று என்னவாய் இருக்கிறாய் என்ற‌ அடிப்படையில் உரிமை தான் சரியான தீர்வு என்றால்:

ஆண்களுக்கான ஓய்வறை:
பிறக்கும்போது பெண்ணாகப் பிறந்தவர் இன்று தன்னை ஆணாக‌ மாற்றிக்கொண்டு  (உடல் & உடை) ஆண்களுக்கான‌ புற அடையாளங்களுடன் இருப்பவர், தனது பிறப்புச் சான்றிதழ் தன்னை பெண் என்று சொன்னாலும் , இன்று தான் என்னவாக இருக்கிறார் அடிப்படையில் அங்கு சென்றால் அவருக்கும் மற்றவர்களுக்கும் அந்த இடம் உகந்ததாக இருக்குமா?

பெண்களுக்கான ஓய்வறை:
பிறக்கும்போது ஆணாகப் பிறந்தவர் இன்று தன்னை பெண்ணாக‌ மாற்றிக்கொண்டு  (உடல் & உடை) பெண்களுக்கான‌ புற அடையாளங்களுடன் இருப்பவர், தனது பிறப்புச் சான்றிதழ் தன்னை ஆண் என்று சொன்னாலும் , இன்று தான் என்னவாக இருக்கிறார் அடிப்படையில் அங்கு சென்றால் அவருக்கும் மற்றவர்களுக்கும் அந்த இடம் உகந்ததாக இருக்குமா?

இதில் எது சரியானது? சிக்கல் இரண்டிலும் உள்ளது.

பெண்களும் (பிறப்பில் இருந்து இன்றுவரை பெண்ணாகவே உள்ள) , குழந்தைகளும் பாதிக்கப்படுவார்கள் என்றால் , அந்த பாதிப்பின் காரணிகள் இரண்டிலும் உள்ளது. எதை சரி என்று சொல்வது அல்லது எதை தவறு என்று சொல்வது?

இன்று என்னவாய் இருக்கிறார்கள் உணருகிறார்கள் என்ற அடிப்படையில் ஓய்வறையைப் பயன்படுத்துவதே சரியானதாக இருக்கும். என்பதே என் நிலை.

.

2 comments:

  1. அங்கேயாவது பால் மாறி தான் மனதளவில் உணர்கிறார்கள்
    இந்தியாவில் சிலர் தம்மை கடவுளாகவே உணர்கிறார்கள்.

    ReplyDelete
  2. ஃபாலோ அப் போடாம விட்டுட்டேன். ப்ளாக்கில் கமெண்ட் போட்டு ரொம்ப நாள் ஆச்சுல்ல

    ReplyDelete