Sunday, January 26, 2020

மந்தை மந்தையாக‌வே நகரும் மனித உறவுகள்: தலைமுறை இடைவெளி

ழக்கமாக நாங்களே நாயகர்களாக வலம் வருவோம். அல்லது அப்படி ஒரு நினைப்பு. எங்களுக்கு அனைவரையும் தெரியும். அரசியல் மற்றும் உள்ளூர் பஞ்சாயத்துகளில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், வந்திருப்பவர்களில் பாதிக்குமேல் தெரிந்திருக்கும். அனைவரிடமும் பேச ஏதாவது இருக்கும். ஏதாவது நாடகம் போடுவோம். எங்களின் நாடகம் ஏதாவது அரங்கேறிக்கொண்டே இருக்கும். எதையாவது செய்துகொண்டே இருப்போம். உள்ளூர் தமிழ்சங்க அரசியல் பொரணிகள் , சண்டைகள் , வம்புகள் என்று போகும் எங்கள் சந்திப்புகள். அதாவது நாங்களே எல்லாம் போல் ஒரு உணர்வு. ஆம், அப்போது அப்படித்தான் இருந்தது.

Wife, I & Veedu (Wi-Fi Veedu)
https://www.youtube.com/watch?v=8FcU-Qd191g

ங்களின் நாடகமோ அல்லது இசைக்குழுவோ அதிக நேரம் எடுக்கும் ஒன்று. கிடைக்கும் 10 முதல் 15 நிமிடங்களில் மேடையில் அரங்க அமைப்பு முதல் அனைத்தையும் செய்து, நாடகத்தை நடத்தி முடிப்பது என்பது போர்க்கால அடிப்படையில் செய்யப்படும். மேலும் ஒலி,ஒளி அமைப்புகளுக்கு சரியான வசிதிகள் இருப்பது இல்லை தமிழ்ச்சங்களில். ஏதாவது ஒரு சினிமா பாட்டை பின்னணியில் பாடவிட்டு,அதற்கு ஆடிவிட்டுபோவதிற்கு மட்டுமே ஏற்ற இடம் தமிழ்ச்சங்கம்.

எங்கே போகிறோம்?
https://www.youtube.com/watch?v=NklJbk9kAhA

குறைந்தது அரைமணிநேரம் கிடைத்தால் தவிர மேடை நாடகங்கள் போடமுடியாது என்று சொல்லிவிட்டேன். ஏனோதானோ என்று செய்வதில் உடன்பாடு இல்லை. இரண்டு வருடங்களாக தமிழ்ச்சங்க நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை.

5th Dimension - Muthtamil Vizha 2016
https://www.youtube.com/watch?v=5T1oQNt2R3s

**
நேற்று தமிழ்ச்சங்க‌ பொங்கல்விழா. இதற்கான மேடை அமைப்பு மற்றும் அலங்கார வேலைகளுக்கு , என்னை விழாக்குழுவினர் அழைத்தார்கள். ஆம்  இங்கு நான் தோட்டாதரணியும்கூட நேரமின்மையால் என்னால் களத்தில் இறங்கி வேலை செய்யமுடியாது என்று சொல்லி, அவர்களுக்கு சில யோசனைகளைச் சொல்லி ஊக்குவித்தேன். இந்தமுறை சிறப்பாகவே செய்தார்கள் விழாக்குழுவினர்.

ந்த 2020 பொங்கல்விழா என்னை மேறுமாதிரியாக பாதித்தது. முழுக்க முழுக்க ஒரு பார்வையாளனாக மட்டுமே கலந்து கொண்டேன். மகள் , மகளின் தோழிகள் சேர்ந்து ஒரு சினிமா பாட்டுக்கு ஆடினார்கள். எனக்கு இது கருத்தளவில் ஒப்புமை இல்லாதது, ஆனால், இதுதான் இவர்களால் செய்ய முடிந்த ஒன்று இந்த மேடையில்.

ந்த ஒரு கலையிலும் ஒரு கதை சொல்லப்பட வேண்டும் (storytelling) என்பது என் நிலைப்பாடு. பரதநாட்டியம் எனக்கு பிடிக்காமல் போனதற்கு ஒரு காரணம், காலம் காலமாக கண்ணனையே அவர்கள் காதலிப்பதும், சனாதன வேதமத (aka Hindu) அடையாளங்களையே சுத்தி வருவதுமே.  இதை உடைக்க வேண்டும் என்று, வேறு ஒரு மேடையில் இந்தக் குழந்தைகளை வைத்து Sia - Cheap Thrills க்கு நடனம் அமைத்தேன்.

Sia - Cheap Thrills ft. Sean Paul || Dance Remake || Balloon MaMa
https://www.youtube.com/watch?v=cJhi5c6Wlyo

**
னக்கு வயது இப்போது 49. என் நண்பர்களும் அதே வயதினர். அதாவது, 40+ வயதினர்.எனது  90 % நட்புகள் எங்கள் குழந்தைகளின் வயதை ஒத்த குழந்தைகள் அவர்களுக்கும் இருப்பதால் உருவான ஒன்று. காலப்போக்கில் நெருங்கிய நண்பர்களாகிவிட்டோம். புலம்பெயர் வாழ்க்கையில் நண்பர்களே உறவுகள். இப்போது எங்களின் முதல் குழந்தைகள் கல்லூரிக்குச் சென்றுவிட்டார்கள். இரண்டாவது குழந்தைகளைச் சுற்றி பிழைப்பு ஓடிக்கொண்டுள்ளது நட்புவட்டத்தில். இதுதவிர காஃபி மற்றும் பீர் அருந்துவதற்காக வாரம், மாதம் சில சந்திப்புகள் நடந்தாலும், இவை அனைத்தும் எங்களுக்குள்ளே.

எனக்கான வட்டம் என்பது,எனது 40+ நண்பர்களே. வேறு யாரும் நெருங்கிய வட்டத்தில் இல்லை, ஏன் பழக்கமே இல்லாமல் போனது நேற்றுதான் எனக்கு உறைத்தது. எனக்கு மட்டும் அல்ல, பலருக்கும் அப்படியே. நாம் ஒரு குழுவாக, நம் வயதை ஒத்தவர்களுடன் மட்டுமே பயணித்திக்கொண்டுள்ளோம். ஒரே ஊரில் இருந்தாலும், நமக்குப்பின் இருக்கும் தலைமுறையுடனோ, முன் இருக்கும் தலைமுறையுடனோ தொடர்பர்றவர்களாக ஆகிவிடுகிறோம்.
**
நேற்று வந்த தமிழ்ச்சங்க கூட்டத்தில்,70 சதவீதம் எனக்கு தெரியாத இளைய தலைமுறை. இருபது வருடங்கள் குப்பை கொட்டிக்கொண்டு இருக்கும் இதே ஊரில்,நேற்று நான்
அந்நியனாக உணர்ந்தேன். எனது நண்பர்களில் சிலர் தொழில் முறையில் இளையதலைமுறையினரிடம் தொடர்பு வைத்துள்ளார்கள். அதாவது உணவகம் நடத்துவது , Tuition Center நடத்துவது போன்ற தொழில் செய்பவர்களுக்கு சில இளையதலைமுறைக் குடும்பங்கள் பழக்கமாக உள்ளது. எனக்கு சுத்தமாக அந்தச் சங்கிலி அறுந்துவிட்டது நேற்றுதான் தெரிய வந்தது. இரவு முழுக்க எனக்கு இதே சிந்தனை.

குழந்தைகளை வைத்து , அவர்களின் வயதுக்கேற்ற குழந்தைகளைக் கொண்டவர்களுடனே பழக ஆரம்பித்து, அதுமட்டுமே என்று ஆகி, முன்னாலும் , பின்னாலும் உள்ள மற்ற ஒரு மனிதக் கூட்டத்துடன் தொடர்பற்ற வாழ்க்கையை அதே ஊரில் வாழ்ந்துகொண்டுள்ளேன். இங்கே பெரும்பாலானவர்களுக்கு அதே நிலைமை. நாம் ஒரு மனிதக் கூட்டமாக, நம் வயதுடையவர்களுடன் Batch by Batch ஆக நகர்ந்துகொண்டுள்ளோம் என்று நினைக்கிறேன். என்னளவில் அதுதான் நிகழ்ந்துள்ளது.

னியாக காடுகளில் பலநாட்கள் இருக்கக்கூடியவன். நாடகம்,இசை, Balloon Sculptures என்று பல தளங்களில் செயல்படுபவன். ஆனால் , 49 வயதில் என்  Social வாழ்க்கையை திரும்பிப்பார்க்கும்போது, ஒரே மந்தையில் மட்டுமே நகர்ந்து வந்திருக்கிறேன். இதை கடந்த சில ஆண்டுகளாக உணரமுடிந்தாலும், நேற்று என் முகத்தில் அடித்த உண்மை.  இளையவர்களுடன், 30+ மனிதர்களுடனான தொடர்பு அவ்வளவு சிறப்பாக இல்லை. ஏன் இல்லவே இல்லை  மெய்யுலகில்.

I am going to do something about that.

No comments:

Post a Comment