Thursday, December 20, 2018

சனாதன பயங்கரவாத கருத்தியலும், சனநாயக இந்தியாவும்: திருமாவளவன்

ழல் இந்த நாட்டுக்கு கேடு விளைவிக்கிறது. ஊழலை ஒழிக்க வேண்டும். அதிலே யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. மது மக்களை சீரழிக்கிறது. மதுவை ஒழிக்க வேண்டும். மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும். அதிலே யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால்,ஊழலை ஒழிக்கவேண்டும் என்கிற‌ விழிப்புணர்வு பெற்றிருக்கிற‌ அளவுக்கு,மதுவை ஒழிக்கவேண்டும் என்கிற‌ விழிப்புணர்வை பெற்றிருக்கிற‌ அளவுக்கு,சனாதன‌த்தின் பயங்கரவாதத்தை புரிந்திருக்கிறோமா? அந்த விழிப்புணர்வை பெற்றிருக்கிறோமா? என்கிற‌ கேள்வி நம் முன்னால் நிற்கிறது. அதைப் பற்றிய புரிதல்,அரசியல் களத்தில் பணியாற்றக் கூடியவர்களுகிடையிலும் கூட பெரிதாக இல்லை என்பதுதான். இடதுசாரிகள் அதைப் புரிந்து வைத்திருக்கிறார்கள். அம்பேத்கர் இயக்க,பெரியார் இயக்கத் தோழர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். அதிலும், எந்தளவுக்கு அந்த புரிதல் இருக்கிறது? என்பதை, நாம் மதிப்பீடு செய்யவேண்டிய ஒரு கட்டத்தில் இருக்கிறோம். இந்த தேசத்திற்கு ஊழலால் வருகிற ஆபத்தைவிட, மதுவால் வருகிற ஆபத்தைவிட,சனாதன பயங்கரவாதத்தால் வருகிற ஆபத்து, மிகவும் கொடியது. ஈராயிரம் ஆண்டுகளுக்குப் பின்னால் இந்த தேசத்தை இழுத்துச் செல்வதற்கான ஒரு முயற்சி. சொல்லப்போனால்,சனாதன இந்தியாவை மீண்டும் இங்கே கட்டிக் காப்பாற்ற வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம்.

இர‌ண்டு கோட்பாடுகளைக் இடையிலே யுத்தம் நடப்பதைப் போல,இர‌ண்டு சட்டங்களுக்கிடையில் யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. Code of Manu , Code of Ambedkar. Code of Manu என்பது மனுதர்மச் சட்டம். Code of Ambedkar என்பது இந்திய அரசிலமைப்புச் சட்டம். இது சனநாயதத்தை நிலைநாட்டப் போராடுகிறது. அது சனாதன‌த்தை நிலைநாட்டப் போராடுகிறது. ஆக இந்த இடத்தில்தான் நாம் எந்த பக்கம் நிற்க‌ வேண்டும் என்கிற, தேவை எழுகிறது. பௌத்தம் இதை எதிர்த்து போராடியதால் தான் தோழர்களே,வீழ்த்தப்பட்டது. இன்றைக்குள்ள‌ இந்திய அரசமைப்புச் சட்டம் 1950 லே நடைமுறைக்கு வந்தது என்றாலும் கூட, உண்மையில் இன்றைக்கு பத்து சதவீதம் கூட அரசியலமைப்புச் சட்டம் என்கிற இந்த இந்தியக் கட்டமைப்புச் சட்டம் நடைமுறையில் இல்லை.அதனால்தான் ஆணவக் கொலைகள் நடக்கின்றன.

சாதிக் கலப்பு நிகழ்ந்துவிடக்கூடாது. ஒரு சாதி இன்னொரு சாதியோடு கலந்துவிடக் கூடாது என்பது சனாதனம். சாதி விட்டு சாதி திருமணம் செய்ய கூடாது. இது தலித் அல்லாதவர்களுக்கும், தலித்துகளுக்கும் இடையிலான ஒரு தீண்டாமைச் சுவர் இருப்பதாக மட்டுமே நாம் புரிந்துகொண்டிருக்கிறோம். அதுவல்ல,ஒவ்வொரு சாதிக்கிடையிலும் தீண்டாமைச்சுவர் இருக்கிறது. எல்லா சாதிகளுக்கு இடையிலும் ஏற்றத்தாழ்வு இருக்கிறது. பார்ப்பனர்களைத் தவிர அத்தனை சாதியினரும் கீழ்சாதி என்பதுதான் மனுதர்மம். அந்த மனுதர்மக் கோட்பாட்டில் சனாதன கோட்பாடு அல்லது வர்ணாசிரமக் கோட்பாடு என்று சொல்லுகிற போது,நான்கு வர்ணங்களை சனாதனம் சொல்கிறது. பிராமணர்,சத்திரியர்,வைசியர்,சூத்திரர் என்கிற இந்த நான்கு வர்ணங்களுக்கிடையிலும் சமத்துவம் கிடையாது.

பிராமணர்களுக்குள்ளேயே ஆயிரத்தெட்டு சாதிகள். தமிழ்நாட்டில் இருக்கிற அய்யரும் அய்யங்காரும் ஒன்றல்ல. அவர்களுக்கிடையே இடைவெளி இருக்கிறது. தீண்டாமைச்சுவர் இருக்கிறது. அய்யர் வீட்டுக்குள்ளே அய்யங்கார் நுழைந்து விட முடியாது. அய்யர்,அய்யங்கார் ஒருவருக்கொருவர் கொடுக்கல் வாங்கல்,பெண் கொடுக்க பெண் எடுக்க என்பது இயல்பாக நடக்க வாய்ப்பே இல்லை. அய்யர், அய்யங்கார் நம்பூதிரிகளின் வீட்டுக்குள்ளே நுழைய முடியுமா? என்றால் நுழையமுடியாது. கேரளாவில் இருக்கிற நம்பூதிரிகள் இந்தியாவிலேயே மிக உயர்ந்த சாதி என்கிற எண்ணத்தோடு இருப்பவர்கள். நம்பூதிரிகளின் வீட்டுக்குள்ளே யாரும் நுழைந்துவிட முடியாது. மேற்கு வங்கத்தில் இருக்கிற Mukherjee, Banerjee, Chatterjee என்கிற இந்தப் பார்ப்பனர்கள்,நம்பூதிரிகளுக்குச் சமமானவர்கள் இல்லை. அவர்களுக்கிடையிலேயும் சமத்துவம் கிடையாது. பார்ப்பனர்களிலே கோயில் பூசாரி வேலை செய்யக்கூடிய பார்ப்பனர்கள் வேறு குலம் கோத்திரம். ஈமச்சடங்குகள் செய்கிற‌ பார்ப்பனர்கள் வேறு குலம், வேறு கோத்திரம். சவுண்டிப் பார்ப்பனர்கள் என்று சொல்வார்கள் ஈமச்சடங்குகளை செய்யக்கூடிய பார்ப்பனர்களை. சவுண்டிப்பார்ப்பனர்கள்,கோவிலில் பூசாரி வேலை செய்யக்கூடிய பார்ப்பனர்களோடு சமம் கிடையாது. சமையல் தொழில் செய்யக்கூடிய பார்ப்பனர்கள் சமம் கிடையாது.

இப்படி சாதிகளுக்கிடையிலே சமத்துவம் இல்லாத ஒரு நிலையை நிலைநாட்டி இருப்பது சனாதனம். மகாராஃச்டிராவிலே இருக்கிற பார்ப்பனர்கள் தங்களை "சித்பவன் பார்ப்பனர்கள்" என்று சொல்லிக் கொள்கிறார்கள். காஃச்மீரிலே இருக்கிற பார்ப்பனர்கள், "கவுல் பார்ப்பனர்கள்" என்று சொல்லிக் கொள்கிறார்கள். அண்மையிலேகூட கூட ஒரு பிரச்சாரத்தின் போது ராகுல் காந்தி அவர்களை,கோயில் பூசாரி அவர்கள், "உன் குலம் கோத்திரம் என்ன?" என்று கேட்டபோது, "நான் காஃச்மீரத்தைச் சார்ந்த கவுல் பார்ப்பனர்" என்று சொல்லியிருக்கிறார். அது பூசாரி கேட்டதனால் சொல்ல வேண்டிய கட்டாயம். ஆக, அப்படி சொல்ல வேண்டிய நிலை இந்த சமூகத்தில் இன்றைக்கும் இருக்கிறது. நான் கூட கோயில்களுக்குப் போனால் என்னை கேட்கிறார்கள். நானும் ஏதாவது ஒன்றைச் சொல்ல வேண்டிய நிலையில், நாம் இருக்கிறோம். ஆக இதுதான் இன்றைக்கு சமூக யதார்த்தம்.

சத்திரிய வர்ணத்திற்கும், பிராமண வர்ணத்திற்கும் எப்படி சமத்துவம் இல்லையோ,அது போல் இந்த சத்ரிய குலத்திற்குள் ஆயிரத்தெட்டு சாதிகள். எந்த சாதியும் ஒன்றுக்கொன்று சமமானவை அல்ல. பெண் கொடுக்க, எடுக்க முடியாது. அவர்களுக்கிடையிலேயே ஏற்றத்தாழ்வு உண்டு. குலம் கோத்திரம் உண்டு. அப்படி கூறுபோட்டு வைத்து இருப்பதுதான் சனாதன தர்மம். மன்னாதி மன்னன் ராசாதிராச‌ன் என்று சொன்னாலும்,ஒரு கோவிலின் கருவறைக்குள்ளே,பாண்டிய மன்னனாக இருந்தாலும்,சோழ மன்னனாக இருந்தாலும்,சேர மன்னனாக இருந்தாலும் கருவறைக்குள் நுழைய முடியாது. பூணூல் போட்டவர் மட்டும்தான் கருவறைக்குகுள்ளே நிற்க‌ முடியும். அவன் கையில் இருக்கிற வாளைவிட,இவன் தோளில் கிடக்கிற‌ பூணூலுக்குத்தான் வலிமை அதிகம். அவ‌னால் மட்டும் தான் கருவறைக்குள்ளே நுழைய முடியும். இதை எது நிலைநாட்டியது? வன்முறை இல்லாமல் இதை நிலைநாட்டி இருக்க முடியுமா? ஒடுக்குமுறை இல்லாமல் இதை நிலைநாட்டி இருக்க முடியுமா? மன்னருடைய மனைவி என்று,எந்த ராணியாவது கருவறைக்குள்ளே நுழைந்துவிட முடியுமா? இன்றைக்கு சபரிமலைக்குள்ளே நம் வீட்டுப் பெண்கள் வழிபாடு செய்யமுடியவில்லை என்று நாம் சொல்கிறோம். அந்த காலத்தில் சேரனுடைய மனைவியும் நுழைந்து இருக்க முடியாது. மகாராணியாய் இருந்தாலும் கூட, அங்கே போய் இருக்க முடியாது. ஏனென்றால் மகாராணியும் மாதவிடாய்க்கு விதிவிலக்கானவள் அல்ல. அவர்களில் ஐதீகம், மாதவிடாய் பருவத்தில் இருக்கிற பெண்கள், படிக்கட்டு ஏறக்கூடாது என்பதுதான்.

அண்மையிலே நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது, ராசஃச்தானிலே,உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சர் "யோகி ஆதித்யநாத்" ஒரு அறிவிப்பைச் செய்தார். "ராசஃச்தானில் பிசேபி ஆட்சிக்கு வந்தால்,பால்ய விவாகத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வருவோம்". பால்ய விவாகம் என்பது சனாதனம். சிறுவனுக்கும், சிறுமிக்கும் திருமணம் செய்வது மனுதர்மச் சட்டத்தின்படி செல்லும். இன்றைக்கு நாம் நடைமுறையிலே வைத்திருக்கிற அரசியலமைப்புச் சட்டத்தின்படி, அது குற்றம். விதவை மறுமணம் செய்யக்கூடாது என்பது சனாதனம்,மனுதர்மம். சிறுமியே விதவையானால் கூட அவளுக்கு மொட்டை அடிக்க வேண்டும்,வெள்ளைப்புடவை உடுத்தவேண்டும்,தாலி அறுக்க‌வேண்டும்,கூந்தலை பறிக்கவேண்டும்,பூவைப் பறிக்கவேண்டும்,வளையலை உடைக்க வேண்டும். இதுதான் மனுதர்ம கோட்பாடு. இதுதான் சனாதனம். மக்கள் தொகையில் பாதியாக இருக்கிற பெண்களை ஒட்டுமொத்தமாக அடக்கி,ஒடுக்கி,முடக்கி வைத்தார்கள். மூலைக்குள்ளே ஒடுக்கி வைத்தார்கள். யாரும் படிக்க முடியாது. அவர்களுக்கு கல்வி இல்லை. மாதவிடாய் காலத்தில் அவர்களுக்கும் தீட்டு. வீட்டுக்கு வெளியேதான் கிட‌க்க வேண்டும்.

இந்தியா முழுவதும் கிராமங்கள் இரண்டு வாழிடங்களாக பிரித்து வைக்கப்பட்டிருக்கின்றன. ஊர்தெரு,சேரி. ஒரு இரட்டை இந்தியாவாக இருக்கிறது. சேரி இந்தியாவாக, ஊர்தெரு இந்தியாவாக, இரட்டை இந்தியாவாக இருக்கிறது. இரட்டைக் குவளை மட்டுமல்ல,இரட்டை வாழ்விடம்,இரட்டை சுடுகாடு. இது இன்றைக்கு அமைதியான முறையில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த அமைதி எவ்வளவு கொடூரமான ஒடுக்குமுறையால் நிலை நிறுத்தப்பட்டு இருக்கும் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். ஊர்தெரு என்கிற‌ இடத்திலே,எல்லா சாதிகளும் கலந்து, ஒரு வீடு ஒரு சாதி, இன்னொரு வீடு அடுத்த சாதி, என்று சாதிக்கலப்புடன் தெருக்கள் இருப்பதில்லை. அதிலே மிகத்தெளிவாக, இது "கோனார் தெரு", இது "பிள்ளைமார் தெரு", இது "செட்டியார் தெரு", இது "முதலியார் தெரு", இது "படையாட்சி தெரு" என்று ஒவ்வொரு கிராமத்திலும் சாதிவாரியாக தெருக்கள் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன.யார் இதை வடிவமைத்தது? யார் இதை நிலைநாட்டியது? எத்தனையோ படையெடுப்புகள் நிகழ்ந்திருக்கின்றன. எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஆனால்,இந்த சமூகக் கட்டமைப்பில் சிறிய சீர்குலைவும் ஏற்படவில்லை.

மொகலாயர்களும் இந்த நாட்டை ஆண்டிருக்கிறார்கள் பல நூறு ஆண்டுகள். ஆங்கிலேயர்களும் இந்த நாட்டை ஆண்டிருக்கிறார்கள் பல நூறு ஆண்டுகள். எத்தனையோ அந்நியப்படையெடுப்புகள் இங்கே நிகழ்ந்திருக்கின்றன. எவ்வளவோ மாமன்னர்கள் இந்த நாட்டை ஆண்டிருக்கிறார்கள். ஆனால்,இந்த சனாதனக் கட்டமைப்பில் சிறிய மாற்றத்தைக்கூட ஏற்படுத்தாமல் அப்படியே விட்டுவிட்டுப் போயிருக்கிறார்கள். அந்த அளவுக்கு இந்த சமூகக் கட்டமைப்பின் வடிவம் வலுவாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அந்த அளவுக்கு சனாதனம் கோலோச்சியிருகிறது. மிக வலிமையாக கோலோச்சியிருகிறது. பெண்கள் குடும்ப என்ற அமைப்புக்குளே கட்டுப்பட்டு கிடக்கிறார்கள். மாமியார் என்கிற பெண், மருமகள் என்கிற பெண்ணை கொடுமையாக ஒடுக்குகிறாள். இந்த ஒடுக்குமுறையை மாமியாருக்கு கற்பித்தது யார்? ஆணாதிக்கத்தை இந்த மண்ணில் நிலைநாட்டியது அது? எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்தும், ஆணாதிக்கத்தை தகர்க்க முடியவில்லை. இந்த மண்ணில் நீண்ட நெடுங்காலமாக இரண்டு கோட்பாடுகளுக்கு இடையிலே யுத்தம் நடந்து கொண்டே இருக்கிறது. ஒரு கோட்பாடு சனாதன கோட்பாடு, இன்னொரு கோட்பாடு ச‌னநாயகக் கோட்பாடு.

ச‌னநாயகம் என்கிற‌ சொல்லாட்சி இந்த நூற்றாண்டில் நடைமுறைக்கு வந்தது என்றாலும்கூட, ச‌னநாயகம் என்கிற கருத்து அல்லது சிந்தனை என்பது,கௌதம புத்தரின் காலத்திலிருந்தே நடைமுறையில் இருக்கிறது.அன்றைக்கு அதற்குப் பெயர்  பெயர் பௌத்தம். இன்றைக்கு நாம் அதற்கு அரசியல் சொல்லாடலாக Democracy அல்லது ச‌னநாயகம் என்று சொல்கிறோம். சனாதனக் கருத்தை எதிர்த்து கௌதம புத்தர் தான் ஒரு மாற்றுக்கோட்பாட்டை முன் வைக்கிறார். அதுதான் பௌத்தம். பௌத்தம் என்பதை சிலர் மதமாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். பௌத்தம் மதம் அல்ல. அது சனாதன் எதிர்ப்பு கருத்தியல்.  சனநாயக்கோட்பாடு. சமத்துவத்தை,சகோதரத்துவத்தை,சுதந்திரத்தை வலியுறுத்தக்கூடிய ஒரு கோட்பாடு. இதை எப்படி நாம் உறுதிப்படுத்த முடியும் என்று சொன்னால்,புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் அரசியல் அமைப்புச் சட்டத்தை எழுதி,அதற்கான முகவுரையை எழுதுகிறபோது,அதிலே மிக முக்கியமான நான்கு சொற்களை பதிவு செய்திருக்கிறார். அதுதான் அந்த அரசியலமைப்புச் சட்டத்திற்கான அடிப்படையான சொற்கள். அல்லது, கோட்பாட்டுச் சொற்கள் என்று சொல்லலாம். அதற்கான கோட்பாடு அந்த நான்கு சொற்களில்தான் அடங்கியிருக்கிறது.

அரசியல் அமைப்புச் சட்டம் என்று இதற்கு நாம் பெயர் சொல்வதைவிட, இந்திய‌ கட்டமைப்புச் சட்டம் என்று சொல்வதுதான் மிகப் பொருத்தமாக இருக்கமுடியும். Constitution of India என்கிற‌ ஆங்கில சொற்றொடருக்கு பொருத்தமான தமிழாக்கம், "இந்திய‌ கட்டமைப்புச் சட்டம்" என்று சொல்வதுதான். நாம் இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்று அழைக்கிறோம். அரசியலமைப்பு, சமூக அமைப்பு, பொருளாதார அமைப்பு, கலாச்சார அமைப்பு, இவை அனைத்தும் கொண்ட ஒரு இந்தியக் கட்டமைப்பு, எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான வழிகாட்டும் நூல்தான், சட்டம்தான் Constitution. எந்தவொரு சட்டமும் கோட்பாட்டின் அடிப்படையில் இருந்துதான் வரையறுக்கப்படும். சட்டம் வெறும் சட்டமாக இருக்காது. அதற்கு ஒரு கோட்பாடு உண்டு. ஆகவே,இந்த அரசியலமைப்புச் சட்டம் என்று சொல்லப்படுகிற,இந்திய‌ கட்டமைப்புச் சட்டத்திற்கான கோட்பாடு, இந்த நான்கு சொற்களில் அடங்கியிருக்கிறது. என்ன அந்த நான்கு சொற்கள் என்றால், Justice நீதி, Liberty சுதந்திரம், Equality சமத்துவம், Fraternity சகோதரத்துவம். இந்த நான்கு சொற்களும் மிக முக்கியமானவை. அந்த அரசியலமைப்புச் சட்டத்தின் அடித்தளமான சொற்கள்.

இதைப்பற்றி விமர்சிக்கிறவர்கள்,புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களைப்பற்றி விமர்சிக்கிறவர்கள்,இது ஃபிரஞ்சுப் புரட்சியின் வரலாற்றில் இருந்து காப்பியடிக்கப்பட்ட ஒன்று. அதிலிருந்து இவர் எடுத்துக் கையாண்டிருக்கிறார். இவர் சுதந்திரமாக, சொந்தமாக ஒன்றும் சிந்தித்து எழுதவில்லை என்கிற‌ அடிப்படையிலேயே, அவரை விமர்சித்த காலத்தில்,அதற்கு அவர் ஒரு பதில் சொல்லியிருக்கிறார். "நான் இந்த சொற்களை ஃபிரஞ்சுப் புரட்சியின் வரலாற்றில் இருந்து எடுத்துக் கையாண்டதாக பலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நான் ஒரு உண்மையைச் சொல்ல விரும்புகிறேன். இந்த சொற்களை நான் புத்தரின் போதனைகளில் இருந்து எடுத்து கையாண்டிருக்கிறேன்" என்று சொல்லி இருக்கிறார். ஆக ,புத்தரின் போதனைகளில் இருந்து எடுத்துக் கையாளப்பட்ட அந்த சொற்கள்தான், liberty equality and fraternity என்கிற சொற்கள். அம்பேத்கர் அவர்களே அதைப் பதிவு செய்கிறார்,குறிப்பிட்டிருக்கிறார். இவைதான் இன்றைக்கு அரசியலமைப்புச் சட்டத்தின் அடிநாதமாக, அடித்தளமாக விளங்குகின்றன. இதனடிப்படையில்தான் அரசியலமைப்புச் சட்டம் முழுமையாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. Justice For All எல்லோருக்குமான நீதி. சுதந்திரம்,கருத்துச் சொல்ல சுதந்திரம்,உடை உடுத்த சுதந்திரம்,உணவு உண்ண சுதந்திரம். சுதந்திரம், அதுதான் சனநாயகத்தின் ஆணிவேர். சனநாயகத்திற்கான அடிப்படை.

Equality, equality of status and of opportunity என்பதை அதிலே பதிவு செய்திருக்கிறார். அது ஆண்,பெண் இருபாலருக்கும் பொதுவானது. ஆணும் பெண்ணும் சமத்துவம், சமமானவர்கள். சாதியின் பெயரால், மதத்தின் பெயரால், மொழியின் பெயரால், பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு என்கிற சமத்துவமின்மை கூடாது. சமத்துவம் Equality .இதுவெல்லாம் நடைமுறைக்கு வரவேண்டுமானால் சமூகத்தில் சகோதரத்துவம் என்பது இங்கே நிலைநிறுத்தப்பட வேண்டும். சகோதரத்துவத்தை மறுப்பது சனாதனம். சமத்துவத்தை மறுப்பது சனாதனம். சுதந்திரத்தை ம‌றுப்பது சனாதனம். இதை வழங்குவது,சுதந்திரத்தை வழங்குவது,அனைவருக்கும் நீதி வழங்குவது, சமத்துவத்தை வழங்குவது,சகோதரத்துவத்தை வழங்குவது,ச‌னநாயகம். ஆகவே இந்த நான்கையும் அடிப்படையாகக்கொண்டு இந்திய கட்டமைப்பு சட்டத்தை வரையறுத்த புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள், இந்த அரசு எத்தகைய அரசாக இருக்கும் என்பதை, அந்த preamble என்கிற முக‌வுரையிலே  சொல்கிறார். SOVEREIGN SOCIALIST SECULAR DEMOCRATIC REPUBLIC . இதுதான் இந்திய அரசியலமைப்புச் சட்டம் அல்லது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வரையறுத்த புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள், கண்ட கனவு. நாம் கட்டமைக்கப் போகிற இந்தியா எப்படிப்பட்ட இந்தியாவாக இருக்க வேண்டும் என்றால், எப்படிப்பட்ட அரசு இங்கே அமைக்கப்பட வேண்டும் என்றால், SOVEREIGN, SOCIALIST, SECULAR, DEMOCRATIC, REPUBLIC . "இறையாண்மை உள்ள,சமதர்மம் உள்ள,மதச்சார்பற்ற,ச‌னநாயக குடியரசை நிறுவுவோம். எதற்காக? அனைவருக்கும் நீதி கிடைப்பதற்காக,அனைவருக்கும் சுதந்திரம் கிடைப்பதற்காக,அனைவருக்குமிடையிலும் சகோதரத்துவம் நிலைநாட்டப்படுவதற்காக,இந்திய‌ மக்களாகிய நாங்கள் முடிவு செய்து இருக்கிறோம்" என்றுதான், அந்த முகவுரை தொடங்குகிறது.

அதில் SECULAR என்பது இடையிலேயே இணைக்கப்பட்ட ஒரு சொல். அம்பேத்கர் அவர்கள் சட்டத்தை எழுதிய காலத்திலேயே,தொடக்கத்திலேயே,அது இடம்பெறவில்லை. இந்திராகாந்தி அம்மையார் அவர்கள்,பிரதமராக இருந்த காலத்திலே,அரசியலமைப்புச் சட்ட திருத்தம் கொண்டு வந்து,இடையிலே அது இணைக்கப்பட்டது. ஆனால், அதற்கான அடிப்படை என்பது,ஏற்கனவே அந்த சட்டத்தில் இடம் பெற்றிருக்கிறது. மதசார்பற்ற ஒரு அரசு என்பது,நிறுவப்பட்ட ஒன்று. உலகத்தில் எல்லா நாடுகளும், அரசியல் அமைப்புச்சட்டத்தின் மூலம்,அரச மதத்தை அறிவிப்பு செய்திருக்கிறார்கள். அரபு நாடுகள் எல்லாம் இசுலாம் சார்ந்த அரசு. ஆசிய நாடுகள் எல்லாம் பௌத்தம் சார்ந்த அரசுகள். ஐரோப்பிய நாடுகள் எல்லாம் பெரும்பாலும் கிறித்தவம் சார்ந்த அரசுகள். ஆக அந்தந்த நாட்டின் அரசியலமைப்புச் சட்டம்,அரச மதம் எது என்பதை வெளிப்படையாகவே பிரகடனம் செய்திருக்கின்றன. இலங்கையின் அரச மதம் பௌத்தம். அதைப்போல, அரேபிய நாடுகளின் அரச மதம் இசுலாம். ஆசிய நாடுகளில் பெரும்பான்மையான நாடுகள் இந்தியாவைத்தவிர,பாகிஃச்தானைத்தவிர,பெரும்பாலான நாடுகள் பௌத்த நாடுகள். பௌத்த மதம் அரச மதம். ஆனால், இந்திய அரசியலமைப்புச் சட்டம்தான் அப்படி அரசமத‌த்தை declare செய்யாத அரசியலமைப்புச் சட்டம். பிரகடனம் செய்யாத ஒரு அரசிலமைப்புச் சட்டம். ஆக, மதச்சார்பின்மை என்பது, அரசியலமைப்புச் சட்டத்தின் அடிநாதங்களுல் ஒன்று. அதனுடைய ஆன்மாவில் ஒன்று. அதுதான் மிக முக்கியமானது. ஆகவே இடைக்காலத்திலே அது இணைக்கப்பட்டது. ஆக,இதுதான் அம்பேத்கர் கனவு கண்ட இந்தியா. SOVEREIGN, SOCIALIST, SECULAR, DEMOCRATIC, REPUBLIC .அப்படிப்பட்ட ஒரு இந்தியாவை நாம் கட்டமைத்துக் கொண்டு வருகிற நேரத்தில்,அதைத் தகர்த்துவிட்டு,ஆயிரக்கண‌க்கான தலைமுறைக்கு முன்னாள் இருந்த சனாதன இந்தியாவை இங்கே நிலைநாட்ட வேண்டும் என்று துடிக்கிறது சனாதனக் கூட்டம்.

ஆகவே, இந்த சனாதனம் என்பது எவ்வளவு வலிமையானதாக இருக்கிறது,எவ்வளவு கொடூரமாக இருக்கிறது,எவ்வளவு பயங்கரமான கருத்தியலாக இருக்கிறது என்பதற்கு அண்மையிலே நடந்த நான்கு படுகொலைகளை முக்கியமாக நாம் பார்க்கலாம். மராத்திய மாநிலத்தில் "நரேந்திர தபோல்கர்" (Narendra Dabholkar), "கோவிந்த் பன்சாரே" (Govind Pansare)இந்த இரண்டு பேரும் இசுலாமியர்களா? கர்நாடக மாநிலத்தில் கொல்லப்பட்ட பேராசிரியர் "கல்புர்கி"யும் (Kalburgi), "கௌரி லங்கேசு"ம்(Gauri Lankesh) கிறித்தவர்களா? இவர்கள் இந்துக்கள்தான். இவர்களை "சனாதன் சன்ஃச்தா" (Sanatan Sanstha ) என்கிற‌ ஒரு அமைப்பு தேடிப்பிடித்து வீட்டுக்கு போய், நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்து, சுட்டுக் கொலை செய்கிறார்கள். ஏன்? ஏன் என்கிற‌ கேள்விக்கு காந்தி படுகொலையை இணைத்துப் பார்த்தால் நாம் புரிந்துகொள்ள முடியும். காந்தியடிகள் புரட்சியாளர் அம்பேத்கர் பார்வையில் அவரும் ஒரு சனாதனத்தின் மாற்று வடிவம் தான். அவர் தீவிரமான இந்துத்துவ சிந்தனையாளர். இந்து மதத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர். அதனால்தான் தாழ்த்தப்பட்ட மக்களை அரசியல் ரீதியாக பிரிக்கக் கூடாது என்று,உண்ணாநிலை அறப்போராட்டம் இருந்தார். இந்துமதம் பலவீனப்பட்டு விடக்கூடாது,இந்துக்கள் பிளவு பட்டுவிடக்கூடாது  என்கிற‌ அடிப்படையிலே,அந்தக் கருத்தை அவர் முன்வைத்தார். "பிறவி அடிப்படையில் ஏற்றத்தாழ்வு இருப்பது என்பது,ஆண்டவன் இட்ட கட்டளை" என்பதை நியாயப்படுத்தக் கூடியவர்தான் காந்தியடிகள். அப்படிப்பட்ட காந்தியடிகளை RSS அமைப்பைச் சார்ந்த நாத்துராம் கோட்ஃசே (Nathuram Godse) சுட்டுக் கொன்றதற்கு என்ன காரணம்? அதி தீவிரமான இந்துத்துவ பற்றாளர் காந்தியடிகளை, RSS கும்பல் சுட்டுக் கொன்றதற்கு என்ன காரணம்? அவர்கள் விரும்பிய இந்தியாவைக் கட்டமைப்பதற்கு,காந்தியடிகளின் அணுகுமுறை எதிராகப் போய்விடும் என்பதை முன்கூட்டியே தீர்மானிக்கிறார்கள். ஏனென்றால் விடுதலை அளிக்கப்படுகிற‌ அந்த காலகட்டத்தில்,பாகிஃச்தான் பிரிந்து செல்லக் கூடிய சூழல் ஏற்பட்டபோது,இருதரப்பிலும் வன்முறைகள் நிகழ்ந்து இலட்சக்கணக்கானோர் கொல்லப்படும் நிலை ஏற்பட்டது. அப்போது "இந்துக்களும் முஃச்லிம்களும் ஒற்றுமையாக இருக்கவேண்டும்" என்று அவர் பிரச்சாரம் செய்தார். இந்துக்களும் இஃச்லாமியர்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று சொன்னதே, அவர்களின் இந்துராசுடிரக் கனவுக்கு எதிராகப் போய் முடியும் என்று, முன்கூட்டியே சிந்திக்கிற ஒரு அமைப்புதான் RSS. மிகக் கொடூரமான,ஒரு பயங்கரவாதத்தை,ஆயதம் ஏந்தி,படுகொலை செய்யக்கூடிய ஒரு போக்கினை அவர்கள் அக்காலத்திலேயே கையில் எடுத்தார்கள்.

இந்துக்களும் இஃச்லாமியர்களும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்று சொன்னதோடு மட்டுமில்லாமல்,பாகிஃச்தான் பிரிந்த நிலையில்,அன்றைய இந்திய அரசு,ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்திருந்தவர்கள்,பாகிஃச்தானுடைய‌ கட்டமைப்புக்காக வழங்க வேண்டிய கடைசித் தவணை தொகையை தர வேண்டும் என்றும் வலியுறுத்தினார். Last installment க‌டைசித் தவணைத் தொகை. நேரு அவர்கள் அதை நிறுத்தி வைத்தார். வன்முறை அடங்கட்டும் என்று நிறுத்தி வைத்தார். உடனே உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியவர் காந்தி. அதை உடனடியாக வழங்க வேண்டும். அவர்கள் பிரிந்து போய்விட்டார்கள். அவர்களுக்குச் சேர வேண்டிய தொகையை, முழுமையாக ஒப்படைக்க வேண்டும் என்று அவர் போராட்டம் நடத்தினார். இதுதான் RSS இயக்கத்தின் கண்களை உறுத்தியது. ஒரு அதிதீவிர இந்துத்துவ பற்றாளரான, எந்நேரமும் ஃக‌ரே ராம் ஃக‌ரே ராம் ஃக‌ரே கிருஃச்ணா என்று சொல்லிக்கொண்டே, முனகிக்கொண்டே இருந்த, காந்தியடிகளையே ஈவிரக்கமில்லாமல் சுட்டுக் கொன்றார்களே,அதனுடைய‌ தொடர்ச்சிதான் தபோல்கரையும்,பன்சாரேவையும்,கல்புர்கியையும்,கவுரி லங்கேசையும் படுகொலை செய்ய வைத்திருக்கிறது. இந்த தேசத்தை இந்தியா என்று அழைப்பதில் அவர்களுக்கு உடன்பாடில்லை. இன்றைக்கு நாம் பறக்கவிட்டு கொண்டிருக்கிற தேசியக்கொடியை,RSS அலுவலகத்தில் இன்றைக்கும் அவர்கள் ஏற்றவில்லை. "இதில் எங்களுக்கு உடன்பாடில்லை" என்று அன்றைக்கு அறிவித்தார்கள். அதை இன்றைக்கும் நடைமுறையில் பின்பற்றி வருகிறார்கள். "இந்து ராஃச்டிரம் என்று தான் இந்த நாட்டுக்கு பெயர் சூட்டவேண்டும். இந்து மதத்தை இந்த அரசாங்கத்தின் மதமாக அறிவிக்க வேண்டும். இந்துக்கள் மட்டுமே இங்கு வாழ வேண்டும், ஆள வேண்டும். சிறுபான்மையினர் என்கிற பெயரால் இங்கே யாரும் உரிமை கோரக்கூடாது". இதுதான் அவர்களின் நோக்கம். இந்து ராஃச்டிர கனவு. சவார்க்கருடைய(Savarkar) கனவு. அவரின் சீடர்களான ஃகெட்கேவர் (Hedgewar), கோல்வார்க்கர்(Golwalkar) போன்றவர்களுடைய கனவு. அவர்கள் வரையறுத்திருக்கிற செயல்திட்டங்கள் இதுதான். சனாதன இந்தியாவை மீண்டும் இங்கே நிலைநிறுத்த வேண்டும். முழுமையாக நிலைநிறுத்த வேண்டும். சாதி அடிப்படையிலான இந்தக் கட்டமைப்பில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தக்கூடாது.

இதை இன்றைக்கு மெல்ல மெல்லத் தகர்த்துக் கொண்டிருப்பது எது? சின்னச் சின்ன செதில்களாக உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கின்றன. பெரிய தாக்குதல் கிடையாது. அதற்கு காரணமாக இருப்பது இந்த, இந்திய அரசியலமைப்புச் சட்டம்தான். இந்திய அரசியலமைப்புச் சட்டம்தான் சனாதன இந்தியாவை, மெல்ல மெல்ல தகர்த்து ச‌னநாயக இந்தியாவை கட்டமைப்ப‌தற்குரிய வழிவகையை உருவாக்கிக்கொண்டிருக்கிறது.

ஆகவே அவர்கள் இன்றைக்கு கையிலெடுத்திருக்கிற ஆயுதம் என்பது, "இந்துக்கள் ஓரணியில் திரள வேண்டும். இந்த தேசத்திற்கு இந்து ராஃச்டிரம் என்று பெயர் சூட்ட வேண்டும். இந்துக்களே இந்த மண்ணை தொடர்ந்து ஆளவேண்டும். சனாதனத்தை இங்கே நிலைநிறுத்த வேண்டும்", என்கிற அடிப்படையில்,ஒவ்வொரு சாதிக்கும் இடையில்,ஒரு நிலையான தடுப்புச்சுவரை நிறுவ வேண்டும்,எந்த காரணத்தை முன்னிட்டும் இவர்கள் ஒரு எண்ணிக்கை பலம், BC,OBC,MBC அல்லது Scheduled caste, Scheduled tribe என்கிற அடிப்படையில் கூட,ஒரு எண்ணிக்கை பல‌ம் வந்து விடக்கூடாது. Scheduled tribe என்பது இந்திய அளவில் ஒரு சமூகமாக,ஒரு இன‌மாக அணிதிரள்வதற்கு இந்த Social Justice என்ற இட ஒதுக்கீடு வாய்ப்பைத் த‌ந்தது. SC ST SC ST என்று எல்லா நிறுவனங்களிலும் சேர்ந்தே சங்கங்களை கட்டமைத்து வந்தார்கள். இப்போது  SC யைத் தனியே பிரித்து விட்டார்கள். ST யைத் தனியே பிரித்து விட்டார்கள். அந்த எண்ணிக்கை பலத்தை தகர்ப்பதற்காக. Scheduled caste மூவாயிரத்திற்கு மேற்பட்ட சாதிகள் இந்தியா முழுக்க இருகின்றன. கிட்டத்தட்ட இவர்கள் Scheduled caste என்கிற அடிப்படையில் இணைந்தால் கூட, 30 கோடி பேருக்குமேல் வருவார்கள். 30 கோடி பேர், தங்களை Scheduled caste என்கிற அடையாளத்தோடு,அரசியல் சக்தியாக, அவர்கள் எழுச்சி பெற்றால்,இந்தியாவின் நிரந்தர பிரதமராக ஒரு Scheduled caste தான் வர முடியும்.

அப்படி ஒரு நிலை ஏற்பட்டுவிடக்கூடாது,அந்த எண்ணிக்கை பலம் இவர்களுக்கு ஒரு நம்பிக்கையைத் தந்து விடக்கூடாது என்பதற்காகத்தான்,Scheduled caste என்கிற பட்டியல் இனத்தை,ஒவ்வொரு சாதியையும் தனித்தனிக் கூறாக்கிக் கொண்டிருக்கிறார்கள். சாதிப் பெருமையைப் பேசச் சொல்கிறார்கள். வன்னியர் வன்னியராய்த் திரள‌வேண்டும், என்று OBC மத்தியிலும் அந்த அரசியலை திணிப்பது, அது பிசேபி(BJP) agenda அது. ஒவ்வொருவரும் அவரவர் சாதியாகத் திரளவேண்டும். இதை ஏதோ தனிப்பட்ட ராமதாசுடைய செயல்திட்டம் என்று கருதி விடாதீர்கள். இது RSS, பாரதிய ச‌னதா ஆகிய சனாதனக் கும்பலின் செயல்திட்டம். ஒவ்வொரு சாதியைம் தனித்தனி சங்கமாக,அணிதிரள‌ வைக்க வேண்டும் என்பதை அவர்கள் திட்டமிட்டு பயிற்சி கொடுக்கிறார்கள். அதைத்தான் social engineering என்று சொல்லுகிறார்கள். அந்த அடிப்படையில் தான் தர்மபுரியை தீ வைத்துக் கொளுத்தியது,சூறையாடியது. அது எதேச்சையாக நடந்த, ஒரு காதல் பிரச்சினையால் நடந்த வன்முறை வெறியாட்டம் என்று தயவுகூர்ந்து யாரும் எண்ணிவிடாதீர்கள். அது திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு வன்முறை வெறியாட்டம். தலித் வெறுப்பை உத்தியாகக் கொண்டு,சாதி இந்துக்களை எல்லாம் திரட்டுவது. அத‌ற்காகப் பயன்படுத்தப்பட்ட அரசியல் உத்தி. வன்னியர்கள் வன்னியர்களாத் திரளுவது,கவுண்டர்கள் கவுண்டர்களாக திரளுவது,முக்குலத்தோர் முக்குலத்தோராக திரளுவது. அதைப்போல தலித்துகளும் கூட,தனித்தனியே ஒவ்வொரு சாதியும் தங்கள் அடையாளத்தோடு எழுச்சி பெற வேண்டும். இது பாரதிய சனாதவுடைய agenda இது.

எத்தனையோ முயற்சிகள் விடுதலைச் சிறுத்தைகளுக்குள்ளேயும் ஊடுருவி, "நீங்கள் ஏன் தமிழரைப் பற்றி பேசுகிறீர்கள்? நீங்கள் ஏன் Dalit consolidation ஐப் பற்றிப் பேசுகிறீர்கள்? நீங்கள்,உங்கள் சமூகம் என்ன அடையாளமோ அந்த அடையாளத்தை ஏன் பேசக்கூடாது?"  என்று எனக்கே வந்து பாடமெடுத்திருக்கிறர்கள். எனக்கே பாடமெடுத்திருக்கிறர்கள். இது திட்டமிட்டு நடத்தப்படுகிற ஒரு தொலை நோக்குத்திட்டம். அவர்களுடைய செயல் திட்டங்களில் ஒன்று. பலபேர் இன்றைக்கு அதற்கு இரையாகும் நிலையிலே, தலித் சமூதத்திலும் இருக்கிறார்கள். அதாவது ஒரு பொது நீரோட்டத்திலே இணைந்துவிடக்கூடாது. ச‌னநாயக சக்திகளாக அணி திரண்டுவிடக்டக்கூடாது. ச‌னநாயக சக்திகளாக அணிதிரளும் முயற்சியில்,அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்து விடக்கூடாது. அணி திரண்டுவிடக்டக்கூடாது. அதை எப்படியாவது தகர்க்க‌ வேண்டும். அப்படி இவர்கள் இன்றைக்கு மிகவும் திட்டமிட்டு உத்திகளை கையாள்கிறார்கள். அவர்களின் திட்டத்திற்கு மிகப் பெரிய முட்டுக்கட்டையாக இருப்பது எது என்றால், அரசியலமைப்புச் சட்டம் தான்.

வாச்பாயி (Vajpayee) அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன்,முதலில் அவர் நியமித்த ஒரு கமிட்டி "வெங்கடாச்சலய்யா கமிட்டி". அது எதற்கு என்றால் அரசியல் அமைப்புச் சட்டத்தை திருத்துவதற்காக அல்லது மாற்றுவதற்காக. திருத்துவதற்காக அல்ல மாற்றுவதற்காக. Common Civil Code என்கிற‌ ஒரு பொது சிவில் சட்டத்தை கொண்டு வரவேண்டும் என்பது அவர்களின் நோக்கம். One Nation One Culture என்கிற முழக்கம் அந்த அடிப்படையில்தான் வருகிறது. One Nation என்பதிலே யாருக்கும் மாற்று கருத்து இல்லை. சரி ஒரே தேசமாக இருக்கட்டும். யாரும் இப்போது காலிஃச்தான் கோர‌வில்லை. தனித் தமிழ்நாடு கோரவில்லை. சம்மு காஃச்மீரை பிரித்துக்கொண்டு செல்வோம், என்று அரசியல் இயக்கங்களோ அல்லது பெரிய யுத்தங்களோ ஒன்றும் பெரிதாக நடக்கவில்லை. தங்களுக்கான உரிமைகளை கேட்டு போராடிக் கொண்டிருக்கிறார்கள். One Nation என்பதிலே யாருக்கும் மாற்றுக்கருத்தில்லை. One Culture என்பது என்ன? ஒரே கலாச்சாரம் ஒரு தேசத்தில் எப்படி உருவாக்க முடியும்? ஒரே மதம் இருந்தால்தான் ஒரே கலாச்சாரம் இருக்க முடியும். அதுவும் இந்து மதத்தில் ஒரே கலாச்சாரம் உண்டா? இந்து சமூகத்தின் கட்டமைப்பிலே,பார்ப்பனரும் இந்துதான்,அடித்தட்டிலே கிடக்கிற தலித் அல்லது சக்கிலியனும் இந்துதான். ஆனால் சக்கிலியன் வீட்டில் நடக்கிற திருமணச் சடங்கும்,பார்ப்பனர் வீட்டில் நடக்கிற திருமணச் சடங்கும் ஒன்றா? பார்ப்பனர் வீட்டில் நடக்கிற ஈம‌ச் சடங்கும்,சக்கிலியன் வீட்டிலே நடக்கிற ஈம‌ச் சடங்கும் ஒன்றா? கிடையாது. இந்து மதத்திற்குள்ளே கூட ஒரே கலாச்சாரம் இல்லை.


இதையெல்லாம் மாற்றி அமைப்பதற்காக புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் Code of Hindu bill என்கிற ஒரு இந்துச் சட்ட மசோதாவைக் கொண்டு வந்தார். அதையே நிறைவேற்றவிடாமல், விவாதத்திற்கே எடுத்துக் கொள்ளாமல் முறியடித்தார்கள்,அன்றைய தீவிர இந்துத்துவ சக்திகள். நேருவால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவர்களுக்குப் பணிந்து போகக்கூடிய நிலைதான் அன்றைக்கு பிரதமர் நேரு அவர்களுக்கு இருந்தது. அந்த நெருக்கடி இருந்தது. ஆகவே,One Nation One Culture என்பதும் சனாதனத்தின் ஒரு வெளிப்பாடு. ஒரே மொழி,ஒரே மதம் இருந்தால் தான் ஒரே கலாச்சாரத்தை இங்கே கட்டமைக்க முடியும். ஒரே கலாச்சாரம் என்கிற முழக்கம் எவ்வளவு கொடூரமானது,பயங்கரமானது,என்பதை இன்னும் நாம் புரிந்து கொள்ளாமல் இருக்கிறோம். அதை மூர்க்கமாக எதிர்க்க வேண்டும் நாம். Pluralism என்கிற பன்மைத்துவம் தான் ச‌னநாயகத்தின் அடிப்படை. பல்வேறு தேசிய இன‌ங்களைக் கொண்ட தேசம் இது. பல்வேறு மதங்களை கொண்ட தேசம் இது. பல்வேறு உணவுப் பழக்கத்தை கொண்ட,உடை பழக்கத்தை கொண்ட,கலாச்சாரத்தைக் கொண்ட ஒரு தேசம் இது. இந்த பன்மைத்துவத்தை முற்றிலும் சிதைத்து விட்டு,ஒருமைத்துவத்தை ஏகத்துவத்தை நிலைநாட்ட வேண்டும் என்று அவர்கள் முயற்சிக்கிறார்கள். இது சனாதனத்தின் இன்னொரு செயல்திட்டம்.

எனவே இந்த நாட்டுக்கு பெரும் ஆபத்து சனாதன பயங்கரவாத கருத்தியல்தான். இந்த நான்கு பேரை நான் சொன்னேனே, கௌரி லங்கேஃச்கர் உட்பட. இவர்கள் இடதுசாரி சிந்தனையாளர்களாக இருகிறார்கள் அல்லது சனநாயக சக்திகளாக இருகிறார்கள் என்கிற அடிப்படையில்தான்,அவர்களைத் தேடி,கொலை செய்திருக்கிறது அந்த அமைப்பு. எவ்வளவு பயங்கரமான ஒரு கருத்தியலை இவர்கள் அடிப்படையாகக் கொண்டிருக்கிறார்கள்? மீண்டும் அவர்கள் இந்த நாட்டின் ஆட்சி அதிகாரத்தை வந்தமர்ந்தால் இந்த நாடு என்ன ஆகும்? இன்னும் ஒரு ஐந்தாண்டு காலம் பாரதிய சனதா கட்சியின் ஆட்சி இங்கே நிகழுமேயானால், நடக்குமேயானால்,அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றுவதற்கு அவர்கள் தயங்கமாட்டார்கள். அதிபர் ஆட்சி முறையை கொண்டு வருவதற்கு தயங்கமாட்டார்கள். இந்த தேசத்தின் பெயரை இந்து ராஃச்டிரம் என்று மாற்றுவதற்கு தயங்க மாட்டார்கள். 'கர் வாப்சி" (Ghar Wapsi ) என்பதை உரத்து முழங்குவது அல்ல, அதை தீவிரமாக நடைமுறைப் படுத்துவதில் குறியாக இருப்பார்கள். தமிழ்நாட்டுக்குள்ளே எவ்வளவு சிக்கல்? ஒட்டு மொத்தமாக பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது, வட இந்திய மாநிலங்களில் எல்லாம் இரத்தக் களரி நடந்த நேரத்தில், தமிழ்நாடு ஓரளவிற்கு அமைதியாக இருந்தது. இங்கே யாராலும் அவ்வளவு பெரிய இரத்தக் களரியை உண்டு பண்ண முடியுவில்லை.

ஆனால், இன்றைக்கு விநாயகர் சதுர்த்தியின்போது தென்காசியிலே,வெளிப்படையாக வன்முறை நடக்கிறது. மிக வெளிப்படையாக இன்றைக்கு சனாதன சக்திகள் பேசத் தொடங்கி இருக்கிறார்கள்,வெளிச்சத்திற்கு வந்து இருக்கிறார்கள். பெரியாரையே கொச்சைப்படுத்தக்கூடிய அளவுகு,துணிச்சலைப் பெற்றிருக்கிறார்கள். ஆகவே சனாதனம் மீண்டும் இங்கே ஆட்சிக்கு வருவதென்பது,இந்த தேசத்திற்கு பெரும் ஆபத்து. அதைத்தான் இங்கே நாம் மதவெறி எதிர்ப்பு என்று பதிவு செய்திருக்கிறோம். இது வெறும் மதவெறி எதிர்ப்பு அல்ல. சனாதன எதிர்ப்பு. மதவெறி அரசியல் என்பது தன்னுடைய மதத்தின் மீதான பற்றுதலை மட்டும் வெளிப்படுத்துவதல்ல. வெறுப்புதான் வெறியாக மாறுகிறது. வெறுப்பில் இருந்துதான் வெறி உருவாக முடியும். எதன் மீது வெறுப்பு? சிறுபான்மை மக்களின் மீது வெறுப்பை விதைத்தால்தான்,இந்துக்களுக்கு வெறி அந்த மதத்தின்மீது உருவாகும். சாதி வெறியும் இன்னொரு சாதியின் மீதான வெறுப்பில் இருந்து தான் உருவாக முடியும். மத‌ வெறியும் இன்னொரு மதத்தின் மீதான வெறுப்பில் இருந்து தான் உருவாக முடியும். அதற்கு அவர்கள் கையாண்ட மிகப்பெரிய சாதுரியமான உத்திதான், பாபர் மசூதி இடிப்பு. Mandal Commission பரிந்துரை நடைமுறைக்கு வந்தபோது இட ஒதுக்கீட்டை எதிர்க்கிறோம் என்கிற பெயரால்,அத்வானி நடத்திய இரயாத்திரை என்பது இரத்த யாத்திரையாக மாறியது. அது பாபர் மசூதி இடிப்பிலே போய் முடிந்தது. பாபர் மசூதி இடிக்கப்பட வில்லை என்றால் பாரதிய ச‌னதா ஆட்சிக்கு வந்திருக்க வாய்ப்பே இல்லை. வாய்ப்பே கிடையாது. ஆக ஒரு வன்முறையின் மூலம் தான் ஒரு polarization அவர்களால் நடத்த முடிகிறது. Hindu Polarization. பாபர் மசூதி இடிப்பின் மூலம்தான் அவர்களால் நிகழ்த்த முடிந்தது. ஒரு நம்பிக்கையை அவர்களால் உருவாக்க முடியாது. இந்துக்களுக்கு ஒரு நம்பிக்கையை அவர்கள் தந்தார்கள். அப்படி மறுபடியும் மறுபடியும் இந்து polarization அவர்களின் வாக்கு வங்கிக்காக,அவர்களின் ஆட்சி அதிகாரத்திற்காக,அவர்கள் கையாளப்போகிற உத்தி என்பது,சிறுபான்மை மக்களுக்கு எதிராக,ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக,திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்படுகிற‌ வன்முறை வெறியாட்டம் தான் உத்தியாக இருக்க முடியும்.

ஒரு Civil war இங்கே நடக்கிறது,தொடர்ச்சியாக. இந்த நாட்டு மக்களுக்கு இடையிலே மறுபடியும் மறுபடியும்,சாதியின் பெயரால்,மதத்தின் பெயரால்,வன்முறைகள் அரங்கேறிக்கொண்டே இருக்கும். அதுதான் அவர்களுக்கான ஆதாயம். அப்படிப்பட்ட ஒரு இந்தியாவை,சனாதன இந்தியாவை கட்டமைக்க வேண்டும் என்று அவர்கள் துடியாய் துடித்துக் கொண்டிருக்கிற நிலையில்தான்,இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும்,ச‌னநாயகத்தையும் நாம் பாதுகாத்தாக வேண்டும். அதற்கு மதவெறி என்கிற, சிறுபான்மைச் சமூகத்திற்கு எதிரான,தலித்துகளுக்கு,பழங்குடி மக்களுக்கு எதிரான வெறுப்பு அரசியலை விதைக்கிற,இந்த சாதியவாத,மதவாத கும்பலுக்கு எதிராக ச‌னநாயக சக்திகள் அணிதிரள வேண்டும். அந்த கொள்கை புரிதலோடு தான் இன்றைக்கு நாம் தேர்தல் களத்தை அணுகவேண்டி இருக்கிறது. அந்த அடிப்படையில்தான் காங்கிரசு கட்சியோடு முரண்பாடு இருந்தாலும்,இந்த தேசத்தை காப்பாற்ற வேண்டுமென்று இடதுசாரிகளும் கூட இன்றைக்கு தமிழகத்திலே திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இணைந்து நிற்க‌ முன்வந்திருக்கிறார்கள். விடுதலைச் சிறுத்தைகளும் அந்த அடிப்படையில்தான்,இன்றைக்கு கைகோர்க்கும் அந்த முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் அற்பர்கள்,ஏதோ நாம் வெறும் தேர்தல் இடங்களுக்காக,தொகுதிகளுக்காக,பெரிய கட்சியிடம் போய்,கெஞ்சிக் கிடக்கிறோம் என்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். அதற்காக நாம் வருத்தப்படவில்லை. ஆனால்,அதற்கு நாம் வீம்பு காட்டி,வீராப்பு பேசி,மீண்டும் சனாதன கும்பல்,ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்கு ஒருபோதும் இடம் தந்து விட மாட்டோம். யார்,என்ன நம்மை இழித்தாலும்,ப‌ழித்தாலும்,எவ்வளவு இளக்காரமாக பேசினாலும்,அதைப் பற்றி கவலைப்படாமல்,மதச் சார்பற்ற சனநாயக சக்திகள்,ஓரணியில் திரளுவதற்குரிய முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.

பெரும் தீங்கு சனாதனிகளால் இந்த தேசத்திற்கு மிகப்பெரும் ஆபத்து சூழ்ந்து இருக்கிறது. இந்த நாட்டு மக்கள் தங்களுக்கு இடையிலேயே சிவில் வார் செய்து கொள்ளக்கூடிய நிலை இங்கே ஏற்படும். இல்லையென்றால் ஒருவன் செத்த மாட்டுத் தோலை உரித்ததற்காக தலித்துகளை அடித்துக் கொல்ல‌ முடியுமா? புனிதப்பசு Holy cow மாட்டுக்கறி தின்னக் கூடாது என்று அவன் ஆணை பிறப்பிக்கிறான். எவ்வளவு கொடூரமானது?  டி.எம்.கிருஃச்ணா (T.M.Krishna) கர்நாடக இசைக் கலைஞர்,அவருக்கு என்ன பாடலைப் பாடவும்,இசையை மீட்டவும் அவருக்கு சுதந்திரம் இருக்கிறது. ஆனால்,நீ கிறித்துவப் பாடலைப் பாடக்கூடாது,முஃச்லிம் பாடலை பாடக்கூடாது,இந்துக்களை எதிர்த்து பாடக்கூடாது என்று அவரை இந்துத்துவ எதிரியாக காட்டி,நடக்கவிருந்த,டெல்லியில் நடக்கவிருந்த நிகழ்ச்சியையே தடை செய்தது சனாதனம் தான். சனாதனக் கும்பல்தான். கேச்ரிவால் (Kejriwal) என்கிற ஒரு சனநாயக சக்தி அங்கே இருந்த காரணத்தினால்,கிருஃச்ணாவின் உணர்வை மதித்து,"நான் நடத்துகிறேன் வாருங்கள்" என்று ஒரு பூங்காவிலே அந்த நிகழ்ச்சியை நடத்தி காட்டினார்.

அந்த ச‌னநாயக சக்திகளாக அணிதிரள வேண்டிய ஒரு தேவை இருக்கிறது. இந்த இருபத்தோறாம் நூற்றாண்டிலே,ஒரு இசை கலைஞன்,தன் விருப்பப்படி,ஒரு இசை நிகழ்ச்சியை,நடத்த முடியாத அளவுக்கு,ஒரு கொடூரமான பயங்கரவாதம் இங்கே திட்டமிட்டு திணிக்கப்படுகிறது. அச்சுறுத்தல் நிகழ்கிறது. பாதுகாப்பில்லை. இடதுசாரி சிந்தனையாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை. சனநாயக சிந்தனையாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை. தலித்துகள் மீது அவர்கள் கரிசனம் காட்டுவதைப் போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவது,உண்மையில் அவர்களை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக அல்ல. தலித்துகளிடையே நாள்தோறும் நிகழ்கிற மத மாற்றத்தை தடுப்பதற்கான ஒரு உத்தி அது. இசுலாமியராகவும், கிறித்தவராகவும் நாள்தோறும் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். பௌத்தர்களாக மாறிக் கொண்டே இருக்கிறார்கள். பழங்குடி மக்கள் தொன்னூறு விழுக்காடு கிறித்துவர்களாக மாறிவிட்டார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. இந்தியாவில் உள்ள பழங்குடி மக்களில் பெருந்தொகை, மக்கள் தொகையில் பெரும்பான்மையானவர்கள், கிறித்தவர்களாக மாறி இருக்கிறார்கள். ஏன்? அந்த மக்களின் நலன்களில் அவர்கள் அக்கறை செலுத்துகிறார்கள் என்பது தான் அதற்கு அடிப்படைக் காரணம். இன்றைக்கு திடுமென பழங்குடி மக்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் அவர்கள் கரிசனம் காட்டுவது என்பது,அவர்களை மேம்படுத்துவதற்காக அல்ல,அந்த மத மாற்றத்தை தடுப்பதற்காக. அந்த அடிப்படையில்தான் தலித் சமூகத்தைச் சார்ந்த தலைவர்களையும் கூட தங்களோடு இணைத்துக் கொண்டு அதிகாரத்தை பகிர்ந்து தருகிற அல்லது குடியரசுத் தலைவர் நாற்காலியில் அமரவைத்து பார்க்கிற உத்திகளையும் கையாளுகிறார்கள்.

இதையெல்லாம் புரிந்து கொண்டு,ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த இயக்கங்களும்,அனைத்து சனநாயக சக்திகளோடும் இணைகிற முயற்சியில் ஈடுபடவேண்டும்.  கௌதம புத்தரால் வெற்றி பெற முடியவில்லை. அய்யன் திருவள்ளுவனால் வெற்றி பெற முடியவில்லை. அவ்வை பாட்டியால் வெற்றி பெற முடியவில்லை. சித்தர்களால் வெற்றி பெற முடியவில்லை. பசவா (Basava) இயக்கத்தால் வெற்றி பெற முடியவில்லை. அது இன்றைக்கு லிங்காயத்துகளாக‌ மாறிப்போய்,ஒரு புதிய சாதியாக மாறிப்போய் நிற்கிறது. நாராயண‌குருவால் வெற்றி பெற முடியவில்லை.ஐயா வைகுண்டரால் வெற்றி பெற முடியவில்லை. மாகத்மா சோதிராவ் ஃபுலே(Mahatma Jyotirao Govindrao Phule) அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களால், அவர், அவருடைய காலகட்டத்தில் அவர் விரும்பிய இந்தியாவைக் கட்டமைக்க முடியவில்லை. ஆனால், கௌதம புத்தரின் காலத்திலிருந்து,புரட்சியாளர் அம்பேத்கரின் காலம் வரையில்,தந்தை பெரியார் உட்பட,தொடர்ச்சியாக இந்த சனாதனத்திற்கு எதிரான,இந்த பயங்கரவாத கருத்தியலுக்கு எதிரான,யுத்தத்தை நடத்திக் கொண்டே வந்ததனால்,இந்த சனநாய சிந்தனைகளை அடைகாத்து வந்ததனால்,இன்றைக்கு நாம், இதை முன்னெடுத்துச் செல்லக்கூடிய வலிமையை பெற்றிருக்கிறோம். இந்தச் சமூகக் கட்டமைப்பிற்குள் ஒரு அசைவை நம்மால் ஏற்படுத்த முடிந்திருக்கிறது. அந்த அசைவை ஏற்படுத்துகிற வலிமை இன்றைக்கு ஒரே ஒரு சக்தி இடம் தான் இருக்கிறது. அது அரசிலமைப்புச் சட்டம். அதிலே நமக்கு முரண்பாடுகள் இருக்கலாம்,மாற்றுக் கருத்துக்கள் இருக்கலாம்,அதில் திருத்தம் செய்ய வேண்டியவை இன்னும் இருக்கலாம்,அது திருத்தப்படக்கூடாத ஒன்று அல்ல. அது புனித நூல் அல்ல. ஆனாலும்,அது ச‌னநாயகத்தை கட்டமைப்பதற்கான அடித்தளம். அப்படிப்பட்ட அந்த ச‌னநாயகத்தை கட்டமைப்பதற்கான,அரசியலமைப்புச் சட்டத்தை அடியோடு மாற்ற வேண்டும் என்று துடியாய் துடிக்கிற,அந்த சனாதன கும்பலின்,வெறுப்பு அரசிய‌லை நாம் புரிந்து கொள்ள வேண்டும். குடிசைகளை மாற்றி அவர்களுக்கு வீடுகள் கட்டித்தர வேண்டும் என்பதற்கான திட்டமில்லை.

உலகிலேயே உயர்ந்த சிலை பட்டேலுக்கு நிறுவுகிறார்கள். பட்டேல் காங்கிரசு கட்சியில்,ஒரு உள்துறை அமைச்சராக இருந்தவர். நேரு அமைச்சரவையில் இருந்தவர். அவர் RSS இயக்கமில்லை. ஆனால்,ஏன் பட்டேலுக்கு சிலை? அவர் இந்திய சமஃச்தானங்களை எல்லாம் பிரிட்டிஃச் பகுதிகளோடு இணைத்தார். அதிலே யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. யார் உள்துறை அமைச்சராக இருந்தாலும் அந்த வேலையைத்தான் அன்றைக்கு செய்திருக்க முடியும்,செய்திருக்க வேண்டும். ஆனாலும் அவருடைய பங்களிப்பு போற்றுதலுக்குரியது. RSS இயக்கத்தை அவரும் கடுமையாக, "அது ஒரு நஞ்சு" என்று விமர்சித்து இருக்கிறார். ஒரு பெரிய கோட்டுக்கு பக்கத்துலே இன்னொரு பெரிய்ய கோட்டைப் போட்டால், பழைய பெரிய கோடு  சிறிய கோடாக மாறிவிடும் என்பதைப் போல,இந்தியா என்றால் காந்தி,காந்தி என்றால் இந்தியா என்றிருந்த நிலையில், காந்திக்கு பக்கத்திலே பட்டேலை நிறுத்தி,எதிர்காலத்தில் வருகிற தலைமுறையினர் எல்லாம்,பட்டேல்தான் இந்தியாவின் மிக உயர்ந்த மனிதர் அன்று கருதக்கூடிய நிலையை,இன்றைக்கு அவர்கள் திட்டமிட்டு செய்திருக்கிறர்கள்.

காந்தியடிகளோடு நமக்கு முரண்பாடு உண்டு. ஆனால் காந்தியடிகளின் மீதான வெறுப்பு இன்னும் அவர்களுக்கு மாறவில்லை என்பதுதான் இதற்கு காரணம். ஆகவே அவர்கள் ஒரு தொலைநோக்கு திட்டத்தோடு இயங்கிக் கொண்டே இருக்கிறார்கள். பாபர் மசூதியை இடித்ததன் மூலம் ஆட்சி அதிகாரத்திற்கு அவர்களால் வர முடிந்தது. குசராத்தில் மிகப்பெரிய வன்முறை வெறியாட்டத்தை கட்டவிழ்த்ததன் மூலம்,மோடி எல்லா மூத்த தலைவர்களையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு பிரதமராக முடிந்தது. வன்முறைகளை,ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான வன்முறைகளை,ஒரு உத்தியாக கையாளுகிற இந்த சனாதன கும்பலை,நாம் அடையாளம் கண்டுகொள்ளவேண்டும். இந்த சனாதன பயங்கரவாதத்தை நாம் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். அதற்கான ஒரு களமாகத்தான் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை இந்த கருத்தரங்கை ஒருங்கிணைத்து இருக்கிறது.

*******
திருமா அவர்களின் இந்த https://www.youtube.com/watch?v=ynYx01bRx9A வீடியோ உரையில் இருந்து, வரிவடிவமாக எழுத்தாக இங்கே பதிகிறேன். திருமா அவர்கள், இலங்கையில் இராசபக்சேவைப் பார்த்து மரியாதை செய்த ஒரு நிகழ்வை அதிகம் விமர்சித்தவன் நான். இன்றைய நாளில் திருமா ஒரு சிறந்த தலைவராக,சிறந்த கருத்தியல்வாதியாக‌ மிளிர்கிறார். நிச்சயம் மாறிவருகிறார்.

இவரின் இந்த வீடியோ பேச்சை இங்கே எழுத்தாக பதிந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது இவரின் இந்த வீடியோ பேச்சு சொல்லும் கருத்து மீது வந்த திடீர் காதலால் அல்ல. நான் பலகாலமாக‌ சொல்லிவரும் அதே சனாதன அரசியலை, இந்திய வரலாற்றில் அது ஏற்படுத்தியுள்ள களங்கத்தை,கலகத்தை இவரும் சொல்கிறார். சிறப்பாக தொகுத்துச் சொல்கிறார் என்பதால்.

திருமா அவர்கள், என்றேனும் ஒருநாள் தமிழக முதல்வராக வந்தால், ஏன் துணைமுதல்வராக வந்தால்கூட அது நாம் அவருக்குச் செலுத்தும் மரியாதை. ஒரு முறை அவரின் இந்த உரையைக் கேட்டுவிடுங்கள்.

முடிந்தவரை அவரின் உரையை வரிவடிவமாக கொடுத்துள்ளேன். அடைப்புக் குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ள ஆங்கில சொற்கள், மேலதிக தகவல் தேடுபவர்களுக்கு வசதியாக இருக்கட்டும் என்று நானாகச் சேர்த்தது. கட்டுரையின் தலைப்பு நானாக‌க் கொடுத்த ஒன்று.

அன்புடன்,
கல்வெட்டு.


No comments:

Post a Comment