Monday, March 16, 2020

கொடிய, கையறுநிலை கேள்வி :உறவுநிலை பிறழ்தல்

ந்த முறை கோவை இரயில் நிலையத்தில்தான் எங்கள் சந்திப்பு நிகழ்ந்தது. நானும் அவரும் வேறு வேறு சிந்தனைகள் கொண்டவர்களாயினும் , சமூக நலம் என்ற தளத்தில் ஒத்த கருத்துடையவராகவும், அதையும் தாண்டி ஒருவர் மற்றவரின் நலம் விரும்பிகளாகவுமே இருந்தோம். ஆனால் இந்த முறை , அவரின் அணுகுமுறை வேறாக இருந்தது.

துவும் நிரந்தரம் அல்ல என்பது ,அரசியலுக்கு மட்டுமானது அல்ல. அனைத்திற்கும் பொதுவானது.  2006 - 2008 ல் எனக்கு நேரிடையாக அறிமுகமான பதிவர் உறவுகளில் முதன்மையானதும் முக்கியமானதும் ஒரு உறவு. சென்னையில் அவர் அலுவலகத்தில்தான் எனக்கு பலர் அறிமுகமானார்கள். இன்று அந்த அலுவலகம் இல்லை. இந்தமுறை அவரை சென்னையில் சந்திக்க திட்டம் இருந்தது. அந்த நேரத்தில் அவருக்கு வேறு வேலை இருந்ததால், அவரை சென்னையில் சந்திக்க முடியவில்லை. பிற்பாடு தொலைபேசியபோது , அவரும் பணி நிமித்தம் கோவை வருவதாகச் சொன்னார்.

னது கோவைப் பயணத்திட்டம் இரண்டு நாட்களாகவே இருந்தது. இவரை சந்திக்கவேண்டும் என்பதால் அதை மூன்று நாட்களாக்கி , ஒரு நாள் முன்னமே சென்று விட்டேன். பத்து வருடப் பழக்கம் உள்ள நண்பருடன் ஒரு புகைப்படம் கூட எடுக்கத் தோன்றாமல் , எங்கள் சந்திப்பு கசப்பில் முடிந்தது, நான் எதிர்பார்க்காத ஒன்று.

"கொள்கையில் மாறுபட்டவர்களுடன் நட்பு பாராட்டவே முடியாது" , என்பது ஒருகாலத்தில் எனது நிலைப்பாடாக இருந்தது. அப்படி இருப்பது வாழ்வைச் சூனியமாக்கும், மேலும் உரையாடல் இல்லா வாழ்க்கை வாழ்வாகாது என்பதை உணர்ந்து, மாற்று நிலைப்பாடு உள்ளவர்களிடமும் உரையாடல் தளத்தை திறந்து , நட்பு பாராட்ட ஆரம்பித்தேன். அப்போதும் , சமமான உரையாடல் தளமே எனக்கு ஏற்றது. தான் செய்வது மட்டுமே சரி என்றோ, அடுத்தவனுக்கு போதனை செய்வது போன்ற (குரு) தோரணைப் பேச்சுக்களை மட்டுமே பீடங்களில் இருந்து பேசினாலோ நகர்ந்துவிடுவேன். ஏன் என்றால் குழந்தையிடம் இருந்தும் கற்க விசயம் உள்ளது என்று நம்புபவன் நான்.

"இந்த திட்டத்தை , ஏன் இப்படிச் செய்யக்கூடாது?" என்று, அவரிடம் நட்பின் உரிமையில் கேட்டேன். இப்படியான கேள்விகளைக்கூட கேட்காவிட்டால் , கேட்க சுதந்திரம் இல்லை என்றால் , அந்த உறவு நட்பாகாது. அப்படி தயங்கினால், அது வெறுமனே "அறிந்தவர்கள்" ( I know him) என்ற தளத்தில் மட்டுமே நிற்கும் நிலை.

ந்தக் கேள்விக்கு, "நீ என்ன செய்து கிழிக்கிறாய்? நாங்கள் செய்வதை விமர்சனம் செய்ய?" என்ற கொடிய , கையறுநிலை கேள்வியை நண்பர் வீசினார்.

து மிகவும் சிக்கலானது. "முத்துக்குளிப்பவன் மட்டுமே முக்கியமானவன் , அவனின் கயிற்றைப் பிடித்துள்ளவன் செல்லாக்காசு" என்பது, வலி தருவது. பத்து இரயில் பெட்டிகளை ஒரு நீராவி இயந்திரப் பெட்டி இழுக்கலாம். ஆனால் , பயணப் பாதையில், கரி சுமந்துவரும் பெட்டியும், கக்கூசு சுமந்துவரும் பெட்டியும் முக்கிய அங்கமே.

விமர்சனம் வைப்பவன் எல்லாம் களப்பணி செய்ய வேண்டும் என்றால் , நன்கொடைகளையும் களப்பணி செய்பவனிடம் மட்டுமே வாங்கலாமே?  களப்பணி மட்டுமே பங்களிப்பு அல்ல. உங்களின் களப்பணிக்கு பல்வேறுவழிகளில் உதவுபவனும் பங்களிப்பவனே. உடல் உறுப்புகள் அனைத்தும் "கை" யாக இருந்துவிட்டால் , அந்த கைக்கு இரத்தம் செலுத்துவது யார்? தானும் , தன் இக்கால நண்பர்களும் மட்டுமே பேசத் தகுதியானவர்கள். மற்றவர்கள் வில்லன்கள் , என்ற எண்ணம் அவரிடம் மேலோங்கி இருந்தது. இது அவரிடம் நான் காணும் மாற்றம்.

ரயில் நிலையத்தில் எங்கள் உரையாடல் , விவாதமாகி , சண்டையாகி விடுமுன் , நான் நிதானித்து. "போதும். என்னை நட்பாக மதிக்காமல், கொள்கையில் , செயல்பாட்டில் வேறுபடுவதால் , எதிரியாக வரிக்கும் உங்களிடம் என்ன செய்வது நான்? உங்கள் பாதையில் நீங்கள் சென்றாலும், பழைய நட்பின் பேரில், உரையாடவும் நலன் விசாரிக்கவும் இயலாத நிலைக்கு உங்கள் , கொள்கைத் தீவிரவாதம் உங்கள் கண்களை மறைக்கிறது" என்று சொல்லி எழுந்து வந்துவிட்டேன்.

ட்டெனப் பிரிந்துவிட்டேன். உரையாட ஏதும் இல்லை. கொள்கை, கருத்து சார் தீவிரவாதத்தின் மறுபக்கத்தை அன்று தரிசித்தேன். மதங்களை நம்புபவர்கள், அரசியலில் பல்வேறு நிலைப்பாடுகளை உடையவர்கள் , சாதி விரும்பிகள் என்று பலரிடம் நான் உரையாடிக் கொண்டுள்ளேன். எந்த ஒரு கருத்தையும் , கொள்கையையும் ,அது மட்டுமே சரி என்று நம்பும் , ஒற்றை நிலை என்பது மனிதனை தீவிரவாதியாக்கும். புலன்களை மூடவைத்துவிடும். மதங்களில் அதுதான் நடக்கிறது. இசுலாமும் , வைணவமும் சமம் என்று , இணை வைக்க முடியாது. தான் தனது மட்டுமே சரி எனும் போது , மிருகக்குணம் வந்துவிடுகிறது.

ரசியல், மதம், சாதக, கம்யூனிசம் , கேப்பிடலிசம், சோசலிசம்....என்ற பல விசயங்களில் , தனது நிலைப்பாடு மட்டுமே சரி என்பவர்களிடம் அல்லது, தன்னை குருபீடத்தில் வைத்துக் கொண்டு வியாக்யானம் செய்பவர்களிடம் , உரையாடல் சாத்தியமே இல்லை.

நேற்று வரை நட்பாக இருந்தவர்கள் இன்று அவர்களின் கொள்கை/நம்பிக்கை சார் தீவிரவாதத்தன்மையில் , மாற்றுக்கருத்தை எதிரித்தன்மையாய் எடுத்து , பழைய உறவை உதறத்துணியும் போது என்ன செய்வது? கற்கும் விசயங்கள் , பழகும் பழக்கம் நம்மை மாற்றும் அதில் சந்தேகம் இல்லை. அது தான் வளர்ச்சியும்கூட. ஆனால் வரலாற்றை மறப்பதும் , கொள்கை மாற்றத்தால் உறவை தள்ளி வைப்பதும் சரியா? என்று சிந்திக்கிறேன்.

நான் அப்படி இருந்தால் , என் தந்தையிடமோ, என் மனைவியிடமோ , என் குழந்தைகளிடமோ உறவு பாராட்ட முடியாது. சமூகப் பழக்கம் , உணவு , சிந்தனை , சித்தாந்தம் என்று நாங்கள் மூவரும் வேறு வேறு துருவங்கள்.

இருக்கும் Relation'ship' களில் இந்த Friend'ship' மட்டும் சிக்கலாகிறது இது போன்ற நிலைப்பாடுகளில்.  எந்தவித சார்புகளும் ( உதாரணம்: பொருளாதாரச் சார்புகள்) இல்லாததால் நட்பு என்ற உறவு, இது போன்ற கொள்கை/சித்தாந்த காரணங்களால் பிறழ் உறவாகிவிடுகிறதோ?

**
இப்போதும் அவர் என் மரியாதைக்கு உரியவர். அவரின் கொள்கைத் தீவிரத்தன்மை மாறலாம் வரும் காலங்களில். ஏன் என்றால் ஒரு காலத்தில் அவரே எதிர் நிலையில் இருந்தவர்தான்.

எங்கிருந்தாலும் நலமாக இருக்கட்டும்.

அவருடன் என் சந்திப்பை முடித்து (முறித்து) விட்டு இரயில் நிலையத்திற்கு வெளியே வந்த எனக்கு , உலகே புரண்டு படுத்துக் கொண்டது போல இருந்தது. பல மணி நேரம் சாலையை வெறித்துக்கொண்டு , பேருந்து நிறுத்தம் ஒன்றில் அமர்ந்துவிட்டேன்.

மனதின் சமநிலை , எண்ணங்களைக் கைக்கொள்ள பல மணிநேரம் ஆயிற்று. வலிகள் நிறைந்தது உறவுகள்.

Dec 8,2017

4 comments:

  1. எழுத்தின் வலிமையை கண்டு பிரமிக்கிறேன் அருமையாக இருக்கிறது வாழ்த்துகள் நண்பரே...
    - கில்லர்ஜி

    ReplyDelete
  2. சிறப்பாக இருக்கு சார் உங்க எழுத்து.. என்னோட கல்லூரி நண்பன், எங்க அம்மாவும், அவுங்க அம்மாவும் ஒன்றாக படித்தவர்கள் இன்னும் சொல்ல போனால் அவனை பார்த்து தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று இருக்கிறேன்.. எனக்கு குழந்தை பிறந்த அடுத்த நாள் அவனுக்கு குழந்தை பிறந்தது நிறைய பேசுவோம் ஆனா திடீர் என்று இந்த பிஜேபி வந்த பிறகு மதத்தை அதிகமாக தூக்கி வைத்து கொண்டு பேச ஆரம்பித்தான் இப்படியே போய் கொண்டு இருக்கும் போது ஒரு நாள் வெடிச்சு நட்பே நின்னு போச்சு.. இது நடந்தது போன வருடம் ஆனா இன்னைக்கு வரைக்கும் என்னால் மீள முடியவில்லை

    ReplyDelete