Saturday, February 08, 2020

அப்பா-1:வைகையில் நீர் ஓடிக்கொண்டிருக்கிறது இம்முறை

மருத்துவமனையில் உள்ள வாட்ச்மேன் தொடங்கி , பெரிய டாக்டர்வரை நம்பிக்கை வைத்துள்ளார் அப்பா. வங்கி வாடிக்கையாளர் போல, "20 வருடமாக இங்குதான் வருகிறேன்' என்று அனைவரிடமும் சொல்கிறார்.

எடை பார்க்கும் செவிலியர் , இரத்தம் சோதனை செய்பவர் என்று அனைவரிடமும் அவரின் பிரச்சனைக்கான தீர்வைக் கேட்கிறார். "மோசன் சரியா போக மாட்டேங்குது" என்பதே அவரின் முக்கியப் பிரச்சனை. அதற்காக மருந்து சாப்பிடுகிறார், இருந்தாலும் இந்த வயதில் குடல் தசைகள் சோர்வடைந்திருக்கும்.யாரால் என்னசெய்ய முடியும் 😢

யாராவது "எல்லாம் சரியாயிடும். இதைச் சாப்பிடுங்க " என்று கற்கண்டு கொடுத்தால் கூட மருந்தென்று நம்பிவிடுவார்.அவருக்குத் தேவை "இந்தப் பிரச்சனை சரியாயிடும். அதற்கு மருந்துள்ளது. இந்தா பிடியுங்கள்" என்று யாராவது சொல்ல வேண்டும்.

அவரின் விளையாட்டுக் களத்தில் அவரின் விதிப்படி மட்டுமே நான் (குடும்பத்தினர் யாரும்) உதவ முடியும். கம்பு ஊன்றினாலும் வழுக்கும் பளபளத் தரையில், ஆதரவிற்கு அவர் கையைப் பிடிப்பதுகூட அவர் விரும்பிய வண்ணம் இருக்க வேண்டும்.

பூனைகள் நுழையும் கதவுபோல இருக்கும் ஒவ்வொரு அறையிலும் , ஒவ்வொரு சோதனைக்காக நுழைந்து வருவது சிக்கலானதாய் இருந்தது எனக்கு. அப்பாவின் மாத்திரை மஞ்சப்பை, மருத்துவ கோப்புகள், தண்ணீர் பாட்டில்கள், என்று ஒரு கை. இன்னொரு கையில் மெதுவாக அப்பாவை சந்து போன்ற மருத்துவமனை அறைகளுக்கிடையே அழைத்துச் சென்று வர வேண்டும்.

*
சோதனை அறையில் இருந்த கல்லூரியில் படிக்கும் செவிலியர்கள் கூட்டத்தில் கூட எனக்கு கண்ணீர் , இயல்பாய் வழிந்து கொண்டு இருந்தது. அவரின் கேள்விகள் குழந்தைத்தனமாய் இருப்பதாக இருந்திருக்கும் அப்பெண்களுக்கு.

அப்பாவின் முதுமை, அம்மா இல்லாத வீடு. அண்ணன் அண்ணி அப்பாவுடன் இருந்தாலும் எனக்கேயான குற்றவுணர்வும், இதற்கான மாற்றே இல்லையா என்ற என் சிந்தனை வந்து போனது.

அப்பா அம்மாவிற்காகவே 10 வருடங்களுக்கு முன் இந்தியா திரும்பி வந்தோம். ஊரில் பிழைக்க முடியாது. சென்னை அல்லது பெங்களூரில்தான் எனக்கு பிழைப்பு. அதுவும் பிடித்திருக்கவில்லை அப்பாவிற்கு. உள்ளூரில் என்ன செய்வது என்று புரியவே இல்லை.

பிள்ளைகள் உடன் இருக்க வேண்டும் என்று பெற்றோர்கள் நினைக்கும்போது நாம் சிக்கலில் விழுந்துவிடுகிறோம். சாபக்கேடான தலைமுறை நம்முடையது.

**
குழந்தைகளையும் மனைவியையும் மதுரையில் இருக்க வைத்துவிட்டு, வாராவாரம் பெங்களூர் போய் வந்ததுண்டு. பின்னர் அதுவும் முடியாமல் பெங்களூர் ஒருவருடம் இருந்து மறுபடியும் அமெரிக்கா திரும்பியாகிவிட்டது.
*
இதோ, எல்லா மருத்துவச் சோதனைகளும் முடிந்து வீடு வந்தாகிவிட்டது.

இன்னும் இரண்டு நாளில் பூமிப்பந்தின் அடுத்த பக்கம் நான் போய்விடுவேன். குரல் வழி மட்டுமே தொடர்பிருக்கும்.

**
அந்தக்கால மனிதர்களுக்கே உரிய சிக்கனம், கடின உழைப்பு கொண்டவர். கடும் நிதி நெருக்கடியில் படிக்க வைத்தார். எனது கல்லூரிச் செலவுகளுக்கு தெரிந்த ஆசிரியர்களிடம் கடன் வாங்க அப்பாவுடன் அலைந்துள்ளேன். எல்லாம் செய்தார். ஆனால் சில பிடிவாதங்கள்.

அவரை மாற்றவே முடியாது. கண்ணீர் இருக்கும் வரை அவருக்காக அழுக வேண்டியதுதான். எந்த உதவியையோ கடமையையோ அவருக்கு செய்ய அனுமதி கொடுக்காத பிடிவாதம்.

என்ன செய்ய வேண்டும் என்பது மட்டுமல்ல என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பதை என் அப்பா எனக்கு கற்றுக் கொடுத்துக்கொண்டே உள்ளார்.

*
வைகையில் அதிசியமாக நீர் ஓடிக்கொண்டிருக்கிறது இம்முறை.

Dec,15,2017

No comments:

Post a Comment