Wednesday, June 22, 2011

ஏன் தமிழ்? யார் தமிழர்?

ஏன் தமிழ்? யார் தமிழர்?


மொழி என்பது ஒரு இனத்துக்கான அடையாளம். மேலும் மொழியானது,அந்த‌ இனம் அவர்களுக்காக சமைத்துக்கொண்ட முதல் ஊடகம்.  மொழி இல்லாமல் இனம் இல்லை. இனம் இல்லாமல் மொழி இல்லை. மொழி ஒரு இடத்தில் தோன்றினாலும், காலப்போக்கில் அது சார்ந்த‌ மனிதர்களுடன் அதுவும் பயணித்து, எல்லா இடங்களிலும் அவர்களுடன் சேர்ந்தே வாழும். அப்படி புலம் பெயர்ந்தவர்கள், அந்த மொழியைப் பேணாவிடில், மொழி அழிந்து போகும் என்பது வர‌லாற்று உண்மை. யுனஃச்கோ-வின் ஆராய்ச்சிப்படி, செத்துமடியும் மொழிகள் http://www.unesco.org/culture/languages-atlas/en/atlasmap.html

மொழி என்பது, தலைமுறைகளுக்கு இடையேயான‌ ஒரு வரலாற்றுத் தொடர்பு சாதனம். இனம் இனமாய் இருக்க,  மொழி முக்கியமான ஒன்று . அதே நேரத்தில் மொழி வாழ வேண்டும் என்றால், இனம் அதை தொடர்ச்சியாகப் பயன்படுத்த வேண்டும்.  மொழியும் இனமும் சேர்ந்தே இருக்கும். ஒன்று இல்லாமல் மற்ற ஒன்று இல்லை.

மிழ் மொழியானது , இந்தியாவில் பண்டைய தமிழகத்தைப் பிறப்பிடமாகக் கொண்டாலும், மணப்பெண் சீர்போல, தமிழர் குடும்பங்களுடன் பயணித்து, உலகில் எல்லா இடங்களிலும் நீக்கமற‌ நிறைந்துள்ளது. தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பதென்பது, உலகின் எல்லா இடங்களிலும் கிளைபரப்பி வாழும் அனைத்து தமிழர்களுக்குமான ஒரு கடமை. இந்தக் கடமையை நாம் அனைவரும் உணர்ந்திருக்கிறோமா?

புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு இருக்கும் அடையாளக் குழப்பங்களில் முக்கியமானது "நான் தமிழரா?" என்பதே. புதுக்குடித்தனம் செய்ய ஆரம்பிக்கும் பெண் , தன் தாய்வீட்டில் இருந்து எடுத்துவரும் சீர்தனங்கள் போல, சாதி மத சம்பிரதாய கட்டுச் சோற்றை எங்கு போனாலும் எடுத்துவரும் நாம் , தமிழன் என்ற பெருமைமிகு அடையாளத்தை இயல்பாக மறந்துவிடுகிறோம். தமிழனாய் பிறப்பது என்பது ஒருவனின் தனிப்பட்ட முடிவு அல்ல. இன்றுவரை இயற்கையும் , அறிவியலும் அப்படி ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுக்கவில்லை. தமிழர் தம்பதிகளுக்குப் பிறக்கும் ஒரு குழந்தை, விரும்பியோ விரும்பாமலோ தமிழராகவே அடையாளம் காணப்படுகிறது . எனவே, ஒரு குழந்தை தமிழராய் பிறப்பதென்பது, அதன் முடிவு அல்ல. ஆனால், வளர்ந்து பதின்ம வயது வந்தவுடன் , தமிழராய் வாழும் முடிவு என்பது, தனிப்பட்ட மனிதனின் கையில்தான் உள்ளது. அப்படி ஒரு குழந்தை தமிழராய் வாழ முடிவு செய்தால், அப்படி வாழ்வதற்கு முக்கியமான கருவி "மொழி". அதைக் குழந்தைகளிடம் சேர்ப்பது பெற்றோர்களின் கடமை அல்லவா? அதற்கு நாம் என்ன செய்கிறோம்?

முதலில் பெற்றோர்கள் ஒவ்வொருவரும் "நாம் தமிழராய் வாழ்கிறோமா?" என்று அவரவர்கள் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி. அதைவிட முக்கியம் "ஏன் தமிழராய் வாழ வேண்டும்?" என்பதும், அப்படி முடிவு செய்துவிட்டபின்னர் "எப்படி தமிழராய் வாழ்வது?" என்பதும், தனக்குள் ஒவ்வொருவரும் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகள். அதற்கான விடைகள் நம்மிடம் உள்ளதா? அல்லது குறைந்த பட்சம் இந்தக் கேள்விகளை நமக்குள் கேட்டுள்ளோமா? இன்னும் நம்மில் எத்தனைபேர்கள்  "மத" அடையாள‌ங்களையும் "தமிழ் இன" அடையாளத்தையும் பிரித்துப் பார்க்கத் தெரியாமல், சர்வஜித்து, சர்வதாரி, விரோதி, விக்ருதி - யார் குருதி போனால் எனக்கென்ன என்று, தமிழ் மொழிக்கு சம்பந்தமே இல்லாத  வார்த்தைகளில் வரும் ஆண்டுகளை, அறியாமையின் காரணமாக‌ தமிழாண்டாக எண்ணிக் கொண்டாடி வருகிறோம்? இது ந‌மது அறியாமை அல்லவா? அழகிய "தை"மகள் இருக்கும்போது எதற்கு வேற்றுமொழிக் குறியீடு?

தமிழ் என்ற இனமும் தமிழ் என்ற மொழியும் சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும். தமிழ் என்ற அடையாளத்தை மட்டும் முன்னிருத்தி, மற்ற சாதி ,மத, ஈயம், பித்தளை அடையாளங்களை  முற்றிலும் துறந்து (அல்லது இரண்டாம் இடத்தில்  வைத்து விட்டு) தமிழுக்காக மட்டும் சங்கமிப்பது, இணைந்து செயல்படுவது என்பது இன்னும் நம்மில் சாத்தியமாகவில்லை என்பது கசப்பான உண்மை.  நமக்குள்தான் எத்தனை பிரிவுகள். Jallianwala Bagh - யும் Holocaust -யும் அறிந்து வைத்துள்ள நாம், இன்று நம் கண்முன்னால் முள்ளிவாய்க்காலை மையமாகக் கொண்டு நடந்தேறிய கொடூரங்களை எந்த அளவு அறிந்துள்ளோம்? எந்த அள‌வில் நாம் ந‌ம் இன வரலாற்றை நம் குழந்தைகளுக்கு சொல்லித் தருகிறோம்? வரும் காலங்களில் இது போன்ற சின்ன சின்ன வட்டங்களைத் துறந்து "தமிழ் இனம்" என்ற ஒரே பெரிய வட்டத்தில், வரும் தலைமுறையினராவது காலடி வைக்கவேண்டும். அதற்கு புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் குழந்தைகள் பாதை வகுப்பார்கள் என்று நம்புவோமாக. அதற்கான முக்கியக் கருவி மொழி. தமிழைக் கொண்டு சேர்ப்போம் குழந்தைகளிடம்.

தமிழனாய் பிழைத்திருப்பது (Survival) முக்கியமல்ல. தமிழனாய் உணர்வதும் (Feel) வாழ்வதும்  (Living) முக்கியம்.


 .

15 comments:

  1. நல்ல பதிவு,
    வேர்களை இழப்பது நல்லது அல்ல.ஓவ்வொருவரும் தங்கள்,மொழி,இன கலாச்சாரத்தை பேணிக் காத்தல் நன்று.நம்மால் ஒரு மொழியை உருவாக்க‌ முடியாது,அழியும் மொழிகளை பாதுகாப்போம்.அனைத்து மொழிகளுமே சிறந்தவையே
    நன்றி

    ReplyDelete
  2. சிறந்த கட்டுரை! வரவேற்கிறேன்.

    ReplyDelete
  3. நல்ல பதிவு. ஆனால், தமிழில் வருடப்பெயர்கள் உண்டா என்ன? எனக்கு தெரிந்து தமிழில் வருடப்பெயர்கள் கிடையாது. "தை"மகள் மாதப் பெயர் இல்ல? இன்று வரையிலும் இந்த மாதங்களோட பெயர் தமிழில் தான் உள்ளது. பழைய காலங்களில் தமிழோடு வடமொழியும் பரவலாக இருந்தது. காலப்போக்கில் பல்வேறு காரணங்களால் அது மறைந்து விட்டது. அந்த மிச்ச சொச்சம் தான் இந்த வருடப்பெயர்கள் எல்லாம். 'தமிழ் தமிழ்' என்று பேசும் தமிழ் அறிஞர்கள் தமிழில் வருடப்பெயர்கள் அறிமுகப்படுத்தலாமே? அவையெல்லாம் வாய்க்கு வந்த பெயர்களை வைத்த மாதிரி தெரியவில்லை. அதன் பெயர்க்காரணங்களை அறிந்து அதைத் தமிழில் வைக்கலாமே? 'Dil Se' வை 'உயிரே' ஆக்கியவர்களுக்கு இதெல்லாம் சாதாரணம் இல்லையா?

    Jallianwala Bagh - யும் Holocaust -யும் அறிந்து வைத்துள்ளவர்கள் கண்டிப்பாக, இன்று நம் கண்முன்னால் முள்ளிவாய்க்காலை மையமாகக் கொண்டு நடந்தேறிய கொடூரங்களையும் அறிந்திருப்பார்கள் என்றே நினைக்றேன். அதோடு நிற்காமல் blog போன்று ஏதோ ஒரு வழியில் அவர்கள் மனக்குமுறல்களைக் வெளிப்படுத்திக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. நாம் தமிழர்களாக ஒன்று பட்டுவிடக் கூடாது என்றுதான் ஹிந்தியமும்,திராவிடமும் நம்மிடையே உள்ள சாதிப் பிரிவினையை முன்னிறுத்தி அரசியல் செய்கின்றார்கள்.சாதிகளை ஒழிக்கப் போவதாக ராமசாமி "நாயக்கரின்" பகுத்தறிவு வாதம் பேசிக்கொண்டு,ஒரு தேர்தல் என்று வந்தால் அந்தந்த தொகுதிகளில் எந்த சாதிக்காரர்கள் பெரும்பான்மை என்று பார்த்து வேட்பாளர்களை நிறுத்துகின்றன.

      Delete
  4. asksukumar , சுவனப்பிரியன் , சார்வாகன் & Parthasarathy

    கருத்துகளுக்கு நன்றி

    **

    சார்வாகன்,
    வரலாறு பயிற்றுவிக்கப்படவேண்டும். அது நல்ல பண்பட்ட மனிதர்களை உருவாக்கும்.

    பார்த்தசாரதி,
    வருடம் என்பது பெயரில் இருக்கவேண்டும் என்ற கட்டுப்பாடு ஏதும் இல்லை. தமிழ் வருடங்களுக்கான (திருவள்ளுவர் ஆண்டு) தனி எண் தொடர் பலகாலமாக உள்ளது. அதைப் பின்பற்ற வேண்டும்.

    வருடத்தில் முதல்மாதம் என்பது தை அதாவது தமிழ்வருட கணக்கின்படி அதற்காக தை பயன்படுத்தப்பட்டது இங்கே.

    **

    தமிழுக்கென்றே தனி மாதங்கள் உண்டு. அவை பயன்பாட்டில் இல்லை. குறைந்தபட்சம் விக்ருதி விரோதி போன்றவற்றை விலக்கி தமிழ் ஆண்டுமுறைக்கு வரவேண்டும் என்பதே ஆவல்.


    **

    நிச்சயம் பிறமொழி பண்பாட்டு கலப்பு இருந்துள்ளது. ஆனால் அது தவறு என்று தெரிந்த பிறகு மாறவேண்டும் அல்லவா? எததனை காலத்திற்கு சிறுவயதில் போட்ட டயப்பரையே போடுவது? வளர்ச்சி என்பது புரிதலில்லும் வேண்டும் அல்லவா? அந்த மாற்றத்தை வலியுறுத்தவே கட்டுரை.

    அதற்கு தமிழ்ப்பாடங்கள் குழந்தைகளுக்கு அவசியம்.

    **


    புத்தாண்டு குறித்த 2008 உரையாடல்கள்


    பொங்கல்தான் புத்தாண்டா?
    http://penathal.blogspot.com/2008/01/blog-post_24.html

    புத்தாண்டு வாழ்த்துக்கள் - கலைஞரின் ராஜதந்திரம்!
    http://penathal.blogspot.com/2008/04/blog-post_13.html

    .

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. //வருடம் என்பது பெயரில் இருக்கவேண்டும் என்ற கட்டுப்பாடு ஏதும் இல்லை. தமிழ் வருடங்களுக்கான (திருவள்ளுவர் ஆண்டு) தனி எண் தொடர் பலகாலமாக உள்ளது. அதைப் பின்பற்ற வேண்டும்.//
    தங்களின் விளக்கத்திற்கு மிக்க நன்றி. இங்கே தமிழ் வருடங்கள் என்று இப்போது நாம் சொல்லும் விக்ருதி வகையறா 60 உடன் முடிந்து விடுகின்றன. 60 வருடத்திற்குப் பின் இவை மீண்டும் முதலில் இருந்து வருகின்றன. ஏன் என்றால் இவை நாம் குறித்துக்கொள்ளப் பயன்படுத்தும் ஆங்கில ஆண்டோ திருவள்ளுவர் ஆண்டோ போன்று அல்ல. இவை வானவியல் சார்ந்தது. வானவியல் இந்த ஆண்டில் இந்த மாதம் என்பதில் மட்டுமே கவனம் செலுத்துவதாகத் தெரிகிறது. வானவியல் 2011 பற்றியோ, கி. மு. கி.பி. பற்றியோ கணக்கில் கொள்வதில்லை. ஆக, இந்த 60 வருட கணக்கு நீங்கள் கூறுவது போல எண்ணில் கூட இருக்கலாம். ஆனால், ஒவ்வொரு ஆண்டின் தன்மை மற்றும் அதில் நிகழும் நன்மை தீமையை கணித்து அதனை உணர்த்தும் வண்ணம் அந்த வருடங்களுக்குப் பெயர்கள் வைக்கப்பட்டதாகத் தெரிகிறது. அதனால், http://dheivamurasu.org/tamilcal.htm => இவரின் செயல் சிறப்பாக உள்ளது. நாம் எத்தனை பேர் இதனை நடைமுறையில் பயன் படுத்தத் தயாராக உள்ளோம்?

    //வருடத்தில் முதல்மாதம் என்பது தை அதாவது தமிழ்வருட கணக்கின்படி அதற்காக தை பயன்படுத்தப்பட்டது இங்கே.//
    வருடத்தின் முதல் மாதம் தை அல்ல சித்திரை என்று விளக்கும் இரண்டு பதிவுகள் கொஞ்சம் விளக்கமாக இருக்கின்றது. அவையும் வானவியல் சார்ந்ததாகவே இருக்கிறது.

    http://hayyram.blogspot.com/2009/04/blog-post_16.html
    http://hayyram.blogspot.com/2008/12/blog-post.html

    மேலே உள்ள பதிவுகளில் தேவையான விஷயங்கள் தவிர உள்ள ஆத்திக/நாத்திகக் கருத்துக்கள் மற்றும் அரசியல் விஷயங்கள் தவிர்த்தல் நலம்.

    //தமிழுக்கென்றே தனி மாதங்கள் உண்டு. அவை பயன்பாட்டில் இல்லை. //
    தமிழுக்கென்று தனி மாதங்கள் உண்டு. இப்போது கூறும் சித்திரை, வைகாசியும் தமிழ் மாதங்களுடன் சம்பந்தப்பட்டவை தான். இதனை விளக்கும் பதிவு: http://valavu.blogspot.com/2008/02/blog-post_18.html இந்த பழைய தமிழ் மாதங்கள், 12 ராசிகளின் பெயர்களோடு குழப்பத்தை ஏற்படுத்தாமல் இருக்க, இப்போது இருக்கும் பெயர்களுக்கு மாறி இருக்கும் என்று கருதுகிறேன்.

    //குறைந்தபட்சம் விக்ருதி விரோதி போன்றவற்றை விலக்கி தமிழ் ஆண்டுமுறைக்கு வரவேண்டும் என்பதே ஆவல்.//
    தமிழ் ஆண்டு முறை என்று ஒன்று உண்டா? திருவள்ளுவர் ஆண்டைத் தான் தமிழ் ஆண்டு என்று கூறுகிறீர்களா? அது இப்போதே வழக்கில் உள்ளதே.

    //நிச்சயம் பிறமொழி பண்பாட்டு கலப்பு இருந்துள்ளது.......
    அதற்கு தமிழ்ப்பாடங்கள் குழந்தைகளுக்கு அவசியம்.//
    கண்டிப்பாக ஆமோதிக்கிறேன். அவ்வாறு தமிழைக் கற்று வரும் குழந்தைகளுக்கு எதிர்கால வாய்ப்பு எப்படி? பொறியியல் தொழிற்கல்வியைத் தமிழில் படித்து வரும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு எப்படி?

    தமிழ் மொழி இன்றைய சினிமா பாடல்களிலும், TV, FM ஜாக்களின் வாயில் படும் பாடு பற்றி தங்கள் கருத்து என்ன?
    பிற்காலத்தில், தமிழில் மூன்று 'ல' உண்டே அது தெரியுமா என்று கேட்டால், "ஓ தெரியுமே, ஏல, வால, போல" என்று திருநெல்வேலி தமிழில் சொல்லும் நிலைக்கு சென்று விடுவோமோ என்ற பயமாக இருக்கிறது.

    ReplyDelete
  7. நச் நச் .....
    :)

    //தமிழனாய் பிறப்பது என்பது ஒருவனின் தனிப்பட்ட முடிவு அல்ல. இன்றுவரை இயற்கையும் , அறிவியலும் அப்படி ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுக்கவில்லை. //

    தாய்மொழியை பிரிதொன்றாகக் இருப்பவர்கள் கூட தொடர்ச்சியாக ஒரு நிலம் சார்ந்த இடத்தில் வாழும் போது தாய்மொழி அல்லாத அடையாளம் தான் அவர்களுடையதாகிறது.

    தமிழ்நாட்டில் தெலுங்கு, கன்னடம் தாய்மொழியாக இருப்பவர்களும், மலையாளம் தாய்மொழியாக இருப்பவர்களில் சிலரும் பிறமாநிலத்திற்கு செல்லும் போது தமிழர்கள் என்றே பெருமையுடன் கூறிக் கொள்வதை நான் கேட்டுள்ளேன்.

    ReplyDelete
  8. திருவள்ளுவர் ஆண்டு முறை என்பது கருணாநிதி துவக்கியது

    சான்றுகள் கொடுங்கள் சங்க காலத்திலோ அல்லது அதன் பிறகோ தை மாதம் நீராடல் என்றுதான் இருந்ததே ஒழிய புத்தாண்டு இல்லை. மறைமலை அடிகளின் மண்டையில் உதித்த ஒன்றுதான் இது

    ReplyDelete
  9. சாரா,
    இது பற்றி நிறையப் பேசியாகிவிட்டது.

    சான்றுகளை எந்தக்காலம் வரை கொடுத்தால் ஏற்பீர்கள்?

    சாட்சிகள் இல்லாவிட்டாலும் சான்று இல்லாவிட்டாலும் உங்கள் மனது , உங்கள் புரிதல் என்ன சொல்கிற‌து என்பதை நீங்களே சிந்தித்துக் கொள்ளுங்கள்.

    **

    எனது நிலைமை.....

    சான்றுகளே இல்லாவிட்டால்கூட அல்லது இது நேற்று "வடிவேலு" என்ற நடிகரால் பரிந்துரைக்கப்பட்டால்கூட நான் தை யை ஏற்றுக்கொண்டிருப்பேன். ஏன் என்றால் என்னால் ஒருபோதும் சர்வ்ஜித்து ஜங்குசிக்கு என்பவற்றோடு இணைத்துப்பார்க்க முடியவில்லை. விருதி விரோதி கருமாதி போன்றவைகள் என் எண்ணங்களில் ஒட்டவில்லை.

    சங்ககாலத்தில் இருந்த எல்லாவற்றையும் என்னால் பின்பற்ற இயலாது. பார்ப்பனர் மட்டுமே மணியாட்டலாம் , பார்ப்பனர் தெருவில் செருப்பு போடக்கூடாது உடன்கட்டை ஏறலாம்,பார்பனுக்கு தண்டம் அழுகவேண்டும்....ஏன் விருதுநக‌ர்புறங்களில் பொம்பளப்பிள்ளைகள் முலையை மறைக்க வரி கொடுக்க வேண்டிகூட இருந்தது. இது போன்ற குப்பைக் கருத்துகளை வள்ளுவனே சொன்னாலும், இன்று உள்ள எனது புரிதலில் "போயா டுபாக்குர்" என்று நிராகரிப்பேன்.

    எனவே சங்ககாலத்தில் சித்திரைதான் தமிழ் முதல்மாதம், சர்வ்ஜித்து ஜங்குசிக்கு விருதி விரோதி கருமாதிகள்தான் தமிழ்வருடங்கள் என்று எந்தக்கொம்பன் சொல்லியிருந்தாலும் அதை நான் நிராகரிக்கிறேன்.

    ***

    யார் எப்போது யாரல் என்பதைவிட ...எனக்கு என்ன உகந்தது ஏன் அது எனக்கு உகந்ததாய் இருக்கிறது என்பதை எனது புரிதல்களின் பேரில் நானாகத் தெரிந்தெடுக்கவே விரும்புகிறேன்.

    கருணாநிதி சொன்னாலும் கம்பன் சொன்னாலும் அத்தனையும் ஏற்றுக்கொள்ள நான் என்னை எதற்கும் நேர்ந்துவிட்டுக்கொள்ளவில்லை.

    கூடிவாழும் மனித வாழ்க்கையில் எனக்கு ஒரு குழு அடையாளம் அவசிமாகிறது. நான் விரும்பி தேர்ந்தெடுத்துள்ளது மேலும் இயல்பாகவே நான் வாழ்ந்தசூலலில் எனக்கு வாய்த்தது தமிழ் மட்டுமே. எனக்குத் தை இனிக்கிறது வேறு காரணம் என்னளவில் தேவையாய் இருக்கவில்லை.

    ஆனால் ஒரு அரசு என்ற‌ அளவில் கருணாநிதி அதை உரக்கச் சொன்னது எனக்கு ஆதரவாய் இருந்தது. மற்றபடி நான் அவருக்கு ஆதரவாய் அல்லது அவர் சொன்னதால் மாறவில்லை.

    சங்கம் சொன்னாலும் சிங்கம் சொன்னாலும் உங்களின் உள்ளம் எதனோடு ஒத்துப்போகிறதோ அதுவே நீங்களாக இருப்பது உங்கள் உரிமை. அதை மதிக்கிறேன்.

    ReplyDelete
  10. எனக்குத் தெரிந்த வரையிலும் நான் பழகியது வரைக்கும் என் கண்களுக்கு தெரிந்த வரையிலும் தமிழ்நாட்டில் உள்ள அரசியல்வாதிகளைத் தவிர(அவர்களும் மேடைப் பேச்சுக்காக மட்டுமே) நான் தமிழன் என்ற உண்மையான அடையாளத்தோடு வாழகின்றேன், வாழ விரும்புகின்றவன் என்பது ஒரு சதவிகிதம் கூட இருப்பார்களா? என்பது சந்தேகமே.

    மொழியின் அருமை பெருமை பற்றி தெரியாமல் ஆங்கிலம் ஒன்றே தங்கள் எதிர்காலத்தில் நல்ல பொருளாதார வாழ்க்கையை தந்து விடும் என்ற எண்ணத்தில் தங்கள் மாற்றிக் கொள்ள விரும்புவர்களும், மாற்றியே ஆக வேண்டும் என்று விடாமல் செயல்பட்டுக் கொண்டிருப்பவர்களும் 99 சதவிகித மக்கள்.

    எங்கே செல்லும் இந்த பாதை?

    ReplyDelete
  11. தமிழர் என்ற அடையாளம் மொழி ரீதியானதா ? இன ரீதியானதா என்பதே சிக்கலான ஒன்று ... !!! மொழி ரீதியாக தமிழர்களாக இருக்கும் பல இனங்கள் .. இன ரீதியாக தமிழர்கள் இல்லை ( பிராமணர், தெலுங்கர் போன்றோர் ).. இன ரீதியாக தமிழர்களாக இருக்கும் பலர் மொழி ரீதியாக தமிழை மறந்துவிட்டனர் ( மொரிசீயஸ், தென்னாப்பிரிக்க, கயானா )...

    புலம் பெயர் சமூகங்களில் தமிழைப் பேசி தக்க வைத்துக் கொள்வது என்பது மிகவும் கடினமான ஒன்று.. காலப் போக்கில் தமிழர் என்ற இன அடையாளம் மட்டுமே இருக்கும் .. மொழி, கலாச்சாரங்கள் மாறிப் போய்விடும் என்பதில் ஐயமில்லை ..

    ஆனால் மதங்கள் எங்கு போனாலும் இருக்கவே செய்கின்றது .. அது மட்டுமல்லாமல் புலம் பெயர் சமூகத்தில் கலப்பு மணம் புரியும் போது தமிழர் என்ற அடையாளமும் இல்லாமல் போய்விடக் கூடும்... தமிழ் அடையாளங்களை தாயகத்தில் உள்ளோர் தக்கவைத்துக் கொள்ள முயல்வது மிகவும் தேவையான ஒன்று ... !!!

    .....

    தை மகள் ??? தை, மாசி, பங்குனி என்னும் மாதப் பெயர்களே தமிழ் இல்லை சகோ. மாதம் என்று சொல்வதே தமிழ் இல்லை. தமிழில் மாதம் திங்கள் ( கன்னடத்திலும் ) என்றே அழைக்கவேண்டும் ...

    தமிழ் மாதப் பெயர்கள் விடை, ஆடவை, என்று வரும் ... !!! அதுவே நமக்குத் தெரியாது சகோ.

    ReplyDelete
  12. சுத்த தமிழைப் பயன்படுத்துவது என்பது நடை முறை சாத்தியமில்லை. இது எந்த விதத்திலும் தமிழை வளர்க்க போவதில்லை. உதாரணமாக ஆங்கிலத்தை எடுத்துக் கொண்டால் அதில் உலகின் அநேக மொழிகளின் வார்த்தைகள் இருக்கும். பிற மொழி கலப்பு வார்த்தைகளை தமிழில் உபயோகித்தால் அழிந்து போய்விடுமா தமிழ் ?. எல்லா வார்த்தைகளையும் தமிழாய் பேசுவதும் சாத்தியமா..? தமிழனுக்கு தமிழ் தெரிந்திருக்க வேண்டும். இல்லை என்றால் அவன் தமிழன் இல்லை அப்படித்தானே சொல்கிறீர்கள். தமிழன் தமிழை மட்டுமே கட்டிக் கொண்டிருந்தால் அவன் முன்னேறவே முடியாது...

    ReplyDelete
  13. https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

    ReplyDelete