Thursday, October 01, 2015

A Sinner In Mecca - Movie

கனின் பள்ளியில் "உலக வரலாறு" என்ற பாடம் உள்ளது. அதில் சிந்துவெளி நாகரிகம் தொடங்கி யூதர்களின் வரலாறு என்று எல்லாம் படிக்கிறார்கள். அது குறித்து பேசும்போது எனது தரப்பு கருத்துக்களையும் சொல்வேன் என் மகனிடம்.  நேற்று திடீரென்று "அப்பா என்னோடு மெக்காவிற்கு வருவீர்களா? என்றான். நான் சின்னவயதில் நடைபயணமாக பழனி மலை போக நினைத்த போது, என்னுடன் என் அப்பா வந்தார். பக்திமாலை, மண்ணாங்காட்டி ,மூத்த சாமியார் , பசனை ,சடங்குகள் இல்லாமல் நான் எனக்கே ஒரு துளசி மாலையைப் போட்டுகொண்டு அப்பாவுடன் நடக்கத்துவங்கிவிட்டேன். தேர்தல் காலம் அது. அப்பா வழிநெடுக டீக்கடையில் நின்று நின்று செய்தி கேட்டுவருவார். "கன்னிவாடி" என்று நினைக்கிறேன், அதுதாண்டி அப்பாவால் நடக்க முடியவில்லை. நான் மட்டும் தனியாக நடக்க, அப்பா பேருந்தில் ஏறி அடுத்த கிராமத்தில் இறங்கி எனக்காக காத்து இருப்பார். செல்போன்கள் இல்லாத காலம். வெறும் நம்பிக்கையுடன் அப்பா காத்து இருக்க, நானும் அதே நம்பிக்கையுடன் ஓட்டமும் நடையுமாக அப்பாவை வந்தடைவேன்.

என் பார்வையில் படும் வண்ணம் ஊரின் முகப்பிலேயே அப்பா இருப்பார். இருவரும் கொஞ்ச நேரம் பேசிவிட்டு , சாப்பாடு தண்ணீர் குடித்துவிட்டு, நான் மறுபடியும் நடக்க ஆரம்பிப்பேன். அப்பா பேருந்தில் ஏறி அடுத்த நிறுத்ததில் இறங்குவார். இப்படி தொடர்ந்தது எங்கள் பயணம். நான் நடக்கும்போது என்னைக்கடந்து செல்லும் சின்ன மோட்டார் வாகனக்காரர்கள் என் அருகே நிறுத்தி என்ன என்று விசாரித்துச் செல்வார்கள். தனியா நடக்கும் சிறுவன் என்பதால். அவர்கள் மறக்காமல் என் அப்பாவைப் பார்த்தால் பையன் இங்கே வருகிறான் என்றும் சொல்லிச் செல்வார்கள் அவரிடம்.  எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தேன் அந்தப் பயணத்தின்போது நான்.

அதற்கு அடுத்து திருச்செந்தூருக்கு நடக்க வேண்டும் என்ற எங்கள் திட்டம் மதுரை தாண்டியவுடன் நின்றுவிட்டது. அப்பாவால் நடக்கமுடியவில்லை. எனவே நாங்கள் அப்படியே ஊருக்கு திரும்பிவிட்டோம். என் அண்ணனுடன் சேர்ந்து பலமுறை திருப்பரங்குன்றம் நடந்து சென்றுள்ளேன். அத்தகைய பயணங்கள் எல்லாம் நாங்கள் தனியாகச் செல்வதே.

இப்போது என் மகன் மெக்கா செல்ல வேண்டும் என்ற‌வுடன் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் மெக்கா இசுலாமியர் அல்லாதவர்களுக்கு அனுமதி இல்லாத இடம் என்று அவனிடம் சொன்னவுடன் அவனுக்கு மகிழ்ச்சி போய்விட்டது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பிரகாரத்தில் பல இசுலாமியர்கள் கடை வைத்து இருப்பார்கள். கோவில் உள்பிரகாரத்தில் மற்ற மதத்தவர்களுக்கு அனுமதி இல்லை. இதுவே தவறு. கடவுள் என்ற ஒரு கான்செஃப்ட்டிற்கு இது முரணானது. கடவுள் மதம் பார்த்தா அருள் பாலிக்கிறார்?

இசுலாம் அதைவிட அடுத்தபடிக்கு எடுத்துச் செல்கிறது. ஊர்பக்கமே வரக்கூடாது, இடத்தை பார்க்கவேகூடாது என்று சொல்கிற‌து. மதங்கள் அரசியல் கட்சிகளைவிட மோசமானவை. ஒரு கட்சிக்காரன் மாற்றுக்கட்சி தலைவரை அவர் வீட்டில் வைத்துக்கூட பார்க்கமுடியும். ஆனால் ஒரு மதத்துக்காரன் அடுத்த மதத்தின் முக்கிய/புனித இடம் / ஊருக்குள்ளேகூட போகமுடியாது.

****
சமீபத்தில் நடந்த மெக்கா விபத்து குறித்து பேச‌ Parvez Sharma   ( https://en.wikipedia.org/wiki/Parvez_Sharma  ) என்பவர் ஒரு பண்பலை நிகழ்ச்சிக்கு வந்து இருந்தார். அந்த நிகழ்ச்சியின் வழியாக எனக்கு இந்தப்படம் அறிமுகமானது. அந்தப்படம் குறித்த Dr Joy ன்  பார்வை.http://www.drjoy.com/movie_reviews/a-sinner-in-mecca/

http://asinnerinmecca.com/

http://www.imdb.com/title/tt4666618/

இந்தப் படத்தின் இயக்குநர் "பெர்வேஃச்"  "ஒருபால் ஈர்ப்புள்ள" ஒரு இசுலாமியர்.  த‌ன்னை ஒருபால் ஈர்ப்பாளராக பொதுவில் அறிவித்துக்கொண்டவர் 'பெர்வேஃச்'. மதவாதிகளிடம் இருந்து இதற்குமுன்னரே பல சிக்கல்களை அனுபவிப்பவர் . இசுலாத்தில் ஒருபால் திருமணங்கள் அல்லது ஒருபாலினச் சேர்க்கை தடை செய்ய‌ப்பட்ட ஒன்று. ஒருபாலினச் சேர்க்கையாளர் என்றவுடனே மத அடிப்படையில் இவருக்கு மெக்காவும் மறுக்கப்பட்ட ஒன்றாகிவிடுகிறது. ஆனால் கடவுளுக்கும் எனக்கும் இடையில் யாரும் இல்லை என்று இவர் துணிந்து செல்கிறார் மெக்காவிற்கு தன்மத கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்று.

http://asinnerinmecca.com/about/
//
Every able-bodied Muslim is commanded by Allah to embark on this spiritual Hajj pilgrimage to Mecca at least once in a lifetime. Islam’s heart beats here. Equipped with nothing more than my faith and my iPhone, I leave my 21st-century life in America and arrive in Saudi Arabia, where the Islamic calendar, much like its subjugated citizenry, is stuck in the 1400s. In Mecca, I weep as I behold the sight indelibly marked on my mind and on every prayer rug I have known since I was a child: millions of devotees in white robes circling a large black cube, the Kaaba. As I gather courage to film on my iPhone I ponder: “Surely Allah allowed me here, because he accepts me as I am.”
//

மெக்காவில் யாருக்கும் தெரியாமல் படம் எடுப்பது என்பது தற்கொலைக்குச் சமமானது. இவர் தனது மெக்கா பயணத்தின் போது எடுத்த ஆவணப்படம் நிறைய கதைகளை சொல்லும் என்று நினைக்கிறேன்.

அமெரிக்காவில் September 4, 2015அன்று இந்தப்படம் வெளியாகும் என்று அறிவிப்பு சொல்கிறது. இந்தப்படம் எப்படியும் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுவிடும். எனவே இதை நாமும் இந்தியாவில் தடை செய்யக்கோருவோம் இப்போதே.

.

No comments:

Post a Comment