Monday, January 23, 2017

வாடிவாசல் மனது வாடுகிறது!


நம் மாடுகளின் மூத்திரத்தை
நம்மிடமே விற்று அரசியல் செய்தவனை
நம் காளைகொண்டு கவிழ்த்தாய் ஆத்திரமாய்!

நம் தாத்தன்கள் உரம் போட்ட வயலில்
சாத்தான்கள் விதைத்த களைகளை
நம் காளைகொண்டு அழித்தாய்!

வா என்று யாரும் சொல்லவில்லை
போ என்றும் சொல்லமுடியாது
இருப்பதும் போவதும் உன் உரிமை!

வரச்சொல்ல நீ விருந்தினன் அல்ல‌
காலிசெய்யச் சொல்ல‌
நீ குத்தகைவாசியும் அல்ல!

உதவாத இடத்தில் இருக்கும் நான்
உயர்வாய் இருக்கும்  உனக்கு என்ன சொல்ல‌
நீ தோற்றவன் அல்ல உலகை மாற்றியவன்!

தமிழனுக்கு புதிய முகம் கொடுத்தாய் நீ
தமிழனுக்கு புதிய முகவரி கொடுத்தாய் நீ
தமிழாய் இருக்கிறாய் தமிழா நீ!

உன் ஆர்வத்தால் வளர்ந்த தீ
துரோகத்தால் அழியாது
அக்கினிக் குஞ்சாய் இருப்பாய் நீ!

வாக்குச் சீட்டு உன்னிடம்தான் உள்ளது
உன்னிடம் இருக்கும் துருப்புச் சீட்டு அது
உனக்கான சுதந்திரத்தின் வேள்வியை தொடங்க!

நீ விதைத்த விதை
விருட்சமாய் வளரட்டும்
உன் இருப்பே அதற்கு உரம்!

காளை மட்டும் இலக்கல்லவே
காலம் முழுக்க இலக்கணமாய் இருப்பாய்
கலங்காதே தோளை உயர்த்து உன் வாக்குச்சீட்டில்!

நீ எப்போது வீடு திரும்பலாம் என்று நான் சொல்ல முடியாது
நீ பத்திரமாகப் வீடு திரும்ப வேண்டும் என்றே விரும்புகிறேன்
நீ வாக்களிக்கும் தருணங்களில் இன்றைய நாளை மட்டும் மறந்துவிடாதே!

.

No comments:

Post a Comment