Monday, July 23, 2018

பறவைகளின் இறுதிக்காலம்: வானத்தில் இருந்து குதித்தவனா நீ?

றவைகளின் வாழ்வு குறித்து அதிக கேள்விகள் உண்டு எனக்கு. முக்கியமாக அதன் இறுதிக்காலம் குறித்து. கூட்டம் கூட்டமாய் அலையும் பறவைகளில், சில உயிர்கள் உதிர்ந்தபின், அந்தக் கூட்டம் என்னவாகும்? எங்கு இறக்கை இறக்கிறது? என்பது குறித்து அதிக கேள்விகள் உண்டு.

சின்ன வயதில் இருந்து, இன்றுவரை என்னைத் தொடரும் ஒரு கனவு, பறப்பது. ஆம். கனவில் அடிக்கடி பறந்துவிடுவேன். வெறும் கையை இறக்கை போல விரித்துக்கொண்டு
ஒரு கிளைடர் பொருத்தப்பட்டதுபோல் வேகமாகப் பறப்பேன். அப்படிப் பறக்கும் போது, மின் கம்பங்களில் மாட்டிக்கொள்ளாமல் பறப்பது ஒரு பெரிய சவால் எனக்கு. கனவு கலைந்து எழுந்தாலும், விட்ட இடத்தில் இருந்து, ஒரு வாரஇதழின் தொடர்கதை போல
போல தொடர்ந்துவிடுவேன் பறக்கும் கனவை மட்டும்.
**

விட்டுப்போன கனவுகளும் உண்டு. சின்னவயதில் சாம்பல் நிறப்பூனை ஒன்று என்னை அடிக்கடி விரட்டும் கனவில். சொல்லி வைத்ததுபோல ஒவ்வொரு முறையும் பூட்டிய அறையில் நான் மட்டும் தனியாக பூனையுடன் மாட்டிகொள்வேன். பூட்டிய அறையின் மூலையில் இருந்து என்னைக் குறிவைத்து பாயும். சாம்பல் நிறப்பூனை. கனவில், பயத்தில் நான் அலறும் பெரிய அலறல் சத்தம், வெற்று முனகலாக மெய்யுறக்கத்தில் முனகப்பட்டு கீச்சுக்குரலாய் வரும். அப்போதெல்லாம் அம்மா என்னை எழுப்பிவிட்டு , தண்ணீர் குடிக்கவைத்து
 மீண்டும் படுக்கச் செய்வார்கள். இப்போது பூனைக்கனவு வருவது இல்லை. ஆனால் வந்துவிடுமே என்ற பயம் இன்றும் உள்ளது.

அதுபோல நின்றுபோன ஒரு கனவு. தூக்கத்தில் ஏதாவது ஒரு இடத்தில் ஒன்னுக்குப்போவது போன்ற கனவு. பூனைக் கனவில் சத்தம் வெளியில் கேட்காது. ஆனால், ஒன்னுக்குப் போகும் கனவில், மிகவும் சுகமாக மெய்யாகவே ஒன்னுக்குப்போய்விடும். அதுவும் நண்பர்களுடன் பேசிக்கொண்டே ரோட்டின் ஓரத்தில் சுகமாக ஒன்னுக்குப்போவது போல ஒரு கனவு. நின்றுபோன கனவுகளுக்கு நன்றி.
**

ஆனால், விடாது தொடரும் பறக்கும் கனவை என்ன செய்வது? மிகவும் பிடித்த‌ கனவாயிற்றே. அதுவும் மலைகளின் முகட்டில் இருந்து பறக்க ஆரம்பித்து, ஊரின் எல்லைப் பகுதியில் இருக்கும் மின் கம்பங்களுக்கு இடையில் சமார்த்தியமாக இறங்குவது என்பது சாதனை. சின்ன வயதில் எனக்கு பறக்கும் சக்தி உள்ளது என்று நம்பினேன். தனியாக இருக்கும்போது கையை விரித்து ஓடிப்பார்த்து ஏமாந்தும் இருக்கிறேன். இத்தனைக்கும் எனக்கு எனது மகளுடன் ரோலர்கோஃச்டரில் போவது இன்றுவரை பயமான ஒன்று.

ஆனால் அப்படியே பறவை போல பறப்பது பிடிக்கும். பறத்தலில் முரண். ஒருவேளை ரோலர்கோஃச்டரில் இறுகக்கட்டி இருப்பது ஒரு சிறைத்தன்மை என்ற உள்ளுணர்வாய் இருக்கலாம்.
**

நான் ஓவியன் அல்லன். ஆனால் மிகப்பெரிய ஓவியனாக வந்திருக்க வேண்டியவன் என்று எனக்கு நானே சொல்லிக்கொள்வேன். மதுரை பிரிட்டோ பள்ளியில் படித்த போது, ஓவியப் பாடம் எடுத்த ஒரு ஆசிரியரால் எனக்கு ஓவியக் காதல் வந்தது. அந்தக் காதல் பிற்காலத்தில் அப்பா அம்மா பார்த்து வைத்த எஞ்சினியர் டாக்டர் என்ற வரன்களில் எஞ்சினியருக்கு வாக்கப்பட்டுவிட்டதால் அந்த‌ ஓவியக்காதல் கருகிவிட்டது. ஆம் எட்டாம் வகுப்பில் கிராமப்புற‌ மாணவர்களுக்கு கிடைக்கும் உதவித்தொகைக்காக படிக்கத் தொடங்கிய வாழ்க்கை, வெறும் தேர்வை நோக்கிய படிப்பாகிவிட்டது. இப்படி பல காதல்கள் கருகிவிட்டது பிழைப்பிற்காக.
**

A comfort zone is a beautiful place but nothing ever grows there என்று சொல்வார்கள். நாடகம், மேடை இசை அமைப்பு, பாய்மரப் படகு, பலூன், மரவேலை என்று எனக்கான எல்லைகளைச் சோதித்துக்கொண்டே உள்ளேன். தொடரும் கனவுகளை ஏன்  மெய்யாக்கக்கூடாது என்று இந்த இரண்டு வாரங்களில், சட்டென திரும்பும் வளைவுகள் போல, சட்டென்று சிலவற்றுக்குள் என்னை நுழைத்துக்கொண்டேன்.
**

30 டாலர் கொடுத்தால், பீர் குடித்துக்கொண்டே தூரிகையில் படம் வரையலாம். இரண்டு மணிநேர சோசியல் அமர்வு என்ற ஒரு விளம்பரத்தைப் பார்த்தேன். இதுவே சரியான வாய்ப்பு என்று எனது பெயரைப் பதிந்துவிட்டேன்.

வந்திருந்தவர்ககளில் 75 சதவீதம் Millennials தான்.  இந்தக்காலத்து இளைஞர்களாக பிறந்திருக்கலாம் என்ற பொறாமை வந்தது மறுக்க முடியாதது. நானும் எனக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் இளைஞர்களோடு கிழவனாக அமர்ந்துகொண்டேன். பயிற்சியாளர் சொல்லச்சொல்ல, நாம் வரைய வேண்டும். இரண்டு மணிநேரத்தில் ஒரு அழகிய ஓவியக்குழந்தையை பிரசவித்துவிட்டேன். சுற்றி இருந்த இளைஞர் பட்டாளத்துடன் படமும் எடுத்துக்கொண்டேன். 30 டாலர் செலவில் நானும் ஓவியனாகிவிட்டேன்.
**

"வீட்டில் அலங்காரத்திற்காக அடுத்தவன் வரைந்த படங்களை மாட்டுவதில்லை.நம் படங்களுக்கு காட்சியமாக நியூயார்க் கண்காட்சிகள் இடம் கொடுக்காது, நம் வீட்டில் நாம் வரைந்த படங்களே இருக்க வேண்டும்" என்று நான் என் மனைவியிடம் சொல்லி இருந்தேன். அவராக ஏதாவது வாங்கி மாட்டினால் நான் தடுக்கப்போவது இல்லை. ஆனால் நான் வாங்கமாட்டேன். என்று சொன்னது சண்டையாகி, இன்றுவரை எங்கள் வீடு வெறும் சுவராகாவே இருக்கும் எந்த அலங்காரப் படங்களும் இன்றி.

இதோ இன்று முதல் ஓவியம் 30 டாலர் செலவில் நன் வரைந்த ஒன்று காட்சிக்கு வைக்கப்பட்டுவிட்டது வீட்டில். இதைத் தொடர எண்ணம்.


https://www.facebook.com/pg/PinotsPaletteApex/photos/?tab=album&album_id=2123857307860097
**
வானத்தில் இருந்து குதிப்பது என்பது சகலவிதமான சவால்களையும் கொண்டது. முக்கியமான சவால், ஏதாவது ஒன்று நடந்து (வேறு என்ன சாவுதான்), பறவைகளின் இறத்தல் போல நானும் இறந்துவிட்டால், பிள்ளைகள் என்ன செய்வார்கள்? என்ற பயமே. இப்படியான விசயங்களுக்கு குறிப்பிட்டகால ஆயுள் காப்பீடு ஏதும் பணம் கொடுக்காது என்றே நினைக்கிறேன். இருந்தாலும், If Not NOW Then WHEN? என்ற  உந்துதலில், பறக்க ஆயத்தமானேன்.

அலுவலகம் அருகில் உள்ள சின்ன விமான நிலையம் அருகே skydiving கடை ஒன்று இருப்பது ஏற்கனவே தெரிந்து இருந்தாலும், எமனின் வாயிலை தள்ளிப் போடும் நோக்கத்தில் விலகியே இருந்தேன். இதோ இப்போது அதையும் செய்யத்துணிந்துவிட்டேன். சாவு கண்டு பயமில்லை என்றாலும், செத்தபிறகு குடும்பத்தினர் படப்போகும் துயரங்களே குதிக்கும்வரை இருந்தது. நடுத்தர வர்க்க மனிதர்களுக்கு இப்படியான செயல்கள் வில்லங்கமே. குடும்பத்தினர் யாரிடமும் சொல்லவில்லை. செத்தால் யாருக்கு தகவல் சொல்வது என்ற இடத்தில் மகனின் கைப்பேசி எண்ணைக் கொடுத்தேன். அவன் இப்போது ஒரு கல்லூரி ஒன்றில் ஒருமாத கோடை வகுப்பிற்காகச் சென்றுள்ளான். அவன் எண்ணைக் கொடுத்துவிட்டு, மீன்பாடி வண்டியை ஒத்த ஒரு அப்பாடக்கர் ஒற்றை எஞ்சின் விமானத்தில் ஏறிவிட்டேன்.
**

தனியாகக் குதிக்கப்போவது இல்லை. உடன் குதிக்கும் தேர்ச்சிபெற்ற ஒருவருடன், கங்காருகுட்டிபோல ஒட்டிக்கொண்டு குதிப்பதுதான் என்றாலும், அடிவயிற்றில் பயம் பந்துபோல எழும்பி, நெஞ்சை அடைத்துக்கொண்டது. ஒருவேளை என் சாவுச் செய்தி என் மகனின் தொலைபேசியில் ஒலித்தால்  அவன் என்ன செய்வான் என்ற கலக்கம் இருந்தது.

எல்லாம் அந்த விமானத்தில் இருந்து காலின் கடைசி உறவு முறியும்வரைதான். காற்றில் விழுந்து, மேகத்தில் கலந்து மிதந்தவுடன், எல்லாப் பயமும் போய்விட்டது. இழப்பதற்கு இனி ஒன்றும் இல்லை. தரை இறங்கும்வரை மகிழ்ச்சியாய் இருப்போம். இறந்தால், முகவரி இழந்த மற்றொரு பறவையாகிவிடுவோம் என்று எண்ணிக்கொண்டேன்.
**
ஆறாயிரம் மீட்டர் உயரம் வரை கூட்டிச் செல்லப்பட்டு, அங்கிருந்து காற்றில் குதிக்கவேண்டும். முதல் ஆயிரம் மீட்டர் தொலைவு, free fall எனப்படும் அப்படியே வீழ்தல். பாராசூட் அப்போது செயல்படுத்தப்பட்டிருக்காது. மணிக்கு 120 மைல் வேகத்தில் காற்றைக் கிழித்துக்கொண்டும், மேகத்தை முத்தமிட்டும் விழுதல். மெல்லிய மழை மூட்டம் இருந்ததால் சில்லென்ற மேகங்களின் கன்னம் தொட்டு முத்தமிட்டுச் செல்ல வாய்ப்புகிடைத்தது.
**
எங்கோ குதித்து சரியான இடத்தில் தரை இறங்குவதற்கு, பாராசூட்டில் சின்ன skydiving sailing அமைப்பும் உள்ளது. அதுவும் ஒரு துணிதான். ஆனால் பாய்மரப்படகின் sail போல அதை நேர்த்தியாய் கையாண்டு நம்மை அடுத்த ஆறாயிரம் மீட்டருக்கு பாதுகாப்பாக இறக்குவார்கள்.



**
சின்ன வயதில் வந்து இப்போது நின்றுபோன ஒரு இரகசியகக் கனவும் உள்ளது. ஏதோ ஒரு பெரிய நகரத்தின் வீதியில் நான் மட்டும் ஆடையின்றி கூனிக்குறுகி கவட்டில் கைவைத்து மறைத்து இருப்பது போன்ற ஒரு கனவு. சின்ன வயதில் கிழிந்த டவுசருடன் அலைந்த போது யாராவது கேலி பேசி அல்லது டவுசரை அவிழ்த்து அவமானப்படுத்தியதன் எஞ்சிய பயமாகக் கூட இருந்திருக்கலாம். அப்போது சட்டி போடும் வழக்கம் எல்லாம் இல்லை. செருப்பு சட்டி போன்றவை மேல்தர வர்க்கம் அப்போது. அரைஞான் கயிற்றின் சுறுக்கு முடிச்சு இறங்கி, தொங்கிக் கொண்டிருக்கும் போது, பின்னால் இருந்து எவனாவது இழுத்துவிட்டு, வகுப்பு பெண்களின் மத்தியில் அவமானப்பட்டு இருக்கலாம். சுமதி இல்லாத கூட்டங்களில் அவமானங்களை ஏற்கத் தயாராகவே இருப்பேன். ஆனால் கேள்விப்பட்டு அடுத்த நாள் அக்கறையாக விசாரிப்பாள்.
**
இங்கு 5k clothing optional ஓட்டம் ஒன்று வருடாவருடம் நடக்கிற‌து. அடுத்து அதற்கு ஆயத்தமாக வேண்டியதுதான். Face your fears!