Monday, October 21, 2019

நேற்றும் மழை பெய்தது:நான் இறந்துவிட்டால் இப்படிச் சொல்லுங்கள்

நேற்றும் மழை பெய்தது.
சன்னல் ஓரத்தில் கண்ணீராய் கொட்டி கவிதை பாடியது. மழைக்கும் எனக்குமான் உறவு அந்தரங்கமானது. காட்டில் நாங்கள் தனியாய் இருந்துள்ளோம். நடு இரவில் எனக்கு தாலாட்டுப் பாடியுள்ளது மழை. நாங்கள் இருவரும் உடல்தழுவி, நிர்வாணமாய் ஆறுகளில் விழுந்து கரைந்துள்ளோம். 

நேற்றும் அப்படியே மழை பெய்தது. என் வழக்கமான பாதையில் ஓட ஆரம்பித்தேன். குடை மட்டுமல்ல ஆடையும் மழைக்கு எதிரியே. 

சட்டையை கழற்றிவிட்டு, மெலிதான தூறலில் ஓட ஆரம்பித்தேன். ஒவ்வொரு மழையின்போதும் பாதைகள் புதிய காட்சிகளைத் தருகிறது. அன்று என்னமோ இறப்பு குறித்தான எண்ணங்கள் அதிகமாக வந்துபோனது. ஒருவேளை அன்று எனக்கு வந்த ஒரு செய்தியின் தாக்கமாக இருக்கலாம். அலுவலகத்தில் ஒருவர் (45+ வயது) புற்று நோயால் இறந்துவிட்டார். அதே சமயம், எனது அலுவலக நண்பர் (white) ஒருவரின் aunt 101 வயதில் இறந்துவிட்டார். 1918 ல் பிறந்தவர்  அவர். அவரின் புகைப்படத் தொகுப்புகளைப் பார்த்த போது ஒரு வரலாற்றைப் பார்ப்பது போல இருந்தது. அந்த சிந்தனையின் தொடர்ச்சியாக, எனது இருப்பு குறித்தான சிந்தனைகளும் வந்து போனது.
**
"நல்லாத்தான் இருந்தாப்ல. தினமும் எக்சர்சைசு செய்வாப்ல. கறி கூட சாப்ட மாட்டார். சுத்த வெசிடேரியன்.அவருக்கே இப்படியா? என்னத்த வாழ்க்கை. என்ன செஞ்சு என்ன புண்ணியம்?" கேள்விப்படும் மரணச்செய்திகளில் எல்லாம், யாரோ ஒருவர் இப்படி அங்கலாய்ப்பது தொடருகிறது. சமீபகாலமாக கேள்விப்படும் மத்திய வயது மரணங்கள்,அதுவும் ஆணின் மரணத்தின் போது இது அதிகம் பேசப்படுகிறது. இப்பொழுதுதான் இப்படியான செய்திகள் அதிகம் வருவது போல இருந்தாலும், அகால மரணங்கள் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது. என்றும் இருக்கும். இணையமும் செய்தித்தொடர்பும் வளர்ந்த நிலையில், செய்திகள் அதிகமாக‌ நம்மை வந்து சேர்கிறது அவ்வளவே.

 70 வயது அல்லது 80 க்கு மேலான மரணங்களும் உறவுகளுக்கு வலியானது என்றாலும், அது எளிதில் கடக்கப்படுவதன் காரணம், இறந்தவரின் நிறைவான வாழ்க்கை மட்டும் அல்ல. பொருளாதார ,வாழ்வியல் காரணங்களுக்காக அவரை நம்பி அவரின் குழந்தைகள் இல்லை என்ற ஆறுதலே அத்தகைய மரணங்களை எளிதாகக் கடக்க உதவுகிறது என எண்ணுகிறேன். 40 அல்லது 50 வயதில் ஒரு ஆண் மரணிக்கும்போது, மனம் சார்ந்த துன்பம்தாண்டி, அவர் விட்டுச் சென்ற பொருளாதர சிக்கல்கள் இருப்பவர்களுக்கு சவாலாக இருக்கும்.
**
சரியான உணவை உட்கொள்வது, உடற்பயிற்சி செய்வது போன்றவை ஆயுளை நீடிக்கும் என்று யாராவது  நினைத்தால் அவர்கள் முட்டாள்கள் என்பது என் நிலைப்பாடு. வாழும் காலத்தில், உடல்நலத்தோடு சிறப்பாக வாழ இவைகள் உதவலாமே தவிர அதிக நாள் வாழ அல்ல. நான் நாளையே இறந்துவிடலாம். மைல் கணக்கில் ஓடும் நரம்புகளில் எங்காவது, ஏதாவது நடந்து, என் மூளை செயலிழக்கலாம். ஏதோ ஒரு உறுப்பு, ஏதோ ஒரு காரணத்தால் செயலிழக்கலாம். நான் சரியாகவே வாகனம் ஓட்டினாலும், யாரோ ஒருவர் என் வாகனத்தின்மீது மோதி என்னைக் கொன்றுவிடலாம். காட்டில் நடக்கும்போது பாறையில் வழுக்கி விழுந்து, அதளபாதாளத்தில், கேட்க நாதியற்று புழுத்துப்போய் இறந்துவிடலாம்.

எந்தச் செயலும் அதிக நாள் வாழ உறுதிகொடுக்காது. ஆனால், பிழைத்து இருக்கும் ஒவ்வொரு நாளையும் எப்படி வாழலாம் என்று நாம் திட்டமிடலாம் அவ்வளவே.
நான் இறந்துவிட்டால்..
"எல்லாத்தையும் செஞ்சான். வாரம் 15 மைல்கள் ஓடினான். சமைச்சி சாப்பிட்டான். அப்படி இப்படி பேசினான். காடு மலையெல்லாம் சுத்துனான். ஆனா பாருங்க, 50 வயசுலேயே பொக்குன்னு போயிட்டான். என்ன வாழ்க்கை?" என்று சொல்ல சிலர் இருக்கலாம். நான் இறந்துவிடுவதாலேயே, வாழும் போது நான் செய்தவை எனக்கு பயனற்றைவையாகிப்போனது என்று யாராவது புலம்பி, அவர்களின் வாழ்வையும் கசந்துகொண்டால், அதை மறுத்து எழுத நான் இருக்க மாட்டேன்.

இப்படிச் சொல்லுங்கள்..
இதை நான் G+ ல் அடிக்கடி சொல்வேன். இங்கும் சொல்கிறேன். 

எனது இறப்புச் செய்திகேட்டால் , உங்களின் மதுக்கோப்பையை உயர்த்தி சொல்லுங்கள், "போறதுக்கு முன்னால நல்லா வாழ்ந்துட்டான்யா" என்று. ஏதாவது ஒரு புதிய‌ ஊரின் காஃபிக்கடையில் மழையில் நனைந்து கொண்டு காஃபி குடியுங்கள். எங்கேனும் ஒரு இடத்திற்கு தனியாக ஒரு பயணம் மேற்கொள்ளுங்கள். 
பிழைப்பு என்பது வேறு வாழ்க்கை என்பது வேறு.
There are differences between being alive and living. Life is more than just breathing.

**
மழையில் திருடிய மலர்:உடெலெங்கும் பெய்யும் மழை

https://kalvetu.blogspot.com/2018/04/blog-post.html

No comments:

Post a Comment